• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
10



சிவகாமி, இளங்கதிர் பாசத்தைப் பார்த்த பிரஷாந்த், இந்த அன்பானவர்களின் அன்பே தன் அக்காவிற்குச் சிறந்ததென்று நினைத்தான்.

திருவிற்கு ஏதோ ஒரு எண்ணம் ‘அவர்களைப்போல் தங்கள் வாழ்க்கையில்லையோ! அன்பான ஜாலியான அம்மா பையன். ரொம்ப காலத்துக்கு இவங்க நல்லாயிருக்கணும். வரப்போற பொண்ணும் இவங்க அன்பைப் புரிஞ்சவளா நல்லவளாயிருக்கணும்.’ எங்கே தன் கண்ணே பட்டுவிடுமோ என்றவளுக்குக் கண்களில் சிறுதுளி நீர்.

“சரி டைமாகுது தூங்குணும் வாங்க” என்றார் சிவா.

“அம்மா நாங்க திண்ணையில படுத்துக்கறோம். நீங்க உள்ள தூங்குங்க. டிரைவரை சாப்பிட்டதும் கார்லயே படுக்கச் சொல்லிட்டோம்.”

“ராஜா தரையில எப்படி படுப்ப?”

“அம்மா எனக்கெந்த பிரச்சனையுமில்ல. நீ உள்ள போமா. கூட்டிட்டுப் போ மொழி.”

“வாங்க அத்தை” என உள்ளே அழைத்துச் சென்று பெட்ரூமை குருமூர்த்தி சிவகாமிக்குக் கொடுத்து ஹாலில் வீட்டுப் பெண்கள் இருவரும் படுத்துக்கொண்டார்கள்.

தலையணையில் தலையில் கை வைத்து கால்மேல் கால்போட்டு விட்டத்தைப் பார்த்தபடி, “ஏன்டா மாப்ள... அது ஏன் அப்படிப் பண்ணின?” என்றது திருவின் காதிலும் விழுந்தது.

“எத எப்படிப் பண்ணிட்டாங்க மச்சான்?”

“அதான்பா.. நாங்க கிளம்புறோம் சொன்னப்ப?”

“ஓ... அதுவா. ஒரு நிமிஷம் உங்க போனைக் குடுங்க” என்று வாங்கி யூட்யூப்பிலுள்ள வேலாயுதம் பட சந்தானம் காமெடியைப் ப்ளே செய்து கொடுக்க, ‘போப்பா போ என் பொணத்த தாண்டிப் போ’ வசனத்தைக் கேட்டுக் கதிர் சத்தமாக சிரிக்க... அச்சிரிப்பு அவளுள் சிறு அதிர்வலையை உருவாக்கியதோ!

“டேய் இதைப் பார்த்துதான் அவ்வளவு அட்டகாசம் பண்ணுனியா?” அசடுவழிய சிரித்த பிரஷாந்தின் தலையில் தட்டி, “காமெடியா இருந்தால் கூட இனிமேல் அந்த மாதிரி வார்த்தையை யூஸ் பண்ணாத. எனக்கு சங்கடமாயிருந்திச்சி” என்றதும் சம்மதமாக தலையசைக்க... தூங்கச் சொல்லி தானும் அப்படியே கண்ணயர்ந்தான்.

திடீரென்று மின்விசிறிலிருந்து காற்று அவனை நோக்கி வர மெல்ல தலைநிமிர்ந்து பார்த்தவனின் தலையருகே நின்றிருந்தாள் திருமொழி. அவன் பார்வை உணர்ந்து “எங்களுக்கு சீலிங் பேன் இருக்கு. இது உங்களுக்காக” என்றாள்.

“எனக்கா? உன் தம்பிப்பையனுக்கா?”

“யாருக்கா இருந்தா என்ன. நீங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட். அவன் என் தம்பி மட்டும்தான் கெஸ்ட் கிடையாது. அதனால உங்களுக்குதான் இது.”

“ஹ்ம்.. டேய் மாப்ள மழையில் ஓவரா குளிருது அந்தப் பெட்ஷீட்டை எடுத்துப்போடு” என்றதில்... ‘மழையா? மழை பெய்யலையே’ என்பதாய் அவள் பார்த்தாள்.

“போய் தூங்கு மொழி. காலையிலயே கோவிலுக்குப் போகணும்ல.” கதிர் புன்னகையுடன் கண்மூடினான்.

