• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
ஓம் சரவண பவ

சொர்ணா சந்தனகுமார்

மொழியெல்லாம் ஊமையானால்

1


பத்து வருடங்களுக்கு முன்:


“மாமா ப்ளீஸ் எனக்காக! உங்க அக்கா பொண்ணுக்காக! மாட்டேன்னு மட்டும் சொல்லிராதீங்க மாமா. நீங்க மறுக்கிறதை என்னால தாங்கிக்க முடியாது. ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க மாமா ப்ளீஸ்” என்று கண்ணீர் வழிய தன்னிடம் கையேந்தி நிற்கும், பதினேழே வயதான தன் அக்கா மகளை பரிதாபமாகப் பார்த்தான் இருபத்தியொரு வயதான ‘ஹரி.’

“பாப்பா ஏன் இப்படியெல்லாம் பேசுற? நீ இப்படி பேசுறது எனக்கு சங்கடமாயிருக்கு. சொன்னா புரிஞ்சிக்கோ. கண்ட கண்ட சினிமா பார்த்து, ஃப்ரண்ட்ஸ் தூண்டுதல்ல இப்படில்லாம் பேசிட்டிருக்க. இந்த மாதிரி யோசிக்கிறது கூட தப்புமா. வயசு கம்மினாலும் நான் உனக்கு ‘தாய்மாமா.’ பாரு அதுலயே ‘தாய்’ இருக்கு. தாய்க்கு சமமா இருக்கிறவன்கிட்ட எப்படிமா? எப்படி என்கிட்ட இப்படி கேட்க மனசு வந்தது? என்னால உன்னோட ஆசையை என்னைக்கும் நிறைவேற்ற முடியாது. மனசைப் போட்டு குழப்பிக்காம மேல என்ன படிக்கலாம்னு டிசைட் பண்ணு போ” என விறுவிறுவென்று வெளியே சென்றான்.

ஹரியால் பாப்பா என்றழைக்கப்பட்ட ‘ஹரிப்ரியா,’ மாமனின் மறுக்கப்பட்ட வலி மனதைப் பிழிய கண்ணீரோ அதற்கு ஆதரவளித்தது. தங்களின் பழைய காலத்து வீட்டிற்குப் பின்னுள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தவள், “எப்படி மாமா நான் உங்களை மறக்கிறது? என்னால முடியாது மாமா.”

யாரோ ஒருவர்... “உன் மாமனுக்கேத்த மகராசிதான் நீ!”

“ஹேய், உன்னோட மாமா சூப்பராயிருக்காங்க. பேசாம நீயே கல்யாணம் பண்ணிக்க.” தோழிகளின் கேலி!

“ஏன்மா சாந்தி உன் தம்பிக்கே உன் பொண்ணைக் குடுத்தா என்ன? கண்ணுக்கு லட்சணமான ஜோடியா இருக்காங்க.”

“டேய் பாஸ்கர்! உனக்கென்னடா உன் மச்சினனே மருமகனா வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.”

இப்படி யாரோ ஒருவர், அவள் விவரம் தெரிந்த நாள் தொட்டு தங்கள் இருவரையும் சேர்த்து வைத்து பேசுவது காதில் விழுந்து கொண்டேயிருந்தது அந்த பதின்வயது பெண்ணிற்கு.

வருடங்கள் ஆக ஆக, ‘தன் மாமனுக்காகவே பிறந்தவள் தான்’ என்ற எண்ணம் வலுப்பெற, அதற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்தான் அவளின் மாமன்.

ஆண்களுக்கான மேல்நிலைப்பள்ளி மேலூர் தாண்டி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சந்தபேட்டையில் இருக்க, பெண்களுக்கான பள்ளி மேலூர் பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கிறது. ஹரிப்ரியா ஏழு படிக்கும் பொழுது, ஹரி பனிரெண்டாவது படிக்க, ஹரிப்ரியாவின் தங்கை லட்சுமி அதே பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தாள்.

ஹரி அங்கு படிக்கும் வரை அக்கா பெண்கள் இருவரையும் பாதுகாப்பாகக் கூட்டிச்சென்று பள்ளியில் விட்டு, வரும் பொழுது அழைத்து வருவது அவனது கடமைகளுள் ஒன்றாக இருந்தது.

