- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
3
பத்து வருடங்களுக்கு முன்:
மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் சந்நிதானத்தில் பெரியவர்கள் ஆசியுடன் ஹரிப்ரியாவின் கழுத்தில் தாலி கட்டினான் கிரிதரன். குனிந்த தலை நிமிராமலிருந்த பெண்ணை கண்டது முதல் முகம் காணத் துடிக்கிறான். அவளோ நிலத்துக்குள் புதையல் தேடும் தோரணையில் நின்றிருந்தாள்.
திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை பெண்ணை மீனாட்சியம்மன் சந்நிதிக்கு அழைத்துச் சென்று அம்மனின் ஆசிவாங்கி, மேலமாசி வீதியில் இருக்கும் தங்களின் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டின் மாடியில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்ப மாலை ஆனது. நேரத்திற்கு வரமுடியாத விருந்தினர்கள் சிலர் வந்தபடி இருக்க, ஒருசில நெருங்கிய விருந்தினர்கள் வீட்டிலிருந்தார்கள்.
நேரம் ராக்கெட் வேகத்தில் செல்ல, வந்தவர்கள் அனைவரும் தங்களுள் ஏதோ முணகினார்களோ, இல்லை நமக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ என நினைத்தார் மீனா. ‘ஆமா. ஏன் இந்தப் பெண் காலையிலிருந்து தலை நிமிரவேயில்லை’ என்றொருபுறம் மனம் கேள்வி கேட்டது. ஏற்கனவே ஆயிரம் கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்த போதும், புதிது புதிதாக கேள்விகள் எழுந்தவண்ணமே இருந்தன. பதிலைத்தான் காணவில்லை. சின்ன பெருமூச்சோடு இரவு வேலையைப் பார்க்க கிளம்ப,
“என்ன அத்தை? பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா இருக்கும் போலிருக்கே. சின்னப் பிள்ளையா தெரியுது. அத்தானுக்கு முப்பத்தி நாலு வயசாகுது. இந்தப் பொண்ணுக்கு அதுல பாதிகூட இருக்காது போலிருக்கே. பச்சப்புள்ள அத்தை யாராவது போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிரப் போறாங்க” என தன் மனதிலிருந்ததை நிஜ வருத்தத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டிலிருக்கும் மஞ்சு.
மஞ்சு போலீஸ் என்றதுமே அதிர்ந்தவர், “இல்ல. இருக்காது மஞ்சு அவங்க சித்தி கூட இருபது வயசுன்னு சொன்னாங்களே. பொண்ணுக்கும் பையனுக்கும் பதினான்கு வயசு வித்தியாசம் இருக்கே பொண்ணுக்கு சம்மதமா பரவாயில்லையான்னு கேட்டேன். அவளுக்கு எல்லாமே நாங்க தான். நீங்க எது செஞ்சாலும் என் நல்லதுக்குத்தான் சித்தி இருக்கும். விசாரிக்காமலா மாப்பிள்ளை பார்ப்பீங்கன்னு பொண்ணு சொல்லிட்டதா சொன்னாங்களே!” பெரியதாக ஆரம்பித்த குரல் சின்னதாக தனக்கும் சேர்த்தே பதிலளித்துக் கொண்டார்.
“என்னவோ போங்க அத்தை. எனக்கென்னவோ உங்களை அவங்க ஏமாத்தியிருக்காங்களோன்னு தோணுது. சரி விடுங்க. இனி என்ன பேசி என்னாகப் போகுது. நான் வீடுவரை போயிட்டு வர்றேன்” என்று சென்றாள்.
‘ஏமாத்திட்டாங்களா? நாங்க ஏமாந்துட்டோமா?’ மனம் குழம்பினார் மீனா. அவரின் குழப்பங்களை ஹரிப்ரியாவின் சித்தியிடம் கேட்க தேடுகையில், அவர் கண்ணுக்கு தெரியாமல் கண்ணாமூச்சி ஆடினாள் அவளின் சித்தி.
இரவு ஏழு மணிக்கெல்லாம் மீனாவிடம் வந்த சரிதா, “எங்களுக்கு வேலையிருக்கு. நாங்க கிளம்புறோம்மா. பொண்ணு இனிமேல் உங்க பொறுப்பு. அவளை உங்க பொண்ணா பார்த்துப்பீங்கன்னு நம்புறேன். நீங்க ரொம்ப நல்லவங்கன்னு விசாரிச்சப்ப தெரிஞ்சது. அதான் என்னோட பொறுப்பு சுமையை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன். நாங்க வர்றோம். எதுவாயிருந்தாலும் பேசி முடிவெடுங்க. என் அக்கா பொண்ணு தங்கமானவ. நீங்க என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசத் தெரியாத வாயில்லா பூச்சி. கொஞ்சம் குறும்பு இருக்கும். அவளை நல்லா பார்த்துக்கோங்க” எனும்போது கண்கள் கலங்கியது குரல் கமறியது.
