- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
5
அந்தக்குரல் வந்த திசையை பார்த்தவள், சந்தோஷின் முக அமைப்பைக் கொண்டிருந்தவர் நின்று கொண்டிருக்க, அவந்திகா, கார்த்திக்கைப் பார்க்க அவன் “அப்பா” என்று சத்தமில்லாமல் உச்சரித்தான்.
‘ஓஹ்...’ என்றவள் அவர் கால் தொட்டு ஆசிவாங்கி, உள்ளே நுழைந்த ஈஸ்வரியிடமும் ஆசிவாங்கி பெரியவர்களின் மெச்சுதலையும், சிறியவர்களின் கிண்டலையும் பெற்றுக் கொண்டாள்.
“அண்ணி! சூப்பரா ஐஸ் வைக்கிறீங்க போல?”
“ப்ச்... சந்தோஷ் இதுல ஐஸ் வைக்கிறதுக்கு என்ன இருக்கு. அப்படியே ஐஸ் வைக்கணும்னா, இதோ வைக்கப்போறேன்னு சொல்லிட்டே வைப்பேன். எனக்கு எந்த குறுக்கு புத்தியும் வராது.”
“உனக்கு வராது அவந்தி. ஆனா, உன்னைச் சொன்னவனுக்கு வரும்.”
“அண்ணா! யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். ஐயகோ! என் பிஞ்சி மனம் பஞ்சரானதே” என கதறினான்.
“அது பஞ்சரானா ஆகிட்டுப் போகட்டும்டா. நான் டிஞ்சர் வச்சி பஞ்சர் போட்டு விடுறேன். நீ கவலைப்படாத” என மகனின் கால்வாரினார்.
“அப்பா” என்று சந்தோஷ் பல்லைக்கடிக்க,
“அந்தப் பல்லை விடுடா. உனக்கு பிறந்ததைத் தவிர அதென்ன தப்பு பண்ணிச்சி. நீ அதை அடிக்கடி கடிச்சே கொல்றடா.”
அவரின் வார்த்தைகளில் சிரித்த அவந்திகா, “ஏன் அங்கிள் இந்த வார்த்தை வித்தியாசமாயிருக்கே? நீங்களே கண்டுபிடிச்சீங்களா?”
“எந்த வார்த்தைமா?”
“அதான் அங்கிள். சந்தோஷோட பல்லைப் பற்றிச் சொன்னீங்களே அது.”
“ஓ... அதுவா! உண்மைதானம்மா. மனித உயிர்களோட வளர்ச்சி, அம்மாவின் கருவிலிருக்கும் போதே தெரிஞ்சிரும். கை, கால், கண், மூக்குன்னு பிறக்கும்போதே அனைத்து உறுப்புகளோடவும்தான் பிறப்போம். பல் மட்டும்தான் அம்மாவின் வயிற்றிலிருந்து வெளில வந்ததும் முளைக்கும். இதுல கூட அத்தி பூத்தமாதிரி ஒருசில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே பல் இருக்கும்ன்றது வேற. ஆனா, அனேகம் குழந்தைகளுக்குப் பிறந்த பிறகுதான் பல் முளைக்கும். அப்ப முளைக்கிற பல்லுக்கு நாமதான பெத்தவங்க. எப்படி என் கண்டுபிடிப்பு?”
“வாவ்! எக்ஸலண்ட் அங்கிள். சான்ஸே இல்ல போங்க.”
“நீ என்னை கலாய்க்கலையேமா?”
“நோ... நோ அங்கிள். நீங்க சொன்னது முற்றிலும் ஒத்துக்க வேண்டிய உண்மைதான்.”
மகன்களின் புறம் திரும்பியவர், “பார்த்துக்கோங்கடா. இப்பதான் முதல் முறை பார்க்கிற பொண்ணு, என் கருத்துக்களை ஒத்துக்கிறா. நீங்களும் இருக்கீங்களே. இதுக்குத்தான்டா புத்திசாலியை பொண்டாட்டியா அடைஞ்சிருக்கணும்ன்றது. எனக்கு அந்த சான்ஸ் இல்ல. ஆனா, கார்த்திக் நீ ட்யூப்லைட்டா இருந்தாலும் என் மருமகள் ப்ரைட். அதனால உன்னோட ஃபியூச்சர் ப்ரைட்டாயிருக்கும்.”
“அப்ப உங்க லைஃப் என்னால போச்சிதுன்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தான?” என்று முறைத்தபடி, காஃபி, ஸ்நாக்ஸுடன் ஈஸ்வரி வர, காஃபியை வாங்கியபடியே, “அப்படிக் கேளுங்கம்மா” என்று கார்த்திக்கும், சந்தோஷும் ஆதரவுக் குரல் கொடுத்தனர்.
