• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
2



இன்று

ஹைதராபாத் நகரத்தின் முக்கிய பகுதியில் இரண்டு க்ரௌண்ட் இடத்தில், இரண்டடுக்கு மாடிகளைக் கொண்டதாய் வெளியே தோற்றமளித்தது அவ்வீடு. வீட்டினுள் நுழைந்தால் மட்டுமே அதன் அழகு தெரியும். வீட்டிற்குள் வரவேற்பறையின் ஓரம் ஆரம்பிக்கும் மாடிப்படிகள், இரண்டு மாடிகள் சுற்றி மூன்றாவதான மொட்டை மாடியில் முடிவடையும்.

“மூணு பேருக்கு மூணு மாடிக் கட்டிடம், ரொம்ப ஓவர் அன்னையாரே!” என்பது கதிர் என்கிற “இளங்கதிர்”-ன் எப்பொழுதுமான கேலி. பழைய மகாபாரதம், ராமாயாணம் டிவியில் பார்த்த பாதிப்பு அவன் வார்த்தைகளில் அடிக்கடி விளையாடும். “அன்னையாரே! தாயாரே! தாயே!” இப்படிதான் கதிர் தாயை அழைப்பது.

“டேய் இரண்டு மாடிதான்டா. மூணாவதெல்லாம் கணக்குல சேராது.”

“ஹான் அப்புறம். அப்ப அங்க எதுக்கு ஒரு ரூம் கட்டி வச்சீங்களாம்? அது இல்லாமல் இருந்தால்தான் இரண்டு மாடி.”

“என்னடா மகனே பண்றது! ஸ்டேட்டஸ் ஸ்டேட்ஸ்னு சொல்லியே...”

“வாட்சப் ஸ்டேட்டஸாமா?

மகனின் கேலியான இடையிடலில் “குறுக்கப் பேசாதடா” மண்டையில் ஒரு தட்டுத் தட்டப்போய் நிறுத்தினார்.

“அம்மா மண்டையில் தட்டினா, கொண்டை முளைத்திடும் பார்த்துக்கோங்க.” விரல் நீட்டி வார்னிங் கொடுத்த மகனின் விரலைப் பிடித்து அவனின் பொய்யான அலறலைக் கண்டுகொள்ளாது, “அந்தஸ்துன்னு ஒண்ணைக் காரணம் காட்டி மத்தவங்ககிட்டயும் அதிகம் பழகவிடல உன் தாத்தாவும் பாட்டியும். அந்தஸ்துக்குத் தகுந்த வீட்டைக் கட்டிக்கொடுத்து, அதுல ராணி மாதிரி உட்கார வச்சிட்டு அங்கயிங்க நகரக்கூடாதுன்னா... அந்த வாழ்க்கை இனிக்கவா செய்யும் சொல்லு?”

“ம்... கஷ்டம்தான்மா” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“பேசுறது, பழகுறது எல்லாம் ஹை சொஸைட்டி ஆள்களோடதானாம். வெளிய வாசல்ல உட்கார்ந்து, பக்கத்து வீட்டுக்காரங்களோட கதையடிச்சி நேரத்தை ஓட்டினா, அதுல ஒரு சுகம் இருக்கும். இங்க பக்கத்துல இருக்கிற கோவிலுக்கோ, பார்க்கிற்கோ நடந்து போகக்கூடாதுன்னு ஆர்டர். மீறி போனா, என்ன கதிர் அம்மா ஒண்ணுக்கு மூணு காரை வச்சிட்டு நடந்து போறீங்க கேட்கிறாங்க? அவங்க அக்கறையில கேட்கிறாங்களா.. நக்கலா கேட்கிறாங்களான்னு கூடத் தெரியமாட்டேன்னுது.”

“நீயே சொல்லுடா மகனே? இப்படியே அடைஞ்சி கிடந்து மூச்சு முட்டுற மாதிரியிருக்கு. இத்தனை வருஷமாகியும் இங்க உள்ள பாஷையும் புரிபடல. நாலு பேர்கூடப் பேசினால்தானே பாஷை புரியும். அதுக்கும்தான் வழியில்லையே! வயசுப் பொண்ணுங்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கூட வயசுப் பையனோட அம்மாவான எனக்குக் கிடைக்கலடா?” என சிவகாமி வருத்தப்பட்டார்.

