• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
4


கௌஷிக்கின் தாயின் குரல் கேட்டதும் உடல் ஒருமுறை அதிர, கால்கள் தன்னிச்சையாக திரும்ப, கண்கள் பயத்தில் மிரண்டது. கௌஷிக்குடன் வந்திருந்ததால் அனைத்தையும் சொல்லியே அழைத்து வந்திருப்பானென்று தெரிந்தது.

‘மை காட்! இவங்களை எப்படி மறந்தோம்?’ என்று நினைத்தவள் தைரியத்தை வரவழைத்து, “வாங்கத்தை. சாரி நீங்க வந்ததை கவனிக்கல. ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?” என்று பொதுவாக விசாரித்தாள்.

“ரொம்பத்தான் அக்கறை” என நொடித்தவர், “நீ இருக்கிற மயக்கத்துல நான் வந்ததை எப்படிமா கவனிச்சிருப்ப? நான் கேள்விப்பட்டது நிஜமா அவந்திகா? கௌஷிக்கை விட்டுட்டு யாரோ ஒரு செக்யூரிட்டியை கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என பல்லைக்கடித்தபடி குரலை உயர்த்தி கேட்டார்.

“ஆமாம் அத்தை. நிஜம்தான்” என்று முடிப்பதற்குள் கன்னத்தில் கை வைத்திருந்தாள் அவந்திகா. கண்கள் மட்டும் கண்ணீரை வெளியேற்ற ஆங்காரத்துடன் நின்ற தன் அத்தையையே வெறித்திருந்தாள்.

அதற்குள் அருகில் வந்த சுந்தரேசனை கையமர்த்திய வனஜா, அவந்திகாவிடம் திரும்பி “அடிச்சிக் கொன்னுருவேன். என்ன புதுசா எதிர்த்தெல்லாம் பேசுற? என்ன தைரியமிருந்தா எவனையோ கல்யாணம் பண்ணிக்கப் போறதா என்கிட்டயே சொல்லுவ? இத்தனை வருஷம் வளர்த்து, சொத்தோட சேர்த்து, எவனோ ஒரு பொறம்போக்குக்கு உன்னை தாரை வார்க்கவா இருக்கேன்.”

“அத்தை அவங்களைப்பற்றி தப்பா சொல்லாதீங்க.” சட்டென்று சொல்லி பயத்தில் மாடிப்படியை இறுக்கிப் பிடித்தாள். சின்ன வயதிலிருந்தே வனஜாவின் அரட்டல், உருட்டல், மிரட்டலில் பயத்துடன் வளர்ந்தவளால் தொழிலில் என்ன வளர்ந்தும் வனஜாவிடமுள்ள பயம் மட்டும் போகவில்லை.

“என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி என் முன்னாடி குரலை உயர்த்திப் பேசுற? என்ன பயம் விட்டுறிச்சா? இதெல்லாம் சரிப்படாது. அடுத்த முகூர்த்தத்துல உனக்கும், கௌஷிக்குக்கும் கல்யாணம்” என்று அசராமல் குண்டைப் போட்டார்.

‘இதை இதைத்தானே எதிர்பார்த்தேன். தேங்க்ஸ்மா’ என்றான் கௌஷிக் மனதினுள்.

“அத்தை!” என அதிர,

“வனஜா என்ன உளர்ற?” என்றபடி சுந்தரேசன் வந்தார்.

“நான் உளறல. உண்மையைத்தான் சொல்றேன்.”

“நடக்கிறதைப்பற்றிப் பேசு வனி. அவளுக்கு கௌஷிக் கரெக்ட் சாய்ஸ் கிடையாது. நான் அந்தப் பையன் கார்த்திக்கைப் பார்த்து பேசி முடிச்சிட்டேன்.”

