• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
2



‘நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்றதும் அதிர்ந்தவனின் கண் நோக்கி, ‘எதுக்கு இவ்வளவு எக்ஸ்ப்ரஷன் தர்றான்?’ என நினைத்தவள் திரும்பவும், “நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். இப்ப புரியுதா? இதுக்கு ஏன் இவ்வளவு எக்ஸ்ப்ரஷன் கொடுக்குறீங்க?” என்றாள் அவள் சொன்னதில் உள்ள வாக்கியப்பிழை புரியாது.

‘அடிப்பாவி! என்னை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா? அப்ப நான் பண்ணப் போறதில்லையா? ரொம்பப் பெரிய மனசுதான் அவந்திகா உனக்கு’ என மறுபடியும் மனதில் நினைக்க,

அவன் நினைவை கவனிக்காமல் தொடர்ந்து, “நான் இதுவரை யாரையும் காதலிச்சதும் இல்லை. காதலிக்கிறேன்னு சொன்ன யாரையும் பின்னாடி சுத்தவிட்டதும் இல்லை. யாரையும் காதலிக்கிற ஐடியா எனக்கு இருந்ததும் இல்லை. கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற நினைப்பில் யார் பின்னாடியும் சுத்தினதும் இல்லை. என்னை நீங்க தாராளமா நம்பலாம்” என கௌஷிக்கைப் பார்த்துக் கொண்டே சொன்னவள், “ஹண்ட்ரர்ட் பெர்சன்ட் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்” என்று தன் மனம் தெளிவாக இருப்பதைக் கூறினாள்.

“அவந்தி வேண்டாம். என்னை வெறுப்பேத்துறதா நினைச்சி முன்னப்பின்ன தெரியாதவனை கட்டிக்கப் போறேன்ற. நீ வீட்டுக்குப் போ. நாம நிதானமா பேசிக்கலாம்” என்றான் கௌஷிக் தணிவாகவே.

“இங்க பார் கௌஷிக். சரியோ? தவறோ? எப்ப கல்யாணத்துக்குன்னு ஒருத்தர்கிட்ட கேட்டுட்டேனோ, அப்பவே முடிவு பண்ணிட்டு தான் கேட்டேன். உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதுக்கு, இவர் எவ்வளவோ பரவாயில்லைன்னு தான் தோணுது. ஸோ, இதுல நீ தலையிடாத.”

“நான் தலையிடாம, வேற யாரு தலையிடுவாங்கன்னு நினைக்கிற? உரிமைப்பட்டவன் நான்” என கோபமாக கேட்டான்.

“உரிமைப்பட்டவனா? நீயா? நீ என்னோட மாமா பையன். அது மட்டும் தான் உனக்கும் எனக்கும் உள்ள உறவு. தேவையில்லாமல் சீன் க்ரியேட் பண்ணி என்னோட பெயரைக் கெடுக்க முயற்சிக்காத? எதுவாயிருந்தாலும் என்னோட மாமா கேட்கட்டும் நான் பதில் சொல்றேன். உனக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியாது. அதுக்கு அவசியமும் இல்ல. நீ அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. முதல்ல உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்றவள் காவலாளியின் புறம் திரும்பி, “நான் ஒண்ணு கேட்டேன். நீங்க இன்னும் பதில் சொல்லல?” என்றாள்.

‘இதென்னடா வம்பா போச்சி. இவங்க சண்டையில நம்மளை கேலிக்கையாக்குறாங்களா? இல்ல நிஜமாகவே இந்தப் பொண்ணு நம்மளை கல்யாணம் பண்ணிக்கக் கேட்கிறாளா?’ என யோசித்தவன் மெல்ல தொண்டைக் குழிக்குள் எச்சை முழுங்கி, “மேடம் நீங்க சார் பேசினதுக்கு பதில் சொல்றதுக்காக, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்க பிரச்சனையில என்னை இழுக்காதீங்க?” என்றான் நிதானமாக.

“அப்படியெல்லாம் கிடையாதுன்னு சொல்ல மாட்டேன். ஆரம்பிச்சது வேணும்னா ஒரு வேகத்துல இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்காக அவசரப்பட்டு ஒருத்தர்கிட்ட ப்ரொபோஸ் பண்ற ஆள் நானில்லை. அதுக்காக அவனுக்கு பயந்துதான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீங்க நினைச்சா அது தப்பு. இப்ப சொல்லுங்க என் கேள்விக்கென்ன பதில்?”