கண்மூடிப் படுத்த திருமொழிக்கு என்னவென்று புரியாத சில நுண்ணுணர்வுகள். ஏனோ கதிரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. அவனின் சிரிப்பும், தாயிடம் கொஞ்சிய விதமும், எதையோ மறுபடியும் நினைவுப்படுத்த பட்டென கண்திறந்து சட்டென கண்மூடிக் கொண்டாள்.

கதிர் மேல் ஈர்ப்பு வரத்தான் செய்ததோ! ஈர்ப்பு... காதலாகுமா? கானலாகுமா?

‘இல்லை இது தப்பு’ என்ற தவிப்பு அவளுள் எழ அன்றைய கனவுகள் யாவும் அவளை ஆட்டிப்படைக்க, காலையில் எழும்போதே சிறு பயத்துடன் எழுந்தவள் கதிரின் “அம்மாஆஆ” என்ற அலறலில் அடித்துப்பிடித்து வெளியே வர கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றாள்.

கதிரின் அலறலில் காமாட்சியும் திருவும் வெளியே வந்தார்களென்றால் அருகில் படுத்திருந்தவனுக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன?

“என்ன மச்சான்? ஏன் அலறுனீங்க?”

“அ.. அங்க பாருடா. பா..பா.. பம்புடா” என்றவன் குரல் தந்தியடிக்க,

“பம்புடாவா... ஓ... பாம்பா? எங்கயிருக்கு மச்சான்?” என வேகமாக எழுந்தவனைத் தடுத்து “எங்கடா எழுந்திருக்க? அது என் பக்கத்துலதான் படுத்திருக்கு” என்றான்.

அதே நேரம் வெளியே விளக்கு எரிய இளங்கதிரிடம் பாம்பு எங்கேயென்று கேட்டதற்கு, கண்மூடி அவன் காட்டிய இடத்தைப் பார்த்த திரு விழுந்து விழுந்து சிரித்தாள். சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு.

அந்நேரம் வெளியே வந்த குருமூர்த்தியும் சிவகாமியுமே அவளை ஆச்சர்யமாய் பார்க்க... பிரஷாந்த் தன் சகோதரியை அன்பாய் பார்த்தான்.

அதுவரை பயத்திலிருந்த கதிர் அவளின் அள்ளிக்கொள்ளும் சிரிப்பில் கொள்ளை போனான். தன் பயத்திலிருந்து விலகிய கண்கள் காதலாய் அவளைக்காண அது எதையும் உணரவில்லை அவள்!

“அக்கா பாம்பைப் பார்த்து ஏன் இந்தச் சிரிப்பு?”

“இதோ சொல்றேன்” என்றவள் சிரிப்பை நிறுத்தப் போராடி முடியாமல் மீண்டும் சிரித்து திரும்பவும் வாயைப்பொத்தி வந்த சிரிப்பை அடக்க வழியில்லாது கதிரினருகில் கிடந்ததை எடுக்கப்போக...

“ஏய் என்ன பண்ற? அதென்ன கயிறுன்னு நினைச்சியா? பாம்பு” என்றான் அதட்டலாக.

“ஹா..ஹா பாம்பா? இதையா சொன்னீங்க?” என்று எடுத்துக் காண்பிக்க, அசடு வழிய மட்டுமே முடிந்தது இளங்கதிருக்கு. உண்மையில் அது கயிறுதான். சற்று வளுவளுப்பான கயிறு.

“இல்ல மேலயிருந்து என்மேல விழுந்ததா தொட்டுப் பார்த்தேன் வளுவளுப்பாயிருந்தது. அதான் பயத்துல அலறிட்டேன்.”

சிரிப்பை நிறுத்தாமலே ‘அப்புறம்?’ என்பதாய் அவள் பார்க்க...

“இங்க பாரு மொழி நான் முன்னப்பின்ன பாம்பைத் தொட்டுப் பார்த்ததில்ல. அதான் கொஞ்சம்...”

“ஆமா திரு. அவன் டிவியில பாம்பு பார்த்தா கூட ஆஃப் பண்ணிட்டு கண்ணை மூடி என்னை இறுக்கப் பிடிச்சிப்பான். குறைஞ்சது ஐந்து நிமிஷமாவது அதனோட பாதிப்பு இருக்கும்.”