“ஹா...ஹா... டேய் கௌஷிக் உங்கப்பாவைப் பாருடா. பேசி முடிச்சிட்டாராம்” என்று சத்தமாக சிரித்து, பின் குரலை கடினமாக்கி “நீங்க பேசிட்டா ஆச்சா? நான்.. இந்த வனஜா சம்மதிக்கணும். என்னோட சம்மதம் இல்லாம ஒரு துரும்பைக்கூட உங்களால அசைக்க முடியாது. அப்படி எதாவது செஞ்சா நான் என்ன செய்வேன்னு தெரியுமில்ல?” என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்க, அதில் சுந்தரேசன் கொஞ்சம் பயப்படத்தான் செய்தார்.

‘கொலை செய்வேன் என்றால் கூட இந்த பயம் இருக்காது. வயதுப் பெண்ணிற்கு எது பலவீனமோ, அதில் அடித்ததுதான் பயம். அவந்தியை தப்பான தொழிலில் இறக்கி விடுவேன் என்றதுதான் அது. அது மிரட்டல்தான்! அந்த மிரட்டலுக்கு பயப்படவில்லையென்றால் சொன்னதை செய்வாள்’ என்பதை அறிந்தவராயிற்றே.

“பெத்த பிள்ளைக்கு அகெய்ன்ஸ்டா வேலை பார்க்கிற ஒரே அப்பா நீங்கதான். இவளைத் தூண்டிவிட்டு ஃபேக்டரிக்கு சீல் வச்சிருக்கீங்க? இந்த மாதிரி கௌஷிக் மட்டும்தான் வச்சிருக்கானா என்ன? ஊர் உலகத்துல போய் பாருங்க. இன்னும் எத்தனை இடங்கள்ல இந்த மாதிரி தெரியாம வச்சிருக்காங்களோ? அதைப்போயி பிடிக்க வேண்டியதுதான... உங்க பையனோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிருக்கீங்க. அதுக்கு இவள் உடந்தை. என் பையனுக்கு இனி யார் பொண்ணு கொடுப்பாங்க? அதுக்காகவேனும் இவள் தான் என் பையனுக்கு பொண்டாட்டி. நான் சொன்னது சொன்னதுதான். அடுத்த முகூர்த்தத்துல இவங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என்றார் அழுத்தமாக.

அத்தையின் பேச்சை அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள், அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் என்றதும், “அத்தை! அதுக்கு ஒண்ணு உங்க பையன் உயிரோட இருக்கமாட்டான். இல்லை நான் உயிரோட இருக்கமாட்டேன். பிணத்தை வச்சி கல்யாணம் யாரும் பண்ணமாட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் ஆவேசமாகவும், தெளிவாகவும்.

“என்னடி சொன்ன?” என்று கௌஷிக் கை ஓங்க,

அவனைத் தடுத்த வனஜா, “புதுசா வந்த தைரியத்துல பேசுறியா? இந்த தைரியம் உனக்கு எத்தனை நாளைக்குன்னு பார்த்திடுறேனே. என் பையனையும் சாகடிக்க விடாம, உன்னையும் சாகவிடாம இந்த கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன் பார்” என்று அவந்திகாவின் மிரட்டலுக்கு பதிலுக்கு மிரட்டி உள்ளே சென்றார்.

கண்களில் கண்ணீருடன் தன் மாமாவைப் பார்த்து வேகமாக மாடியேறி படுக்கையறை சென்றவள், கார்த்திக்கிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல... ‘நான் இருக்கிறேன்’ என்று அவன் தைரியம் சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதியாகி போனை வைத்தாள்.

இதுவரை எதற்காகவும் அத்தையை எதிர்த்துப் பேசியதில்லை. முதல்முறையாக தன் எதிர்கால வாழ்விற்காக வாதம் செய்தாள். தன் அத்தை ஒரு முடிவு செய்தால், அதை முடிக்கும்வரை ஓய்வதில்லை என்பது தெரிந்தவள் தான். இருந்தாலும், புதியதாக கார்த்திக்கினால் வந்த தைரியத்தில் எல்லாம் சரியாக நடக்குமென்றே நம்பினாள்.

