• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
3


பத்து வருடங்களுக்கு முன்:

மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் சந்நிதானத்தில் பெரியவர்கள் ஆசியுடன் ஹரிப்ரியாவின் கழுத்தில் தாலி கட்டினான் கிரிதரன். குனிந்த தலை நிமிராமலிருந்த பெண்ணை கண்டது முதல் முகம் காணத் துடிக்கிறான். அவளோ நிலத்துக்குள் புதையல் தேடும் தோரணையில் நின்றிருந்தாள்.

திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை பெண்ணை மீனாட்சியம்மன் சந்நிதிக்கு அழைத்துச் சென்று அம்மனின் ஆசிவாங்கி, மேலமாசி வீதியில் இருக்கும் தங்களின் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டின் மாடியில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்ப மாலை ஆனது. நேரத்திற்கு வரமுடியாத விருந்தினர்கள் சிலர் வந்தபடி இருக்க, ஒருசில நெருங்கிய விருந்தினர்கள் வீட்டிலிருந்தார்கள்.

நேரம் ராக்கெட் வேகத்தில் செல்ல, வந்தவர்கள் அனைவரும் தங்களுள் ஏதோ முணகினார்களோ, இல்லை நமக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ என நினைத்தார் மீனா. ‘ஆமா. ஏன் இந்தப் பெண் காலையிலிருந்து தலை நிமிரவேயில்லை’ என்றொருபுறம் மனம் கேள்வி கேட்டது. ஏற்கனவே ஆயிரம் கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்த போதும், புதிது புதிதாக கேள்விகள் எழுந்தவண்ணமே இருந்தன. பதிலைத்தான் காணவில்லை. சின்ன பெருமூச்சோடு இரவு வேலையைப் பார்க்க கிளம்ப,

“என்ன அத்தை? பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா இருக்கும் போலிருக்கே. சின்னப் பிள்ளையா தெரியுது. அத்தானுக்கு முப்பத்தி நாலு வயசாகுது. இந்தப் பொண்ணுக்கு அதுல பாதிகூட இருக்காது போலிருக்கே. பச்சப்புள்ள அத்தை யாராவது போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிரப் போறாங்க” என தன் மனதிலிருந்ததை நிஜ வருத்தத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டிலிருக்கும் மஞ்சு.

மஞ்சு போலீஸ் என்றதுமே அதிர்ந்தவர், “இல்ல. இருக்காது மஞ்சு அவங்க சித்தி கூட இருபது வயசுன்னு சொன்னாங்களே. பொண்ணுக்கும் பையனுக்கும் பதினான்கு வயசு வித்தியாசம் இருக்கே பொண்ணுக்கு சம்மதமா பரவாயில்லையான்னு கேட்டேன். அவளுக்கு எல்லாமே நாங்க தான். நீங்க எது செஞ்சாலும் என் நல்லதுக்குத்தான் சித்தி இருக்கும். விசாரிக்காமலா மாப்பிள்ளை பார்ப்பீங்கன்னு பொண்ணு சொல்லிட்டதா சொன்னாங்களே!” பெரியதாக ஆரம்பித்த குரல் சின்னதாக தனக்கும் சேர்த்தே பதிலளித்துக் கொண்டார்.

“என்னவோ போங்க அத்தை. எனக்கென்னவோ உங்களை அவங்க ஏமாத்தியிருக்காங்களோன்னு தோணுது. சரி விடுங்க. இனி என்ன பேசி என்னாகப் போகுது. நான் வீடுவரை போயிட்டு வர்றேன்” என்று சென்றாள்.

‘ஏமாத்திட்டாங்களா? நாங்க ஏமாந்துட்டோமா?’ மனம் குழம்பினார் மீனா. அவரின் குழப்பங்களை ஹரிப்ரியாவின் சித்தியிடம் கேட்க தேடுகையில், அவர் கண்ணுக்கு தெரியாமல் கண்ணாமூச்சி ஆடினாள் அவளின் சித்தி.