“ஓ... பார்த்தா அப்படித் தெரியலை அத்தை. ஆனா, நேர்ல பார்த்தாச்சே நம்பித்தான் ஆகணும். எங்க இளா அத்தான் சின்ன வயசுலயே பாம்பைக் கையில தூக்குவாங்க. எங்க அப்பாவோட ட்ரைனிங்” என்று சிரித்தபடி இளங்கதிரைக் கண்டவள் கண்கள் சிரிப்படங்கி அப்படியே கட்டுண்டது.

‘என்ன பார்வை இது? ஏன் இப்படித் தன்னைப் பார்க்கிறான்?’ மனம் கேட்டாலும் தன் பார்வையை மாற்றவில்லை அவள். சில வினாடிகளில் ‘என்ன செய்யுற மங்கை? ஒரு ஆண்பிள்ளையை இப்படி... உன்னோட இளா அத்தானை மறந்துட்டியா?’ என மூளை அறிவுறுத்தியதில் வேகமாகப் பார்வையை விலக்கி “கிளம்புங்க டைமாகுது” என்று உள்ளே சென்றாள்.

கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த காமாட்சியைக் கண்ட அன்புவும் இளங்கதிரும் ஏன் என்பதாய் கேட்டனர்.

“இத்தனை வருஷத்துல இவள் இப்படிச் சிரிச்சதில்லபா. மிஞ்சிப்போனா உதட்டை இழுத்துப் பிடிச்சிப்பாளே தவிர, மனம் விட்டுச் சிரிச்சதில்ல. முதல்முறையா என் மருமகள் சிரிச்சிப் பார்க்கிறேன்பா” என்றார் நெகிழ்ந்த குரலில்.

“இனிமேல் அவள் எப்பவும் இப்படியே இருக்கிற மாதிரி செய்திடலாம் காமாட்சி. நீ கவலையை விடு” என்றார் சிவகாமி.

“ரொம்ப நல்ல பொண்ணுக்கா. அவளுக்கு அப்படி நடந்திருக்க வேண்டாம். அவளைத் தனிமரமா நிற்க வச்ச படுபாவிங்க அழிஞ்சிதான் போவானுங்க” என்று முகம் தெரியாத அந்நபர்களைச் சபித்தார்.

உள்ளே நின்று கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர். ‘உண்மைதானே. நான் சிரித்து எத்தனை வருடங்களாகிற்று. இவன் என்னை ஏதோ செய்கிறான். இவன் சிரிப்பில் கண்களில் ஏதோ இருக்கிறது. அதில் என்னையறியாமல் நானும் மயங்குகிறேன். இரண்டே நாட்களில் ஒருவனால் என் மனம் சலனமடைகிறதா? பலவீனமாகிறேனா நான்? அப்ப இளா அத்தான்?’

‘இல்ல இது சரி கிடையாது மங்கை. இப்படியிருந்தா உன்னோட லட்சியம் என்னாகிறது. எல்லாத்தையும் மறக்க வைக்கிறான் இவன். இனிமேல் இவனை விட்டு விலகியே இருக்கணும்’ என நினைத்து கோவிலுக்குச் செல்வதற்கு குளிக்க ஆடைகளை எடுத்து வெளியிலிருக்கும் குளியலறை நோக்கி வந்தவள் காமாட்சியின் கலங்கிய கண்களைக் கண்டு, “அத்தை போதும். நான் குளிச்சிட்டு வர்றேன். அப்படியே ஒவ்வொருத்தரா குளிச்சி முடிச்சி சீக்கிரம் கிளம்பிரலாம்” என்று வெளியிலிருக்கும் குளியலறை நோக்கிச் செல்கையில் இளங்கதிரைப் பார்க்காதே என மூளை சொன்னதையும் மீறி, அவனைக் கண்கள் காண லேசான புன்னகையுடன் அவனைக் கடந்தாள்.

ஓரப் பார்வை தனை வீசி

ஒற்றைப் புன்னகை சிந்தி

ஓராயிரம் கவியெழுத - எனைத் தூண்டி

உடல் சிலிர்க்க வைக்கிறாள்!

மொத்தக் கவிதையும்

அவளாகிப் போகையில்,

ஹைக்கூ கவிதைக்கே

வழியில்லையாம் இங்கே!

ஓராயிரத்துக்கு நானெங்கே போவது?

என்னுள் வெட்கக் கவிதை மட்டுமே!

“அக்கா சீக்கிரம் டைமாகுது. இன்னும் என்ன பண்ற?”