மறுநாள் திருமணம் என்று சொல்லி, அவந்திகா வயிற்றில் புளியைக் கரைத்த வனஜா, தன்னை கௌஸ் அரெஸ்ட் செய்து கட்டாயக் கல்யாணம் செய்துவிடுவார் என எதிர்பார்த்திருக்க, வனஜாவோ முந்தின தினம் எதுவுமே நடக்காததுபோல் சகஜமாக, சாதாரணமாக நடந்து கொண்டார்.

நேற்றைய சம்பவங்கள் உண்மையா என்ற அளவிற்கு குழம்பிப் போய்விட்டாள் நம் நாயகி. சந்தேகத்தில் தன் மாமாவைப் பார்க்க, அவரும் உதடு பிதுக்கி தோள் குலுக்கி, ஒன்றும் புரியவில்லை என்பதை ஜாடையால் சொன்னாலும், அவருக்குள்ளும் ஒரு உறுத்தல், ‘புலி பதுங்குவது பாய்வதற்காகவோ, அல்லது பழிவாங்குவதற்காகவோ தான் இருக்கமுடியும்” என முடிவு செய்தவர், மருமகளுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்து, முதல் வேளையாக தனியே வரவிடாமல் மருமகளையும் தன்னுடனேயே அலுவலகம் அழைத்துச் சென்றார்.

“தினமீன் தமிழ் நாளிதழ்” போர்டு மாட்டியிருந்த அந்த பெரிய கட்டிடத்தில் சுந்தரேசன் தன் காரை நிறுத்த, பின்னாலேயே ஆக்டிவாவில் அவந்திகா வந்து சேர, உள்ளே நுழைந்ததும் தங்களை எதிர்கொண்ட மேனேஜரிடம், அன்றைய நிலவரத்தைக் கேட்டபடி அவரவர் கேபினுக்குள் சென்றார்கள்.

அன்றையை வேலைகளை செய்வதற்கு முன், வந்திருந்த கடிதாசிகளைப் பிரித்து, தேவையானவற்றை வைத்து தேவையில்லாததை ஒதுக்கிக் கொண்டிருந்தவள் கண்களில் பட்டது, தினமும் வரும் அந்த இரண்டு கடிதங்கள். இன்று அதோடு சேர்த்து மூன்றாவதாக ஒன்றும் உறுத்த அதையும் தனியே எடுத்து வைத்தாள் அவந்திகா.

முதலில் உள்ள கடிதத்தில் ‘உனக்கு என் கையால்தான் சாவு’ என்று கொலை மிரட்டல் கடிதம் இருக்க, தினமும் வருவதுதானே என்று அதை அசட்டையாக தள்ளிவிட்டு, இரண்டாவதை பிரிக்க...

ஹாய்! டபுள் எ! மீண்டும் நானேதான்.

எ எ என நிதமும்,

எனை ஏங்க வைப்பவளே!

உந்தன் வார்த்தை

வரவிற்காகக் காத்திருக்கிறேன்.

எந்தன் உள்ளமதில் குடியிருக்க,

வருவாயா வான்மதியே!

என்ற கவிதையைத் தொடர்ந்து சி.என் என்ற எழுத்திலிருந்து எ.எ என்ற எழுத்திற்கு மன்மதபானம் ஒன்று சென்றிருந்தது. படித்து முடித்ததும் மனம் இறுக “நேர்ல வந்து பேச தைரியமில்லாத கோழை. தன்னோட பெயரைக்கூட முழுசா எழுதத் தெரியாத கழுதைக்கு பெயர் சி.என்னாம். சரியான லூசன். இவன் தொல்லை வரவர அதிகமாகுதே. ப்ரம் அட்ரஸ் இல்லாத தேர்ட்ரைட் இடியட். பேசாம மாமாகிட்ட இந்த ரெண்டு லெட்டரையும் பற்றி சொல்லிவிடலாமா? சே... சே வேண்டாம் ஏற்கனவே என் பொறுப்பை தலையில் சுமந்து பொண்டாட்டி, பிள்ளை நடுவுல திண்டாடுறாங்க. இதுல நான் வேறயா. வேண்டாம் இதை நானே சரி பண்றேன்” என்று அடுத்த கடிதத்தைப் பிரித்தாள்.