பின் நிதானமாகி, “ஒரு சில விஷயம் உங்ககிட்ட மறைச்சிருக்கேன். அதுக்கு அவள் பொறுப்பு கிடையாது. நாங்க வர்றோம்” என்று வேகமாக கணவனையும் தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.
‘என்ன நடக்குது இங்க?’ என்பதுபோல் நின்றிருந்தவருக்கு தன் பொறுப்பை சுமையாக எண்ணி தங்கள் மேல் திணித்திருப்பது புரிந்தது. அவளின் நிலையில் நல்லவர்களா என விசாரித்து கொடுத்திருப்பதும் புரிந்தது. ‘அப்படியானால், தான் சந்தேகப்பட்டது போல் வயசுதான் பிரச்சனையா? இல்லை வேறெதுவோ இருக்கிறது. அது என்ன?’ என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.
அது தெரியும் பொழுது பெரிய எரிமலையே வெடிக்கப் போவதை தாயும் மகனும் அறிவார்களா!
சுற்றிலும் ஆட்கள் இருந்ததால் மணப்பெண் சித்தியிடம் மீனாவால் எதையும் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. ஏனெனில், கேட்டு வழக்காடியோ, சண்டையிட்டோ பழக்கமில்லாதவர் மீனா. ‘இரவு ஏற்பாடு செய்யலாமா? வேண்டாமா?’ என்ற எண்ணம் தலைதூக்க, இருந்த ஒருசில உறவுகளும் அங்கேயே இருந்ததால் முதலிரவு ஏற்பாடு தவிர்க்க முடியாத ஒன்றானது.
கிரியோ ஹரிப்ரியாவின் முக தரிசனத்திற்காக காத்திருக்க, அவளோ தரையிலிருக்கும் புதையலை பூதம் தூக்கிச் சென்றுவிடுமோ என நினைத்தாளோ, சற்றும் நிமிர்ந்தாளில்லை. தரையை கண்கொண்டு தலை கவிழலாம். ஆனால், இவளோ தரைக்குள்ளே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளென்ன செய்வாள் பாவம் அவள் சித்தி சொல்லிக் கொடுத்ததை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறாள்.
இரவு உணவு முடித்து முதலிரவு அறைக்குச் செல்லும் முன், தாய் தன்னிடம் ஏதோ சொல்ல வந்து முகம் பார்ப்பதும், குனிவதுமாக நின்றிருந்தவரின் தோளணைத்து, “என்ன கவலைமா உங்களுக்கு? எதுவாயிருந்தாலும் அவசியமில்லை. உங்க பையன் எப்பவும் உங்க பையனாகத்தான் இருப்பான்” என்றான்.
தான் சொல்ல வந்ததை மகன் தவறாக புரிந்து கொண்டான் என நினைத்தவர், “நீ எப்பவும் மாறமாட்டேன்னு எனக்குத் தெரியும் ராசா. ஆனா, பொ..ண்..ணு பா..ர்..த்தா” என இழுத்தவர் என்ன நினைத்தாரோ, “அவளை நல்லபடியா பார்த்துக்கோ” என முடித்தார்.
“என்னம்மா சின்னப் பொண்ணாயிருக்காளேனு பார்க்கறீங்களா? இருபது வயசுமா. இருந்தாலும் அவள் இஷ்டமில்லாமல் எதுவும் நடக்காது. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. எதுவாயிருந்தாலும் நான் பார்த்துக்கறேன்மா” என தாயை சமாதானப்படுத்தி அறைக்குள் சென்றான்.
பொம்மைக்கு புடவையைச் சுற்றியது போல் பகல் முழுவதும் அலைந்த அசதியில் முகத்தை மூடியபடி படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஹரிப்ரியா.
குழந்தைபோல் தூங்குபவளை இப்பவாவது ஆசை தீர ரசிக்கலாம் என்று அவளின் முன்புறம் சென்று, துணி அகற்றி முகம் நிமிர்த்திப் பார்த்தவன் ஒட்டு மொத்தமாக அதிர்ந்தான்.