“இருடா. கோவிலுக்குச் சும்மாவா போறது?” என்று கதவைப் பூட்டி வந்து காரில் ஏறியதும், அவளின் தலைப்பின்னலை அவிழ்த்த காமாட்சியைத் தடுத்தாள்.

“சும்மா இரு திரு. சளி பிடிச்சிக்கப் போகுது. அப்புறம் காய்ச்சல் தலைவலின்னு அல்லாடணும். இப்ப காத்துல கொஞ்சம் உலரட்டும். பிரஷாந்த் வீட்டுக்குப் போயி லூஸா பின்னல் போட்டுக்கலாம்.”

“ம்க்கும்... ரெண்டு ஊருக்கும் இடையில ஐம்பது கி.மீ வித்தியாசம் பாருங்க” என முனகினாலும் சரியென்று முடியை விரித்துப்போட... அது பின்னால் அமர்ந்திருந்த கதிரின் முகத்தில் பட்டதில் அவனுக்கு தும்மல் வந்தது.

என்னவென்பதாய் அவள் திரும்ப கூந்தலின் மீதி பாகங்கள் அவனை விட்டு விலக... தும்மல் நின்றதும், “என்ன ஷேம்பூ போடுற?” என்றான்.

வேகமாக முடியை ஒதுக்கியவள் “ம்க்கும்” என்று திரும்பி அமர்ந்து கொண்டாள்.

“என்ன மச்சான் கவிதை கொட்டுதா?”

“எங்கடா மாப்ள கொட்டிய கவிதையெல்லாம் கொள்ளை போயிருச்சி. என் மொத்தக் கவிதையும் முன்னாடி இருக்கிறப்ப தனிக்கவிதை எப்படிடா வரும்.”

“வரலன்னு சொல்லுடா மகனே. ஏன் பூசி மொழுகுற.”

‘தன்னைத்தான் சொல்கிறானோ?’ என்ற சந்தேகத்துடன் கதிரின் புறம் திரும்பினாள்.

அவள் கண்பார்த்து சிரித்தபடி, “உள்ளம் கொள்ளை போகுதே! உன்னைக்கண்ட நாள் முதல்! உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே” என்று பாடினான்.

கண்களால் கத்தியை வீசிவிட்டு உதடு சுழித்துத் திரும்பிக் கொண்டாள் மங்கையவள்!

“மாப்ள ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

“சொல்லுங்க மச்சான். முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன். இல்லன்னா என் அக்கா தீர்த்து வைப்பா.”

“டேய்! உங்களுக்குள்ள பேசும்போது என்னை ஏன் இழுக்கிற?”

“மச்சான் உங்களைப் பார்த்து டேய் சொல்றா சும்மாயிருக்கீங்க. என்னன்னு கேளுங்க?” பிரஷாந்த் கதிரை இழுத்துவிட...

“தம்பிப்பையா வேண்டாம். வந்தேன்னா தொலைச்சிருவேன் உன்னை.” பதிலுக்கு அவள் மிரட்டல்விட்டாள்.

“விட்ரா மாப்ள. நான் என்னோட சந்தேகத்தைக் கேட்கிறேன். பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா?”

“அட மச்சான். உங்க சந்தேகம் இப்படியா வரணும். இதற்கு அந்த ஆண்டவனாலேயே பதில் கண்டுபிடிக்க முடியலையே. அடியேன் எம்மாத்திரம்.”

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும். சும்மா பேச்சை மாத்தாத.”

“அ..அது ம்... அது...”

“தாயே நீங்க சொல்லுங்க?”

“அதுடா ராஜா. வந்து வந்து...”

“ஆக மொத்தம் யார் வாயிலிருந்தும் பதில் வராது. நானே சொல்றேன். பெண்கள் கூந்தல் மணத்திற்கு சிக்-கே காரணம்.”

“நக்கீரா! நன்றாக என்னைப் பார். சிக் கூந்தலைச் சிக்கலில் விட்டுவிடும்.”

“ஐயனே நெற்றிக்கண் திறப்பினும் சிக் சிக்கே. உண்மையை மறைக்க எவராலும் முடியாது.”

“நக்கீரா..!”

“ஆண்டவா..!”

ஹா..ஹா என்ற சிரிப்புச் சத்தம் மட்டுமே காருக்குள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அதற்குள் நிஷாந்த் வீடும் வர, “மச்சான் நான் எதிர்பார்க்கவேயில்ல செம போங்க.”

“நீயும் சொதப்பாம சரியா பண்ணுனியேடா.”

