• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
3


ஆராரிராரோ நானிங்கு பாட

தாயே நீ கண்ணுறங்கு

என்னோட மடிசாய்ந்து!

வாழும் காலம் யாவுமே

தாயின் பாதம் சொர்க்கமே!

வேதம் நான்கும் சொன்னதே

அதை நான் அறிவேனே!

அம்மா எனும் மந்திரமே

அகிலம் யாவும் ஆண்டிட வேண்டும்!

செய்வதறியாமல் அழுதபடி அமர்ந்திருந்தவளைக் கலைக்கவென வந்தது, அந்தக் கைபேசி அழைப்புச் சத்தம். இருமுறை அடித்து ஓய்ந்து, மூன்றாம் முறை அடிக்கும் போதுதான், போன் வந்ததையே உணர்ந்து எடுத்துப் பார்த்தவள் முகம் பளிச்சென்றாகி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர ஆரம்பித்தது.

‘ஹஸ்பண்ட் காலிங்’ அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அடித்து நிற்கப்போகும் சமயம், எடுத்து காதில் வைத்தாள்.

“அவந்தி! என்னாச்சிமா? ஏன் போனை எடுக்கல? நீ எடுக்கலன்னதும் பயந்துட்டேன். எதாவது பிரச்சனையாமா?” என்று பதற்றத்துடன் கார்த்திக் கேள்விகளை அடுக்கினான்.

அவனின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், “ஹலோ” என்ற வார்த்தை தொண்டையை விட்டு வர மறுத்தது. என்ன செய்தும் அவளால் அழுகையினூடே பேச முடியாமல் போனது.

எதிரில் கார்த்திக் தன் கேள்விகளுக்கு பதிலில்லாமல் போகவும், “அழுறியாமா?” என்றான் கேள்வியாய். “அவந்தி எதாவது பேசுமா? நீ பேசினால் தான என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும். நம்ம கல்யாணத்துக்கு உங்க மாமா ஒத்துக்கலையா? ஒத்துக்கலன்னா நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்மா. இல்ல அந்த கௌஷிக் எதாவது வம்பு பண்றானா?” எதற்கும் பதிலில்லாமல் அழுகையே மிஞ்ச... கெஞ்சல் வேலைக்காகாது என நினைத்தவன், “அவந்திகா! இப்பப் பேசப்போறியா? இல்லன்னா போனை வச்சிரவா?” குரலை உயர்த்தி சத்தமாகக் கேட்டான்.

கார்த்திக் ‘வச்சிரவா?’ என்றதும் உணர்வு வந்தவள், தன்னைக் கோவித்துக் கொண்டானோ என்றெண்ணி வேகமாக, “வேண்டாங்க. நான்... நீங்க...” என உளறியவள், “ஓ...ஒரு நிமிஷம் வெய்ட் ப..ண்ணுங்க. நா...நான் வர்றேன்” என்று திக்கித்திணறி சொல்லி குளியலறை சென்று முகம் கழுவி வந்து, தண்ணீர் குடித்துத் தன்னை நிதானப்படுத்தினாள்.

அதன்பின் போனை எடுத்து “சாரிங்க. உங்க குரல் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்று சற்று முன் நடந்ததை கணவனாகப் போகிறவனிடம் விளக்க, கோபத்தில் கார்த்திக் பல்லைக் கடிப்பது அவளுக்கே கேட்டது.

பின் தணிந்து, “அதான் அவன்கிட்ட தைரியமா பேசினதான? அப்புறம் என்ன அழுகை?” என்றான் அதட்டலாக.

“எனக்கு பயமாயிருக்குதுங்க. அவனை நான் இப்படி பார்த்ததேயில்லை. அப்படி ஒரு வெறி அவன் முகத்துல. என்னதான் தைரியமா பேசினாலும், ஒரு வேளை அவன் சொன்னது நடந்தா, நா...நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நான் வாழ்ந்தாலும், செத்தாலும் உங்க மனைவியாகத்தான் இருக்கணும்” என மறுபடியும் அழுதாள்.