‘வணக்கம் மேடம்:

என் பெயர் வைஷ்ணவி. எனக்கு ஒருவருஷம் முன்னாடி கல்யாணமாகிருச்சி. சென்னையிலிருந்து ஆந்திரா போற வழியில் கவரப்பேட்டைக்கும், தச்சூர் கூட்டுசாலைக்கும் நடுவுல புதுவாயல்னு ஒரு ஊர் இருக்கு. அங்கிருந்து பெரியபாளையம் போற வழியிலதான் என்னோட ஊர் நானூர். நான் பக்கத்திலிருக்கிற இன்ஜினியரிங் காலேஜ்ல ஒர்க் பண்றேன். கடந்த ஆறு மாசமா எனக்கு ஒருத்தன் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்குறான். இதை என் கணவர்கிட்ட சொல்லவும் முடியல. அவர் நெல்காஸ்ட் கம்பெனியில மேனேஜரா வேலை பார்க்கிறார். ஏற்கனவே என் மாமியாருக்கு என்னைக்கண்டா ஆகாது. இந்தப் பிரச்சனை தெரிஞ்சா என் கணவர்கிட்டயிருந்து பிரிக்கவும் தயங்கமாட்டாங்க. இந்த பிரச்சனையில் நான் மட்டுமில்ல, இன்னும் சில பெண்கள் பாதிக்கப்படுறாங்கன்னு தெரிஞ்சது. ஆனா, வெளில சொல்றதில்லை. போலீஸ் போகலாம்னா என்னோட கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை வந்திருமோன்னு பயமாயிருக்கு. நான் உங்க ஆர்டிகில்ஸ் நிறைய படிச்சிருக்கேன். அதான் தைரியமா லெட்டர் எழுதிட்டேன். தயவுசெய்து என்னோட பெயர் வெளில வராம பார்த்துக்கோங்க. இதுல என்னோட போன் நம்பர் இருக்கு. உங்க கைக்கு இந்த லெட்டர் கிடைச்சதுன்னா எனக்கு போன் பண்ணுங்க. நான் அவனைப்பற்றி எனக்குத் தெரிஞ்ச தகவல் சொல்றேன்.

என் விடிவிற்காக காத்திருக்கும்,

வைஷ்ணவி.’

படித்து முடித்ததும் அந்த நம்பரைக் குறித்துக்கொண்டு, விஷ்ணுவை உள்ளே அழைத்தாள். அந்த பெண்ணின் கடிதத்தை அவனிடம் கொடுத்து படிக்கச்சொல்லி, அவன் படித்து முடித்ததும், “இன்னைக்கே நீ அந்த இடத்துக்கு போயி விசாரிச்சிட்டு வா விஷ்ணு. இந்த நியூஸ் சரிதானான்னு முதல்ல தெரிஞ்சிக்கணும். யாராவது நம்ம பேரை ரிப்பேர் பண்றதுக்காக எதாவது ப்ளான் போட்டிருக்கப் போறாங்க. நீ என்ன பண்ற முதல்ல அந்த காலேஜ் போய், வைஷ்ணவின்ற நேம்ல லெக்சரர் இருக்காங்களான்னு முதல்ல விசாரி. அப்புறம் அவங்க நம்பருக்கு வேற நம்பர் மாத்தி போன் பண்ணி செக் பண்ணிக்கோ. அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்றவன் யாரு என்னன்ற டீடெல்ய்ஸும் கலெக்ட் பண்ணிக்கோ. இது ஃபேக் நியூஸ்னா உன்னோட ரிப்போர்ட் பார்த்து அடுத்து என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம். ஓகே உடனே கிளம்பு. ஆமா எதுல போகப்போற பைக்லயா? இல்ல பஸ்லயா?”