“டேய் தம்பிப்பையா! காலையிலிருந்து சிரிக்க வச்சே வயித்தைப் புண்ணாக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? நிஜமாவே டைமிங் ரைமிங்னு சான்ஸேயில்ல” என்றாள் மாறாத புன்னகையுடன்.

“ராஜா இப்படியெல்லாம் பேச எங்கடா கத்துக்கிட்ட?

“உங்களைத் தவிர வேற ஆள் வேண்டுமா அன்னையாரே! என் குருவே தாங்கள்தானே! நான் என் செய்வேன்” என கும்பிடு போட்டான்.

அதற்குள் நிஷாந்த் வெளியே வர, அங்கே சிரித்துக் கொண்டிருந்த திருமொழியைப் பார்த்தவன் அவளையே பார்த்திருந்த தம்பியையும் பார்த்தான். முன்தினம் இரவே அவர்களின் உறவை சொல்லிவிட்டார் ரத்தினம். இருவரின் சிரிப்பிலும் தன் மனமும் சந்தோஷமடைய, “என்ன திருமா காலையிலயே தௌசண்ட் வாலா சரவெடி வெடிக்குது?”

“கிண்டல் செய்யாதீங்கண்ணா. எல்லாம் இவங்க ரெண்டு பேராலயும்தான். சோறு போட்டு சாகடிச்சவங்களைக் கேள்விப்பட்டிருக்கேன். இவங்க என்னை சிரிக்கவச்சி... ஷப்பா முடியலடா சாமி” என்றாள் சிரித்தபடி.

“மாப்ள சாமியை ‘டா’ போட்டு பேசும் இந்த அறியாப் பெண்ணை என் செய்வது?”

“அறியாப் பெண்ணை ஆப்பச்சட்டியில் போட்டு பொறித்து எடுத்துவிடலாம் ஐயனே!”

“சர்வ லட்சணமும் பொருந்திய இப்பெண்ணை ஆப்பச்சட்டியிலிடுவதா? இல்லை பூச்சட்டியிலிடு.”

“ஐயனே! பூச்சட்டியென்றால் நம் பாஷையில் தீச்சட்டியாயிற்றே?”

“ஓ... அதற்கு இப்படியொரு பெயருண்டோ! நக்கீரா கூட்டு உன் அரசவையை. அழை உன் பாண்டிய மன்னனை!”

“வந்துட்டேன்” என்று நிஷாந்த் வந்ததில் அனைவரும் சத்தமாக சிரிக்க... “இப்ப என்ன வேணும்? முதல்ல கோவிலுக்குக் கிளம்புங்க. அங்க போயி அரசவையைக் கூட்டலாம்” என்றான்.

தன் மகன் மனைவியின் இப்பரிணாமம் பார்த்திருந்த குருமூர்த்திக்கு, அவர்களின் இந்த சந்தோஷம் நிம்மதியாக இருந்தது. என்றுமே அவர்களை இப்படிப் பார்த்ததில்லை. தங்களுக்குள் அதிகம் இப்படிதான் பேச்சு போகும் என்றாலும் அதிலெல்லாம் இல்லாத ஏதோ ஒன்று இப்பொழுது அவர்களிடம் இருப்பதை உணர்ந்தார். ஏன் எதையோ பார்த்து பயப்பட வேண்டும். நடப்பது நடக்கட்டும் என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்.

நிஷாந்த், சரண்யா மட்டும் இவர்கள் காரில் வர, சில முக்கிய உறவினர்களுடன் நிஷாந்த் அப்பா அம்மா வேனில் வந்தார்கள். பெண்கள் நால்வரும் நடு சீட்டில் சமாளித்துக்கொள்ள, பின் சீட்டில் இளைஞர்கள் மூவரும் அமர்ந்திருக்க முன் சீட்டில் குருமூர்த்தி அமர்ந்திருந்தார்.

சிறியவர்கள் அரட்டைக்கு நடுவில் சிவகாமியும் காமாட்சியும் தனியாக பேசியபடி வந்தார்கள்.

நிஷாந்த் தன் கைபேசியில் கோவில் செல்லும் வழிக்கான மேப்பை டிரைவர் முன் வைத்திருக்க எங்கே செல்கிறோமென்று எவருக்கும் தெரியாதிருந்தது.