அவளின் வார்த்தைகளில் அதிர்ந்தவன், ‘ஒரே நாளில், அதுவும் ஐந்து நிமிடமே பேசிய ஒருவனிடம் ஒரு பெண்ணால் இவ்வளவு நம்பிக்கை வைக்க முடியுமா? முடியும் என்று நிரூபிக்கிறாளே ஒருத்தி. என்னைப்பற்றி என்ன தெரியும் இவளுக்கு. சாதாரண செக்யூரிட்டி வேலை பார்த்த ஒருத்தனை, எப்படி அவளால் உடனே நம்ப முடிந்தது? அவளுக்கேற்ற படிப்போ, வசதியோ கூட என்னிடமில்லை எனும் போது, என்னை எப்படி பிடித்தது அவளுக்கு? எனக்காக இந்த கார்த்திக்கிற்காக தன் உயிரையும் விடுவேன் என்பவளிடம், தான் உண்மையாக இல்லையே’ என்ற எண்ணம் தன்னையே அரித்தது.

ஒரு நிமிடம் ‘உண்மையைச் சொல்லிவிடலாமா’ என நினைத்தவன், ‘உண்மை தெரிந்த பின், அவளுக்கு என்னையும் என் தொழிலையும் பிடிக்கவில்லை என்றால்?’ கேள்விகள் மனதினுள் ஆட்டம் போட்டாலும், அவந்திகாவையும் அதிக நாட்கள் அந்த வீட்டில் விட்டு வைக்கக்கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.

அதுவரை கௌஷிக் பொறுத்திருப்பானா என்ன?

அவளின் அழுகை ஓயவில்லை என்றதும், “அவந்தி.. அவந்தி என்னமா அழுகை? என் ஒய்ஃப் ரொம்ப தைரியசாலின்னு நினைச்சிட்டிருக்கேன். இவ்வளவு கோழையாகவா இருக்கிறது. அதிலேயும், நீ ஒரு பத்திரிக்கை ஆஃபீஸ் சொந்தமா வச்சி நடத்துறவ. ஜர்னலிஸ்ட் வேற. நீயே இப்படிப் பயந்தா எப்படி? நான் இருக்கேன்ல எல்லாம் பார்த்துக்கறேன். என்னை நம்புற தான?” என கேட்டும் மறுமுனையில் அமைதி தொடர, “என்ன பதிலைக் காணோம்? கேள்வி கேட்டா பதில் சொல்லணும்னு தெரியாதா உனக்கு? ம்ம்... பதில் சொல்லு. என்னை நம்புற தான?” திரும்பவும் அதட்டல் போட்டான்.

“ஆமா. உங்களை நம்பாம வேற யாரை நம்புறது? உங்களை நம்பினதால தான என் லைஃபையே உங்களோட ஷேர் பண்ணிக்கப் போறேன். அதுக்காக ஓவரா அதட்டுவீங்களா?” என வீம்பாக வந்த பதிலில்...

மெல்ல புன்னகைத்தவன், “இந்த நம்பிக்கையை எப்பவும் கைவிட்டுவிடாதே. எந்த ஒரு தருணத்துலயும், யாருக்காகவும், எதுக்காகவும் நான் உன்னை விட்டுவிட மாட்டேன். இது எங்கம்மா மேல சத்தியம்” என்றான்.

“அச்சோ! என்னங்க நீங்க? நான் தான் உங்களை முழுசா நம்புறேனே அப்புறம் ஏன் சத்தியம்லாம். அதுவும் அத்தை மேல...”

“சரி இனி பண்ணல? டென்சன் குறைஞ்சிருச்சா?”

“ம்... கம்ப்ளீட்டா, உங்ககிட்ட பேசினபிறகு தான் போன தைரியமே திரும்ப வந்திருக்கு.”

“எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

“என்ன சந்தேகம்? தாராளமா கேளுங்க. தெரிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.”

“என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கிறியே. ஒருவேளை நான் பொறுக்கியாவோ, இல்ல கொலைகாரன், கொள்ளைக்காரன்னு யாராகவாவது இருந்தா, என்ன பண்ணுவ?”

‘கெட்டவன் யாரும் தன்னைத்தானே தாழ்த்துவதில்லை’ என்ற அடிப்படையில், அவனின் கேள்வியில் மனம் மகிழ்ந்து புன்னகையுடன், “எந்த பொறுக்கியும் தனியா நிற்கிற பொண்ணுகிட்ட வந்து, நேரம் கெட்ட நேரத்துல தனியா இங்க நிற்கிறது ஷேஃப் இல்லமான்னு சொல்ல மாட்டான். முடிஞ்சா தப்பா நடக்கத்தான் ட்ரை பண்ணியிருப்பான். கொலைகாரன்னா மொசப்புடிக்கிற ஆளை மூஞ்சியப் பார்த்தா தெரியாதா?” என கேலியாகச் சிரித்தாள். “ஆனா, கண்டிப்பா நீங்க கொள்ளைக்காரன் தாங்க” என நிறுத்தினாள்.