“ம்... நக்கலு. நான் எப்ப என் பைக்கை விட்டு தனியா போயிருக்கேன். வரட்டா” என்று வேகமாக வெளியேறினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அன்று மாலையே கார்த்திக்கிடம் அவன் வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்ததால், மாமாவிடம் சொல்லி ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பி கார்த்திக்கின் வீடு விசாரித்துச் சென்றாள்.

அங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நடுவில், ஒரு பெரிய வீட்டிற்கு முன் வந்தவள், ‘இந்த இடம்தான சொன்னாங்க.’ சுற்றிலும் பார்த்தபடி இருந்தவள் கண்களில் எந்த சின்ன வீடும் சிக்கவில்லை என்றதும் கார்த்திக்கை அழைத்தவள், “என்ன கார்த்திக்? நீங்க சொன்ன அட்ரஸில் ஒரு மினி பங்களாதான் இருக்கு” என்றதும் எதிரிலிருப்பவன் சிரிப்பது கேட்டது.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு சிரிக்கிறீங்க? நீங்க சொன்னமாதிரி இங்க சின்னதா எந்த வீடும் தெரியலைனு சொன்னது தப்பா? அப்படின்னா நீங்களே நேர்ல வந்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கணும்தான. போங்க நான் இப்படியே கிளம்புறேன்” என்றபடி பொரிந்து தள்ளினாள்.

அவளின் டென்சனை உணர்ந்தவன், “அவந்தி கூல் அப்படியே திரும்பி பாரு நான் நிற்கிறேன்.” அவள் திரும்பியதும் கையசைக்க... அவனைக்கண்ட பின்பு சற்று ஆசுவாசமாகி முகம் மலர பதிலுக்கு கையசைத்தாள்.

அதற்குள் இன்னொரு கை “ஹாய்!” சொல்லியபடி அவளை நோக்கி வேகமாக ஓடிவர ஒரு நொடி பதறி விலகி நின்றாள்.

அவளிடம் வந்த இளைஞன், “ஹாய் அண்ணி! ஐம் சந்தோஷ். குமார் அன்ட் ஈஸ்வரியோட ப்ரோடக்ட் நம்பர் இரண்டு” என்றான்.

புரியாமல் விழித்தவளிடம், “ஹா...ஹா புரியலையா? குமார் அன்ட் ஈஸ்வரிக்கு பிறந்த இரண்டாவது மகன். முதல்ல யார்னு யோசிக்கிறீங்களா? எல்லாம் உங்காளு கார்த்திக் தான்” என்றதும், பதற்றம் விலகி அவனது வேடிக்கையான பேச்சிலும், அவனின் முகபாவங்களிலும் சிரித்தவளுக்கு, அவனின் ‘உங்காளு’ என்ற வார்த்தை மனதிற்குள் இனித்தது.

பின் தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்த எண்ணி, “ஹாய் சந்தோஷ்! ஐம் அவந்திகா. அழகப்பன்-ஜெயந்தியின் ஒன் அன்ட் ஒன்லி ப்ரோடக்ட்” என்றதும் இருவரும் சிரிக்க, அதை சிறு முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

தன் ஆக்டிவாவை தள்ளியபடியே சந்தோஷுடன் நடக்க, “அண்ணி நான் எதுக்கு இருக்கேன்” என்று வண்டியை அவன் பிடிக்க வர,” இல்லை வேண்டாம்” என்ற அவந்திகாவின் வார்த்தைகளைக் கண்டுகொள்ளாமல், ஆக்டிவாவை தள்ளிக்கொண்டு உடன் நடந்தவன், தன் அண்ணனின் கடுகடுத்த முகத்தைப் பார்த்து, “அண்ணி புகையிற வாசனை எதாவது வருது?” என கேட்டான்.

அவனின் திடீர் கேள்வியில் புரியாமல் விழிக்க, அவளின் பாவனையில், “என்னண்ணி இவ்வளவு ட்யூப்லைட்டா இருக்கீங்க?” என்றதும் முறைத்தவளை கண்டுகொள்ளாது, “இது வயசுப்பசங்களுக்கான பாஷை. இதுகூட தெரியாம என்னதான் படிச்சீங்களோ போங்க.”

