• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
3



கனவின் வேகத்தைப் பொறுக்காது எழுந்து அமர்ந்திருந்தவனின் அறைக்கதவு தட்டப்பட, தாயைத் தேடியது அவனுள்ளம். ஆனால் எழ முடியாமல் கனவு அவனை ஆக்கிரமித்திருந்தது.

“ராஜா என்னாச்சிப்பா? ஏன் அலறின? முதல்ல கதவைத்திற.”

எதுவும் புரியவில்லை அவனுக்கு. அக்குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.

“உயிர் வாங்க! உயிர் தேடி வா!” சட்டெனக் காதை மூடிக்கொண்டான். தொடர்ந்து கேட்ட அப்பா அம்மாவின் சத்தத்தில் கதவைத் திறக்க...

“ஏன் அலறின ராஜா? கனவு எதாவது கண்டியா? ஏன் இப்படி ஏசியிலும் வியர்த்திருக்கு?” வேகமாக தன் முந்தானையால் மகனின் முகம் துடைத்தார் சிவகாமி.

“கனவுதான்மா. வேற எதுவுமில்ல” என்றவன் கண்களில் கனவுகளின் மிச்சம்.

“கனவுக்கா இந்த அலறல்?”

“அந்தக் கனவு அப்படியே தத்ரூபமா கண்ணுக்கு முன்னால நடக்கிற மாதிரி இருந்ததுமா. வயசு வித்தியாசமில்லாம அத்தனை சடலம். ஐயோ! பார்க்க முடியலம்மா. அப்ப ஒரு பையன் மலையிலிருந்து விழும்போதே மறுபிறப்பு எடுத்து வருவேன் சொன்னான்.”

“ஓ... அப்புறம்?” என்றார் மகனை கட்டிலில் உட்காரவைத்து தண்ணீர் கொடுத்தபடி. மகன் கடைசியாகச் சொன்னதில் யோசனையுடன் மகனின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் குருமூர்த்தி.

“யாரோ என்னை தேவதானம்பட்டி காமாட்சியம்மன் கோவிலுக்கு வா கூப்பிடுறாங்க. நான் மாட்டேன்னு மறுத்து சொன்னதுக்கு, உனக்கான கடமை இங்க காத்திருக்கு. உனக்கானவளும் காத்திருக்கா! நீ வருவ! வரணும்! வந்தே ஆகணும்! இல்ல நான் வரவைப்பேன்னு கத்தி சொல்லிட்டு மறைஞ்சிட்டாங்கமா” என்றதும் முகம் பேயறைந்தாற் போலானது குருமூர்த்திக்கு.

‘இல்ல அங்க போகக்கூடாது. அங்க போனா என் பையன் எனக்கில்ல. அவன்.. அந்தப்பையன் கொண்டு போயிருவான். எனக்கிருக்கிறது ஒரே பிள்ளை. என் பையன் எனக்கு வேணும். நான் யாருக்காகவும் என் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.’ குருமூர்த்தி மனம் நடப்பதைச் சமாளிக்க வழிதேடியது.

“அந்த ஊரா? ஏங்க நாம கடைசியா போனப்ப நீங்களும் பையனும் மட்டும் போயிட்டு வந்தீங்களே. தாய் காமாட்சி நம்மைக் கூப்பிடுறாங்க. நாம போயிட்டு வரலாம்ங்க. அந்தத் தாயே வந்து கூப்பிடுறதுன்னா எதாவது காரணமிருக்கும்.”

“எவ்வளவு பெரிய காரணங்களாயிருந்தாலும் நாம அங்க போறதுன்றது முடியாத காரியம் சிவா. தேவையில்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்காம சாமியைக் கும்பிட்டுப் படு கதிர். காலையில ஆஃபீஸ் கிளம்பணும்” என்று அங்கிருந்து நகர சிவகாமிக்குள் சில்மிஷமாக கணவனைச் சீண்டிப்பார்க்கும் எண்ணம் வந்தது.

மகனின் தலைவருடி “ரொம்ப டயர்டாயிருந்தா படுத்துக்க ராஜா” என்று வெளியே வந்த சிவகாமிக்கு எப்படி அந்தத் தாயிடம் செல்வது என்ற எண்ணமே அதிகமானது.