பெரியவர்களின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிப் போயிருந்த தாயின் நிலை புரிந்தாலும், அவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதோ நினைத்தவனாய் தாயையே புன்னைகையுடன் பார்த்து, “உங்களுக்கு என்ன தோணுதோ அதைத் தாராளமா செய்யுங்க அன்னையாரே. என்ன திருட்டு பயம் இருக்கிறதால கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு. எதிரிகளைச் சம்பாதிக்கும் தொழில் நாம செய்யல. அதனால வேற மாதிரிப் பிரச்சனைகள் வர வழியில்லை. சோ ஃபீல் ஃப்ரீ தாயே!”

“அப்படிச் சொல்ல முடியாதுடா மகனே! வயசுப்பொண்ணு அதுவும் அழகுப்பெண் தனியா போறாள்னு எவனாவது ஹிட்னாப் பண்ணிட்டான்னா? எனக்கு இருக்கிறதே ஒன் அன்ட் ஒன்லி ஒய்ஃப்டா மகனே!” என்று குருமூர்த்தி அப்பாவியாய் சொல்ல...

“வேண்டாம் தந்தையாரே! அப்புறம் உங்களைத் தந்தூரிச் சிக்கனாக்கிருவேன். ஏன்மா அப்பா சொல்றது ஏதோ அவார்ட் குடுத்த மாதிரியிருக்கோ? அப்படியே புன்னகையில பூரிச்சிப் போறீங்க. தந்தையார் சொன்னது வயசுப்பொண்ணுன்னு நினைச்சித்தான் தூக்குவாங்கன்னு. நோட் திஸ் பாய்ண்ட்.. கிழவின்னு தெரிஞ்சியில்ல.”

“இவனைப் பாருங்க. என்னை ரொம்ப கிண்டல் செய்றான். இவனுக்கு ரெண்டு அடி போடுங்க” என்று கணவனிடம் முறையிட்டார் சிவகாமி.

“ஏன் அதை நீயே செய்யேன் சிவா. என்னை எதுக்காகக் கோர்த்து விடுற?”

“நானா..! நான் என் பையனை அடிக்கிறதுன்றது கனவுலகூட நடக்காது. இல்லையா ராஜா?” என்றார் மகனிடம்.

அதே சிரிப்புடன் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்து தாயின் மடியில் படுக்க... அவன் தலைகோதியபடி “பத்து வருஷம் தவமாய் தவமிருந்து பெத்த பையன்டா நீ. வாழ்க்கையில் ரெண்டு பேருக்கும் சின்னதா சலிப்பு வந்தப்ப அதைத் தீர்க்க, என் தாய் காமாட்சி தந்தப் பரிசுடா நீ. நீ பிறந்த பிறகுதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்து, தொழில்லயும் ஆஸ்தி அந்தஸ்துன்னு பேசுற லெவல் முன்னேறி, இந்த உயரத்தில் இருக்கோம். இதை இல்லைன்னு யாராலயும் மறுக்க முடியாது.”

குருமூர்த்தியும் ஆமோதித்து அமைதியாக மனைவி மகனை ரசித்திருக்க...

கதிருக்கு லேசாக கண்கள் கலங்கியது. எப்பொழுதும் தாய் சொல்லும் வார்த்தைதான். இருந்தாலும் அவரின் பாசம் தெரியாதவனா கதிர். ‘இப்படிப்பட்ட தாயை விட்டுச்செல்லப் பார்த்தோமே! சாவு வரைச் சென்று பிழைத்து வந்தது என் தாய்க்காகத்தானோ!’ என்ற எண்ணத்தில் தன்னைத் தானே திட்டினாலும் மனதில் ஒரு நிம்மதி வந்தது. அதன் பின்தானே கொஞ்சம் பொறுப்பானவனாக தான் மாறியது.