கார்த்திக்கிற்கு இதயம் ஒருமுறை நின்று துடிக்க, “என்ன சொல்ற அவந்தி? நா...நானா? எதை வச்சி சொல்ற?” என திணற,

“ஆமா. நீங்க கொள்ளைக்காரன் தான்” என்று மீண்டும் அவனின் இதயத்துடிப்பை எகிறவைத்து, “எதுவுமே செய்யாம அமைதியா நாலு வரி பேசியே என் மனசைக் கொள்ளையடிச்சிட்டீங்களே” என்றதும் நிம்மதியாக மூச்சிவிட்டு, “ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். தேங்க்ஸ் அவந்தி. நான் திரும்பவும் சொல்றேன் கௌஷிக்கிட்ட ஜாக்கிரதையா இரு. எந்த காரணத்தைக் கொண்டும் அவன் கூப்பிட்டான்னு வெளில போயிராத. அப்படிப் போறதாயிருந்தாலும், ஒரு போன் இல்லன்னா மெசேஜ் அனுப்பிட்டு போ ஓகேவா.”

“ஓகே... ஓகே டன்.”

“ம்... குட். சாப்பிட்டியா? சாப்பிடலன்னா போயி சாப்பிடு. நம்ம கல்யாணத்தோட நீ தெம்பாயிருக்க வேண்டாமா?”

“என்னமோ கல்யாணத்துக்கு ஒரு வாரம்தான் இருக்கு. நல்லா சாப்பிடுன்ற மாதிரி பேசுறீங்க?”

“எதாவது அதிசயம் நடந்தா அப்படியே கூட கல்யாணம் நடக்கலாம் யார் கண்டா. சாப்பிடாம மணமேடையில நீ மயக்கம் போட, மறுநாள் மணமேடையில் மணமகள் மயக்கம்! இந்த தலைப்புல உன்னோட ‘தினமீன்’ நியூஸ் பேப்பர்லயே கட்டுரையா வந்திரும். அது உனக்குத் தேவையா?” என்றதும் வாய்விட்டுச் சிரித்தவளின் குரலை ரசித்திருந்தவன், “வச்சிரட்டுமா அவந்தி?” என்றான்.

“அடுத்து எப்ப பேசலாம்ங்க?”

“எப்ப வேணும்னா பேசலாம் அப்படின்ற உத்திரவாதம் என்னால கொடுக்க முடியாது. நான் வேலை தேடுறதுல பிஸியா இருப்பேன். வேலை கிடைச்சாலும், நடுவுல போன் பேச முடியுமா தெரியாது. ரொம்ப அர்ஜெண்ட்னா மட்டும் கால் பண்ணு சரியா?”

“ம்... சரிங்க பாஸ். நான் சும்மா சும்மா உங்களை டிஸ்டர்ப் பண்ணல. எனக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு. இப்ப நான் சாப்பிடப் போறேன். நீங்களும் சாப்பிட்டு வேலையைப் பாருங்க” என்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அவந்திகா, கௌஷிக்கைத் திட்டிவிட்டு சென்றதும், “பார்த்தீங்களா? எல்லாம் நீங்க குடுக்கிற இடம்தான், இவ இந்தளவுக்கு ஆட காரணம்” என தந்தையிடம் கத்திக் கொண்டிருந்தான்.

“சும்மா இருந்தவளை பேச வச்சது நீ. அவளை ஏன்டா குறை சொல்ற? அவள்தான் உன்னைப் பிடிக்கல சொல்லிட்டாள்ல. அப்புறம் அவளிஷ்டத்துக்கு விட வேண்டியதுதான. அவளாகவா போயி அந்தப் பையனை லவ் பண்ணி பிடிச்சிருக்கு சொன்னா? அந்த இடத்துல நீ நடந்துகிட்ட விதம், அவளை இப்படி ஒரு திடீர் முடிவு எடுக்க வச்சிருக்கு. தப்பை நீ செஞ்சிட்டு பழியை அவள்மேல போடாத.”