சாமி விஷயங்களில் எப்பொழுதும் விளையாட்டு கூடாது என்று பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்பட்டவர் சிவகாமி. தற்பொழுது மகன் கனவின் தாக்கம் தனக்குள்ளும் தெரிய ஏதோ ஒன்றை கணவர் தன்னிடம் மறைப்பதாகப்பட்டது. அது தெரிய வேண்டுமென்றால் தமிழ்நாடு செல்லவேண்டும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.

படுத்தவன் திரும்பவும் கண்மூட சற்று நேரத்திற்கெல்லாம் “அத்தான் என்னைக் காப்பாத்துங்க.” ஒரு பையனின் குரலைத் தொடர்ந்து... “என்னை மறந்துட்டல்ல?” இளம்பெண் ஒருத்தி. “வர்றேன்னு சொன்னீங்களே அத்தான். ஏன் இன்னும் வரல. உங்களுக்காக வருடங்கடந்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள் இன்னொரு பெண்.

அவர்களின் முகங்கள் பளிச்சென தெரிய வேகமாக எழுந்தமர்ந்தவன் இப்பொழுது அலறவில்லை. ஆனால் ஏன் இந்த தொடர் கனவுகள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதுவும் இதுவரையில்லாத வகையில் கனவுகளின் படையெடுப்பு. ‘யாரைப் பழிவாங்கணும்? என் உதவி யாருக்குத் தேவை? யாரை மறந்தேன்? எனக்காகக் காத்திருக்கும் அப்பெண் யார்?’ மனதிற்குள் குழப்பங்கள் அதிகரித்ததே தவிர அமைதியில்லை. பால்கனி வந்து வானத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

கனவின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை திருமொழி. எப்பொழுதும் கனவு வரும்தான் அது தன் ஒட்டுமொத்த கோபத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கும். இன்றோ அனைத்திற்கும் மாறாய் இருந்தது.

அருகில் மருமகளின் அசைவை உணர்ந்து “என்னாச்சி திரு? அதே கனவா? எதையும் யோசிக்காம தூங்கு. இந்தக் கனவுகளிலிருந்து உனக்கு என்னைக்குத்தான் விடுதலையோ!”

“இல்லை அத்தை. இது வேற... எப்படிச் சொல்றது தெரியல” என்றவளுக்குள் அக்கனவும் அதன் தாக்கங்களும் உடலை நடுங்கச் செய்தது.

“என்னடா? என முகம் வருடி அருகிலிருந்த தண்ணீர் கொடுத்து குடிக்கவைக்க...

அவர் மடியில் முகம் புதைத்து “என்கிட்ட ஒருத்தன் வா கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்கிறான் அத்தை. அப்படியே நேர்ல நின்னு கேட்கிற மாதிரியிருக்கு.”

“என்ன திருமா? நிஜமாகத்தான் சொல்றியா? ஆள் எப்படியிருந்தான்?”

“அவன் பார்க்க நல்லாத்தான் இருந்தான்.”

“உன் கனவு எப்பவும் பலிக்கும்னு நம்புவல்ல. அப்ப இந்தக் கனவும் பலிக்கும்தான. பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிக்க.”

“அத்தைய்ய்ய்... என்னைத் தெரிஞ்சும் எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம். அவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அப்புறம் என்னோட லட்சியத்தை எப்படி நிறைவேத்துறது?”

“இந்த லட்சியம்லாம் வேண்டாமே திரு.”

“இந்த லட்சியத்தினாலதான் அத்தை நான் உயிரோட உயிர்ப்போட இருக்கேன். இது மட்டும் இல்லன்னா... நான் போய் பலவருஷம் ஆகியிருக்கும்.”

“ஸ்ஸ்.. என்ன பேச்சுப் பேசுற நீ. உன்னை மாத்திடலாம்னு நினைச்சாலும் என்னால முடியல. ப்ச்... படுத்துத்தூங்கு” என்று தானும் படுத்தார்.

தனக்கு வந்த கனவை எண்ணியபடியே படுத்தவள் கண்முன் புன்னகை முகத்துடன் வந்தான் அவன். ‘திரும்பவுமா!’ என்ற அலறல் மனதினுள். ஆனால் கண்களை மூடிக்கொண்டளுக்கு சற்று முன் வந்த கனவு காட்சியாக விரிந்தது.