“மேடம்! ரொம்பப் பெரிய உங்களோட வாழ்நாள் முடிவை இவ்வளவு ஈஸியா எடுத்துட்டீங்க. ஆனா, உங்கள் ராயல் லைஃப் ஸ்டைலுக்கும், என்னோட மிடில் கிளாஸ் லைஃப்கும் என்னைக்குமே செட்டாகாது. என்னதான் கூழோ, கஞ்சியோ குடிச்சி உங்க குடிசையில வாழ்ந்துருவேன்னு, ஒரு ஆவேசத்துல சாரி அவசரத்துல சொன்னாலும், ப்ராக்டிகலா அதை நடைமுறைப்படுத்தும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என நிறுத்தியவன்,

“அடுத்து கல்யாணம்ன்றது காலம் காலமா நிலைக்க வேண்டிய பந்தம். அதை இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசுறதும் சரி கிடையாது. அதுவுமில்லாமல் நீங்க கேட்ட கேள்வியே முதல்ல தப்புன்னு தான் சொல்வேன். உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டீங்க இல்லையா? ஒரு வேளை என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டிருந்தா யோசிச்சிருப்பேனோ என்னவோ. சாரி மிஸ்.அவந்திகா அழகப்பன்” என்று தெளிவாக தன் கருத்துக்களைச் சொல்லி அவளின் கல்யாணக் கோரிக்கையை மறுத்தான் காவலாளி.

ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள் அவந்திகா. வெறும் செக்யூரிட்டி தானே என்ற நினைவிலிருந்தவள், என்ன பேசுகிறோம் என அறியும் முன்னே அவசரமாக கொட்டிய வார்த்தைகள் தான் அவனிடம் கல்யாணத்திற்குக் கேட்டது. கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும். அவன் பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆராய்ந்தாள்.

கம்பீரமான தோற்றம்! பேச்சில் தெளிவு! பார்வையில் கண்ணியம்! மாநிறத்தில் களையான முகம். பார்க்க வளர்த்தியாக, வளர்த்திக்கு ஏற்ற உடல் எடையுடன் அம்சமாக இருந்தான். தாடியில்லா முகம். அடர்த்தியான மீசை(அவனில் அதிகம் பிடித்தது). புகைபிடித்திராத ரோஜா நிற உதடுகள். இக்கால இளைஞர்களிடம் இதெல்லாம் பார்ப்பது கடினம். பார்க்க வசதியான வீட்டுப் பையன்போல இருந்தான். அவனது செக்யூரிட்டி உடை மட்டுமே மிடில் கிளாஸ் என்று காட்டியது. அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும், அவளை அவன்புறம் அடியோடு சாய்த்தது என்பது தான் நிஜம்.

என்னதான் தொழில் ரீதியாக ஆண்களைச் சந்தித்தாலும், முதன் முறையாக ஒரு ஆணை தலைநிமிர்ந்து, அதுவும் வைத்தகண் வாங்காமல் ரசனையுடன் பார்க்கிறாள். பார்க்கிறாள் என்பதைவிட மயங்குகிறாள் என்று சொல்லலாம். அவள்மனம் அவளைக் கேளாமல் அவன் வசம் சாய்வதை உணர்ந்தும் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள்.

பேச்சின் நடுவே அவந்திகாவைப் பார்த்தவன், அவளின் பார்வையிலிருந்த ரசனையில், முகம் காட்டிய ஜாலங்களில் பேச்சை நிறுத்தி அவளை ரசித்துக் கொண்டிருக்க, அவனின் ரசனையின் நடுவே,

“ஐம் சாரி நான் ஏதோ உளறிட்டேன்” என்றாள்.

அவள் சொன்னதன் அர்த்தத்தைத் தப்பாகக் கணித்தவன், அவளின் ‘உளறிவிட்டேன்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவனின் முகம் களையிழந்தது. ‘கல்யாணம் பண்ணிக்க கேட்டதை உளறல்னு சொல்லிவிட்டாளே என்று.’