“அதான. என்னைக்கு நீங்க எனக்கு ஆதரவா பேசியிருக்கீங்க. இன்னைக்குப் பேச. எப்பவும் உங்க தங்கை மகள்தான உங்களுக்கு உசத்தி. நான்லாம் உங்க கண்ணுக்கு மகனா எங்க, மனுஷனாக்கூட தெரிய மாட்டேன். இதே எங்கம்மா இருந்திருந்தா நடக்கிறதே வேற. இந்த அம்மா வேற இந்த டைம் என்கூட இல்லாம அண்ணன் வீடு, தம்பி வீடுன்னு சுத்தப் போயிட்டாங்க.”

‘இருந்தா என்ன ஆட்டம் நடக்கும்ன்றது தெரிஞ்சதால தான, அவ அண்ணன் வீட்டுக்கு பார்சல் கட்டினேன்’ என மனதினுள் நினைத்து, “உங்கம்மா சுத்தல்லாம் போகல. அவளோட அண்ணன் வீட்ல எதோ விசேஷம்னு போயிருக்கா” என்றார் ஒன்றும் அறியாதவர்போல்.

“இந்த கட்டுரை உங்களுக்குத் தெரியாம வந்திருக்காதே. நீங்க தான் அவளை எனக்கெதிரா தூண்டிவிட்டீங்களா? இருந்தாலும் இருக்கும். எங்கம்மா வரட்டும் நான் அவங்களிடமே பேசி, சீக்கிரமே இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன்” என தன்னறைக்கு வந்தவன் குட்டி போட்ட பூனையாய் உள்ளேயே நடைபோட்டான்.

‘எனக்குன்னு சொல்லிச் சொல்லி வளர்த்தவளை, என்கிட்ட வேலை பார்த்த செக்யூரிட்டிக்கு சொத்தோட விட்டுக்கொடுக்க, நான் என்ன வள்ளலா? அவன் எப்படி உன் கழுத்துல தாலி கட்டுறான்னு நானும் பார்க்கிறேன். அவனுக்காக, அதுவும் ஐந்து நிமிஷம் பழகினவனுக்காக என்னை கொலை செய்யுற அளவுக்கு துணியுறல்ல. இந்த கௌஷிக் யாருன்னு கூடிய சீக்கிரம் பார்க்கத்தான்டி போற. கூடவே வளர்ந்தும் என்னைப்பற்றித் தெரியாம, இவன் சரியான லூசுப்பயல்னு நினைச்சி, குறைவா எடை போட்டுட்டல்ல? இந்த கௌஷிக் ஒரு விஷம்னு உனக்குக் காட்டுறேன்’ என மனம் முழுவதும் குரோதத்துடன், தனக்காகப் பேசும், தனக்காக யோசிக்கும், தனக்கு மட்டும் நல்லது நினைக்கும் தாயின் வரவிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

மறுநாளே கார்த்திக் குடும்பத்தினரை தன் புதிய வீட்டிற்கு அழைத்து வந்தான். அன்று மாலை வந்த அலைபேசி அழைப்பை ஏற்று ஹலோ என்றான்.

“ஹலோ கார்த்திகேயன்! நான் அவந்திகாவோட மாமா பேசுறேன்.”

“சொல்லுங்க சார். அவந்தி சொல்லியிருந்தாங்க.. நீங்க போன் பண்ணுவீங்கன்னு. நான் எங்க வரட்டும் சொல்லுங்க?”

‘சார் நீங்களா? ஹையோ! அவந்தி உங்ககிட்டயிருந்து போன் வரும்னு சொன்னதிலிருந்து எதிர்பார்த்திட்டிருந்தேன் சார்’ என்பது போல் எந்த வழிசலுமில்லாமல், மிக யதார்த்தமாய் நேரடியாக விஷயத்திற்கு வந்த கார்த்திக்கை அப்பொழுதே பாதி பிடித்துவிட்டது அவருக்கு.

எதிரிலிருந்து “சார் லைனில் இருக்கீங்களா? ஹலோ!” என்ற கார்த்திக்கின் குரலில்,

“உங்க வீடு எங்கேயிருக்கு?” என்று கேட்டு, அதனருகிலிருந்த “ஹோட்டல் ப்ளுமூன் வாங்க” என்றதும், அவர் வரவு ஏற்கனவே நெரிந்திருந்ததால், தடையில்லாம் அவர் சொன்ன ஹோட்டலுக்கு வருவதாகச் சொல்லி போனை வைத்தான்.