முகத்தில் புன்னகையுடன் தன் இரு கைநீட்டி அவளைத் தன்னிடம் அழைக்க, திருவோ வர மறுக்க... அவளின் கையைத் தன்புறம் இழுத்துப்பிடித்து முகம் நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க... அப்பார்வை தனை ஏதோ செய்வதை உணர்ந்தாள். கண்கள் தன்னையறியாமல் மூட அக்கண்களில் அவன் முத்தமிட... சட்டென்று வழிகளைத் திறந்து முறைத்துப் பார்க்க... சிரித்தபடி பட்டென்று சொன்னான் “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”

ஷாக்கடித்தாற்போல் அவனை விட்டு விலக முயற்சிக்க விடாமல் பிடித்தவன் “உன் லட்சியத்தை நிறைவேற்ற வந்தவன் நான்தான்” என்றான்.

“என் லட்சியம் இவனுக்கெப்படித் தெரியும்? முதல்ல என் லட்சியம் என்னன்னாவது தெரியுமா? அவன் முகத்தில் எதையோ தேடி ஏமாந்தனவோ அவளின் விழிகள்!” சின்னதாக சலிப்பு வர விழிகள் கேள்வி கேட்டன அவனிடமே!

“உன் அனைத்தும் நானறிவேன். வா.. நீ நான் நாமாகிடலாம்.”

“இல்ல என்னால ஒத்துக்க முடியாது. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறதாயில்ல. நீங்க வேற ஆளைப்பாருங்க” என அவனை உதறித்தள்ளி நகர... அவனோ அவளின் கைபிடித்திழுக்க தன்மேல் மோதியவளை சிரிப்புடன் பார்த்து “நான் பார்த்த முதலும் கடைசியுமான ஆள் நீதான். என் ஆயுளுக்கும் நீ மட்டும் போதும் பெண்ணே!” என்றான் ரசனையுடன்.

“முடியாது. என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ போ” என அலறியடித்து எழுந்திருந்தாள்.

இப்பொழுதும் அக்கனவும் அவனும் கண்முன் வர சற்றுப் பயம் வந்தது அவளுள். தன் கனவுகள் எப்பொழுதும் உண்மையைச் சுமந்து வருபவை. அதைப்போல் இதுவும் ஆகிவிடுமோ என்ற பயமே அவளுள். ஆகாது என்ற தெளிவு மனதினுள் இருந்தபோதும், தன் கண்களை அவன் நேருக்குநேர் பார்த்து மெஸ்மரிசம் செய்தானோ! அதில் தானும் வசீகரிக்கப்பட்டு கண்மூடிய நிமிடங்கள் நினைவில் வந்தது.

மயங்காதே என்றது மூளை. நான் மாட்டேன் என்றது மனம். இதுவரை பார்க்காதவன் இனி பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் விட்டு விலகிச்செல்ல வேண்டுமென்று முடிவு செய்தாள்.

திருமொழியின் முடிவை உடைப்பானா, இவள் கனவுகளின் நாயகன்!

காலையில் தன்வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யமாகி “ஹேய் தம்பிப்பையா! என்னடா காலையிலேயே வீட்ல வந்து நிற்கிற? அச்சோ! இன்னும் எதுவும் செய்யலையேடா” என வருத்தப்படுவதுபோல் சொன்னாள்.

“திரு என்ன பேச்சிது? வார்த்தையை அடக்கு” என்றதும்தான் தன் விளையாட்டுப் பேச்சின் வினை புரிய “சாரி” என்றாள்.

“அடப்போக்கா! இதுக்கெல்லாமா ஃபீலாவ. சும்மா கெத்தா சௌண்ட் விடுறதுதான் உனக்கழகு. நீங்க அக்காவைத் திட்டாதீங்க அத்தை” என்றான் காமாட்சியிடம்.

அவரோ “ஆத்தாடி! பேச்சைப் பாரேன். நமக்குன்னு வர்றதெல்லாம் வாய்ச்சவடால் உள்ளதால்ல இருக்கு” என்று வாயில் விரல்வைத்தார்.

“என்னடா தம்பிப்பையா காலையிலேயே தரிசனம் குடுக்கிற?”