காருக்குள் தங்களின் அரட்டைக் கச்சேரியைத் தொடர, அமைதியாக புன்னகையுடன் வேடிக்கை பார்த்திருந்த திருமொழிக்குத் தாங்கள் கடைசியாக கோவிலுக்குச் சென்றது நினைவு வர கண்கள் கலங்கியது.

தன் வீட்டினரைக் கண்முன் நிறுத்த, அவர்களின் அலறல்களும் கண்முன்னே தோன்ற தன் நினைவுகளும் பின்னோக்கியது.

அத்தை மாமா தாத்தா பாட்டியென்று அடுத்தடுத்த இறப்புகளுடன் தன் தகப்பனின் சாவைப் பார்த்து அலறப்போனவள் வாயை தாத்தா வெங்கடாசலம் மூட, அவளின் அலறல் அழுகை அவளுக்குள்ளே!

யாருமறியாமல் ஓரிடத்தில் ஒழிந்தவர்களைத் தேடி இருவர் வர, பயத்தில் பின்னோக்கி நகர்ந்தவர்கள் பள்ளத்தில் விழுந்தனர். அவர்களின் அலறலைத்தான் தமிழரசி, அன்பழகன் இருவரும் கேட்டது. அவள் விழுந்த சில நிமிடங்களில் இளநாதனின் சபதக்குரல் கேட்க அத்துடன் கண்மூடிவிட்டாள் மங்கையர்கரசி.

அவர்கள் விழுந்து சில மணிநேரங்களான பொழுது, ஒருவர் தன் மகளுடன் அவர்கள் இருவரையும் நோக்கி பதற்றத்துடன் வந்து ஆளுக்கொருவராய் உயிர் இருக்கிறதா என்று பார்க்க... இருவருக்குமே உயிர்த்துடிப்பு இருப்பதை உணர்ந்தார்கள். பெரியவரை எழுப்பியதில் சில நிமிடங்களில் அவர் கண்திறக்க, திறந்த நிமிடம் குழந்தையைத் தேடி, “என் பேத்தியைக் காப்பாத்துங்க. அவ ஒருத்தியாவது என் குடும்பத்துல உயிரோடிருக்கட்டும். என் பேத்தியைக் காப்பாத்துங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்” என கெஞ்சியவர் என்ன நினைத்தாரோ தன் செயின் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தார்.

சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்க மனமற்று அவர்கள் மறுத்ததும், “என் பேத்தி வைத்தியச் செலவுக்காவது வச்சிக்கோங்க. அ..அவ நல்லாயிருக்கணும்” என்று முடிக்க அவரின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.

வேறு வழியில்லாமல் சிறுமியை மட்டும் மருத்துவமனையில் சேர்த்து, இரண்டு நாட்கள் கழிந்த பின்னே அவள் உயிர் பிழைத்தெழ, செவிலி ஒருவர் “காமாட்சி பொண்ணு கண்முழிச்சிட்டா பாருங்க” என்றார்.

“அத்தை” என்ற அலறல் மங்கையிடம்.

தன் முன் நின்றிருந்தவரைக் கண்டவள் ‘யாரிவர்? என் காமாட்சி அத்தை எங்கே?’ என்று வெளியே பார்த்தாலும் தன் கண்முன் இறந்தவர் எப்படி இங்கே என்பதும் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் இறப்பை ஏற்க மறுத்ததோ மனது!

தன்னைக் கண்டு தயங்கிய அச்சிறு பெண்ணை காமாட்சி பார்க்க, “காமாட்சி பாப்பா என்ன சொல்றா?” என்ற தகப்பனிடம்... “மிரள்றாப்பா” எனவும், மங்கையிடம் குனிந்து, “உன் தாத்தா உன்னை நல்லா பார்த்துக்கச் சொல்லிதான் இறந்தார்” என்றார் மெதுவாக.

“அப்ப தாத்தாவும் இல்லையா அத்தை. அப்ப எனக்கு யாருமே இல்லையா?” ‘மீண்டும் வருவேன்டா’ என்ற குரலில் கண்கள் ஒளிர நிமிர்ந்தமர்ந்தவள் ‘இளா அத்தான் வருவாங்க. நான் காத்திருப்பேன். கண்டிப்பா வருவாங்க’ என மனதினுள் உருப்போட்டு, “அத்தை நாம எப்ப ஊருக்குப் போறோம்?” என்றாள்.

“நான் உன் அத்தையில்ல பாப்பா.”

“தெரியும். எங்க அத்தை பெயர் காமாட்சிதான். அதனால உங்களையும் நான் அத்தைதான் சொல்வேன்.”