“இதெல்லாம் எங்க ஸ்கூல் சப்ஜெக்ட்ல வைக்கலையே சந்தோஷ். இனிமேல் வேணும்னா உங்ககிட்ட ட்யூஷன் வரேன். ஓகேவா?”

“ஓகே. இப்ப ஒருத்தன் காண்டுலயிருக்கான் பாருங்க. அதைத்தான் புகையிற வாசனை வருதுன்னு சொன்னேன்.”

இப்பொழுதும் கூட அவளுக்கு புரியவில்லைதான். இருந்தாலும், ஒரு அசட்டு சிரிப்பொன்றை அவனுக்களித்து கார்த்திக்கைப் பார்க்க, அவன் முகம் உர்ரென்றிருந்தது. ‘ஏன்?’ என்று யோசித்த பொழுதுதான் தெரிந்தது, சந்தோஷ் சொன்னதின் அர்த்தம். கார்த்திக்கைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தாள்.

அவளின் சிரிப்பைப் பார்த்த சந்தோஷ், அண்ணி அர்த்தம் புரிந்து கொண்டதை உணர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்தபடி அண்ணனிடம் சென்றவன், “அண்ணா எங்க எனக்கு ஏனோ, தானோன்னு வத்தலாவோ, தொத்தலாவோ அண்ணியைக் கொண்டு வந்திருவியோன்னு நினைச்சி பயந்திட்டிருந்தேன். நல்லவேளை சந்தோஷோட அண்ணின்னு சொல்லிக்கிற அளவுக்கு, சூப்பரா ஒரு அண்ணியைத்தான் செலக்ட் பண்ணியிருக்க” என்றதும் அடிக்க கை ஒங்கியவனிடமிருந்து தப்பித்துச் சென்றான் சந்தோஷ்.

“அவந்தி எப்படி என் தம்பி? ரொம்ப ப்ளேடு போடுவான். கண்டுக்காத என்ன?”

“எனக்கு சந்தோஷை ரொம்ப பிடிச்சிருக்குங்க. நல்லா ஜாலியா பேசுறாங்க” என்றாள்.

கார்த்திக்கிடமிருந்து சில வினாடிகள் பதில் வராமல் போகவும் என்னவென்று அவனைப் பார்க்க, அவன் முகம் சுருங்கி இருந்தது.

‘ஏன்?’ என்று குழம்பியவள், அர்த்தம் உணர்ந்து அவன் கைபிடித்து, “என்ன பாஸ்? பொறாமையா? முகமெல்லாம் ப்யூஸ் போயிருக்கு. உங்க தம்பின்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் சந்தோஷ்கிட்ட பேசினேன். ஆனா, நீங்க முழிக்கிறதைப் பார்த்தா அவங்ககிட்ட பேசக்கூடாது போலிருக்கே” என அப்பாவியாய் கேட்டாள்.

“ஹேய்! அப்படிலாம் எதுவுமில்லை. நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை செய்யாத.”

“அப்புறம் ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க?”

“அ...அது கொஞ்சம் பொறாமை தான்” என்றான் சற்று அசடுவழிய. “அதுக்காக அவன்கிட்ட பேசக்கூடாதெல்லாம் சொல்லமாட்டேன். வீட்டுக்குள்ள வந்து பாரு அப்பா, அம்மான்ற பெயர்ல இன்னும் என் பிரஷரை ஏற்றிவிட ஆட்கள் இருக்காங்கன்னு தெரியும்.” பேசியபடியே அந்த பெரிய வீட்டின் பின்புறமுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தான்.

“ஏய் நில்லு! உள்ளே நுழைஞ்சிடாதே!” சத்தமாக வந்த குரலில் அதிர்ந்த அவந்திகா, பயத்தில் உள்ளே வைக்கப்போன காலை பின்னே இழுக்க, அவளையும் மீறி உடலில் ஒரு நடுக்கம் வந்தது. ஆரத்தியோடு வந்த ஈஸ்வரி, “என்னமா பயந்துட்டியா? எங்க நான் ஆரத்தி எடுக்கிறதுக்குள்ள உள்ள வந்திருவியோன்னு பயத்துல வார்த்தைகள் கொஞ்சம் ஸ்பீடா வந்திருச்சி” என்று ஆரத்தி எடுத்து உள்ளே போகச்சொல்லி வெளியே சென்றார்.