“உன் கையால காஃபி குடிச்சா சீக்கிரம் மோட்சமடையலாம்னு எங்க அத்தை சொன்னாங்க. அதான்கா வந்தேன்.”

அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து “முதல்ல காரணம் சொல்லு?” என்றாள்.

அவளின் உரிமையான செல்ல அடியை ரசித்தாலும், “ஸ்ஸ்.. சும்மா சும்மா அடிக்காதக்கா. அப்புறம் குள்ளமாகிரப் போறேன்” என்றான். அதற்கு அவள் முறைக்க... “நேத்து சொன்னேன்ல பத்திரிக்கை வைக்க வந்தேன்னு. சரி இங்கதான் அக்கா ஒருத்தி கிடைச்சிருக்காளே அவளை ஏன் விட்டு வைக்கணும்னு தான் வந்துட்டேன்.”

அவனிடமிருந்து பத்திரிக்கையை வாங்கியபடி, “யாருக்குக் கல்யாணம்?” என்றதும் அவன் ‘தனக்குத்தான்’ என... சட்டென்று இருமல் வந்தது திருமொழிக்கு.

அவளின் அத்தை தண்ணீர் கொடுத்து முதுகைத் தடவ “அப்ப நீ தம்பியில்லையா? அண்ணனா? இது தெரியாம வாடா போடான்னு. அச்சோ!” என்று தலையில் கைவைத்தாள்.

“இதுக்குத்தான் திரு யோசிச்சிப் பேசணும்னு சொல்றது.” காமாட்சி அறிவுரை சொல்ல...

“நான் என்ன அத்தை பண்றது. நீங்களே பாருங்க. பார்க்க கலரா ஒல்லியா இப்பதான் காலேஜ் முடிச்ச பையன் மாதிரியிருக்கான். அப்புறம் எப்படி நினைக்கிறதாம்?”

“ஹையோ யக்கா! என் அறிவுக்கொழுந்தே! நீ அப்படிக் கூப்பிடுறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. எங்கம்மாவுக்குப் பொண்ணா, அண்ணன் தம்பி எங்க ரெண்டு பேருக்கும் சகோதரியாயிரு போதும். என்ன பார்க்கிற? நம்ம அண்ணனுக்குத்தான் கல்யாணம்.”

“நம்ம அண்ணனா!” ஆச்சர்யத்துடன் சற்று அசடுவழிய...

அதைக்கண்டு சிரித்தவன் “நீ சொன்ன மாதிரி நான் உனக்கு இளையவன்தான்னு அத்தைகிட்ட நேத்தே கேட்டுட்டேன்” என்றதும் “ஓ...” என்று அவன் அடுத்துக் கேட்ட “நீ கல்யாணம் செய்த பிறகுதான் நான் செஞ்சுப்பேன்” என்றதில் “அப்ப உனக்கு கல்யாண பிராப்தம் கம்மிதான்டா அம்பி” என்றாள் சீரியஸாக முகம் வைத்து.

“என்னக்கா இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்ட?”

“அடி.. அக்காவை வா போ சொல்ற.”

“அதுலதான்கா கிக் கிடைக்குது” என்றதும் அடுத்த கொட்டு நங்கென்று வைத்து “இதுல உனக்கு கிக் கிடைக்காது கிர்ருன்ற எபக்ட்தான் கிடைக்கும். கிடைக்குதா?” என்றாள்.

தலையைப் பாவமாகத் தடவியவன் “ம்.. ரொம்பவே. அதுக்காக அக்காவை வாங்க போங்க சொல்லமாட்டேன். வேண்டாம் பச்சப்புள்ளையை அடிக்காதக்கா. இப்பவே மண்டையில் ஒரு கொண்டை முளைச்சிருக்கு” என்றான் அடுத்து அவள் கை ஓங்கியதைத் தடுத்தபடி.

“சரி வா உள்ள” என்றாள் சிரித்தபடி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“நான் வரலக்கா. நீங்க லேடீஸ் மட்டும்தான் இருக்கீங்களாம் அத்தை சொன்னாங்க. இதுவோ கிராமம். இப்பலாம் வயசு வித்தியாசம் பார்க்காம சகட்டுமேனிக்கு சாக்கடையை வீசியெறிவாங்க. எதுக்கு என்னால உனக்கு வம்பு.”