இருப்பினும் மனதை சமாதானப்படுத்தி, “அதான் சொன்னேனேங்க அவருக்கு ஏதோ பதில் சொல்லணும்னு உளறாதீங்கன்னு” என்றான்.

முதலில் அவன் என்ன சொல்ல வருகிறான் என புரியாதவள், புரிந்த பின் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் ஒருவன் சிதறுவதை அறியாமல். பின்னர் சிரிப்பை நிறுத்தி இல்லை குறைத்து, “ஹையோ... நான் உளறல்னு சொன்னது, உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணியதற்கு இல்ல. ப்ரபோஸலுக்கு தப்பான வார்த்தைகளை யூஸ் பண்ணிட்டதுக்கு. இப்ப இந்த நிமிஷம் முழுமனசோட கேட்கிறேன். என்னை கல்யாணம் பண்ணி உங்க ஒய்ஃபா ஏத்துக்கிறீங்களா? உங்க வீடு எவ்வளவு சின்னதா இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். எந்த காலத்துலயும் உங்க ஏழ்மையை சுட்டிக்காட்ட மாட்டேன். இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணின பிறகு அதுல ஜெயிக்கணும்னு நினைப்பேனே தவிர, ஒரு நாளும் தோற்றுப் போகமாட்டேன். என்னைச் சேர்ந்தவங்களையும் தோற்றுப்போக விடமாட்டேன்” என்று கொஞ்சம் நிமிர்வாகவே சொன்னாள்.

“அப்புறம் மாமனார், மாமியாரை வீட்டை விட்டு விரட்டும் மருமகள் கேரக்டர் நான் கிடையாது. அந்த மாதிரி பொண்ணுங்களைக் கண்டால் எனக்கேப் பிடிக்காது. எனக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழணும்னு ஆசைதான். இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கல. ஐ மீன் எனக்கு அப்பா, அம்மா, கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது” எனும் போது அவள் கண்கள் கலங்கியதோ! அதை வெளிக்காட்டாமல் கண்ணீரை விழிகளுக்குள் இழுத்தது போல், தன் சோகத்தையும் அந்த விழிகளுக்குள்ளே மூடிவிட்டாள் என்றே தோன்றியது எதிரில் நின்றிருந்தவனுக்கு. அதுதான் நிஜமும் கூட.

வெளியில் காட்டாவிட்டாலும், அவளுள் இருக்கும் சோகம் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே வைத்து வெளியே சிரிப்பதைக் கண்டவன் மனம் இளக, “உங்களுக்கு ஒரு நல்ல குடும்பம் மற்றும் பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம் தர்றேன். எதுக்காகவும், யாருக்காகவும் உங்க கண்ணுலயிருந்து கண்ணீர் வரக்கூடாது. வராததுக்கும் நானே உத்திரவாதம் தர்றேன்” என்றான்.

அவன் தன் சம்மதத்தை நம்பிக்கையாய் சொன்னதும், அவந்திகாவின் முகம் பூவாய் மலர்ந்தது. “தேங்க்யூ. தேங்க்யூ சோ மச்” என்றவள், “உங்க ஃபேமிலியையும் நான் கண்கலங்காம பார்த்துக்குவேங்க. இது சத்தியம்” என தன் தலையில் கை வைத்தாள்.

அவளருகில் வந்தவன் தலையிலிருந்த கையை எடுத்து, “இதுக்கு அவசியமில்லை. என் கண்ணுல தண்ணி வரவைக்க மாட்டேன்னு நானும் நம்புறேன் அவந்திகா” என்றான் ஒருமையில் அழைத்து.

“அச்சோ! நான் நம்ம குடும்பத்துல உள்ள மத்தவங்களுக்குத்தான் சொன்னேன், கண்ணீர் வராம பார்த்துக்குவேன்னு. உங்க கண்ணுல கண்டிப்பா தண்ணி வரும். எப்படின்னு பார்க்குறீங்களா? உங்க ஒய்ஃப் சமையல் செய்யும் போது வெங்காயம் உரிச்சிக் கொடுப்பீங்கள்ல? அப்ப உங்க கண்ணுல தண்ணீர் வரும்தான?” என கிண்டலடித்து கலகலவென்று சிரித்தாள்.