“நான் அப்படியா சொன்னேன். இல்லையே?” என்று குமார் அந்தர் பல்டியடிக்க...
“அங்கிள் இது டூ மச்” என்று சிரித்தாள் அவந்திகா.
“வீட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜம்மா” என்றவரைத் தொடர்ந்து, “நல்லா யோசிச்சிட்டியாமா?” என்று ஈஸ்வரி அவந்திகாவைப் பார்த்து கேட்டார்.
‘என்ன யோசிச்சிட்டியா கேட்கிறாங்க? எதை யோசிக்கணும்?’ புரியாததொரு பார்வையை வீச,
அதற்குள் கார்த்திக், “அம்மா! கேட்கிறதை அவளுக்குப் புரியுற மாதிரி கேளுங்க. நீங்க என்ன கேட்டீங்கன்னு புரியாம முழிச்சிட்டிருக்கா பாருங்க.”
“ஓ... இல்லமா. எங்க கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுல எந்த மாற்றமும் இல்லையே? ஏன் கேட்கிறேன்னா, என் பையன்தான். இருந்தாலும் அவனுக்குன்னு நிரந்தர வேலை எதுவும் கிடையாது. அப்படியே கிடைச்சாலும், எங்க எந்த இடத்துல இருக்கான்னும் தெரியமாட்டேன்னுது. அது புழலா, வேலூரான்னு தெரியுறதுக்குள்ள ஒரு வழியாகிருறோம். ஒருசில டைம் மதுரைகூட போயிட்டு வர்றான்” என்று சொல்ல,
அவரின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு “என்ன ஆன்ட்டி புழல், வேலூர்னு ஜெயில் இருக்கிற ஏரியாவா சொல்றீங்க? அங்க இவங்களுக்கென்ன வேலை?”
சட்டென்று அனைவரின் முகத்திலும் ஒரு அதிர்வு வந்து மறைந்ததை அவந்திகா கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் சிலபல கேள்விகளை அப்பொழுதே கேட்டு தெளிவாகி இருப்பாளோ என்னவோ!
“அதையேன்மா கேட்கிற? செக்யூரிட்டி வேலைக்குத்தான் போவான். அப்புறம் பிடிக்கலன்னு திரும்ப வந்திருவான்.”
அவர் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் தெரிந்தது. குழப்பத்துடன் ஏதோ கேட்க வாய் திறக்க,
“அவந்தி அம்மா ஏற்கனவே நான் வேலை பார்த்ததைச் சொல்றாங்க. அங்க பிடிக்கலன்னுதான் பிரைவேட் செக்யூரிட்டி மூலமா கௌஷிக் கம்பெனிக்கு வந்தேன்.”
“ஓ...ஓகே” என்று ஒருவழியாக சமாதானமானவளுக்கு, ஈஸ்வரி முதலில் கேட்ட கேள்வி நினைவு வர, “உங்க பையன் மேல் முழு நம்பிக்கையிருக்கு ஆன்ட்டி. நான் எடுத்த முடிவை எப்பவும் மாத்திக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் உங்க பையன்தான் என் ஹஸ்பண்ட்” என்றாள்.
“அப்ப அடுத்த ஜென்மத்துல இந்த மூஞ்சி வேண்டாமா அண்ணி?” சந்தோஷ் சற்றே கிண்டலாகக் கேட்டான்.
அவனின் கிண்டலை உணர்ந்தவள், “அது உங்க அண்ணனோட கேரக்டரைப் பொறுத்து” என்று கார்த்திக்கின் புறம் திரும்பி கண்சிமிட்டி சிரித்தவள், “உங்க ஹஸ்பண்ட் போஸ்டிங்கை கரெக்டா பண்ணிருவீங்கதான?” என்றாள்.
அவள் கண்சிமிட்டிய அழகில் மயங்கி புன்னகையுடனே பார்த்தபடி, “அந்த போஸ்டிங் கிடைச்சதும் எப்படி உன்னை அசத்தி, அசரடிக்கிறேன் பாரு” என்றான் பதிலுக்கு கண்ணடித்தபடி.
பேச்சிக்களுடனும் சிலபல கால்வாரல்களுடனும் நேரம் வேகமாக ஓட, வெளியே இருட்ட ஆரம்பித்ததும், “டைமாகிருச்சி நான் கிளம்பறேன். வர்றேன் அங்கிள், வர்றேன் ஆன்ட்டி” என்றாள்.
