- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
15
ஞாயிறு மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி காலை ஒன்பது மணிக்கெல்லாம் ராசியின் வீடு வந்தவன் கதவு தட்ட சில வினாடிகளில் திறக்கப்பட்ட கதவினருகிலிருந்து, “ஹையா! மாமா வந்தாச்சி” என்று ப்ரீடா குட்டி கத்த, அப்பொழுது தான் குழந்தையை விரட்டி வந்த ராசி சரத்தையும், குழந்தையின் வார்த்தையையும் கண்டு விக்கித்து நின்றாள்.
சற்று நேரத்திற்கு முன் காலை உணவை தயார் செய்து சாப்பிட போகுமுன் ப்ரீடா குட்டி வர, ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “அத்தை எனக்கு இப்ப வரைக்கும் அணில் கொய்யாபழம் சாப்பிடுறதைக் காண்பிக்கவே இல்லையே. ஏன் நான் பார்க்கக்கூடாதா?” என்றாள் கேள்வியாய்.
“அது டார்லிங் நீ வீட்டுக்குப் போயிட்ட பிறகுதான் என் கண்ணுல மாட்டுது. நான் என்ன பண்றது நீயே சொல்லு?”
“அப்ப நான் இங்கேயே இருக்கட்டுமா.”
“சே..சே அப்பா அம்மா உன்னை விட்டுட்டு இருப்பாங்களா? அம்மா அழுவாங்கள்ல?”
“அழுவாங்களா?” என்று வருத்தமாய் கேட்டு “அன்னைக்கு மாதிரியா?” என குழந்தை இழுக்க...
“இல்லடா. இனி அந்த மாதிரி அழ மாட்டாங்க. நீயும் அழ வைக்கக்கூடாது. சமத்தா இருக்கணும் சரியா.”
“சரி அத்தை. ஆனா, அ..ணில் கொ..ய்..யா” என ஏமாற்றமாய் இழுத்தாள்.
“அது உங்க மாமா வந்ததும் பார்க்கலாம்” என்ற லோஜியிடம்... “மாமாவா எங்கேயிருக்காங்க? நான் பார்த்ததே இல்லையே?” குழந்தை ஆவலாய் கேட்டது.
குழந்தையின் ஆவலை தனக்கு சாதகமாக்கி, பேத்தியின் முகச்சுருக்கத்தை அலட்சியப்படுத்தி, “உங்க அத்தைக்கு கல்யாணம் பண்ணிட்டோம்னா, மாமா வருவாங்கள்ல” என்றதும் குழந்தை ‘ம்’ என்று தலையாட்ட...
“ஆச்சீ” என்று கோபத்தில் அதட்டியவளை கண்டுகொள்ளாமல், “அந்த மாமாவைத்தான் சொன்னேன்.”
“ஓ... எப்ப வருவாங்க?” என்று குழந்தை கேட்கும் போது கதவு தட்டப்பட, ஏற்கனவே எரிச்சலில் இருந்த ராசி, “இதோ உங்க மாமாதான் வந்துட்டாங்க. போய்ப்பாரு” என்று கோபத்தை குழந்தையிடம் காட்டினாள்.
“மாமாவா” என்று குழந்தை அவள் மடியிலிருந்து இறங்கி ஓட, அதைப்பார்த்த ராசி தன் தவறு உணர்ந்து லோஜியை முறைத்து, “ஏய் பாப்பா நில்லுடா” என்று குழந்தையை தடுக்கப் பின்னால் ஓட... அதற்குள் கதவைத் திறந்து “ஹையா! மாமா வந்தாச்சி” என கத்துகையில், சரத்தை அங்கு எதிர்பார்த்திராத ராசி அதிர்ந்து நின்றாள்.
அவனுக்குமே அதிர்ச்சி தான். ஒரு இனிய அதிர்ச்சி. குனிந்து குழந்தையைத் தூக்கியவன், “ஹாய் செல்லம்! என்னை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“அத்தை இப்பத்தான் சொன்னாங்க. உங்க மாமாதான் வந்துட்டாங்க போய் பாருன்னு” என்று போட்டு உடைக்க...