அவளுடன் சிரிப்பில் தானும் கலந்தாலும், பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் ‘நம்ம குடும்பம்’ என்று உரிமையாகச் சொன்னது மனதினுள் ஒரு நிறைவைத் தந்தது. ‘இவளைத் தவிர தனக்கு மனைவியாக, தன் குடும்பத்திற்கு மருமகளாக இருக்க வேறு யாராலும் முடியாது’ என்ற முடிவிற்கே வந்தான்.

அதுவரை எரிச்சலுடனும், கோபத்துடனும் அவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த கௌஷிக், அவர்களை முறைத்து கைபேசியில் யாரையோ அழைத்தபடி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

‘இவன் இதுவரை இங்குதான் இருந்தானா?’ என மனதில் கேள்வியெழ அதை ஒதுக்கி, “எதுக்கும் ஒரு டைம் யோசிச்சிக்கோங்க?”என்றவனை முறைத்து, “ஏன் உங்க சம்பாத்தியத்துல மூணு வேளை சாப்பாடு தர மாட்டீங்களா? இரண்டு வேளைன்னா கூட போதும் பாஸ். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்று வீம்பாக சொல்லி நின்றவளை, கட்டிக் கொள்ளலாம் போல் தோன்றியது அவனுக்கு. முயன்று தன் கைகளைக் கட்டுப்படுத்த பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தான்.

அவனின் வித்தியாசமான செய்கையில் புருவம் உயர்த்தி, என்ன என்பது போல் கேட்க, “நத்திங்” என்றான்.

“உங்க வீடு எங்கயிருக்கு? போன் நம்பர் தாங்க? ஓஹ்... சாரி சாரி.. உங்க பெயர் என்ன?”

சட்டென்று சிரித்தவன், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட? பெயர், ஊர் தெரியாம கல்யாணம் பேசி முடிச்ச ஒரே பொண்ணு நீதான்னு நினைக்கிறேன்? நீ என்ன நினைக்கிற?”

“நான் என்ன நினைக்கிறேன்னா?” கைவிரல்களால் தாடையை பிடித்து ஒரு விரலால் உதடைத் தட்டியபடி யோசிப்பதுபோல் பாவனை செய்து, “நீங்க இப்படி என்னை வா போன்னு பேசுறது சூப்பராயிருக்குன்னு நினைக்கிறேன்” என்றாள் குறும்பை குரலில் அடக்கி.

“உனக்கு சேட்டையோட, வாயும் கொஞ்சம் ஜாஸ்திதான் அவந்திகா” என்றான்.

திடீரென முகம் இருக்கியவள், “இல்லங்க மாமாவுக்கு அப்புறமா, ஃபர்ஸ்ட் டைம் உங்ககிட்டத்தான் இப்படிப் பேசுறேன். ஏன்னு சொல்லத் தெரியல. உங்களுக்குப் பிடிக்கலையா? பிடிக்கலன்னா நான் என்னை மாத்திக்கிறேன்.”

சட்டென்று கலங்கிய குரலில் கேட்டவளை, பொது இடம் என்பதையும் மறந்து, கட்டியணைக்கப் போனவன் பின் அவளின் முகம் நிமிர்த்தி, “இல்லமா. எனக்கு இந்த குணம் ரொம்ப பிடிச்சிருக்கு. இதை அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணு. வீட்ல மத்தவங்களும் ஜாலி டைப் தான். உன்னை தப்பா எடுத்துக்கவும் மாட்டாங்க” என்றான்.

“ஒரு நிமிஷம் இன்னும் உங்க பெயர் சொல்லலையே? வருங்காலக் கணவரோட பெயர் தெரியாம இருக்கிறது உலகமகா தப்பில்லையா?” கேள்வியாக கேட்டு புருவம் தூக்கினாள்.

“கார்த்திகேயன் என்னோட நேம். இதான் உன்னோட புருஷனோட பெயர் இனி உலகம் உன்னைத் தப்பா பேசாது? இப்ப சொல்லு பிடிச்சிருக்கா?” என்றான் இரட்டை அர்த்தத்தில்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“ம்... சூப்பர் நேம். முருகரோட பெயர்ல ஒண்ணு, ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

“என்னையா? என்னோட பெயரையா?” என்றான் கேலியாகவும், உண்மையை அறிந்து கொள்ளவும்.