உடனே தாய்க்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்து, ஒரு சில ஐடியாக்கள் கேட்டு தாயின் சம்மதம் கிடைத்தபின், அந்தப் பெரிய ஹோட்டலுக்குச் சென்றான் கார்த்திக்.

டேஸ்டி ஃப்ரூட்ஸ் பேக்டரி மகனுடையது என்றாலும், மகன் தேர்ந்தெடுத்த அந்த தொழில் பிடிக்காததால், அந்த பகுதிக்கு சுந்தரேசன் இதுவரை சென்றதில்லை. ஆதலால், அங்குள்ள யாரையும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. ஹோட்டலில் நுழைந்தவன் சிறு தேடலுக்குப்பின், அவருக்கு போன் செய்து எங்கே என்று கேட்டு, அவர்முன் சென்று வணக்கம் சொல்லி அமர்ந்தான்.

தன்னருகில் வந்தமர்ந்தவனின் கம்பீரத் தோற்றம், கண்களில் தெரிந்த நேர்மையும், முகத்தில் ஒரு சிநேகித பாவம் அனைத்தும் அனுபவசாலியான சுந்தரேசனுக்கு நல்லவிதமாகவே தோன்றியது.

இருவரும் சம்பிரதாயமாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள, “உங்களுக்கு எங்க பொண்ணை பிடிச்சிருக்கா?” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தவர், “அவ கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடதான்றதுல தீவிரமா இருக்கிறா. இருந்தாலும், வளர்த்தவனா அவள் கடைசிவரை சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறேன். தப்பில்லையே? அப்பா, அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு, இதுக்கப்புறமான அவளோட வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும். உங்களால அதைக் கொடுக்க முடியும்னு நம்புறேன். நாங்க அனுபவிக்கிற சொத்து, சுகம் அனைத்தும் அவளோட அப்பாவோடது. இதுல என்னோடதுன்னு பார்த்தா ரொம்ப கம்மிதான். நீங்க எப்பக் கேட்டாலும் தர ரெடியாயிருக்கேன்” என்றார்.

அவர் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் நிதானமாக, “எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு சார். அவளோட சந்தோஷத்துக்கு நான் உத்திரவாதம் தர்றேன். எங்க அப்பா, அம்மா அவளைத் தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. நான் அவளுக்கு எல்லாமாகவும் இருந்து பார்த்துக்குவேன். அப்புறம் இந்த சொத்து, பத்துன்னு அவளுக்கிருந்தாலும், இல்லன்னாலும் எனக்கு அதைப்பற்றி ஒண்ணுமில்ல. ஏன்னா எனக்கு உங்க வீட்டுப் பொண்ணு மட்டும் போதும்” என்றவன் சற்று இடைவெளிவிட்டு, என்னடா இவனுக்கு வேலையும் போச்சி. படிப்பும் கம்மி. இந்தக் காலத்துல என்ன வேலை பார்த்து காப்பாத்துவான்னு பார்க்கறீங்களா? மூட்டைத் தூக்கிக்கூட காப்பாத்துவேன்னு சினிமா டயலாக்கெல்லாம் பேசிட்டிருக்க மாட்டேன். ஆனா, என் மனைவியை எப்படிப் பார்த்துக்கணுமோ, அப்படிப் பார்த்துக்க என்னால முடியும்” என்று தெளிவாகவே சொன்னான்.

அவனின் பேச்சில் நம்பிக்கை வந்தவர், மேலும் அரைமணி நேரம் பேசி, உணவு வரவழைத்து சாப்பிட்டுவிட்டே கிளம்பினார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த சுந்தரேசனை வாசலிலேயே பிடித்துக்கொண்டாள் அவரின் மருமகள். “மாமா கார்த்திக்கைப் பார்த்தீங்களா? பேசினீங்களா? உங்களுக்கு அவங்களைப் பிடிச்சிருக்கா? என்ன சொன்னாங்க? உங்ககிட்ட நல்லா பேசினாங்களா? ரெண்டுபேரும் என்ன பேசிக்கிட்டீங்க?” என கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள். எந்த கேள்விகளுக்கும் பதில் வராமல் போக, அவர் முகத்தையே பார்த்தவளுக்கு எந்தவிதமான முகமாற்றங்களும் அதில் தெரியவில்லை.