“அம்மா” என குரல் பிசிறடித்து வர...

‘அம்மா’ எனும்போதே மகன் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான் என்றுணர்ந்தவரோ “என்னடா ராஜா?” என்றார் முகம் வருடியபடி.

“உனக்குப் பையனாகப் பிறந்ததுக்கு நான்தான்மா குடுத்து வச்சிருக்கேன். சின்ன வயசுல உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்லமா. இனிமேல் உன்னை எடுத்தெறிஞ்சி பேசமாட்டேன்மா. உனக்கு நல்ல மகனா இருப்பேன்மா. லவ் யூமா!” தாயின் கையைப் பிடித்து கன்னத்தில் அழுத்திக் கொண்டான்.

உணர்ச்சிவசப்படும் நேரங்களில் மட்டும் எப்பவும் தாய் தகப்பனிற்கு மரியாதை கிடைக்காது. அந்நேரங்களில் அவன் பேசும் வா போவில் கூட இன்னும் மரியாதை கூடியிருப்பதாகவே அவர்களுக்குத் தோன்றும்.

மகனின் முதுகை வருடிய குருமூர்த்திக்கு தன் பையனை எண்ணி பெருமையே. இருப்பினும் “டேய் போதும்டா. பாசத்துல ஓவரா பாயசம் போடாத” என்று கேலி செய்தார்.

“என் பையன் உங்களைக் கொஞ்சலன்னு பொறாமை” என்று சிவகாமி உதடு சுழிக்க,

‘போதுமாடா உனக்கு’ என்பதாய் பையனை அவர் முறைத்தார்.

ஈஈஈ... என பல்லைக்காட்டினான் அவன்.

“டேய் நல்லவனே. ஆபீஸ் கிளம்புற வழியைப்பாரு. உங்கம்மா இன்னைக்கு முழுக்க மடியைவிட்டு இறக்கி விடமாட்டா. நீயாவது இறங்கி கிளம்பு ராசா” என்றார் நக்கலைத் தூக்கலாக்கி.

“ம்க்கும் கொஞ்ச நேரம் என் பையன்கிட்ட பேசவிடமாட்டீங்களே. நீ போயிட்டு சீக்கிரம் வந்திருடா” என்று கணவனைத் திட்டி மகனிடம் செல்லம் கொஞ்சினார் சிவகாமி.

“சரிங்க தாயாரே!” என பவ்யமாகச் சொல்லிச் சென்ற மகனைக் கேலியாய் பார்த்து மனைவியிடம் திரும்பியவர் “சிவா இவனுக்கொரு கல்யாணம் பண்ணிட்டா என்ன?” என்றார் அவனுக்கும் கேட்கும்படி.

‘என்னது கல்யாணமா?’ என்று எகிறிக்குதிக்காமல் “கல்யாணமா தந்தையே... அம்மா சம்மதிச்சா தாராளமா பண்ணிக்கோங்க. எனக்கெந்த ஆட்சேபணையுமில்ல” என்றான் சிரிப்பு மாறாமல்.

“நெசமாவாடா மகனே! இந்த இளநரைக்கு கொஞ்சம் ப்ளாக் பெய்ண்ட்... அதான்டா மகனே டை அடிச்சிட்டா போதும்ல. சரி எப்பப் போகலாம்?”

“நாளைக்கே போகலாம்ங்க. உங்க அத்தைப்பொண்ணு ஒருத்தி கல்யாணமாகாம காத்திருக்காள்ல. பேசி முடிச்சிட்டு ம்கூம்.. முடிஞ்சா தாலிகட்டிக் கூட்டிட்டு வந்திடலாம். எப்படி என் ஐடியா?”

“ஏய்.. புருஷன் பொண்ணு பார்க்கப் போறேன்னு சொன்னா எப்படி அப்படி செய்யலாம்னு எகுறுவியா.. அதை விட்டுட்டு...”

“சே..சே.. கணவனோட ஆசையை நிறைவேத்துறதுலதான் என்னோட பதிவிரதாதனமே இருக்குங்க. ப்ளீஸ் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று மகனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் சிவகாமி.