“இருங்க யோசிச்சிட்டுச் சொல்றேன்” என்றவள் கண்கள் சிரிக்க, அவளுடன் சேர்ந்து சிரித்தவன், “இன்னையோட இந்த வேலை காலி” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“ஏன்மா ஓனரோட முறைப்பொண்ணு அதுவும் அவர் கட்டிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணு என்னைப் பிடிச்சிருக்கு சொல்லி சம்மதமும் வாங்கிட்டா. தொடர்ந்து என்னை வேலையில் வச்சிருக்க அவருக்கு பைத்தியமா என்ன?” அதை நிரூபிக்கும் வகையில் ஒருவன் வந்து சம்பளக் கவரைக் கொடுத்து வேலை இல்லையென சொல்ல, “கொஞ்சம் ஸ்லோ தான்ல?” என்றான்.

“என்ன ஸ்லோ?” என அவந்திகா கேட்க,

“உன் மாமா பையன் தான்மா. நான் அப்பவே எதிர்பார்த்தேன். ஆனா, டிஸ்மிஸ் ஆர்டர் ரொம்ப லேட்டா வருது.”

“ஐம் சாரிங்க. நான் இதை யோசிக்கவேயில்லை. என்னால உங்களுக்கு.. நான் வேற வேலை வாங்கித்தரவா? இல்ல நம்ம ஆஃபீஸ்லேயே, சே...சே... வேண்டாம். என்ன பண்ணலாம்?” என அவள் யோசிக்க...

தனக்காக அவள் யோசிப்பதை பார்த்தவன், “ரொம்ப யோசிக்க வேண்டாம்மா. நான் பார்த்துக்கறேன். இதைவிட பெரிய வேலையே பார்க்கிறேன்” என்றான்.

“ஆமா, நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”

“ப்ளஸ் டூ தான்மா படிச்சிருக்கேன்?” என்றான் சற்று வருத்தமாக.

“ஹ்ம்... அப்ப சொந்த தொழில்தான் செட்டாகும். தப்பா எடுத்துக்காதீங்க? எனக்கு சொந்தமா பத்திரிக்கை துறையிருக்கு. எனக்கு மேரேஜான பின்னாடி முழுபொறுப்பும் எடுத்துக்கிறேன்னு சொல்லியிருந்ததால, இப்போதைக்கு மாமா தான் பார்த்திட்டிருக்காங்க. அதான்ங்க கௌஷிக்கோட அப்பா. நான் பிஏ ஜர்னலிஸம் முடிச்சிட்டு எங்க ஆபீஸ்ல ரொம்ப முக்கியமான விஷயம்னா மட்டும், நான் இன்வால்வ் ஆவேன். இல்லன்னா தோட்டம், துரவுன்னு பசுமையான இடத்தைத் தேடி போய்ருவேன்.”

பேசியபடியே அவளின் ஆக்டிவாவை இருவரும் நெருங்க, “ஒரு நிமிஷம் அவந்திகா. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்” என காவலாளி அறைக்குள் சென்றவன், ஆடை மாற்றி ஒருசில பேப்பர்களை சட்டைக்குள் போட்டபடி அவந்திகாவிடம் வந்தான்.

“யூனிபார்ம் இல்லாத இந்த ட்ரெஸ்ல பார்த்தா, சும்மா ஜம்முன்னு ஒரு போலீஸ் லுக் கொடுக்குறீங்க. பேசாம அதுக்கு ட்ரை பண்ணுங்களேன். போலீஸ் வேலை உங்களுக்கு சூட்டாகும். நிஜமாவே நான் ஃபார்ம் வாங்கி தரட்டுமா? ட்ரை பண்றீங்களா?” என கேட்டாள்.