பள்ளிபடிப்பை முடித்து, திருச்சியில் பி.காம் உடன் சேர்த்து சி.எ படித்துக் கொண்டிருப்பவன் வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் ஒரு முறையோ வீட்டிற்கு வந்து செல்வான். அவனுக்கும் தன் அக்காவை விட்டால் நாதியேது. விடுமுறைக்கு ஊருக்கு வரும்பொழுது தனக்கேயான ஒரே நண்பனுடன் ஊர் சுற்றவது பொழுதுபோக்கு. அவனிடமே தன் அக்கா மகள்களுக்கு யார் மூலமாவது, அதாவது பையன்களால் பிரச்சனை இருக்கிறதா என்பதை விசாரித்து, எதாவது பிரச்சனையென்றால் அதை தீர்த்து வைத்துவிட்டே செல்வான்.

இவற்றை யார் மூலமாவது கேள்விப்படும் ஹரிப்ரியாவிற்கு, ‘அந்த பாதுகாவலன் தான் தன் கணவன்’ என்பது மனதினுள் வேரூன்றிப் போன ஒன்றாயிற்று. ஹரி செய்த ஒவ்வொன்றிற்கும் தனக்கேற்ப அர்த்தம் கண்டுபிடித்தே அனர்த்தமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் ஆசையை வளர்த்துக் கொண்டிருந்தாள் அச்சிறு பெண்.

தற்பொழுது மனதினுள் சிறு உறுத்தல் வந்தது ப்ரியாவிற்கு. காரணம் அப்பா பாஸ்கரும் அம்மா சாந்தியும் சொந்தத்தில் யாரோ சொன்னார்கள் என்றதற்காக, மகளிற்கு மாப்பிள்ளை பார்க்கலாமா என்று பேசிக் கொண்டதுதான்.

அதில் இடிந்து போனவளுக்கு யாரிடம் இதைப்பற்றி பேசுவதென்று தெரியவில்லை. யாரிடமும் தன் மாமன் மேல் தனக்குள்ள மானசீகமான காதலை வெளிப்படுத்தியதும் இல்லை. வெளிப்படுவது போல் நடந்ததுமில்லை. ஆதலால், அவளின் காதல் அவளினுள் மட்டுமே.

இப்போதைக்கு பிரச்சனையை எப்படி தீர்ப்பதென்று யோசித்தவள் கடைசியில் மாமனிடமே கேட்டுவிடுவதென்று முடிவெடுத்து நேரடியாக கேட்டும் விட்டாள்.

அவனின் பதிலில் சர்வாங்கமும் அடங்க தலைசுற்றியது ப்ரியாவிற்கு. அங்கேயே அமர்ந்தவள், ‘இப்படி ஒரு பதில் உங்ககிட்டயிருந்து வரும்னு எதிர்பார்க்கலையே மாமா. எப்படி மாமா மனசு வந்தது உங்களுக்கு. இதென்னவோ சின்னப்பிள்ளைங்க விளையாட்டு மாதிரி பத்தே வார்த்தையில பட்டுன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க. இது சின்ன வயசுலயிருந்து மனசுல செதுக்கி வச்ச சிற்பம் மாமா. காலத்திற்கும் அழியாது. என் உயிரில்லாமல் போனாலும் உன்னைச் சுற்றியே நானிருப்பேன். நீங்க இல்லாம இன்னொருத்தன் தோள் சாய்ந்தால் நான் அந்த மாதிரி பொண்ணா இருக்கிறதுக்கு சமம் மாமா. அதுக்கு நான் உயிரோடிருக்க வேண்டாமா? நீங்க அதைத்தான் விரும்புறீங்களா? என் வீட்லயிருக்கிறவங்களுக்கே என் நினைவெல்லாம் நீங்கன்னு தெரியாம போனது என்னோட துரதிர்ஷ்டம் மாமா. நீங்க இல்லாம... இல்ல முடியாது மாமா நீங்கதான் வேணும்.’