உண்மையிலேயே அங்கே ஒரு குழந்தைதான் உறங்கிக் கொண்டிருந்தது. பிஞ்சி முகம். ‘இவளுக்கா இருபது வயது?’ நம்ப முடியவில்லை அவனால். ‘எங்கேயோ தப்பு நடந்திருக்கு’ என்றெண்ணியவனுக்கு தாயின் தயக்க முகம் வந்து போக, “இதற்குத்தான் தயங்குனீங்களாம்மா. இதுக்கு நீங்கதான் காரணம்னு எப்படி சொல்வேன்னு நினைச்சீங்க. நீங்க அப்படி இல்லன்னு எனக்குத் தெரியாதா.” வீட்டிலுள்ள உறவுகளெல்லாம் கிளம்பியதும் பேசிக் கொள்ளலாம் என்றெண்ணியபடி அவளிடமிருந்து எழுந்தவன் அந்த அறைக்குள்ளேயே நடை பயின்றான்.
கோவம் கோவமாக வந்தது கிரிக்கு. யார் மேல் கோவப்படுவான். தனக்கு இப்படியாப்பட்ட வாழ்க்கையைக் கொடுத்த கடவுளை எண்ணி கோவப்பட்டான். கிரியின் இருபத்தேழாவது வயதில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வேளையில், தந்தையின் மரணம் நிகழ கல்யாணமும் நின்றது. அத்துடன் கல்யாணம் பற்றிய கனவும் நின்றது. இரண்டு வருடங்கள் காத்திருந்த மீனாவால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் திரும்பவும் ஜாதகத்தைக் கையிலெடுக்க, நேரம் காலம் சரியில்லை கல்யாண கட்டம் வர ஐந்து வருடங்கள் ஆகுமென்று சொன்னார்கள்.
இருந்தாலும் பெண்பார்க்க ஆரம்பித்தார் மீனா. பெண்ணோ அமைவேனா என்று ஐந்து வருடங்கள் முடியும் தருவாயில் சென்ற மாதம்தான் விளாங்குடியைச் சேர்ந்த ஹரிப்ரியாவின் சம்பந்தம் வந்தது.
பெண் பார்க்கச் சென்றபோது தன் தோழியின் திருமணத்திற்கு அருப்புக்கோட்டை சென்றிருக்கிறாள் என்று போட்டோ ஒன்றைக் கொடுத்தார்கள்.
ஐந்தேகால் அடி உயரம் இருப்பாள். மாநிறத்தைத் தாண்டிய நிறம். கண் விழிகளில் சின்ன வித்தியாசமிருந்தது. அது அவனுக்கும் பிடித்திருந்தது. சேலை கட்டி பார்க்க சிறுபெண்ணாக இருந்தாலும், முகத்தில் ஒரு முதிர்ச்சி இருந்தது அதில். அதனாலேயே சம்மதம் சொல்லிவிட்டான். அடுத்த இரண்டு வாரத்திற்குள் பையனுக்கு குரு திசை மாறுவதால் அதற்குள் திருமணத்தை முடித்துவிட எண்ணி முடித்தும் விட்டார்கள்.
ஹரிப்ரியா போட்டோவில் இருப்பதற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். பெண் உடலளவில் வளர்ந்திருந்தாளே தவிர வயசுப் பெண்ணுக்குரிய எந்த தகுதியும் அவளிடத்தில் இல்லை. குழந்தை! ஆம். குழந்தையே தான்! எப்படியும் பதினான்கு பதினைந்துதான் இருக்குமென்று அவன் மனம் கணக்கிட்டது. ‘எப்படி மனசு வந்தது இவளின் சித்திக்கு?’ அவர்களை எல்லாம் நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டுமென்று ஆத்திரம் வந்தது.
தாயில்லாமல் தகப்பனிருந்தும் இல்லாமல் சித்தியின் பாதுகாப்பில் இருந்தவள். இவளின் சித்தியும் தான் என்ன செய்வாள். கொத்தனார் வேலை செய்து பிழைப்பை ஓட்டும் மனிதன், தன் குடும்பத்தைப் பார்ப்பானா அதிகப்படியாக ஒரு.. அதுவும் பெண்பிள்ளையை பார்ப்பானா? அவளின் சித்தப்பன்.
“எதுவோ ஒன்று. தற்பொழுது இவள் என் பொறுப்பு. தற்பொழுதென்று இல்லை எப்பொழுதும் என் பொறுப்பு. நான் எப்படியாவது பார்த்துக் கொள்வேனென்று தானே, அவளின் சித்தி என்னிடம் ஒப்படைத்தது. என்னுடைய பொறுப்பை என்றும் தட்டிக்கழிக்க மாட்டேன்.” பலவாறு பலவகையிலும் முடிவெடுத்து தரையில் படுத்து தலைக்கு கைகொடுத்து உறங்கினான்.