“ஏன்மா நீ வேற. யாராவது கேட்டா தப்பா எடுத்துக்கப் போறாங்க. படிப்பும் கம்மிதான். இருந்தாலும், உனக்காக வேணும்னா முயற்சிக்கிறேன் ஓகேவா?” என்றதும் அவந்திகா தலையாட்ட, காகிதம் ஒன்றை நீட்டி, “இது என்னோட போன் நம்பர். இந்த நம்பர் நீ யாருக்கும் கொடுக்கலாம். இது என்னோட பர்சனல் நம்பர். இது நம்ம வீட்ல உள்ளவங்களுக்கு மட்டும்தான். தப்பித்தவறி யார்கிட்டேயும் இந்த நம்பரைக் கொடுத்திராத. பி கேர்ஃபுல். இந்த செல்போன்ல உன்னோட செல்லுக்கு ரிங் போட்டு சேவ் பண்ணி வச்சிக்கோ” என்றதும் வாங்கியவள், அவள் இரண்டு நம்பர்களையும், ஒரு நம்பரில் “கார்த்திகவந்தி” என்றும் இன்னொன்றில் “ஒய்ஃப்” என்றும் பதிந்து அவனிடம் கொடுத்தாள்.

அதைப் பார்த்தவன் முகம் மலர, “உங்க மாமாகிட்ட பேசி கால் பண்ணுமா? எங்கயாவது பொது இடத்துல மீட் பண்ணி பேசிக்கலாம்” என்றான்.

“சரிங்க. நீங்க எதுல போவீங்க? வாங்க நான் ட்ராப் பண்றேன்.”

“இல்லமா. நீ கிளம்பு. நான் வேற எதாவது வேலை பக்கத்துல கிடைக்குதான்னு பார்த்துட்டு, அப்புறம் வீட்டுக்குப் போறேன்” என்றான்.

ஆக்டிவாவில் ஏறியவளை, “எதுக்கும் உன்னோட மாமா பையன்கிட்ட ஜாக்கிரதையா இருமா. யாரையும் நல்லவங்கன்னோ, அப்பாவின்னோ அவ்வளவு சீக்கிரம் நினைச்சிரக் கூடாது. எனக்கென்னவோ கௌஷிக்கோட அமைதிக்குப் பின்னாடி எதாவது இருக்கும்னு தோணுது. ஐ மீன் உன்னை விட்டுப் பிடிக்கிறான்னு தான் தோணுது.”

“அந்தளவுக்கு போகமாட்டான்ங்க. அதுக்கு அவனுக்கு தைரியம் இருக்கணுமே? அவன் ஒரு லூசுங்க. நீங்க சொன்னதுக்காகவேணும் இன்னும் ஜாக்கிரதையா இருக்கேன்.”

‘ம்...’ என யோசனையில் இருந்தவனிடம் அவந்திகா “என்னாச்சிங்க?” என்றாள்.

“இல்லமா ஒண்ணுமில்லை. நீ கிளம்பு” என்றவன் திரும்பவும், “அவந்தி கௌஷிக் லூசு மாதிரி நடிக்கக்கூட செய்யலாம். எதுக்கும் கேர்புல்லா இரு. டேக் கேர்” என்றதும், பை சொல்லி விடைபெற்றாள்.

அவந்திகாவை வழியனுப்பிவிட்டு போனை எடுத்தவன் ஒரு மணி நேரமாகப் பேச வேண்டியதை பேசி, சமாளிக்க வேண்டியதைச் சமாளித்து வைத்தவனுக்கு, வேலை நிறைய இருப்பதாகவே தோன்றியது.

‘டேய்! கார்த்திக்! ஒரு அழகான படிச்ச பொண்ணே உன்னைத்தேடி வந்திருக்கு. நீ அசால்ட்டா நிற்கிற? ம்.. க்விக் வீடு வேற பார்க்கணும். இல்லாத வீட்டை எங்கடா போய் தேடுறது?’ மனதில் நினைத்து, நிற்க நேரமில்லாததை உணர்ந்து அன்றே ஒரு வீட்டையும் பார்த்துவிட்டான். மறுநாள் மற்றவர்கள் வருவதாக தெரிவித்து விட்டார்கள்.

டேஸ்டி ஃப்ரூட்ஸ் பேக்டரியில் சோதனை நடத்தியவர்கள் கட்டுரை உண்மையென்று அதை சீல் வைத்து, கௌஷிக்கிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்க, அவன் ஏற்கனவே முன் ஜாமீன் வாங்கி வைத்திருந்தது அவனைக் காப்பாற்றியது. கோவம் முழுக்க அவந்திகாவின் புறம் திரும்ப, அவளைப் பழிவாங்க தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவந்திகா தன் மாமா சுந்தரேசனிடம் கார்த்திகேயனைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

கண்மூடி அதை ஜீரணித்தவர் மருமகளிடம், “நீ அவசரப்பட்டுட்டியோன்னு தோணுதுமா” என்றார்.