மனதினுள் போராட எதையோ இழந்துவிட்ட உணர்வு மேலோங்க கண்களிலிருந்த கண்ணீரை துடைக்கக்கூட வழியில்லாது வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

ஹரியால் ஒரு நிலையிலிருக்க முடியவில்லை. கால்கள் தள்ளாடியது மனமோ, ‘கேட்டது அவள் தானா! அவளே தானா! என் அக்கா மகளா கேட்டது? என்ன ஆகிற்று அவளுக்கு?’ மனது ஓலமிட வீட்டை விட்டு வந்தவன் அருகிலிருந்த விநாயகர் சன்னதியில் சரணடைந்தான்.

“எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது அவளுக்கு? அந்தளவுக்கா என் நடவடிக்கை இருந்தது?” பார்த்துப் பார்த்து வளர்த்தது பாசத்திற்குப் பதிலாக காதலை வளர்த்ததை அறியவில்லை ஹரி.

கோவிந்தன், தங்கமாரி தம்பதியருக்கு முதலாவதாக சாந்தி பிறக்க. பின் குழந்தையே இல்லை. எத்தனையோ பேர் ஒன்று கூட இல்லாமலிருக்க நமக்குதான் கடவுள் கொடுத்த செல்வம் இருக்கிறதே என்று சந்தோஷப்பட, யாருமே எதிர்பார்த்திராத சமயம் மகளின் பனிரெண்டாவது வயதில் உதித்து உலகத்தில் அடியெடுத்து வைத்தான் ஹரி.

தனக்கு நான்கு வயதிருக்கும் போது அக்காவிற்கு திருமணம். எட்டோடு படிப்பை நிறுத்தியிருந்த சாந்தியின் பதினாறாவது வயதில் பாஸ்கர் வீட்டிலிருந்து பெண் கேட்டனர். யோசித்த அவளின் பெற்றோரிடம், “ஏன் கோவிந்து நீ இப்படிப் பேசுற? ஏம்மா தங்கமாரி நீயாவது சொல்லக்கூடாதா?” என உறவினர் ஒருவர் கேட்க,

“இல்ல சித்தப்பா சின்ன பொண்ணா இருக்காளேன்னு பார்த்தேன்” என்றார் தயக்கத்துடன்.

“அட நீ வேறம்மா. பையன் நல்ல குணம், வசதின்னு குறைவில்லாதவன். படிப்பு கம்மினாலும் நாட்டு நடப்பு தெரிஞ்ச பய. புள்ளைய தங்கமா பார்த்துக்குவான்” என பேசி சம்மதிக்க வைத்து அதன்பின் திருமணம் நடந்தது.

அடுத்த மூன்று மாதத்திற்குள் கர்ப்பமாக வந்த மகளை பிறந்த வீட்டினர் தாங்க, புரியாமல் பல கேள்விகள் கேட்ட சிறுவனிடம், “அக்கா வயித்துல பாப்பா இருக்குதுடா தம்பி. அதுக்கு நீ தாய்மாமா” என்று விளக்கம் சொல்ல, புரியாவிட்டாலும், ‘ஓ...’ என தலையசைத்துச் சென்றான்.

குழந்தை பிறந்ததும் அவனின் அதே கேள்விகள் திரும்ப, “அம்மா தாய்மாமான்னா என்ன?” என்றான் ஐந்து வயதான ஹரி.

தன் வயிற்றைக் காண்பித்து, “அம்மா வயித்திலிருந்து பாப்பா மாதிரி நீ பிறந்தல்ல. அதுமாதிரி அக்கா வயித்துலயிருந்து பாப்பா பிறந்திருக்கா. அக்கா பாப்பாக்கு தாய்னா நீதான் தாய்மாமா. தாய்க்கு சமானம்டா தம்பி. அது உன்னோட பாப்பா” என்று பையனின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமென்று விவரமாகச் சொல்ல, அதை அந்த பிஞ்சு மனம் மூளையில் பதித்துக் கொண்டது. பெயர் வைக்கும் பொழுது, “நான் குழந்தைக்கு தாய்தான. என்னோட பெயரையும் சேர்த்து வைங்க” என்று ஆணையிட, ‘ப்ரியதர்ஷினி’ என்று வைக்கவிருந்த பெயரில் தர்ஷினியை எடுத்துவிட்டு “ஹரி” சேர்த்து “ஹரிப்ரியா” என மாற்றி வைத்தார்கள்.