இரவு ஏழு மணிக்கெல்லாம் மீனாவிடம் வந்த சரிதா, “எங்களுக்கு வேலையிருக்கு. நாங்க கிளம்புறோம்மா. பொண்ணு இனிமேல் உங்க பொறுப்பு. அவளை உங்க பொண்ணா பார்த்துப்பீங்கன்னு நம்புறேன். நீங்க ரொம்ப நல்லவங்கன்னு விசாரிச்சப்ப தெரிஞ்சது. அதான் என்னோட பொறுப்பு சுமையை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். நாங்க வர்றோம். எதுவாயிருந்தாலும் பேசி முடிவெடுங்க. என் அக்கா பொண்ணு தங்கமானவ. நீங்க என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசத் தெரியாத வாயில்லா பூச்சி. கொஞ்சம் குறும்பு இருக்கும். அவளை நல்லா பார்த்துக்கோங்க” எனும்போது கண்கள் கலங்கியது குரல் கமறியது.

பின் நிதானமாகி, “ஒரு சில விஷயம் உங்ககிட்ட மறைச்சிருக்கேன். அதுக்கு அவள் பொறுப்பு கிடையாது. நாங்க வர்றோம்” என்று வேகமாக கணவனையும் தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.

‘என்ன நடக்குது இங்க?’ என்பதுபோல் நின்றிருந்தவருக்கு தன் பொறுப்பை சுமையாக எண்ணி தங்கள் மேல் திணித்திருப்பது புரிந்தது. அவளின் நிலையில் நல்லவர்களா என விசாரித்து கொடுத்திருப்பதும் புரிந்தது. ‘அப்படியானால், தான் சந்தேகப்பட்டது போல் வயசுதான் பிரச்சனையா? இல்லை வேறெதுவோ இருக்கிறது. அது என்ன?’ என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

அது தெரியும் பொழுது பெரிய எரிமலையே வெடிக்கப் போவதை தாயும் மகனும் அறிவார்களா!

சுற்றிலும் ஆட்கள் இருந்ததால் மணப்பெண் சித்தியிடம் மீனாவால் எதையும் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஏனெனில், கேட்டு வழக்காடியோ, சண்டையிட்டோ பழக்கமில்லாதவர் மீனா. ‘இரவு ஏற்பாடு செய்யலாமா? வேண்டாமா?’ என்ற எண்ணம் தலைதூக்க, இருந்த ஒருசில உறவுகளும் அங்கேயே இருந்ததால் முதலிரவு ஏற்பாடு தவிர்க்க முடியாத ஒன்றானது.

கிரியோ ஹரிப்ரியாவின் முக தரிசனத்திற்காக காத்திருக்க, அவளோ தரையிலிருக்கும் புதையலை பூதம் தூக்கிச் சென்றுவிடுமோ என நினைத்தாளோ, சற்றும் நிமிர்ந்தாளில்லை. தரையை கண்கொண்டு தலை கவிழலாம். ஆனால், இவளோ தரைக்குள்ளே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளென்ன செய்வாள் பாவம் அவள் சித்தி சொல்லிக் கொடுத்ததை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறாள்.

இரவு உணவு முடித்து முதலிரவு அறைக்குச் செல்லும் முன், தாய் தன்னிடம் ஏதோ சொல்ல வந்து முகம் பார்ப்பதும், குனிவதுமாக நின்றிருந்தவரின் தோளணைத்து, “என்ன கவலைமா உங்களுக்கு? எதுவாயிருந்தாலும் அவசியமில்லை. உங்க பையன் எப்பவும் உங்க பையனாகத்தான் இருப்பான்” என்றான்.