“ஹ்ம்.. உன் பதிவிரதாதனம் இதுலதான் இருக்குன்னுட்ட. இதுக்கு மேல யோசிச்சா அது பெரிய தப்பாகிரும். உன் ஆசைப்படி நான் கல்யாணம் செஞ்சிக்கறேன்” என முகத்தை தீவிரமாக வைத்துச் சொன்னார்.

“ஏங்.. ஏங்க நிஜமாவேதான் சொல்றீங்களா?” குரலில் சின்ன தடுமாற்றம் வந்திருந்தது சிவகாமிக்கு.

“இல்ல பொய் சொல்றேன்” என்றதில் சிவகாமியின் பயம் தெளிய... கணவரின் “போவியா” என்ற சொல் குழப்பத்துடன் அவரைப் பார்க்க வைத்தது.

“நீதான சிவா சொன்ன. பட் ஒரேயொரு கண்டிஷன்?”

“ஏன் பொண்ணுக்குத் தோழியா நான் வரணுமா?” என எரிச்சலைக் காட்ட...

“நோ நோ அவ்வளவு சின்ன தண்டனைலாம் தரமாட்டேன்.”

“பின்ன...”

“பின்ன என்ன.. நீயே பொண்ணா வந்திரு. அதைவிட இது பெரிய தண்டனைதானே” என்றார் புன்னகையுடன்.

“உங்களை.. ஒரு நிமிஷத்துல என்னை என்ன பாடுபடுத்திட்டீங்க. போங்க என்கிட்டப் பேசாதீங்க” என்று சிணுங்கி கணவனின் தோள்சாய...

அதே புன்னகை கதிரிடம். நாசூக்காக அங்கிருந்து நகர்கையில், தாத்தா பாட்டி போட்டோ மாலைக்குள் அடங்கியிருந்ததைப் பார்த்தான். ‘ஹ்ம்.. ஸ்டேட்டஸ் பார்த்து எங்கம்மாவைக் கூண்டுப்பறவையாய் அடைச்சிட்டு, நீங்க ரெண்டு பேரும் ஹாயா போய் சேர்ந்துட்டீங்கள்ல. கிட்டத்தட்ட அம்மா நிலைதான் எனக்குமே. நீங்க செஞ்சதைத் தொடர்ந்து உங்க பையன். எங்கேயும் என்னை அனுப்புறதில்லை. என்னால சுதந்திரமா இருக்க முடியல. எப்பப்பாரு பிசினஸ்.. பிசினஸ்னு அலைஞ்சி, எப்படியாவது இதிலிருந்து விலகி கொஞ்ச நாளைக்கு வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ணனும். இதுவரைக்கும்தான் எங்களுக்குன்னு எதுவும் பண்ணல. இனியாவது உங்க பேரனுக்கு வழிகாட்டி வழிவிடுங்க’ என்றான் மனதினுள்.

“வழிதான? இதோ இந்த வரப்போரமா நடந்து, ரெண்டு தோட்டம் தாண்டிப் போனா, ஒரு மாந்தோப்பு வரும். தோப்புக்குள்ள போகாம தோப்பைச் சுற்றிப்போனா அங்கதான் உங்க அத்தை இருக்காங்க. போய்ப் பாருங்க. பாவம் உடம்பு சரியில்லாம அவங்க அனத்துறது எங்க தோப்புவரை கேட்குது.”

“ரொம்ப நல்லதுக்கா. நான் கவனிச்சிக்கறேன்” என்றான் அவன்.

“சொல்ல மட்டும் செய்யாம, அதைச் செயல்ல காட்டினா இந்த திருமொழி சந்தோஷப்படுவா.”

“திரு-மொழின்னு ஒரு மொழியிருக்கா அக்கா?” என்றான் பவ்யமாக.

“ஓய்.. என்ன லந்தா. என் பெயர்தான் திருமொழி. புரியுதா?”

“யக்கா உன் பெயர் ரொம்ப வித்தியாசம்தான்கா. அட நீயும்தான்கா” என்று அவளைத் தாண்டி நிற்காமல் ஓடினான்.