இந்த பதினேழு வருடத்தில் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவர் செல்ல, தன் அக்காவே அம்மாவாகிப் போனாள் ஹரிக்கு. இதுவரை அக்கா பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்ததில்லை. “பாப்பா” என்றே அழைப்பான்.

நினைவிலிருந்து மீண்டவன், “எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்தது பாப்பா உனக்கு? இதை எப்படி உனக்கு புரிய வைப்பேன்னு தெரியலையே. உன்னை கண்கலங்காம வளர்த்த நானே, இப்ப உன் கண்ணீருக்கும் காரணமாகிட்டேனே.” சற்று நேர யோசனைக்குப் பின், “இனி இந்த ஊருக்கு வந்தால் தானே பிரச்சனை. நான் உனக்குன்னு ஒரு நல்லது நடக்கும் போதுதான் இந்த ஊருக்கு வருவேன்” என்று உடனே வீட்டிற்கு சென்றவன் அக்கா, அத்தானிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் பின்புறம் வந்த லட்சுமி தன் அக்கா அமர்ந்திருந்த நிலை பார்த்து பதறியடித்து, “என்னாச்சி ப்ரியா? ஏன் இப்படியிருக்க?” என உலுக்கினாள்.

நினைவு வந்தவள் தங்கையின் தோள் சாய்ந்து, “எல்லாம் முடிஞ்சிருச்சி?” என தேம்பித் தேம்பி அழுதாள்.

“ப்ரியா என்ன முடிஞ்சிது? இங்க என்ன பண்ற? முதல்ல அழுறதுக்கு காரணம் சொல்லு?” என்றதும் நிமிர்ந்தவள் கண்ணீர் துடைத்து தங்களது அறைக்கு சென்று அடைத்துக் கொண்டாள்.

தேர்வு முடிவு வந்ததும் வீட்டினரின் வற்புறுத்தலால், மதுரையிலுள்ள கல்லூரியில் மாமாவின் படிப்புடன் தொடர்புடைய பி.காம் தான் படிப்பேனென்று தோழியின் அப்பா மூலம் விண்ணப்பப் படிவம் வாங்கி வந்தவள் வீட்டிற்குள் நுழைய, பாஸ்கரும், சாந்தியும் பித்து பிடித்ததுபோல் அமர்ந்திருந்தார்கள். ‘யாருக்கு என்னாச்சி? ஏன் இப்படியிருக்காங்க? ஐயோ! மாமாவுக்கு எதாவது...’ அதிர்ந்தபடி தாயிடம் வந்து நிற்க, மகளைப் பார்த்ததும் இருவரும் கண்ணீர் துடைத்து புன்னகைக்க முயன்றனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“அம்மா என்னாச்சி? ஏன் அழறீங்க? மா..மாமாவுக்கு எ..தா..வது” என திக்கித் திணறி முடித்தாள்.

“அச்சச்சோ! அப்படிச் சொல்லாதடி. அவன் நூறு வயசு நல்லாயிருக்கணும். அப்பாவுக்கு தூரத்து உறவு சித்தப்பா ஒருத்தர் இறந்துட்டாராம். அவர்னா அப்பாவுக்கு உயிராம்” என்றவருக்கு குரலடைக்க, சந்தேகத்தோடு மகள் பார்ப்பதை உணர்ந்து, “அவர் வெளிநாட்டுல இருக்கார் போலிருக்கு. அப்பாவால நேர்ல பார்க்க முடியலையா, அதான் அப்பா கண்ணு கலங்கிருச்சி.”

“சரிமா. நீங்க ஏன் அழறீங்க?”

“அப்பா கண்ணுல கண்ணீரைப் பார்த்ததும் பதறிட்டேன் தெரியுமா? அதான் தன்னாலயே வருது” என சமாளிக்க...