தான் சொல்ல வந்ததை மகன் தவறாக புரிந்து கொண்டான் என நினைத்தவர், “நீ எப்பவும் மாறமாட்டேன்னு எனக்குத் தெரியும் ராசா. ஆனா, பொ..ண்..ணு பா..ர்..த்தா” என இழுத்தவர் என்ன நினைத்தாரோ, “அவளை நல்லபடியா பார்த்துக்கோ” என முடித்தார்.

“என்னம்மா சின்னப் பொண்ணாயிருக்காளேனு பார்க்கறீங்களா? இருபது வயசுமா. இருந்தாலும் அவள் இஷ்டமில்லாமல் எதுவும் நடக்காது. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. எதுவாயிருந்தாலும் நான் பார்த்துக்கறேன்மா” என தாயை சமாதானப்படுத்தி அறைக்குள் சென்றான்.

பொம்மைக்கு புடவையைச் சுற்றியது போல் பகல் முழுவதும் அலைந்த அசதியில் முகத்தை மூடியபடி படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஹரிப்ரியா.

குழந்தைபோல் தூங்குபவளை இப்பவாவது ஆசை தீர ரசிக்கலாம் என்று அவளின் முன்புறம் சென்று, துணி அகற்றி முகம் நிமிர்த்திப் பார்த்தவன் ஒட்டு மொத்தமாக அதிர்ந்தான்.

உண்மையிலேயே அங்கே ஒரு குழந்தைதான் உறங்கிக் கொண்டிருந்தது. பிஞ்சி முகம். ‘இவளுக்கா இருபது வயது?’ நம்ப முடியவில்லை அவனால். ‘எங்கேயோ தப்பு நடந்திருக்கு’ என்றெண்ணியவனுக்கு தாயின் தயக்க முகம் வந்து போக, “இதற்குத்தான் தயங்குனீங்களாம்மா. இதுக்கு நீங்கதான் காரணம்னு எப்படி சொல்வேன்னு நினைச்சீங்க. நீங்க அப்படி இல்லன்னு எனக்குத் தெரியாதா.” வீட்டிலுள்ள உறவுகளெல்லாம் கிளம்பியதும் பேசிக் கொள்ளலாம் என்றெண்ணியபடி அவளிடமிருந்து எழுந்தவன் அந்த அறைக்குள்ளேயே நடை பயின்றான்.

கோவம் கோவமாக வந்தது கிரிக்கு. யார் மேல் கோவப்படுவான். தனக்கு இப்படியாப்பட்ட வாழ்க்கையைக் கொடுத்த கடவுளை எண்ணி கோவப்பட்டான். கிரியின் இருபத்தேழாவது வயதில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வேளையில், தந்தையின் மரணம் நிகழ கல்யாணமும் நின்றது. அத்துடன் கல்யாணம் பற்றிய கனவும் நின்றது. இரண்டு வருடங்கள் காத்திருந்த மீனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் திரும்பவும் ஜாதகத்தைக் கையிலெடுக்க, நேரம் காலம் சரியில்லை கல்யாண கட்டம் வர ஐந்து வருடங்கள் ஆகுமென்று சொன்னார்கள்.

இருந்தாலும் பெண்பார்க்க ஆரம்பித்தார் மீனா. பெண்ணோ அமைவேனா என்று ஐந்து வருடங்கள் முடியும் தருவாயில் சென்ற மாதம்தான் விளாங்குடியைச் சேர்ந்த ஹரிப்ரியாவின் சம்பந்தம் வந்தது.

பெண் பார்க்கச் சென்றபோது தன் தோழியின் திருமணத்திற்கு அருப்புக்கோட்டை சென்றிருக்கிறாள் என்று போட்டோ ஒன்றைக் கொடுத்தார்கள்.