அவனின் அக்குணத்தில் பெண்கள் இருவருக்கும் மனம் மகிழ “இப்பனாப்ல தப்பா நினைக்கமாட்டாங்களா? உன்னை உரிமையா அடிக்கிறதைப் பார்ப்பாங்கதான?”

“உன்னோட குணம் இங்க உள்ளவங்களுக்கு தெரியும்கா. நான் புதுசில்லையா. சரி வளவளன்னு பேசிட்டிருக்காம கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்திருங்க. உங்களால முடியலன்னா சொல்லுங்க நான் வந்து கூட்டிட்டுப் போறேன்.”

“ஏன்டா தம்பிப் பையா கல்யாணத்துக்கு இன்னும் ஐந்து நாள்தான் இருக்கும்போல?”

“ஆமாக்கா. பக்கத்து ஊர்ன்றதால கடைசியாதான் பத்திரிக்கை வைக்க வந்தேன். நான் பார்க்க வந்த அத்தை அப்பாவுக்கு ரொம்ப தூரத்து உறவுதான். அதிகம் பழக்கம் இல்லைனாலும் பத்திரிக்கை வைக்கிறது முறைன்னு சொல்லி அனுப்பினாங்க. இது என் நம்பர்கா” என்று அவள் கையிலிருந்த பத்திரிக்கையில் தான் எழுதியிருந்த நம்பரைக் காண்பித்தான். அவளும் தன் நம்பரைக் கொடுக்க அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.

“பையன் ரொம்ப நல்லவனாயிருக்கான் திரு.”

“ஆமா அத்தை. இந்த மாதிரி கள்ளங்கபடமில்லாமல் பேசுற பையன்கள் ரொம்ப கம்மி.”

“அந்தப் பையன் பெயர் கேட்காம விட்டுட்டோமே!”

“அதான் நம்பர் இருக்கே அத்தை” என்று அந்த நம்பரை தம்பிப்பையா என செல்லில் பதிவு செய்தாள். அந்நேரத்தில் சில நிகழ்வுகள் வந்து மனதை அழுத்த புருவ மத்தியில் மெல்லியதாக ஒரு வலி.

“என்னமா? ஏன் ஒரு மாதிரியாகிட்ட?”

“அப்படிலாம் இல்லை அத்தை. கொஞ்சம் தலைவலி.”

“உனக்கு இந்த கனவு தலைவலிகிட்டயிருந்து எப்பதான் விடுதலையோ போ. சரி நீ கொஞ்சம் படுத்து ஓய்வெடு. நான் தோப்புக்குப் போயிட்டு வர்றேன்” என்றவர் என்ன நினைத்தாரோ “இல்ல வேண்டாம். நீ தனியாயிருந்தா கண்டதையும் நினைப்ப. என்னோடவே வா” என இழுத்துச் சென்றார்.

அன்று சற்று நேரம் கழித்தே எழுந்தான் இளங்கதிர். சிவகாமியிடம் வந்து “குட்மார்னிங் அன்னையாரே” என்றான்.

காஃபியை பையனுக்குக் கொடுத்து “குட்மார்னிங்டா ராஜா. உன் பிஏ கல்யாணத்துக்கு இன்னும் மூணுநாள்தான இருக்கு?” எனக்கேட்க.

“ஆமாம்மா. ஏன் கேட்குறீங்க?”

“இன்னைக்கு மதுரைக்கு ஒரு ப்ளைட் டிக்கட் ரெடி பண்ணு. உன் சார்புல நான் போயிட்டு வர்றேன்.”

குடித்து முடித்து க்ளாஸை முன்னிருந்த சின்ன கண்ணாடி டேபிளில் வைத்தபடி “அம்மா அப்பா போகவேண்டாம் சொன்னாங்கதான. அப்புறம் எப்படி?”

“தாய் கேள்வி கேட்டா. பையன் பதில் சொல்லணும் மகனே. எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது.”

“அம்மா.. ஆனா அப்பா...” சற்று பயத்துடன் தயக்கமும் அவனுக்கு.

“அந்தத் தாய் உன்னைக் கூப்பிட்டிருக்காள்னா காரணம் இல்லாமல் இருக்காதுடா. அகிலமுமானவள் அவள்! அவ கூப்பிட்டு போகாம இருந்தா அது தப்புடா.”