அப்பா அம்மாவின் அன்னியோன்யத்தைப் பார்த்து வளர்ந்தவளாதலால் அதை அப்படியே நம்பி உள்ளே சென்று கதவடைத்தாள். தன்னுடைய ஆடைகளுக்கிடையில் இருந்த ஹரியின் சட்டையை எடுத்து அணிந்து, “ஏன் மாமா என்னை பார்க்க இனி வரமாட்டீங்களா? போன் கூட பண்றதில்லை. நீங்க விலகிப்போனா நான் மறந்து யாரையாவது கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சீங்களா? என்னோட உயிரா நீங்கயிருக்கும் போது வேறெதுவும் சாத்தியமில்லை மாமா. இறந்தாலும் உன்னைத் தொடர்வேன் நிழலாய் நானும்!” கண்ணாடியில் அவளின் ப்ரௌன் நிற விழிகள் உறுதியாய் படிந்தது.

மாலையில் அறைக்குள் சென்றவள் இரவு லட்சுமி வந்து சாப்பிட அழைத்ததும் தான் உணர்வு வந்து சட்டையை கழற்றி இருந்த இடத்தில் பத்திரப்படுத்தி புன்னகையுடன் வெளியே வந்தாள். சாப்பிட வந்தமர்ந்த மகளையே கண்கள் வருட பார்த்த பெற்றவர்களுக்கு கண்களில் நீரிட அதை அடக்குவதே பெரும்பாடாய் போயிற்று. அவளின் முகத்திலிருந்த பிரகாசம் பெற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அணையப்போகும் விளக்கு சுடர்விடுவது போல். சாப்பிட்டு மகள்கள் தங்களறைக்குள் செல்ல.. அவர்களின் உறக்கத்தை உறுதி செய்து வந்த சாந்தி கணவனின் தோள் சாய்ந்து கதறியழுதாள்.

“சாந்தி இதான் நமக்கு விதிச்சதுன்னு எடுத்துக்கணும். அவ இருக்கிறது வரை சந்தோஷமா வச்சிப்போம்” என ஆறுதல் அளித்தாலும் அவர் கண்களிலும் கண்ணீர் கோடுகள். சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து தண்ணீர் குடிக்க ப்ரியா வெளியே வர.. அடுத்த அறையிலிருந்து வந்த தாயின் கதறல் ஏதோ செய்ய அப்படியே நின்றாள்.

“இத்தனை வருஷமா பெத்து அருமை பெருமையா வளர்த்தது இப்படி பாதியிலேயே காவு குடுக்கவா. நான் கனவுல கூட நினைக்கலையேங்க. நம்ம பொண்ணு நம்மைவிட்டு போயிருவான்னு. பயமா இருக்குங்க எப்ப என்ன நடக்குமோன்னு.”

தாயின் பேச்சில் எதுவும் புரியாமல் விழித்தவள் அடுத்து சாந்தி பேசிய வார்த்தைகளில் இடி விழுந்தாற்போல் நிலைகுலைந்து போனாள்.

“நாம ஜாதகம் பார்க்க போயிருக்கக் கூடாதுங்க. ப்ரியாவுக்கு கல்யாணப் பேச்சி எடுக்காம இருந்திருந்தா, இது நமக்குத் தெரியாமலே போயிருக்கும். நாமளும் விதிவசம்னு விட்டிருப்போமே. என் பொண்ணோட உயிருக்கு மூணு மாசம்தான் கெடு குடுத்திருக்காங்க. நான் என்ன பாவம் செஞ்சேனோ தெரியலையே. கல்யாணத்துக்கு பார்க்கப்போன நாம கருமாதிக்குல்ல நாள் குறிச்சிட்டு வந்திருக்கோம். இதை எப்படி பிள்ளைங்ககிட்டச் சொல்வேன். ஐயோ! என்னால தாங்க முடியலையேங்க.”

கதறியழும் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் நிலைமையில் பாஸ்கரும் இல்லையே! மௌனமாக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது பாஸ்கரால். தன்னைக் கட்டுப்படுத்தி, “இது யாருக்கும் தெரிய வேண்டாம் சாந்தி. பொண்ணு முன்னாடி இப்படி அழுது வடியாத. யாருக்கும் எதுவும் தெரியாம இருக்கிறது வரை நல்லது. தன்னோட சாவு நாள் தெரிஞ்சா, வாழ்ற நாள் கொடுமையா போயிரும். மனசைத் தேத்திட்டு அவ மனசுக்கு பிடிச்சதா செஞ்சு குடுத்து சந்தோஷமா வச்சிக்குவோம். இதுல பண்றதுக்கு வேறு எதுவுமில்ல.”