ஐந்தேகால் அடி உயரம் இருப்பாள். மாநிறத்தைத் தாண்டிய நிறம். கண் விழிகளில் சின்ன வித்தியாசமிருந்தது. அது அவனுக்கும் பிடித்திருந்தது. சேலை கட்டி பார்க்க சிறுபெண்ணாக இருந்தாலும், முகத்தில் ஒரு முதிர்ச்சி இருந்தது அதில். அதனாலேயே சம்மதம் சொல்லிவிட்டான். அடுத்த இரண்டு வாரத்திற்குள் பையனுக்கு குரு திசை மாறுவதால் அதற்குள் திருமணத்தை முடித்துவிட எண்ணி முடித்தும் விட்டார்கள்.

ஹரிப்ரியா போட்டோவில் இருப்பதற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். பெண் உடலளவில் வளர்ந்திருந்தாளே தவிர வயசுப் பெண்ணுக்குரிய எந்த தகுதியும் அவளிடத்தில் இல்லை. குழந்தை! ஆம். குழந்தையே தான்! எப்படியும் பதினான்கு பதினைந்துதான் இருக்குமென்று அவன் மனம் கணக்கிட்டது. ‘எப்படி மனசு வந்தது இவளின் சித்திக்கு?’ அவர்களை எல்லாம் நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டுமென்று ஆத்திரம் வந்தது.

தாயில்லாமல் தகப்பனிருந்தும் இல்லாமல் சித்தியின் பாதுகாப்பில் இருந்தவள். இவளின் சித்தியும் தான் என்ன செய்வாள். கொத்தனார் வேலை செய்து பிழைப்பை ஓட்டும் மனிதன், தன் குடும்பத்தைப் பார்ப்பானா அதிகப்படியாக ஒரு.. அதுவும் பெண்பிள்ளையை பார்ப்பானா? அவளின் சித்தப்பன்.

“எதுவோ ஒன்று. தற்பொழுது இவள் என் பொறுப்பு. தற்பொழுதென்று இல்லை எப்பொழுதும் என் பொறுப்பு. நான் எப்படியாவது பார்த்துக் கொள்வேனென்று தானே, அவளின் சித்தி என்னிடம் ஒப்படைத்தது. என்னுடைய பொறுப்பை என்றும் தட்டிக்கழிக்க மாட்டேன்.” பலவாறு பலவகையிலும் முடிவெடுத்து தரையில் படுத்து தலைக்கு கைகொடுத்து உறங்கினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
காலையில் ஐந்து மணிக்கே எழுந்த ஹரிப்ரியா கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்து பயத்தில் மிரண்டு, “சித்தீ.. சித்தீ” என்றழைத்து அழ ஆரம்பித்தாள். இதுவரை சித்தியின் பிள்ளைகளோடு தரையிலேயே படுத்திருந்தவள் திடீரென்று கட்டிலில் இருப்பது எப்படி என்று கூட உணரவில்லை. எழுந்ததும் பயத்தில் கத்திவிட்டாள்.

அவளின் அழுகுரல் கேட்டு சட்டென்று எழுந்து அவளருகில் வந்த புதியவனைக் கண்டு இன்னும் மிரள, “என்னம்மா? என்னாச்சி? ஏன் அழற?” அவனின் வரிசையான கேள்விகளில்..

“சி..சி..சித்திட்ட போகணும். தம்பி, தங்கச்சியையும், சித்தியையும் பார்க்கணும்” என அழ ஆரம்பித்தாள்.

வாயில் விரல் வைத்து, “ஸ்ஸ்ஸ் பாப்பா சைலன்ட்டா இரு. இப்ப ஏன் எழுந்ததும் அழற? நீ குட் கேர்ள்னு உங்க சித்தி சொன்னாங்க. அப்படி இல்லையா?” என்றான்.

“இல்லையே. நான் குட் கேர்ள் தான். சித்தி சொன்னதுதான் கரெக்ட். நான் உங்களை பார்த்ததே இல்லையே. ஆமா, நீங்க யாரு? சித்தி உங்களை என் தம்பி. உனக்கு மாமான்னு சொன்னாங்க? நீங்க என் மாமாவா? இதுவரை நீங்க வீட்டுக்கு வந்ததில்லையே?” குழந்தைகளின் கேள்விகள் சில நேரங்களில் எதுவுமே புரியாது. சில நேரங்களில் அவர்களுக்கு பதிலளிக்க முடியாத கேள்விகள் நம்மை நோக்கி வரும்.