உள்ளே வந்தும் முகத்திலுள்ள பயம் தெளியாமலிருந்தவளை, ‘என்ன?’ என்பதுபோல் கார்த்திக் பார்க்க, ஆரத்தி கொட்டி உள்ளே வந்த ஈஸ்வரிக்கும் அவளின் முகம் எதையோ உணர்த்தியது.

தாயை முறைத்த மகன்களிடம், “நான் என்னடா பண்ணினேன்?” என அப்பாவியாக பார்த்து, அவந்திகாவின் அருகில் அமர்ந்து, “என்னமா என்மேல கோவமா? நீ கோவமா இருக்குறன்னு என்னை எதோ கொலைக்குற்றம் செய்த கொலையாளியைப்போல முறைக்கிறானுங்க” என்றதும்,

நெருக்கத்தில் அவரின் அந்தக் குரலைக் கேட்டவள், திடீரென, “சாரி சாரி அத்தை நான் எதுவும் பண்ணல. இல்ல அத்தை நான் இல்லை. நிஜமா நான் இல்லை. என்னை விட்டுருங்க ப்ளீஸ்” என்று அலற சுற்றியிருந்தவர்கள் என்னவென்று புரியாமல் விழிக்க, ஈஸ்வரி அவளின் கையைப்பிடித்து சிறு அழுத்தம் கொடுக்க, அவந்திகாவின் அலறல் அடங்கி சிறிது சிறிதாக புலம்பலாக மாறிக்கொண்டிருந்தது.

அவளின் கண்களில் கண்ட பயத்தில், எதுவோ சரியில்லையென்று உணர்ந்த கார்த்திக், அவளின் மறுபுறம் வந்தமர்ந்து கைபிடித்து, “அவந்தி என்னாச்சிமா? ஏன் இவ்வளவு எமோஷனல் ஆகுற?” என்று அவளை உலுக்கியதும்தான், சற்று உணர்வு வந்து வழி தெரியாமல் நிற்கும் குழந்தைபோல் விழிக்க, அவளின் அழகிய விழிகளில் அழகாய் தொலைந்தான் கார்த்திகேயன்.

அதன் பின்னேரே இருக்கும் இடம் நினைவு வர, கார்த்திக்கைப் பார்த்தவள், “கார்த்திக் அத்...” என்று ஏதோ சொல்ல வந்தவளிடம்,

“என்னை மன்னிச்சிருமா” என்ற வார்த்தையில் அருகில் திரும்பிப் பார்க்க அங்கே கண்கள் கலங்கியபடி இருந்த ஈஸ்வரி கண்ணில்பட்டார்.

“ஏன் சாரி கேட்குறீங்க? நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க?” கண்களில் பயம் இன்னும் தெளியாமலேயே பார்த்தாள்.

“முதல்ல இந்த தண்ணீரைக் குடிங்க அண்ணி” என்றதும் அதை வாங்கிக் குடித்தவள் மனம் சற்று மட்டுப்பட, “ஏன்மா அப்படிக் கத்தின? ஒரு நிமிஷம் எல்லாருமே பயந்திட்டோம்” எனவும் சட்டென்று ஈஸ்வரியின் மடியில் விழுந்து இடுப்பைக் கட்டிக்கொண்டாள். மற்றவர்கள் அவளின் செய்கையில் ஸ்தம்பிக்க, அவளின் தலைகோதியபடி, “உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் ஈஸ்வரி.

“நீங்க, என்னை உள்ளே நுழைஞ்சிராதன்னு சத்தமா சொன்னப்ப, எனக்கு எங்க அத்தையோட அதட்டல் குரல்தான் கேட்டிச்சி. அந்த குரல்லதான் பயந்திட்டேன்.”