“ஏ... தம்பி பார்த்துப்போ. வரப்பு வழுக்கிடப்போகுது... ஹா..ஹா போச்சா விழுந்தியா. இதான்டா தம்பி பொம்பளப் புள்ளைகிட்ட வம்பு வச்சிக்கக்கூடாதுன்றது.”

“மெல்ல எழுந்தவன் நீ பொம்பளப் புள்ளையாக்கா? சரியான...”

“டேய் ஓடிப்போயிரு. கையில் சிக்கின கொன்னுறுவேன். என்னைப் பார்த்தா அந்தக் கேள்வி கேட்ட? இந்த காட்டைத் தாண்டி ஊருக்குள்ள உன்னைப் பார்த்தேன்... மவனே...”

“போக்கா போ. நான் ஊருக்குள்ள வர்றதை நீயும் பார்ப்ப.”

“டேய்! பொம்பளப் புள்ளையான்னு கேட்டுட்டு அக்கா சொல்ற பாரு. நீ ரொம்ப நல்லவன்டா தம்பி.”

“நான் சரண்டர்கா. உன்கூடயிருந்தா நல்லா நேரம் போகும். உனக்கு எந்த உதவினாலும் என்கிட்ட கேளுக்கா. ஐயா ரெடியா இருக்கேன்” என்றான் சத்தமாக.

“அடி.. வந்தேன் தொலைச்சிருவேன்” என்று எகிற...


“விடுக்கா விடுக்கா அப்புறமா மீட் பண்ணுவோம்” என்று தொலைவில் கத்தியபடி சொல்லிச் சென்றான்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“ஏன் திரு அந்தப் பையன்கிட்ட வம்பு வளர்க்கிற?”

“யாரு.. நானு? பக்கத்துல இருக்கிற நீங்களே போதும் அத்தை. வேற யாரும் வேண்டியதில்ல பொய்சாட்சி சொல்ல.”

“அடப்பாதகத்தி! நான் எப்ப பொய் சாட்சி சொன்னேன்?”

“இதோ.. இப்ப.. இப்பதான சொன்னீங்க?”

“நல்லாதான் பேசுற. முதல்ல தண்ணீர்ப் பாய்ச்சலை நிறுத்திட்டு வா. வெயில் தாழ்ந்ததும் வரலாம். இப்ப போய் சமையலைக் கவனிக்கணும்.”

“ம்..சரி அத்தை” என்று இருவரும் நடக்க “ஏன் அத்தை நீங்க கல்யாணமே பண்ணிக்கலை? ஒருவேளை காதல்ல தோத்துட்டீங்களோ? இல்ல ஒன் சைடு லவ்வா? அதுவுமில்லன்னா அவரோட ஓடும்போது ஊர்க்காரங்க வந்து மடக்கிட்டாங்களோ?” என்றாள்.

“என்னதான் நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்டாலும், இன்னும் எத்தனை வருஷங்கள் கழித்துக் கேட்டாலும், என் பதில் ம்கூம் தான்.”

“கொஞ்சமா படிச்சிருக்கோம்னு ரொம்ப சீன் போடாதீங்க அத்தை. அதிலும் பத்தாவதுக்கே இந்த லூட்டியா? நான்லாம் அக்ரி ஸ்டூடண்டாக்கும்.”

“ஆமா.. நாங்க படிக்காம செய்யுற விவசாயத்தை, நீங்க படிச்சிட்டு செய்றீங்க. நாங்க மண்ணோட தன்மையைப் பார்த்தே என்ன ஏதுன்னு சொல்லிருறோம். நீங்க ஆராய்ச்சி பண்றேன்னு லேப்கு எடுத்துட்டுப் போய் செக் பண்ணி சொல்றீங்க. இதுல பெரிய இவ மாதிரி பேச வந்திட்டா.”

“அத்தைய்ய்ய்..” என பல்லைக் கடித்தவள், “அப்ப எதுக்கு மெனக்கட்டு காலேஜ் கூட்டிப்போயி சீட் வாங்கி ஹாஸ்டல்ல சேர்த்தீங்களாம்?”