வியப்பில் கண்கள் விரிய சரத் ராசியை பார்க்க... அவளோ குழந்தை சொன்ன வார்த்தையில் இன்னும் அதிர்ந்து அவன் கையிலிருக்கும் குழந்தை பேசுவதைத் தடுக்க முடியாமல் நின்றாள்.
“செல்லம் உங்க பேரென்ன?” என்றான் ராசியை பார்த்துக்கொண்டே.
“ப்ரீடா. அப்பா, அம்மா பாப்பா சொல்வாங்க. அத்தை டார்லிங் சொல்வாங்க” என்று புதிதாய் பார்த்த மாமாவிடம் விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் தன்னை சமாளித்த ராசி, “விட்டா இவ இரண்டு வீட்டு ஹிஸ்டரியையும் ஒப்பிச்சிருவா” என்று, “வாங்க” என வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு புன்னகையுடன் அவளையே பார்த்தபடி உள்ளே வந்தவன் லோஜியைப் பார்த்ததும், “வணக்கம்மா! எப்படியிருக்கீங்க?” என்றான்.
“நான் நல்லாயிருக்கேன்பா. நீ எப்படியிருக்க?”
“நல்லாயிருக்கேன்மா” என்றவனிடம் லோஜி நன்றி சொல்ல, ஏனென்று கேட்டவனுக்கு... “என் பேத்தியை காப்பாத்தி கூட்டிட்டு வந்திருக்க. எனக்கிருக்கிற ஒரே உறவு என் பேத்திதான். அவளை திரும்ப என்கிட்ட கொடுத்த நீ ரொம்ப காலத்துக்கு பொண்டாட்டி, பிள்ளைங்களோட அமோகமா வாழணும்பா” என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
“இது சாதாரணமா எல்லாரும் செய்யற உதவிதான்மா இதுக்கெல்லாமா நன்றி சொல்வாங்க.”
“சாதாரணமா செய்யுற உதவின்னா, அந்த டிரைவர் ஏன் இவளை விட்டுட்டு ஓடினான். அந்த இடத்துலயிருக்கிற ஆபத்தை நினைத்து தானே” என்றவர் ,“ஆனா, உன்னை எங்கேயோ பார்த்திருக்கேன்பா. எங்கன்னு தெரியல” என்றார்.
“எனக்கும் தான்ம்மா பார்த்து பழகின ஒரு ஃபீல். புதுசா ஒருத்தரை மீட் பண்றோம்ன்ற ஃபீல் வரவேயில்லை” என்றான் உணர்ந்து.
“ஏதோ ஜென்ம பந்தமாயிருக்கும்” எனும்போது ராசியும், சரத்தும் ஒருவரையொருவர் பார்க்க... “ராசிமா நீ பேசிட்டிரு. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்தவரை தடுத்தாள் ராசி.
“வேண்டாம் அம்மாஆச்சி. டிபன் இருக்குதான.. நம்மளோட சேர்ந்து சரத் சார் சாப்பிடுவாங்க.”
“இல்ல ராசி. நான் டிபன் சாப்பிட்டுட்டேன்” என்று மறுத்தான்.
“பொய் சொல்றதுக்கு ரொம்பல்லாம் மெனக்கெட வேண்டாம். முகம் பார்த்தாலே தெரியுது சாப்பிடலன்னு. அம்மாஆச்சி நான் சொல்றேன்ல டிபன் எடுத்து வையுங்க” என்றதும் மற்ற இருவரும் ஆச்சர்யப்பட்டனர்.
“ராசி ப்ளீஸ் வேண்டாமே” என்று கண்களால் மறுக்க...
“ம்கூம்.. அதெல்லாம் செல்லாது. நீங்க சாப்பிடுறீங்க” என்று வாயால் பதிலளித்தாள்.