“என்ன காரணமா இருந்தாலும் போகக்கூடாது” என்ற கட்டளையுடன் வந்த கணவனைக் கண்டு மகன் பின்னாடி ஒழிந்து, “இவங்க சொந்த ஊருக்குத்தானடா போறேன் சொல்றேன். தலையில வச்சிக் கொண்டாட வேண்டாம். தடுக்காம இருக்கலாம்ல.”

“என்னடி முணுமுணுப்பு?”

“ஒண்ணுமில்லங்க.”

“அந்த ஒண்ணுமில்லைன்றதை என் முன்னாடி வந்து சொல்லு.”

“ம்கூம் நீங்க திட்டுவீங்க. நான் வரமாட்டேன்” என்றார் பயந்தவராய்.

“பயம் இருக்கிறவள் வாய் பேசக்கூடாது. அப்பா அம்மா இருந்தவரை எப்படி இருந்தியோ அப்படியிருக்கணும். சரியா?”

“இங்க பாருங்க அப்பா அம்மா இல்லாத பிள்ளையை இப்படிலாம் மிரட்டக்கூடாது சொல்லிட்டேன்” என்று கண்கலங்க நிற்க...

அவரோ “போடீ நீயும் உன் நடிப்பும்” என்று பல்லைக்கடித்தார்.

கணவனின் வார்த்தையில் அவரைக் கள்ளத்தனமாய் ஒரு பார்வை பார்த்து, தன் நடிப்பை விடாமல் கண்ணீருடன் நிற்க... ‘ஒருவேளை உண்மையாகதான் அழுறாளோ?’ என நினைத்தவர் மனைவியைக் காண மகனின் தோள்சாய்ந்து அவன் சட்டையைக் கண்ணீரால் நனைத்தார்.

“இங்க பார் சிவா” என மனைவியின் தோள் தொட... கையைத் தட்டிவிட்டு திரும்பி மகனின் சட்டையை நனைக்க தாயின் நடிப்பைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் மகன்.

“ப்ச்... சிவா சொன்னா கேட்கமாட்டியா? இதென்ன புதுசா அடம்பிடிக்கிற?”

“எனக்கு ஹைதராபாத்தும் வேண்டாம். மதுரையும் வேண்டாம். நான் சென்னையிலிருக்கிற என் அண்ணன் வீட்டுக்குப் போறேன்” என்றார் கண்ணைக் கசக்கியபடி.

“ஏய்.. இரு இரு. சென்னையில உனக்கு அக்கா வீடுதான இருக்கு. அண்ணன் வீடு எப்படி?” என்று மனைவியை ஆராய்ச்சியாய் பார்க்க,

‘அட அசட்டு சிவா. செய்யுறதை திருந்தச் செய்யமாட்டியா?’ என தன்னைத்தானே திட்டி கணவனைப் பார்த்து, “அழும்போது ஒரு வார்த்தை தவறி வந்துட்டா இப்படித்தான் கேட்பீங்களா? ஏன் என் அக்கா வீட்டுக்குப் போகக்கூட எனக்கு உரிமையில்லாமல் போச்சிதா. எத்தனை வருஷமா பார்க்கல. அவளோட பொண்ணு கல்யாணத்துக்குக்கூட நான் போயிட்டு வர்றேன்னு சொல்லி என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க. எங்கக்கா என்னை போன்ல கன்னாபின்னான்னு திட்டுறா. உங்களுக்கென்ன ஆம்பளை நாலு இடம் சுத்தி வருவீங்க. நாங்கதான் பொம்பளப் பிறப்பாச்சே இந்த நாலு சுவத்தை மட்டுமே பார்த்துட்டு அப்படியே போய்ச் சேர்ந்திடுறேன்” என்று மூக்கை சேலைத்தலைப்பால் துடைத்தார்.

“ஏய்...” “அம்மாஆஆ...” என்ற அதட்டல் குரல்கள் இருவரிடமிருந்தும். “என்ன உளறல் இது?” இருவரின் கேள்வியில் தான் பேசியது அதிகமென்று தெரிய “சாரி” என்றார்.

“இப்ப என்ன? உன் அக்கா பார்க்கப் போகணும் அவ்வளவுதான?”