“அதுவா... உனக்கு ஜெனரல் நாலேட்ஜ் கம்மின்னு தோணிச்சி. அதை இம்ப்ரூவ் பண்ணத்தான்.”

“இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம் அத்தை” என முறைத்த மருமகளைக் கண்டுகொள்ளாது ,“சரி பேசிட்டேயிருக்காம நடையைக் கட்டு” என்றதும் கால்களில் வேகம் கூடியதோ!

சிவகுரு இன்டஸ்ட்ரீஸ் நுழைவாயில் வந்து செக்யூரிட்டியிடம் கார் சாவியைக் கொடுத்து உள்ளே நுழைந்தான் இளங்கதிர். மற்றவர்களின் வணக்கத்தைப் புன்னகையுடன் ஏற்று தன் அறைக்கு வந்தவன், அமரும் முன் கடவுளை மனதார வேண்டிக்கொண்டு அமர்ந்த, கதிரின் தினப்படி வேலை இது.

எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் தொழில் செய்யும் இடத்தை வணங்கிய பின்தான் அடுத்த வேலை செய்யவேண்டும் என்பது குருமூர்த்தி மகனுக்குச் சொல்லிக் கொடுத்த குருபோதனை.

“மே ஐ கம் இன் சார்.” சிரித்தபடி அனுமதி கேட்ட பி.ஏவைப் பார்த்து “கம் இன் நிஷா” என்றதும் பி.ஏ முறைத்தபடி உள்ளே வர,

“என்ன நிஷா முறைப்பெல்லாம் பலமாயிருக்கு?”

“ஏன் முறைக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாதா? தெரிஞ்சிதான பேசுறீங்க.”

“ஓகே கூல். எதாவது முக்கியமான விஷயமா?”

“நோ சார். ஒர்க்லாம் ஸ்மூத்தா போகுது. நான் வந்தது வேற விஷயம் சார்.” என்னவென்பதாய் கதிர் பார்க்க... “எனக்குக் கல்யாணம் சார்” என்று பத்திரிக்கை நீட்டவும், அதை வாங்கி திறந்தவாறு “ஓ.. ஏற்கனவே சொல்லியிருந்தல்ல. கங்க்ராட்ஸ் நிஷா.”

திரும்பவும் நிஷா முறைக்க கதிர் சிரித்து “எங்க? எப்ப கல்யாணம்?” என்றான்.

“இன்னும் ஐந்து நாள் இருக்குது சார். எங்க சொந்த ஊர் மதுரைனாலும் செட்டிலானது தேவதானம்பட்டியில சார். என்னோட உட்பிக்கு கொடைக்கானல் பக்கத்துல ஒரு கிராமம். இருக்கிறது திண்டுக்கல்ல. இருந்தாலும் அவங்க கிராமத்தில் வச்சித்தான் முடிக்கணும்னு சொல்லிட்டாங்க. வீட்லயும் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது.”

“அப்ப ரிசப்ஷன்?”

“ரிசப்ஷன்னு தனியா கிடையாது சார்.”

‘ஓ... அப்ப மேரேஜ் மட்டும்தானா... அப்ப கட்டாயம் கல்யாணத்துக்கு போயாகணும்’ என்பதாய் கதிர் யோசிக்க...

“சார் கண்டிப்பா வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வாங்க சார். கொடைக்கானல் மலையடிவாரம் சார். பார்க்கிற இடமெல்லாம் பச்சைப்பசேல்னு மஞ்சளாறு அணைக்கட்டு, அருவின்னு, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வரலாறோட பார்க்க சூப்பராயிருக்கும் சார். அந்த இடங்களுக்குப் போனாலே அங்கயிருந்து வரப்பிடிக்காத அளவு இயற்கை நம்மைக் கட்டிப்போட்டிரும் சார்.”