இருவரையும் பார்த்திருந்த லோஜி இவர்கள் இருவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு அன்பு கட்டிப் போட்டிருப்பதை உணர்ந்தார். சரத்திடம், “என்னப்பா நீ ஒருவேளை சாப்பிடுறதுல என்ன வந்திரப்போகுது. என்னை அம்மான்னு கூப்பிடுறது நிஜம்னா பேசாம வந்து சாப்பிடு” என்று உள்ளே சென்றார்.
சில வினாடிகளேனும் தாயின் நினைவு வர, கலங்கிய கண்களை மறைத்து, “இதோ வர்றேன்மா” என்றான்.
“என்ன சார் அம்மா நினைப்பு வந்திருச்சா?”
இல்லையென மறுத்து ஆமாமென தலையாட்டினான்.
கலங்கிய அவன் கண்களைப் பார்த்திருந்தவள் ஆதரவாய் கைபிடித்து ஆறுதலிளிக்கத் தோன்றிய மனதை கடிந்து, “விடுங்க சார். அதான் சாந்திம்மா இருக்காங்கள்ல உங்களை தாயாய் பார்த்துக்கிறதுக்கு.”
அதையே அவள் அப்பாவை விசாரிக்க காரணமாக எடுத்தவன், “என்னயிருந்தாலும் அப்பா, அம்மா யாராவது ஒருத்தர் இருந்திருக்கலாம் ராசி. உனக்குப் பரவாயில்லை. கூட இல்லைன்னாலும் அப்பான்னு ஒருத்தர் இருக்கார்” என்றான் வருத்தமாக முகத்தை வைத்து.
அவனின் வருத்த முகம் பார்த்து வந்த கோபத்தை அடக்கி, “தப்பு சார். எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே செத்துட்டாங்க” என பட்டென்று பதில் சொல்லி, “ஆமா. நான் என் குடும்பத்தைப் பற்றி யார்கிட்டேயும் சொன்னதில்லையே. அப்புறம் எப்படி?” என அவனை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.
அதில் சற்று தடுமாறியவன், ‘அச்சோ! இவ அப்பா என்னை வந்து பார்த்து இவளை நான் விசாரிச்சது தெரிஞ்சிது இந்த டாம் என்னை ஜாம் ஆக்கிடுவாளே! யோசிடா யோசி’ என தனக்குள்ளேயே புலம்பி, “அ..அது நீதான் சொன்ன” என்றான் வேகமாக.
“யாரு நானா? நான் யார்கிட்ட சொன்னேன்” என நேர்பார்வை பார்த்தாள்.
அந்த பார்வையில் இன்னுமே பதற்றம் எழ, “அது அக்காகிட்ட. எனக்கு அக்காதான் சொன்னாங்க” என்று உளறினான்.
“யாரு சாந்திம்மாவா? நான் சொல்லலையே!” என சந்தேகமாக பார்க்க...
‘சரியான சந்தேகத்துக்குப் பிறந்தவ’ என்று அவளை மனதிற்குள் திட்டினான்.
“அதான் சந்தேகம்னு தெரியுதுல்ல கிளியர் பண்ணுங்க” என்று அவனை க்ளீன்போல்ட் ஆக்கினாள்.
‘ஆத்தாடி! மனசுக்குள்ள நினைச்சதை கேட்ச் பண்ணிட்டாளே’ என நினைத்து, “அம்மா சொல்லிருப்பாங்களா இருக்கும்” என்றான்.
“ஓ... ஆனா, அம்மாஆச்சி யார்கிட்டேயும் பெர்சனல் லைஃப் பற்றி பேசினதில்லையே” என்றவள், அப்பொழுது தங்களை நோக்கி வந்த லோஜியிடம், தாங்கள் பேசியது அவர் கேட்டிருப்பார் என்றெண்ணி... “இவங்க சொல்றது நிஜமா?” என கேட்டாள்.
‘அச்சோ.. மாட்டினேன்டா’ என நினைக்க...