குனிந்தபடியே “ம்...” என்ற தலையசைப்பு அவரிடம்.

“சரி போயிட்டு வா” என்றதும் மகிழ்ச்சியில் முகம் மின்ன கணவனைக் காண... “பட் ஒன் கண்டிஷன்” என்றதில் முகம் சுருங்க... “சொல்லுங்க?” என்றார் விட்டேற்றியாய்.

“நீ சென்னை மட்டும்தான் போகணும். மதுரைக்கு போகக்கூடாது. மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணு.”

‘ஹையோ’ என்ற மனதின் அலறல் முடிந்ததும் மறுபடியும் கணவன் சொன்னதை ரீவைண்ட் செய்ய, ‘மதுரைக்கு போகக்கூடாது.’ சடனாக மலர்ந்த முகத்தைச் சாந்தமாக்கி “சரிங்க. சத்தியமா மதுரைக்குப் போகமாட்டேன்.” சத்தியம் செய்தவருக்குள் ‘மதுரைக்குதான போகக்கூடாது நான் போற இடம்தான் வேறாச்சே. ரூட்டை மாத்து சிவா’ என மனம் தாளமிட்டது.

தாயின் முகத்தைப் பார்த்திருந்த கதிருக்கு புன்னகை அதிகமாக, கணவருக்குத் தெரியாமல் அவன் வயிற்றில் இடித்தபடி “என்னடா பல்லைக்காட்டுற?” என்றார்.

“ஐ நோ தாயே! ஐ நோ.” வாய்மூடி தாய்க்கு மட்டும் கேட்கும்படி மெதுவாய் சொன்னான்.

“அப்படியே கமுக்கமா இருந்துக்கோ. எதாவது உளறின...” கதிருக்கு புன்னகை இன்னும் அதிகமாக தாயின் முறைப்பில் டக்கென்று வாயை மூட கண்கள் சிரித்தது.

“என்ன குசுகுசுன்னு பேச்சி. ஒண்ணுமில்லப்பா” என்றவனை வாய்மூடச் சொல்லி “பர்சேஸ் பண்ணக் கூப்பிட்டேங்க மாட்டேன் சொல்றான்.”

“நானும் நம்பிட்டேன். திரும்பவும் சொல்றேன் சிவா. சென்னை தாண்டிப் போனேன்னு வச்சிக்கோ நான் பொல்லாதவனாயிருவேன்.”

“சே..சே.. நான் அப்படி செய்வேனாங்க. சொன்ன சொல் மாறமாட்டேன்ங்க” என்றார் நல்ல பிள்ளையாய்.

“நீ ஆபீஸ்கு ரெடியாகுடா. இவகிட்ட நின்னா நீ வேலையைப் பார்க்கமாட்ட.” மகனைப் பார்த்து கடிந்து சொல்ல... “இதோப்பா” என்று நகர்ந்தான்.

மாலையில் பழகிய நபரை ஓட்டுனராகப் போட்டு, தாயை சென்னைக்கு அனுப்ப ஆயிரத்தெட்டு ஜாக்கிரதை சொல்லி வழியனுப்பினான். இரவு வந்தவனுக்கு வீடே வெறிச்சோடிக்கிடக்க தாயின் நினைவு அதிகரித்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்து இரண்டாம் முறையாக தாயைப் பிரிந்திருக்கிறான்.

மகனின் நிலை உணர்ந்தோ, இல்லை தனக்கும் அதே நிலை என்பதாலோ மகனின் அறைக்கு வந்த குரு “என்னடா மகனே தூங்கலையா?” எனக்கேட்க.

“ஆமாப்பா. அம்மா இல்லாம பைத்தியம் பிடிச்ச மாதிரியிருக்கு. முதல் டைம் சின்னப்பையன்றதால எதுவும் தெரியல. இப்ப அம்மா இல்லாம என்னவோ மாதிரியிருக்கு.”

“சென்னைக்குப் போனாலும் உங்கம்மாவுக்கும் இதே நிலைதான். எதுக்குத்தான் இத்தனை பிடிவாதம் பிடித்துப் போகணுமோ போ” என சடைப்பாகச் சொல்ல...

“ப்ச்... அம்மாவைத் திட்டாதப்பா.”