“உன் பெயர் என்ன?”

“மங்கையர்கரசி.”

“எங்களோட வந்திருறியா? என்னோட வந்தா உன் பெயர் கூட மாறிரும். அப்பா தெரிஞ்சவங்க மூலமா உன்னை படிக்க வச்சிருவாங்க. இனிமேல் உனக்கு நாங்க மட்டும்தான். சரியா பாப்பா?”

“சரி அத்தை. நான் உங்களோடவே வர்றேன்” என்று சம்மதித்தாள்.

“உனக்கு ஒரு பெயர் வைக்கலாமா? எப்பவும் யாரும் உன்னை யாரும் இல்லாதவ சொல்லிரக்கூடாது. மத்தவங்க உன்னைக் கூப்பிடும்போது கூட மரியாதை குடுத்துக் கூப்பிடுற மாதிரி வைக்கணும்.”

“அப்படி ஒரு பெயர் இருக்கா?”

“ஆமா. இந்த ஹாஸ்பிடல்ல உன்னைச் சேர்க்கும்போதே திருமொழி இந்த பெயர்லதான் பண்ணியிருக்கோம். இனிமேல் அதுதான் உனக்கு நிரந்தரம் சரியா?”

“சரிங்க அத்தை” என்றவள் அன்றிலிருந்து திருமொழியாகவே மாறிவிட்டாள். ஆனால், மனதில் உள்ள வன்மம் மட்டும் மாறாதிருந்தது.

“ஹாஸ்பிடல்லதான்கா பெயர் மாத்தினோம். ரொம்ப நல்ல பொண்ணு. அவளோட குடும்பம் பற்றிக் கேட்டேன். சொல்லவேயில்ல. திரும்பவும் மனசு கேட்காம உனக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லு. உனக்கு வேற சொந்தம் யாராவது இருந்தா கூட சொல்லு சொல்லிட்டேன்” என அன்றைய நினைவில் மூழ்கினார் காமாட்சி.

“சொந்தமா... அந்த சொந்தம்தான்.. எங்க குடும்பத்தையே அழிச்சது. அந்த சொந்தம்தான்.. நாங்க சாகுறதைப் பார்த்து ரசிச்சது. கண்டிப்பா அவங்களைப் பழிவாங்குவேன். என் குடும்பத்தை அழிச்சவங்களைப் பழிவாங்குவேன்” என்று ஆவேசக்குரல் எழுப்பினாள்.

“என்னமா சொல்ற? உன் தாத்தாவும் நீயும் தனியா வரலையா?” மனதிற்குள் சொல்ல முடியா வேதனை அவர்களுக்குள்.

“இல்ல. இரண்டு குடும்பம் வந்தோம். காமாட்சி அத்தை குடும்பம். ரெண்டு தாத்தா, பாட்டிங்க, அப்பா எல்லாரும் என் கண்முன்னால...”

“பாப்பா!” ஒட்டுமொத்த அதிர்வு அவர்களிடம்.

“கொ..கொன்னுட்டாங்க அத்தை. என் சித்தப்பனும் அவர் பையனுங்களும் சேர்ந்து. எல்லாரையும் ஒரே இடத்துல... அவனுகளை விடக்கூடாது. விடமாட்டேன்.” கதறி அழவில்லை அவள். அவளுக்குள் இருந்தது பழிவாங்கும் எண்ணம் மட்டுமே மனதினுள் நிலைத்தது.

அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து, “அழுதிரு பாப்பா” என்ற காமாட்சிக்கு கண்ணீர் வழிந்தது. ‘இந்த வயதில் இப்படியொரு இழப்பை எப்படித்தாங்கும் இப்பெண்ணின் இதயம்?’ மனதினுள் அவளுக்காக வருத்தப்பட்டார்.

“அழுகை வரலை அத்தை. நான் அழணும்னா அவங்க அழியணும். அதுக்கு இளா அத்தான் வரணும்” என்றவள் கண்களின் பளிச்சிடல் காமாட்சியை, “இளா யாருமா?” என்று கேட்க வைத்தது.

“இளநாதன்! காமாட்சி அத்தை பையன்.”

“உயிரோட இருக்கானா?”

“தெரியாது.”

அந்த ஒற்றை வார்த்தையில் “தெரியாதா?” என அதிர...