“இல்ல மாமா. நான் நிதானமா யோசிச்சி தான் முடிவு பண்ணியிருக்கேன். ரெண்டு டைம்தான் பேசியிருக்கேன்னாலும், பெண்கள்கிட்ட கண்ணியமா பழகுற குணம் பிடிச்சிருந்தது. தனியா பொண்ணுங்க இப்படி காட்டுப் பகுதியில நிற்கிறது ஆபத்துன்னு சொன்ன அக்கறை பிடிச்சிருந்தது. எதையும் நிதானமா யோசிச்சிப் பேசுற தன்மை பிடிச்சிருந்தது. நான் பண்ணின தவறைக்கூட மனம் நோகாமல் சுட்டிக் காட்டினது பிடிச்சிருந்தது. உன்னை கண்கலங்காம பார்த்துக்குவேன்னு சொன்ன பாங்கு பிடிச்சிருந்தது. இப்படி நிறைய ‘இருந்தது’ இருக்கு மாமா இல்லைனு எதுவும் தெரியவில்லை” என்றாள் கண்கள் மலர.

“இத்தனை விஷயம் ரெண்டே மீட்டிங்ல உன்னை ஒருத்தன் இந்தளவுக்கு இம்ப்ரஸ் பண்ணியது ஆச்சர்யம் தான்.”

“கார்த்திக்கிட்ட எந்த மைனஸும் இருக்கிற மாதிரி தெரியல மாமா. படிப்பும், அந்தஸ்தும் மட்டும் தான் அவங்ககிட்ட குறைன்னா, இப்பக்கூட அவங்களால படிக்க முடியும். அந்தஸ்து இன்னும் எங்களுக்கு காலம் இருக்கு மாமா. அதுக்குள்ள ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருவோம்னு நம்பிக்கை எனக்கிருக்கு.”

“ஓகேமா. உன்னோட முடிவுல தெளிவா இருக்கிற தான?”

“கண்டிப்பா மாமா. ரொம்பத் தெளிவா இருக்கேன். குழம்ப வேண்டிய அவசியமே இல்லை மாமா. நீங்க அவங்ககிட்ட கொஞ்சம் நேரம் பேசிப்பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு அவங்களைப் பிடிக்கும்” என்று கார்த்திகேயனுக்காக அடித்துப் பேசிய தங்கை மகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து, “நீ தப்பா எதையும் செய்யமாட்டேன்னு நம்புறேன்மா. நம்பர் கொடு நானே பேசுறேன” என்றதும் நம்பர் கொடுத்து மாடியிலுள்ள தன்னறைக்கு சென்றவளையே, பார்த்துக் கொண்டிருந்த சுந்தரேசன் திரும்பி தங்கையும், தங்கை கணவனும் சேர்ந்திருந்த புகைப்படத்தை நோக்கி, “உங்க பொண்ணுக்கு எந்தவிதமான கெட்டதும் நடக்காமல், எல்லாம் நல்லதாகவே அமைய கூடவேயிருந்து காப்பாத்துங்க” என்று கேட்டுக்கொண்டார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த கௌஷிக், “அப்பா எங்க அவ? அவளைக் கொன்னால் கூட என் ஆத்திரம் அடங்காது. என்னோட பேக்டரிக்கே சீல் வைக்க வச்சிட்டா. சீல் வச்சிட்டா நான் பிச்சைக்காரனா ஆகிருவேன்னு நினைச்சாளா? இன்னும் ஒரு வாரத்தில் அந்த கேஸை ஒண்ணுமில்லாமலாக்கி, திரும்பவும் பேக்டரியை ஓபன் பண்ணல என் பெயர் கௌஷிக் இல்ல. என்ன தைரியமிருந்தா, ஒரு பிச்சைக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு என்கிட்டயே சொல்லுவா?” என்றான் அவளுக்கு கேட்க வேண்டுமென்று சத்தமாக.