அவனும் கவனித்திருந்தான் தானே, முந்தின தினம் காலையிலிருந்து தலை நிமிரவில்லை. அது அவள் சித்தியின் கட்டளை என்பது இப்போது புரிந்தது. ஒருபுறம் அவனை நினைத்தே அவனுக்கு சிரிப்பு வந்தது. இளம் வயதில் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு இல்லையென்றாலும் பத்து வயதிலாவது குழந்தை இருந்திருக்கும் என்றே தோன்றியது கிரிக்கு. இவள் எனக்கு மனைவி காலக்கொடுமையை என்னவென்று சொல்வது.

“உனக்கு எத்தனை வயசு பாப்பா? என்ன படிக்கிற?” என்று அவளிடம் தன்மையாகக் கேட்டான்.

“எனக்கு பதினைஞ்சி வயசு. பத்தாவது எக்ஸாம் எழுதியிருக்கேன்.”

“ஓ.. பத்தாவது முடிச்சிட்டியா?” என ஆச்சர்யப்பட்டான். ‘அந்த சூழ்நிலையிலும் அவளின் சித்தி படிக்க வைத்திருக்கிறாள்’ என்ற எண்ணம் கொஞ்சம் நிம்மதியளித்தது தனது கஷ்டத்திலும் படிக்க வைத்திருப்பது பெரிதல்லவா! “சரிமா கொஞ்சம் உட்காரு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”

“எனக்கு இந்த சேலை பிடிக்கல. நான் ட்ரஸ் மாத்திக்கவா? ட்ரஸ் எங்கயிருக்கு? இங்கதான பார்த்தேன்” என்றபடி அறையைச் சுற்றிலும் பார்த்து கண்டுபிடித்து திறக்க, நான்கைந்து சேலைகளுடன், இரண்டு மூன்று சுடிதாரும் இருந்தது. தன் அக்கா பெண்ணிற்காக தன்னால் முடிந்த சீதனமாய் ஹரிப்ரியாவிற்கு சித்தி கொடுத்தது.

“இந்த புடவையெல்லாம் நான் கட்டணுமா? நான் சின்னப் பொண்ணுதான புடவையெல்லாம் வேண்டாம் தான?” என்றாள் கேள்வியாய். அவன் தனக்கு சாதகமான பதிலைச் சொல்ல வேண்டுமென்று.

“இல்லமா இனிமேல் நீ சுடிதார் போட்டுக்கோ. வேற எந்த ட்ரஸ் பிடிக்குதோ பயப்படாம என்கிட்ட கேளு. உனக்கு நான் வாங்கித் தர்றேன் என்ன.”

“அப்ப நான் சுடிதார் போட்டுக்குறேன்” என்று சுடிதாரை எடுத்து எங்கே குளியலறை இருக்கென்று திணற...

“அங்கே இருக்கு பாரு” என்று தங்களறைக்குள் உள்ள குளியலறையைக் காண்பித்தான்.

“ஐயோ! ச்சீய்.. வீட்டுக்குள்ளே யாராவது பாத்ரூம் வைப்பாங்களா?”

எதுவுமே தெரியாமல் வளர்ந்த குழந்தையை ரசித்தவன், “அதெல்லாம் வைப்பாங்க. இங்க இருக்கிறதால நீயும் பழகிக்கோ. இப்ப போயி ட்ரஸ் மாத்திட்டு வா. அங்கேயே...” என்றவன், “பாப்பா! ஒரு நிமிஷம் என்னோட வா” என்று குளியலறை அழைத்துச் சென்று ஹீட்டர் போட்டு தண்ணீர் எப்படி பயன்படுத்துவது என்றும், பச்சைத் தண்ணீர் குழாய் காண்பித்து அதற்கும் விளக்கமளித்து, ப்ரஸ் புதுசு ஒன்று எடுத்துக் கொடுத்து குழந்தைக்குச் சொல்வது போல் அனைத்தையும் சொல்லி, “எல்லாத்தையும் உள்ளேயே முடிச்சிட்டு வந்திரணும்” என்றான்.