“அண்ணி! நீங்க ஜெர்னலிஸ்ட். பத்திரிக்கை ஆஃபீஸோட சொந்தக்காரின்னு சொன்னாங்க. அது இல்லையா? எல்லாம் புருடாவா? எதோ பல்லிக்கு பயப்படுற பாப்பா மாதிரி பிஹேவ் பண்றீங்க?” என்று சந்தோஷ் அவளை இலகுவாக்க முயற்சித்தான்.

அவன் முயற்சியை வீணாக்காமல் ஈஸ்வரியின் மடியிலிருந்து எழுந்து, “சந்தோஷ்ஷ்ஷ்” என்று அவன் பெயரை அழுத்தி “என்னைப் பார்த்தா பல்லிக்கு பயப்படுறவ மாதிரியா தெரியுது? நான் ஸ்ட்ராங் தெரியுமா? எங்க அத்தைக்கு மட்டும்தான் பயப்படுவேன்” என்றாள் தலைகுனிந்தவாறு.

“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையில் கார்த்திக் கேட்டான்.

“ஏன்னு கேட்டா, என்ன சொல்றது? நான் தைரியசாலிதான். அப்படித்தான் வளர்ந்தேன். அது வீட்டுக்கு வெளியில. ஆனா, வீட்டுக்குள்ள அத்தையைப் பார்த்தா என்னோட தைரியமெல்லாம் எங்கேயோ காணாமல் போயிரும்.”

“எப்படி வெளியில புலி! வீட்டுல எலி! மாதிரியாண்ணி?”

“சந்தோஷ்ஷ்” என்று பல்லைக் கடிக்க...

“டேய்! சும்மாயிரு” என மகனை அதட்டி, “இதோ காஃபி எடுத்துட்டு வர்றேன்மா” என்று சமையலறை சென்றார்.

“அவந்தி” என்ற அழைப்பில் திரும்பியவள் கார்த்திக்கின் கலங்கலான முகம் பார்க்க, “இனி வீட்லகூட நீ தைரியசாலியாதான் இருக்கணும். மீறி எதாவது பிரச்சனைன்னா, உடனே என்னை தொடர்பு கொள்ளணும் சரியா?”

அவனின் குரலில் இருந்த தீவிரத்தில் தன்னையுமறியாமல் “சரிங்க” என தலையாட்டினாள்.

“சரி நீ உட்கார்ந்திரு. நான் ஒரு போன் பண்ணிட்டு வர்றேன்” என்று வெளியே சென்றவன் சுந்தரேசனிடம் போன் செய்து, “உங்க மனைவியால் அவந்திக்கு எந்தவிதமான மனவருத்தமும் இனிமேல் வரக்கூடாது. வந்தால் நான் என்ன செய்வேன்னு தெரியாது” என கடுமையாக பேசி போனை வைத்தான். அவனுக்குத் தெரியுமா, அவனின் அக்கறையில் அந்த மனிதனின் மனமகிழ்ச்சி.

அவன் வருவதற்குள் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டாள். சின்ன வீடுதான். ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை என்றிருந்தது. ஆடம்பரப் பொருட்கள் எதுவும் அங்கில்லை. ஆனால், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இருந்தது.

போன் பேசி முடித்து இரண்டு நிமிடங்கள் கழித்து வந்தவன், “என்னமா வீடு பிடிச்சிருக்கா? உங்க வீட்டளவுல பத்துல ஒரு பங்குதான். உனக்கு ஓகேதான?” என கேட்டான்.

கார்த்திக்கை முடிந்தமட்டும் முறைத்தவள், “இந்த மாதிரி கம்பாரிஷன் பண்ற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன். எனக்கு இந்த வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்புறம் உங்க அம்மா, தம்பியையும்தான்.”

“அப்ப என்னைப் பிடிக்கலையா” என்று ஒரு அவலக்குரல் மன்னிக்கவும் அப்பாவிக்குரல் வெளியிட்டது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top