அப்பா அம்மாவின் பேச்சுகள் குறைய தங்களறைக்குள் நுழைந்தவளுக்கு கால்கள் தள்ளாடியது. தங்கை படுத்திருப்பதற்கு மறுபுறம் கட்டிலில் அமர்ந்தவள் கண்கள் எதிரிலிருந்த கண்ணாடியை இலக்கின்றி வெறித்தது. அவளுக்குத் தெரியும் ஜாதகம் பார்த்தவர் மிகவும் நுணுக்கமாய் கணித்து வருங்காலம் இறந்தகாலம் முதற்கொண்டு பிட்டுபிட்டு வைப்பவரென்று. அவர் சொன்னது இதுவரை பொய்யானதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ‘ஓ’வென்று அழவேண்டும் போல் தோன்றியது. இடமறிந்து அடக்கிக் கொண்டாள். ‘மாமா... மாமா’ என்று மனம் அரற்றியது.

“அவ்வளவுதானா! நான் உங்களைச் சேரவே முடியாதா? உங்க மனைவியா வாழணும்னு நினைச்சேனே. அவ்வளவும் கனவு தானா? என் நினைவுகள் அனைத்தும் கானல் நீர் தானா மாமா. உங்களை நெருங்க முடியாத தூரத்திற்கு நான் போகப் போறேனா? ஐயோ! எப்படி மாமா முடியும் உங்களைவிட்டுப் பிரியுறது. என்னைவிட உங்களை யார் நல்லா பார்த்துப்பாங்க. கடைசிவரை என்னை புரிஞ்சிக்காமலே போயிட்டீங்களே மாமா! என்னைப் புரியுறதுக்கான காலமும் ஓரு நாள் வந்தே தீரும் மாமா. நீங்க சொல்லப்போற அந்த வார்த்தையில்தான் என் ஆன்மா சாந்தியடையும். என் காதல், என் சுவாசம், என் உயிர் நீங்கதான மாமா! உங்களை என்கிட்டயிருந்து விதி பிரிக்கலாம், ஆனால், எக்கணமும் ஏதோ ஒரு உருவில் உன் நிழலாய் நானிருப்பேன்” (கடைசிவரை மாமனின் நிழலாய் தான் இருக்க... உருவமும் உறவும் தான் வேறானதோ!)

மனதில் தோன்றிய தைரியத்தில், தான் கண் கலங்கினால் மாமாவிற்கு பிடிக்காதென்றும் அழுகையைக் கைவிட்டு கனவுலகில் ஹரியுடன் சண்டையிட்டாள் ஹரிப்ரியா.

திருச்சி ஹாஸ்டலில் கவலை படிந்த முகத்துடன் அமர்ந்திருந்தான் ஹரி. நண்பர்களின் கிண்டல் கலாட்டா என சுற்றித் திரிந்தவன் அறைக்குள் முடங்க, நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இறுகிப் போனவனை யாராலும் நெருங்க முடியவில்லை. ஒருவார விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்றிருந்தவன் இரண்டே நாளில் திரும்பியதால் விடுதியிலும் அதிகம்பேர் இல்லை. நிறைய யோசிக்க குழப்பமே மிஞ்சியது.

என்ன முயன்றும் அக்கா மகளை தாரம் ரேஞ்சிற்கு யோசிக்கக்கூட முடியவில்லை. அவளின் யாசகமான முகம் மனதில் வந்து போனது. ‘என்னை மறந்துவிட்டு வேறு வாழ்க்கை ஏற்றுக் கொள்வாளா?’ அவளின் விழிகளிலிருந்த கெஞ்சுதலுக்கு மேலுள்ள தீவிரம் இப்பொழுது நினைக்கையில் ஹரியை உலுக்கியது. இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பதென்று தெரியாமல் விழிபிதுங்கி போனான். ‘அவள் எதாவது தப்பா முடிவெடுத்தா என்ன செய்வது’ என்றெண்ணியவன் உடனே வீட்டிலிருக்கும் போனிற்கு அக்காவை அழைத்தான்.