“இங்கேயேவா!” என விழிவிரித்துக் கேட்க...

“இங்கேதான் பாப்பா” என்றவனுக்கு போட்டோவில் அவள் கண்களில் தெரிந்த மாற்றம் இப்பொழுது நன்றாகவே தெரிந்தது. கண் விழிகள் ப்ரௌன் நிறத்தில் இருந்தது. “சரி நான் வெய்ட் பண்றேன். சீக்கிரம் வா” என்று கட்டிலில் அமர்ந்தான்.

“தேங்க் யூ மாமா” என்றாள் உற்சாகமாய்.

அவளின் “மாமா” சித்தியின் தம்பி என்பதால் என உணர்ந்தவன் மெல்ல சிரித்து, “மாமாவுக்கு வேலையிருக்கு. உன்கிட்ட பேசிட்டு கிளம்பணும். சீக்கிரம் வந்திருறியா?”

“ம்... பத்தே நிமிஷம் மாமா. இதோ வந்திருறேன் என கதவடைத்து, சீக்கிரத்திலேயே வந்தவள், “சுடுதண்ணீரில் குளிச்சது சூப்பராயிருக்கு மாமா. டெய்லி சுடுதண்ணியிலேயே குளிக்கட்டுமா?” என ஏக்கமாக கேட்டாள்.

“இதை ஏன்மா கேட்டிட்டிருக்க. இது உன் வீடு. நீ குளிக்கலாம். ஆடலாம்.. ஓடலாம்.. உன்னிஷ்டம். யாரும் உன்னை தடுக்கமாட்டாங்க” என்றான் மனதார.

“இல்ல மாமா. எது செஞ்சாலும் உங்ககிட்ட, பாட்டிகிட்ட கேட்டுக்கச் சொன்னாங்க சித்தி.”

“பாட்டியா! யாரு பாட்டி?” என்றான் புரியாதவனாய்.

“உங்க அம்மாதான். இது தெரியாதா? மண்டு மண்டு. எங்கம்மாவுக்கு நீங்க தம்பின்னா, எனக்கு மாமா. அப்ப எங்கம்மா உங்க அம்மாவுக்கு பொண்ணுதான. இப்ப நான் பாட்டின்னு சொன்னது சரிதான?” என்று குழந்தைகளுக்கே உரிய முறையில் உரிமைப்பாடம் எடுத்தாள்.

ஒரு நிமிடம் அசந்தே போனான் கிரி. குழந்தைகளின் பேச்சில்கூட எவ்வளவு யோசனைகள், தெளிவுகள். பதினைந்து வயதுப்பெண் ரொம்பவே குழந்தையில்லை தான். ஆனால், ஹரிப்ரியா வளர்ந்த சூழ்நிலையில் அவள் இன்னும் பத்து வயதுக் குழந்தையே. புத்திசாலித்தனம் அவளின் பிறப்பிலிருந்திருக்கும் என்றெண்ணி, “சரிமா உட்காரு” என தன்னருகில் அழைத்தான்.

“அச்சோ! ஜென்ட்ஸ் பக்கத்துல உட்காரக்கூடாது. தொட்டுப்பேச அனுமதிக்கக் கூடாதுன்னு சித்தி சொல்லியிருக்காங்க” என்றவள், பின் எதையோ நினைத்து, “ஆனா மாமா, உங்ககிட்ட மட்டும் இதெல்லாம் பண்ணலாம் சொன்னாங்களே. அது ஏன்?” என யோசனைக்குப் போக...