“என்ன மாமா? ஒரு மாதிரியா இருக்கீங்க? என்னோட கேள்விகளுக்கு எந்த பதிலுமே இல்லையே?” என அழுபவள் போல் வர,

“நீ சாப்பிட்டியாமா?” என்று வாய் திறந்தார்.

“இல்ல மாமா. நீங்க வந்ததும் பேசின பிறகுதான் சாப்பிடணும்னு உட்கார்ந்துட்டேன். நீங்க சொல்லுங்க மாமா பேசினீங்களா?”

மருமகளின் தவிப்பை பார்த்தபடியே, “முதல்ல சாப்பிட்டு வா நான் சொல்றேன்?” என்றதும், மாமா “எதுவும் பிரச்சனையில்லையே?” மனம் படபடக்க கேட்டாள்.

“முதல்ல சாப்பிட்டு வா. அப்புறம் தான் மத்த விஷயங்கள்...”

சரியென தலையாட்டி மூன்றே நிமிடத்தில், உணவை வேகவேகமாக வயிற்றுக்குள் போட்டு, கைகழுவி வந்து மாமாவின் முன் உள்ள ஷோபாவில் அமர்ந்தவள், “ம்... சாப்பிட்டாச்சி. இப்பச் சொல்லுங்க மாமா?” என்றாள்.

தங்கை மகளின் அவஸ்தையை மனதினுள் ரசித்து வெளியே, “என்ன சொல்லணும் அவந்திமா? நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற?” என்றார் எதையும் முகத்தில் காட்டாமல்.

“மாமா!” என அதிர்ந்தவள், பின் சுதாரித்து “என்ன மாமா விளையாட்டு, கார்த்திக்கை மீட் பண்ணுனீங்களா? அவங்க ஹோட்டலுக்கு வந்தாங்களா? இல்லை வரலையா?” ‘ஒருவேளை கார்த்திக் வரவில்லையோ? அதனால்தான், என்னை எப்படி சமாதானப்படுத்துவது என்று மாமா அமைதியாக இருக்கிறாரோ?” என்றே அந்த கேள்வியைக் கேட்டாள்.

‘ஏன் வரல? கண்டிப்பா வந்திருக்கணுமே? எப்படி வராமல் போவாங்க? வரமுடியாத அளவுக்கு அவங்களுக்கு எதாவது பிரச்சனையா?’ என மூளையைக் கசக்கிப் பிழிய தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள்.

தலையை ஒரு கை ஆறுதலாக வருட தலை நிமிர்ந்தவளுக்கு, சுந்தரேசன் சிரிப்புடன் நிற்பது பட, “மாமா யூ சீட்டர்” என்றதும் திரும்பவும் சிரித்தபடியே நின்றவர், “உன்னோட சாய்ஸ் சூப்பர்டா. பேசிப்பார்த்தேன். பழக்க வழக்கத்திலிருந்து எல்லாத்துலயும் பெஸ்ட் தான். நானே தேடி அலைந்து பார்த்திருந்தால் கூட, இந்தமாதிரி ஒரு பையன் அபூர்வம் தான். உன்னை நல்லா பார்த்துப்பான். என்ன கொஞ்சம்... கொஞ்சம் என்ன நிறையவே வசதி கம்மி.”

“அதனால ஒண்ணும் பிரச்சனையில்லை மாமா. எனக்கும் அவங்க கேரக்டர் தான் முக்கியம். அதுக்கு தி கிரேட் தினமீன் பத்திரிக்கை பொறுப்பாளர் திருவாளர்.சுந்தரேசன் அவர்களே சர்டிபிகேட் கொடுத்தாயிற்று. அப்புறம் என்ன? ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றாள் மனதார.

“என்னமா எனக்குப் போயி தேங்க்ஸ் சொல்லிட்டு போமா போயி படுத்துத் தூங்கு” என்றார்.

“குட்நைட் மாமா” என்றபடி மாடிப்படியேற கால்வைக்க,

“ஏன் எனக்கெல்லாம் குட்நைட் சொல்லிட்டுப் போக மாட்டியா? எப்பவும் உங்க மாமாதான் உசத்தியா? எங்களையெல்லாம் பார்த்தா எப்படித் தெரியுது?” என்று கேள்விகளுடன், உள்ளே வந்த கௌஷிக்கின் தாய் வனஜாவை பயத்துடன் ஏறிட்டாள் அவந்திகா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top