முதலில் எடுத்தது ப்ரியா தான். போனை எடுத்தவள் ‘ஹலோ’ சொல்ல, எதிரில் பதிலில்லை என்றதும், “நீங்கதான்னு தெரியும் மாமா. என் மனசு சொல்லிச்சி நீங்க போன் பண்ணுவீங்கன்னு. என்கிட்ட பேச விரும்பலல்ல? ப்ரியா என்கிட்ட பேசுன்னு சொல்ற நாள் வெகுதூரத்துல இல்ல மாமா. ஆனா, அதைக் கேட்க நான் இருப்பேனோ, என்னவோ!”

“பாப்பா..” என அதிர்ந்தவனை...

“ப்ச்.. இந்த பாப்பாவை விடுங்க மாமா. அதை நீங்க சொல்லும்போது இன்னும் தள்ளிப்போற மாதிரி இருக்கு. உங்க பேர்ல பாதியை வச்சிருக்கிற மாதிரி, உங்கள்ல பாதியாகவும் நினைச்சேன் மாமா. ப்ளீஸ் என்னை ப்ரியான்னு கூப்பிடுங்க மாமா.”

“உன்னை என்னோட பாதியாக்கினா நான் பாவியாகிடுவேன்மா. ப்ளீஸ் இந்த நினைப்பை விட்டு வெளில வா.”

“ப்ச்... போங்க மாமா. நீங்கதான் என்னோட சுவாசம். உங்களை நினைக்கலன்னா எப்பவோ போற உயிர் இப்பவே போயிரும். உங்களுக்கு அதான் வேணும்னா சொல்லுங்க?”

“ஹையோ! ஏன் இப்படிக் கொல்ற? பேசக் கத்துக்கொடுத்தவன் கிட்டயே உன் பேச்சித் திறமையைக் காண்பிக்கிறியா?” என்று கத்தினான்.

“நீங்களே சொல்றீங்க பாருங்க எனக்கு பேசக்கத்துக் கொடுத்ததுன்னு. அப்பயிருந்தே எனக்கு எல்லாமுமா இருந்தீங்கள்ல மாமா? இப்ப என்ன வந்திச்சி?”

“ச்சே... உன்கிட்ட பேச முடியாது. முதல்ல அக்காகிட்ட போனைக் கொடு.”

“ம்.. வெய்ட் பண்ணுங்க” என்றபடி திரும்பியவள் ஷாக்கடித்தது போலானாள். வாய் தன்னாலேயே “அம்மா” என முணுமுணுத்தது.

போன் சத்தம் கேட்டதும் தம்பியாகத்தானிருக்கும். அவனிடம் ஜாதகம் பற்றிய உண்மையைச் சொல்லிவிடலாமா! வேண்டாமா! என தவித்தபடி வர மகளின் “நீங்கதான் போன் பண்றீங்கன்னு மனசு சொல்லிச்சி மாமா” என்ற வார்த்தை காதில் விழ, அதைத் தொடர்ந்து பேசிய அனைத்தும் விவரிக்க முடியா ஆச்சர்யத்தில் தள்ளியது. ‘இது எப்பயிருந்து? தங்களுக்கே இப்படி ஒரு எண்ணம் வந்ததில்லையே. இவளுக்கெப்படி?’ தம்பியிடம் தப்பில்லையென்று தோன்றியது.

தலை கவிழ்ந்தபடி தாயிடம் போனைக் கொடுத்துச் செல்ல, “டேய் தம்பி! நீ சீக்கிரம் கிளம்பி ஊருக்கு வா” என்று சாந்தி அழைக்க, “இல்லக்கா நான் வரலை. இனிமேல் வர்றதாகவும் இல்லை” என்றான் முடிவாக.

“ஓ... அப்ப என் வீட்டுல சாவு விழுந்தாகூட வரமாட்டியா?” என்று தாயாய் தாங்கியவள் கோவமாய் கேட்டாள்.

“அக்கா!!!” என அதிர்ந்தான் ஹரி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top