அந்தக் குழந்தையை ரசனையுடன் பார்த்து, “அது நீ பெருசானதும் உனக்கு கல்யாணம் முடிஞ்சா, உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போற புருஷன் மட்டும் உன்னைத் தொடலாம்ன்றதுக்காக அதைச் சொல்லியிருப்பாங்க.”

“அப்ப உங்களை மட்டும் தொட்டுப் பேசலாம்னு சித்தி சொன்னாங்க, அப்படின்னா நீங்க என் புருஷனா? கழுத்துல தாலி கட்டினா புருஷன்னு சொல்வாங்கதான?”

சட்டென்று இதற்கு என்ன பதில் சொல்வதென்று தடுமாறியவன், “இப்ப நீ சின்னப் பொண்ணுதான பாப்பா?” அவள் சம்மதமாக தலையாட்டவும்... “அப்ப இது பொம்மைக் கல்யாணம். இது உண்மை கிடையாது. சட்டப்படி செல்லவும் செய்யாது சரியா. நீ நல்லா படிச்சி பெருசானதும் மாமாவே உனக்கு நல்ல அழகான பையனா, இந்த குட்டி தேவதைக்கு ஏற்றவனா பார்க்கிறேன். ஓகேவா.”

என்னவென்று புரியாவிட்டாலும் சிறு வெட்கத்துடன் “சரிங்க மாமா” என்றாள்.

ஆறு மணிக்கெல்லாம் மற்றவர்கள் எழுந்திருக்காததால் நேரே சமையலறையில் இருந்த மீனாவிடம் சென்றவள், “பாட்டி நான் எதாவது ஹெல்ப் செய்யவா?” என்று நிற்க..

“என்னது பாட்டியா!!” என அதிர்ந்த தாயைப் பார்த்து கடகடவென கிரி சிரிக்கையிலேயே, தாய் இன்னும் ஹரிப்ரியாவின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லையென்று தோன்றியது.

“டேய்! என்னடா நடக்குது இங்க? நானே ஆயிரத்தெட்டு குழப்பத்துல சிக்கி சீரழிஞ்சி நிற்கிறேன். நீங்க புருஷன், பொண்...”

“அம்மா..” என அதட்டியவன், தாயின் குழப்ப முகம் பார்த்து குரலைத் தழைத்து, “இன்னொரு டைம் இந்த உறவுமுறை சொல்லாதீங்கம்மா. அதுவும் ப்ரியா முன்னால சொல்லவே சொல்லாதீங்க” எனும்போது தான் அவளை நன்றாகப் பார்த்தார்.

அவன் சொன்னதை முழுமையாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. இருப்பினும், “என்னடா உளர்ற?” என்றவரை கைபிடித்து தனியறைக்கு அழைத்துச் செல்லும் பொழுதே, “பாப்பா அடுப்புல என்ன இருக்குன்னு பார்த்து செக் பண்ணு. இப்ப வர்றோம்” என்று உள்ளே சென்று முழுவிவரம் சொல்லி, “பச்சைப் புள்ளம்மா அது. எப்படி மனசு வந்தது அவங்களுக்கு. நம்மன்றதால எந்த பிரச்சனையும் இல்ல. இதே வேற யார்கிட்டேயாவது மாட்டியிருந்தா அவளோட கதி என்னாகியிருக்கும்னு பாருங்க. அவங்க ஏமாற்றியதைவிட இந்த விஷயம் ரொம்ப பாதிச்சிருச்சிம்மா” என்று மனதிலுள்ளதை வெளியில் கொட்டினான்.

“என்ன செய்யலாம்னு நினைக்குற கிரி?”

“அவள் இங்கேயே நம்ம வீட்டுப்பொண்ணா இருக்கட்டும்மா. உங்க பேத்தியா நினைச்சிக்கோங்க. நல்லது கெட்டது ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கு. இருந்தாலும் நீங்க சொல்லிக்குடுத்து ஒரு பக்குவப்பட்ட பொண்ணா வளர்த்து விடுங்க. நான் அவளோட எதிர்காலத்துக்கு ஏற்பாடு பண்றேன்.”