“அங்கிள் ஆன்ட்டி வேண்டாம். அத்தை மாமா சொல்லுமா” என்றதும், “சரி வர்றேன் மாமா. வர்றேன் அத்தை. வர்றேன் சந்தோஷ்” என்றபடி வெளியேற, அவளுடனேயே வெளியில் வந்த கார்த்திக், “வீட்ல இன்னைக்கு எதாவது பிரச்சனை வந்ததா அவந்தி” என கேட்டான்.
இல்லங்க எனக்கும் காலையிலிருந்து மனம் திக் திக்னுதான் அடிச்சது. ஆனா, அவங்க எப்பவும்போல கேசுவலா இருக்கிறாங்க.
எதுக்கும் உங்க அத்தையிடமும், அந்த கௌஷிக்கிடமும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு அவந்தி. நான் எப்பவும் உன்னோடவே இருக்க முடியாது. நேத்து நைட் நீ சொன்னதிலிருந்து உள்ளுக்குள்ள ஒருபயம் இருந்துகிட்டே இருக்கு. நேற்றைய பேச்சை இன்னைக்கு தொடரலைன்னு வேற சொல்ற. சம்திங் ராங். எங்க வெளியில போனாலும் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடு சரியா.
சம்மதமாக தலையாட்டியவளிடம், “என்னோட ஃபேமிலி உனக்குப் பிடிச்சிருக்கா அவந்தி?”
“ஹலோ பாஸ்! உங்க ஃபேமிலி இல்ல. நம்ம ஃபேமிலி ஓகே. எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு அப்படியே அத்தையோட முகச்சாயல். ஆனாலும், எனக்கு மாமாவைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு கார்த்திக். பட், ஒரு சின்ன வித்தியாசம் தெரிஞ்சது உங்க ஃபேமிலிக்கும் இருக்கிற இடத்திற்கும் சம்பந்தமில்லாத மாதிரி.”
“ஏன்?”
“இல்ல அத்தைக்கு ஐம்பது வயசிருக்குமா?”
“இல்லமா. ஐம்பத்திரெண்டு” என்றான்.
“ஆனா, பாருங்க. அவங்களுக்கு வயசே தெரியல. ஒரு ஃபார்ட்டி இயர்ஸ் மதிக்கலாம். நகையெதுவும் போடாமலேயே, பார்க்க ரிச் லுக்ல, போல்டான லேடியா இருக்காங்க. மிடில் க்ளாஸ் பேமிலிங்களோட நான் பழகியிருக்கேன். அவங்களை மட்டமா சொல்லலை. ஆனாலும், ஏதோ ஒரு வித்தியாசம் உங்க எல்லார்கிட்டேயும்” என்று மனதிலுள்ளதை மறைக்காது சொன்னாள்.
ஒரு சின்ன அதிர்வு அவனுள் தோன்றியதை மறைத்து, “இல்லடா. நான்தான் படிப்பு கம்மி. மத்தபடி தம்பி இன்ஜியரிங். அப்பா, அம்மாவும் படிச்சிருக்காங்க. பார்க்க டீசண்டா இருக்கிறதால உனக்கு அப்படி தோணுதோ என்னவோ” என்று ஒருவாறு சமாளித்தவன், ‘சே... ஒழுங்கா நடிக்கச் சொன்னா, ஓவரா நடிச்சிட்டாங்க போலருக்கே’ என மனதினுள் வீட்டிலுள்ளவர்களைத் திட்டினான்.
“ஓ... அப்படியா” என்றவளுக்கு, கார்த்திக் சற்று அதிர்ந்தாற்போல் தெரிந்தானோ என, நினைக்காமலிருக்க முடியவில்லை. வண்டியில் செல்லும்போதே, ‘நல்ல குடும்பம்’ என்று தோன்றினாலும், அதையும் மீறி ஒருவித செயற்கைத்தனம் இருந்ததோ என்று தோன்றியது. ‘ப்ச்... அப்படியெல்லாம் இருக்காது’ என்று, தனக்குத் தோன்றியதை மனமென்னும் குழியைத் தோண்டிப் புதைத்தாள்.
வீட்டிற்கு சென்றதும், மாமாவும் கார்த்திக் சொன்னதையே சொன்னாலும், அவன் போன் செய்ததை சொல்லாமல் மறைத்தார்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மாமா” என்றாள் அசட்டையாக. ‘தன்னை மீறி கௌஷிக் என்ன செய்துவிடுவான்’ என்ற எண்ணம்தான் அவளுக்கு.
நம் எண்ணங்கள் சரியாக இருப்பினும், எதிரிலிருப்பவரின் எண்ணங்களும், நம்மையே பிரதிபலிக்க வேண்டுமென்று எதுவுமில்லையே.
கௌஷிக்கை கொஞ்சம் கம்மியாகவே மதிப்பிட்டாள் அவந்திகா. அவனால் வரப்போகும் பின் விளைவை அறியாமல்.