கௌஷிக்கின் சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தவளுக்கு, கார்த்திக்கை பிச்சைக்காரன் என்றதும் கோபத்தில் கிழிறங்கி வந்தவள், நேரடியாக அவனிடமே “உழைச்சி சாப்பிடுற அவங்க பிச்சைக்காரன்னா? ஜனங்க உயிரோட விளையாடுற நீ யாரு? இன்னொரு டைம் இந்தமாதிரி வார்த்தையை அவங்களுக்கு யூஸ் பண்ணின அவ்வளவு தான். மாமா சொல்லி வையுங்க உங்க பையன்கிட்ட பிச்சைக்காரன்னு சொல்ல வேண்டாம்னு.”

“அவனைச் சொன்னா உனக்கு ஏன்டி கோவம் வருது? அந்தளவுக்கு அவன் உன்னை மயக்கிட்டானா? நீ மயங்குற அளவுக்கு அவன்கிட்ட என்னயிருக்கு?”

“கட்டிக்கப்போற எனக்கு கோவம் வராம, தெருவுல போறவளுக்கா கோவம் வரணும்னு சொல்ற? என்ன பேச்சி இது? இப்படில்லாம் நீ இதுவரை பேசினதில்லையே? அதென்ன மயக்கிட்டான், மயங்கிட்டேன்னு. டீசன்டா பேசுறதுன்னா என்னன்னு தெரியாதா உனக்கு. இன்னொரு டைம் கார்த்திக் பற்றிப் பேசின...” என்று சுற்றிலும் பார்த்தவள், பக்கத்திலிருந்த பூஜாடியைத் தூக்கி அவன் தலையில் போடுவதுபோல் செய்து, “கொன்னுருவேன்” என்றாள் ஆங்காரமாய்.

அப்பொழுதும் அசராமல், “புருஷனா? அவனா? உனக்கா? நோ சான்ஸ். உனக்கு புருஷன்னா அது நான் தான். இது யார் தடுத்தாலும் நடக்கும். உன்னை அவன் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறான்னு பார்க்கத்தான போறேன்” என வெறியோடு சொன்னவனை, இதுவரை அவந்திகா கண்டதில்லை.

தன்னுடனே சேர்ந்து வளர்ந்தவனின் இன்னொரு முகத்தை முதல் முறையாக காண்கிறாள். கௌஷிக்கின் பேச்சு, செயல், குணம் எல்லாம் படத்திலுள்ள வில்லனைப் பார்ப்பது போலிருந்தது. ‘அப்படியானால், இதுவரை தன்னிடம் நல்லவனாக நடித்திருக்கிறானோ?’ என்றே தோன்றியது அவந்திகாவிற்கு.

இருந்தாலும் அசராமல், “பார்க்கலாம்டா. கார்த்திக் கட்டுற தாலிதான் என் கழுத்துல ஏறும். இது கடவுள் போட்ட முடிச்சி. எந்த மனுஷப் பயலாலயும் தடுக்க முடியாது. விதிவசத்தால மீறி நீ கட்டினன்னு வையி, அதான் நீ இந்த உலகத்தைப் பார்க்கிற கடைசி நிமிஷமாக இருக்கும். ஏன்னா, அதுக்கு மேல நீ உயிரோட இருக்கமாட்ட பாரு” என்று கண்களில் தீ பறக்க பேசி, விரலால் கொன்னுருவேன் என மிரட்டி மாடியேறி தன் அறைக்குள் நுழைந்து தாழ்போட்டு கட்டிலில் விழுந்தாள்.

கௌஷிக்கின் பேச்சில் தன் உடல் நடுக்கம் அவளுக்கே தெரிந்தது. “கடவுளே! அவன் சொன்னது நூத்துல ஒண்ணா கூட நடந்திரக்கூடாது. அப்படி ஒண்ணு நடந்தா நான் உயிரோட இருக்கமாட்டேன். எனக்கு என் கார்த்திக் தான் வேணும்” என மனம் உருக வேண்டினாள்.

என்னதான் கௌஷிக்கிடம் வீராவேசமாக பேசி வந்திருந்தாலும், அதையும் மீறின ஒரு படபடப்பு நெஞ்சம் முழுவதும் தாக்கியது. கண்களில் நீர் வழிய செய்வதறியாமல் அமர்ந்திருந்தாள் அவந்திகா அழகப்பன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top