அந்த முகத்திலுள்ள அந்தப் பரவசத்தை சில நொடிகள் பார்த்திருந்தவன் யோசனைக்குச் சென்றான். வரும்பொழுதுதான் தாத்தா பாட்டியிடம் வழிகேட்டு வந்திருந்தான். இதோ அதற்கு ஒரு சந்தர்ப்பம் தேடி வந்திருக்கிறது. ‘பணம் ஸ்டேட்டஸ் என எந்தவித தொந்தரவுமில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் அம்மாவை திருமணத்திற்கு அனுப்பி வைத்தால் என்ன? எங்கேயும் போகாமல் வீட்டில் அடைந்து கிடப்பதும் மன உளைச்சல்தானே. முடிந்தால் அப்பாவையும் அனுப்பிடலாம்.’

முடிவுக்கு வந்தவனாய் “நான் அப்பாவையும் அம்மாவையும் அனுப்பி வைக்கிறேன் நிஷா. நீ சொல்ற மாதிரி இடத்தைப் பார்த்தா அம்மா சந்தோஷப்படுவாங்க. அவங்களுக்கும் ஒரு சேஞ்ச்.”

“நீங்க சார்?”

“பார்க்கலாம் நிஷா. முடிந்தால் கல்யாணத்துக்கு வர்றேன்” என்றான்.

வீட்டிற்குச் சென்ற கதிர் இரவு உணவு முடித்ததும் தாயிடம் நிஷாவின் திருமணத்தைப் பற்றிச் சொன்னதோடு, அந்த ஊரைப்பற்றி தன் பி.ஏ பக்கம் பக்கமாக புகழ்ந்ததைச் சொன்னான்.

“தமிழ்நாடா! அதிலும் மதுரைப் பக்கமா? சூப்பர்டா மகனே. உங்கப்பாவுக்கு மதுரை. எனக்கு பெரியகுளம் சொந்த ஊர். நீ சொன்ன ஏரியா போயிருக்கோம்னு நினைக்கிறேன். ஆனா, ஊருக்குப் போயே பதினைந்து வருஷமாகிருச்சி. யார்னாலும் இங்கதான் வர்றாங்க. நாம மட்டும் அங்க போறதில்லை. உங்க தாத்தா பாட்டி முன்னாடி தடுத்தாங்க. இப்ப அதை உங்கப்பா செய்றாங்க.” மகனிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தார் சிவகாமி.

“அப்படியாப்பா? நமக்கு சொந்த ஊர் மதுரையா?”

எதோ யோசனையிலிருந்தவர் “எ..என்ன?” என்றார் திணறலாக.

“தந்தையாரே! என் அன்னையை என் உதவியாளரின் திருமணத்திற்கு அனுப்ப அனுமதி கோரினேன். அதற்கு என் தாயார் நமது சொந்த மண்ணும் அங்கேதான் இருக்கிறது என்கிறார். இது நிஜமெனில் ஏன் இதுவரை எங்களை அங்கே அழைத்துச் செல்லவில்லை? ஏன் எங்கள் உறவினர்களுடன் உறவாட விடவில்லை?” என்றான் நாடகத்தமிழில்.

மகனின் விளையாட்டுத்தனத்தையோ மனைவியின் ஆர்வத்தையோ அவர் கவனிக்காமல் “இல்ல வேண்டாம்” என்றார் பட்டென்று.

அப்பாவின் இந்த புதிய தடுமாற்றத்தில், ஏன் என்பதாய் அவரைப் பார்க்க... “வேண்டாம் கதிர். நமக்குத் தமிழ்நாடே வேண்டாம். அம்மான்னு இல்ல நாம யாருமே அங்க போகக்கூடாது” என்றார்.

“ஏன்ங்க? உங்க ஊரைப் பார்க்கணும்னு தோணலையா?”

“தோணுதா.. தோணலையா பிரச்சனையில்ல சிவா. எனக்குப் பிடிக்கலை அவ்வளவுதான்.”

“அப்பா கல்யாணத்துக்குப் போயே ஆகணும்பா. நாளைப்பின்ன நிஷா முகத்துல நான் எப்படி முழிக்கிறது. உங்க ரெண்டு பேரையும் அனுப்புறதா வாக்குக் குடுத்துட்டேன். அதை எப்படிப்பா மீற முடியும்?”