லோஜியோ ‘என்னது நிஜமா கேட்கிறாள்?’ என சரத்தைப் பார்க்க... அவனோ ராசிக்குத் தெரியாமல் சாப்பிடக் கூப்பிட்டதற்கு வருகிறேனென்று சொன்னதை கேட்கிறாள் என சைகை செய்ய புரிந்தவர்,
“ஆமா. நான்தான். இப்ப அதுக்கென்ன. அமைதியா சாப்பிடக் கூப்பிட்டு வா” என உள்ளே செல்ல, “ஆச்சீஈஈ” என பல்லைக் கடித்தவளைக் கண்டு உள்ளூர எழுந்த நிம்மதிப் பெருமூச்சை அடக்கி, “அதான் சொல்லிட்டாங்களே ராசி. உன் சந்தேகம் தீர்ந்திருச்சில்ல அப்புறமென்ன” என்றான்.
“எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா?” என வருத்தமாக குரல் இறுக கேட்டாள்.
அவளின் வருத்தத்தை உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல், “ம்.. கம்ப்ளீட்டா. உன் மேரேஜ் வரைக்கும். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாது. நீ சொன்னா தெரிஞ்சிக்கறேன்” என்றான். தன் கேஸிற்கு இதுவரை கிடைத்த தகவல் போதுமென்று எண்ணியிருந்தவனுக்கு, ஹரிப்ரியா தான் ராசி என்று தெரிந்ததால் திருமண விஷயத்தை அவளிடமே விசாரிக்க ஆரம்பித்தான்.
“உங்களுக்குத் தெரியாத விஷயம், தெரியாததாகவே இருக்கட்டும். மேலமேல அதை நோண்டாதீங்க. இத்தோட இந்த பேச்சை விட்டிருங்க. அன்ட் மறந்திருங்க. அதான் பெஸ்ட்” என்றாள் கறாராக.
“ஹ்ம்.. ஓகே” என்று எழுந்து மூச்சை இழுத்து விட்டபடி “சாப்பிடப் போகலாம்” என்றவன், கையிலுள்ள குழந்தையிடம், “ஏன்டா செல்லம் உங்க அத்தை எப்பப்பாரு சிடுசிடுன்னே இருப்பாங்களா? சிரிச்சா அழகா தேவதை மாதிரி இருப்பாங்கள்ல? நீ சொல்ல மாட்டியா” என குழந்தையிடம் புகார் செய்தான்..
“அத்தை எப்பவும் சிரிச்சிட்டுத்தான் மாமா இருப்பாங்க. பாட்டி நீங்க வர்றதுக்கு முன்னாடி மாமா வருவாங்க சொன்னாங்களா. அதுக்கப்புறம் தான் இப்படி இருக்காங்க” என்றதும், தான் வருவதற்கு முன்னர் ராசியின் திருமணப்பேச்சை மறைமுகமாக லோஜி எடுத்திருப்பாரோ என்று தோன்றியது.
“ஏன்டா பாப்பு! நான் என்ன அவ்வ்வளவு டெரர் பீஸாவா இருக்கேன். இல்லையே காலையில கண்ணாடி பார்த்தப்ப கூட பார்க்க ஓகேன்ற மாதிரிதான இருந்தேன்” என்று முகத்தை அங்குமிங்கும் திருப்ப...
அவனின் செய்கையில் சட்டென்று வாய்விட்டு சிரித்தவள், “கண்ணாடி பார்க்காம முகத்தை அங்கயிங்க திருப்பிப் பார்த்தா, உங்க முகம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?” என்றாள் பழையபடி கிண்டலாக.
“தெரியும்” என்றவன் அவளை நெருங்கி அவள் கேள்வியாய் பார்க்க.. அந்த கண்களை ஆழ்ந்து பார்த்து, “நான் உனக்குள்ளே இருந்து என்னைப் பார்க்கிறேன் பார்” என்று அவளின் கண்ணை காட்டினான்.
அவனின் அருகாமையும், தன் கண்களில் அவனைக் கண்டேன் எனவும், அவன் கண்களில் தன்னைக் கண்டு விழியகல பார்த்து தடுமாறி கண்மூடி திறந்தவள் இடமறிந்து, “விட்டா பேசிட்டேயிருப்பீங்க. வாங்க சாப்பிடலாம்” என்று குழந்தையை வாங்கியபடி முன்னே நடந்தாள்.