“இது சரிவருமா ராசா?” என கவலையாக கேட்ட தாயை அணைத்து, “ம்.. வரும்மா. வரணும்! வரவைக்கணும்! முதல்ல அந்தத் தாலியை எதாவது ஒரு சாமி உண்டியல்ல போட்டுட்டு வரணும். அது இருந்தா ஒரு உறுத்தல் இருந்துட்டேயிருக்கும்மா. அவளை படிக்கவச்சி பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக் குடுக்கலாம்மா” என்றவன், “அம்மா” என தயங்கியபடி அழைத்தான்.

“என்ன ராசா? என்ன தயக்கம் என்கிட்ட?”

“நாம இந்த ஊரைவிட்டு வேற ஊருக்குப் போயிரலாமா? அங்க இவள் உங்க பேத்தியா மட்டும்தான் இருக்கணும்” என்றவனை வருத்தத்தோடு பார்த்தார். இந்த வீடு அப்பாவோடது. யாருக்காகவும் எப்பவும் வெளிய போகமாட்டேன் என்று சொன்னவன், இன்று ஒரு சிறு பெண்ணுக்காக ஊரையே காலி செய்வோம் என்று சொன்னது, அவளின் பொறுப்பை தன் மகன் முழுமையாக செய்ய வேண்டுமென்று நினைக்கிறான் என்பதை புரிந்தது.

“சரிப்பா போகலாம்” என்று தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தார்.

“ரொம்ப நன்றிம்மா. நீங்க என்னை புரிஞ்சிக்குவீங்கன்னு தெரியும். அதான் தைரியமா கேட்டேன்.”

“அப்ப உன் வாழ்க்கை?” என்ற தாயின் வேதனையில்...

“ஹ்ம்.. கொஞ்சம் கஷ்டம்தான். என்னைப் புரிஞ்ச பொண்ணா கிடைச்சா நல்லதுதான். பார்க்கலாம் கடவுளோட கணக்கு என்னன்னு.”

ஹரிப்ரியாவின் குழந்தைத்தனங்களை விருந்தினர் போகும் வரை அவர்களுக்குத் தெரியாமல் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகியது தாய்க்கும் மகனுக்கும். இரண்டே நாட்களில் ஒரு குழந்தையின் புது உற(வர)வால் வீட்டிற்கே கலகலப்பான தோற்றம் வந்தது. ஏகப்பட்ட கேள்விகள், அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம். தன்மையான பதில் சொன்ன பாட்டிக்கு முத்த பரிசுகள் தாராளமாக கிடைத்தது.

இருவருடைய கொஞ்சலையும் ரசனையுடன் பார்த்திருப்பது கிரியுடைய வேலையானது. மீனா எதாவது திட்டினால், “மாமா இந்த மீனா சரியில்லை பேட் கேர்ள்” என்று கிரியிடமும், அவன் எதாவது செய்தால், “பாட்டி நீங்க நல்ல பையனா பெத்திருக்கலாம்ல” என்று மீனாவிடமும் புகாரளிப்பாள்.

இதுவரை சித்தியிடம் காட்ட முடியாத உரிமையை இவர்கள்தான் தன் உறவு என்பதாய் நினைத்து அவள் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இனித்தது அவர்களுக்கு. முதலில் கடமையாய் நினைத்தவர்களை, இப்பொழுது உரிமையாய் உணரவைத்தாள் ஹரிப்ரியா.

மொத்தத்தில் மூவருக்குள்ளும் நல்ல பாசப்பிணைப்புடன் வீடே சுபிட்சமாக இருந்தது. மறுநாள் அவள் சொன்ன வார்த்தையில் முழுவதும் அதிர்ந்தனர் தாயும் மகனும்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top