“எவ்வளவு பெரிய சத்தியவாக்கா இருந்தாலும் தமிழ்நாடு நமக்கு வேண்டாம் கதிர். இங்க வந்த பிறகு நாம குடும்பத்தோட போய் பார்த்துட்டு வரலாம்.”

“அது சரிவராதுப்பா. நீங்க ஏன் அங்க போறதுக்கு மறுக்குறீங்க? காரணம் சொல்லுங்க?” என்றான் அடமாக.

“ஏன்னு என்னால சொல்ல முடியாதுடா. ஆனால், அங்க வேண்டாம். வேணும்னா ஒண்ணு பண்ணலாம்... எப்பவும் போல நான் மட்டும் போயிட்டு வர்றேன்.”

தாயின் முகம் சோகம் சுமந்ததைப் பார்த்தவன் மனம் தவித்தது. தந்தையின் இந்த பிடிவாதம் ஏனென்று தெரியவில்லை. அவரை மீறவும் மனதிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் தாய்! என் தாயின் முகம் வாடுகிறதே! அதை சந்தோஷப்படுத்தத்தானே இந்தத் திருமணத்திற்கு அனுப்பிவைப்பது. அதுவும் இல்லையென்றால்...

“அப்பா இன்னும் ஐந்து நாள் இருக்கு. அதுக்குள்ள கொஞ்சம் யோசிச்சிச் சொல்லுங்க.”

“நீ எத்தனை நாள்னு இல்ல, வருஷம் கழித்துக் கேட்டாலும் நமக்கு நிரந்தரம் இந்த ஹைதராபாத்தான்” என்று உள்ளே சென்றுவிட்டார்.

“என்னாச்சிம்மா? எதுக்காக அப்பாவுக்கு இவ்வளவு பிடிவாதம்?”

“என்னன்னு தெரியலைடா. ஊர்பக்கம் போயே பதினைந்து வருஷமாகிருச்சி. நீ ப்ளஸ் டூ படிச்ச லீவுல போனது. அப்புறம் அந்தப்பக்கம் நம்மளைக் கூட்டிட்டேப் போகல. ஏன்னு கேட்டா யாருமே பதில் சொல்லலை. இதோ உன் தாத்தா பாட்டி இவங்களும் சேர்ந்துதான் விடல. எதையோ என்கிட்டயிருந்து மறைக்கிறாங்கன்னு மட்டும் தோணுதுடா.”

“ப்ச்... என்ன செய்றது தெரியல. இதுக்கு எதாவது வழி பண்றேன்மா” என்று தன்னறைக்குச் சென்று படுத்தவனுக்குள் பலவித யோசனைகள். சுதந்திரமாக இருப்பதாய் வெளியே தெரிந்தாலும் கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையம் தங்களைச் சுற்றி போடப்பட்டிருப்பதாய் உணர்ந்தான். அதைப் போட்டிருப்பது தன் தந்தைதானே தவிர தாத்தா பாட்டி இல்லை என்பது அவரின் இன்றைய பேச்சில் புரிந்தது. ‘இந்த வளையம் எதற்காக? யாருக்காக? எனக்காகவா? இல்லை தாய்க்காகவா?’ குழப்பத்துடன் நித்திரையில் ஆழ்ந்தான் இளங்கதிர்.

இரவு படுக்கையில் விழுமுன் கடவுளை வேண்டி பாயில் படுத்த திருமொழிக்கு உழைத்த களைப்பில் உடனடியாக தூக்கம் வந்தது.

நள்ளிரவு தாண்டி மூன்று மணியடித்த வேளையில் “இல்ல மாட்டேன். அப்பா சொல்லாம நான் அங்க வரமாட்டேன்” என்ற அலறலுடன் இளங்கதிர் எழுந்தான்.

அதே நேரம் “இல்ல முடியாது போ” என்ற அலறல் திருமொழியிடமிருந்து.

இருவர் கனவுகளின் சங்கமங்கள் எதற்கோ!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top