“நான் எப்படா திட்டினேன். நீ ஒருத்தன் போதும்டா அவளுக்கு சங்கம் ஆரம்பிச்சி தலைவியாக்க.”

“என் அம்மாவை நான் தலைவியாக்குறேன். உனக்கென்னப்பா?”

“உன்னை... பேசாம படுத்துத்தூங்கு” என்று அவனருகில் அமர்ந்திருந்தவர் மகனின் உறக்கத்தைப் பார்த்து ‘இவ்வளவு நேரமாகியும் உன்னையே நினைக்கலை. என்னைய நினைக்கவா போறா இந்த சிவா. ஒரு போன் பண்ணிருக்காளா பாரு. வரட்டும் பார்த்துக்கறேன்’ என்று தன்னறைக்குச் சென்றார்.

நடுநிசியில் உடலெல்லாம் முறுக்கிக்கொண்டு வாயில் எதையெதையோ முனகிக்கொண்டு உழன்று கொண்டிருந்தான் கதிர்.

“உனக்கான நேரம் வந்திருச்சி! வா... சீக்கிரம் வா! உன் தாமதத்தால் உயிர்ப்பலி அதிகரிக்கும். உன் உயிரானவர்களைக் காக்க வா. என்னைத் தேடி வரும் உன் தாயைக் காக்கவாவது வா! விரைந்து வா! தூக்கம் முக்கியமில்லை! உன் கடமைகளை முடித்த பின் நிம்மதியாயிரு. வா! வா! வா!”

“அம்..அம்மா... அம்மா வேணும். அம்மாவுக்கு எதுவும் ஆகிரக்கூடாது. உன் இடத்துக்கு நான் வரணும் அவ்வளவுதான? வர்றேன். எங்கம்மாவை பாதுகாப்பா வச்சிரு. நான் வர்றேன்.”

“நீ இங்க வந்தா போதும். உன்னைச் சேர்ந்தவங்களுக்கு யாராலும் எதுவும் நடக்காது. விரைந்து வா!”

அழுத்தமாய் அசரீரியாய் கேட்ட அக்குரலில் எழுந்தமர்ந்தான் கதிர். முகம் முழுக்க வியர்த்திருக்க, வேகமாகத் தண்ணீர் குடித்தவன் தாய் அந்த ஊருக்குத்தான் சென்றிருப்பார் என நம்பியதால் மதுரைக்கு ஃப்ளைட்டில் செல்ல ஆன்லைனில் பார்க்க காலை 5.20க்கு இருந்தது. எதையும் யோசிக்காமல் உடனே பதிவு செய்தான்.

கனவின் தாக்கம் மட்டும் அதிகமாயிருக்க கைகளில் சிறு நடுக்கம். உள்ளம் பதற “அம்மா” என்றான். அந்நேரம் போன் அடிக்க எடுத்துப் பார்த்தவனுக்கு தாயின் எண் கண்ணில் பட்டதும் கண்கலங்க எடுத்து “அம்மா” என்றான் அழுகைக்குரலில்.

“ராஜா என்னாச்சிடா? ஏன் குரல் ஒருமாதிரியிருக்கு?”

“உனக்கு ஒண்ணுமில்லையேம்மா. எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும்மா.”

“கனவு கண்டியா?”

“ம்... நேத்து மாதிரியேம்மா. என்னால தூங்க முடியல.”

“சரி எழுந்து சாமி ரூம் போய் விபூதி பூசிட்டு வந்து படு. எனக்கு எதுவுமில்ல சரியா. கார்லதான் போயிட்டிருக்கேன்.”

அதன்பின் ஒருவழியாக சமாதானமாகி தாயிடம் பேசி முடித்ததும் அப்படியே விமானத்திற்கு தயாராகி தகப்பனுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி கிளம்பிவிட்டான்.

மதுரை விமானநிலையம்! தன் சொந்த மண் வந்த மகிழ்வோ! காற்றை உள்ளிழுத்து சுவாசித்தவனுக்குள் புதுவித உணர்வுகள்.

இதுவரை புன்னகை என்பதை மட்டுமே தன் கவசமாகக் கொண்டிருந்தவன், அடுத்து பல அவதாரங்களை எடுக்கவும் இந்த மண்தான் காரணமாகப் போகிறதோ!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top