“ஆமா. இருக்காங்களா.. இல்லையா.. தெரியாது. ஆனா, கண்டிப்பா என்னைத்தேடி வருவாங்க” என்றாள் நம்பிக்கையாய்.

அதற்குமேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. இரவில் மட்டும் அவளின் கனவுகள் அதிகரிக்கும். அந்த சமயங்களில் முழித்திருந்து பார்த்துக் கொள்வது காமாட்சிக்கு வாடிக்கையானது. அதுவே தினமும் நடக்க பயத்தில் டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்தார்.

“அத்தனை பேரை அந்த சூழ்நிலையில் பார்த்ததும் அழலைன்னு சொல்லிட்டீங்க. இந்தப்பொண்ணு மனம் விட்டு அழுதா அவளுடைய கனவுகள் இல்லாமலே போயிருக்கலாம். மன அழுத்தம்! தனக்குள்ளேயே எதையோ உருப்போடுறா. அதனால முழுசா வெளில வரமுடியல. தொடர்ந்து சிகிச்சையளித்தாலும் அவளோட ஒத்துழைப்பு இல்லன்னா ஒண்ணும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமா இதிலிருந்து வெளில கொண்டு வரலாம்” என்றிருந்தார் மருத்துவர்.

“நான் சிகிச்சை எடுத்துக்கிட்டா எல்லாத்தையும் மறந்திருவேன் அத்தை. என்னோட கோவமெல்லாம் குறைஞ்சிரும். அப்புறம் பழிவாங்கத் தோணாது.” அந்த பத்து வயதிலும் யோசித்து முடிவெடுத்த மங்கையோ சிகிச்சைக்கு மறுத்துவிட்டாள்.

“ஓ... இப்பவரை அப்படியேதான் இருக்காளா காமாட்சி?”

“ஆமா அக்கா. இரத்தம் கொட்டுமளவுக்கு அடிபட்டா கூட அந்த நிமிஷம் லேசா கண்கலங்குவா. பெருசால்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணமாட்டா. அழவும் மாட்டா. அத்தனையும் நேர்ல பார்த்த அதிர்ச்சி அப்படியே கனவா சுத்துது. எப்பவும் கனவுகள் அரூபங்களாகவோ இல்லை பயமுறுத்துற மாதிரியாவோ வரும். நைட்ல எழுந்து உட்கார்ந்துப்பா. இடி மின்னல் நேரத்துல இன்னும் அதிகமாயிருக்கும். அவள் நிம்மதியா தூங்கி வருஷங்களாகுது அக்கா. காலேஜ் போனா சரியாகிருவாள்னு பார்த்தா அங்கேயும் தனக்குன்னு தனி இடம் பிடிச்சிக்கிட்டா.”

“இப்ப ஒரு வாரம் முன்னாடி கனவுல ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கக் கேட்கிறான்னு சொல்றா. அது எதுக்கான அறிகுறின்னு தெரியல. அப்படி ஒண்ணு நடந்தா அவ வாழ்க்கையும் நல்லாயிருக்கும். எனக்குமே ஒரு பொண்ணை நல்லபடியா வாழ வைத்த நிம்மதி கிடைக்கும்” என பெருமூச்செறிந்தார்

“எல்லாம் சரியாகிரும் காமாட்சி.”

“பழிவாங்குறேன்னு இருக்கிற வாழ்க்கையைக் கெடுக்காம அவள் நிம்மதியா இருந்தாலே போதும்கா” என்றார்.

தன் பள்ளி இறுதியிலும் கல்லூரி படிக்கும் பொழுதும் தோழிகள் யாரேனும் பையன்களுடன் சேர்த்து வைத்துப் பேசினால், “எனக்கு இளா அத்தான் இருக்காங்க. வேற யாரோடவும் ஜோடி சேர்த்துப் பேசாதீங்க” என்றுவிடுவாள். இன்று வரை மனம்விட்டு அழுததில்லை. அதற்கான சந்தர்ப்பமும் வரவில்லையோ!

இதோ கண்ணீரை வரவிடாமல் தன் நினைவுகளில் சுழன்றவளுக்கு, தன் தம்பியை மட்டும் தனியே விட்டு வந்தது நினைவு வர, “அன்பு நீ இருக்கியா? இல்லை உன்னையும்...” மனம் உள்ளுக்குள் கேவியது.

“பக்கத்துலதான்க்கா இருக்கேன்” என்று தனதருகே அமர்ந்தவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் மங்கையர்கரசியானவள்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top