• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
7



பத்து ஆண்டுகளுக்கு முன்:

தன் சுறுசுறுப்பால் வீட்டையே ரணகளப்படுத்தி மற்றவர்களை ரசிக்கவும் வைத்தாள் ஹரிப்ரியா. வீட்டின் முன்புறமுள்ள மரத்தில் ஏற கால் வைக்கையில், “பாப்பா என்ன பண்ற?” என்ற கேள்வியோடு வந்த மீனா அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்க யாருமில்லை என்றதும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, “இப்படில்லாம் செய்யக்கூடாதுமா. பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்கள்ல?” என்றார் பொறுமையாக.

“ஏன் தப்பா நினைக்கணும்? இது நம்ம வீடு உன்னிஷ்டம் போல இருன்னு சொன்னீங்க. என் வீட்டுல விளையாடுறதுக்கு யார் என்னை தப்பா நினைப்பாங்க?”

“பாப்பா புரிஞ்சிக்கோ. நீ ஒண்ணும் குழந்தையில்ல. வயசுக்கு வந்த பொண்ணு இந்த மாதிரி மரம் ஏறக்கூடாது. பொம்பளைப் பிள்ளை வேற எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சிதுன்னா யார் உன்னை கட்டிப்பாங்க?”

இருவரின் வாக்குவாதங்களையும் சிரித்தபடியே கேட்டு வந்தவன், “என்ன காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா? ம்.. சூப்பர் நீங்க சண்டை போடுங்க. நான் என்ஜாய் பண்றேன்” என அங்கேயுள்ள சேரில் அமர்ந்தான்.

“நீங்க இப்படி சொல்றீங்க. சித்தி நினைச்சாப்ல உட்கார்ந்திருற நேரத்துல அங்கயிங்க குதிக்காத சொல்வாங்க. வயசுக்கு வந்த பிள்ளைங்க தான பாட்டி பயப்படணும். நான் எதுக்கு பயப்படணும்?” என்றாள் பதில் கேள்வியாய்.

மூளை மரத்துப் போனாற்போல் புரியாமல் “என்ன சொல்ற பாப்பா?” என்ற மீனாவிற்கு பெரிதாக எதோ வரப்போகிறது என்ற எண்ணம் தோன்றியது.

“புரியலையா? மண்டு மண்டு! நான் தான் இன்னும் வயசுக்கு வரலையே. அப்ப நான் மரம் ஏறலாம் தானே!” என்று அசராமல் இடியை இறக்கினாள்.

“பாப்பா!” என இருவரம் ஒருசேர அதிர்ந்து, “நீ சொல்றது நிஜமா?” என்றனர்.

“ஆமா பாட்டி. என் க்ளாஸ்லயே நானும் ஃபாத்திமாவும் தான் ஏஜ் அட்டெண்ட் பண்ணாதவங்க” எனும்போதே அவர்கள் ஏமாந்த விதத்தின் அளவு ரொம்ப அதிகமாகப் பட்டது.

‘இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமா? சின்னப் பெண்ணை... அதுவும் வயதுக்கே வராத பெண்ணை முப்பத்திநாலு வயதுள்ளவனுக்கு மணமுடிக்க எப்படி மனம் வந்தது?’ நெஞ்சம் கொதித்தது தாய்க்கும் மகனுக்கும். ‘ஹ்ம்.. நல்ல சாப்பாடு துணியில்லாமல் வளர்ந்த பொண்ணு சீக்கிரம் வந்தால்தான் ஆச்சர்யப்படணும்’ என மீனா நினைக்க... அனைத்தையும் வேறு வழியில்லாமல் தங்களுக்குள் ஜீரணித்து அவள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

“எங்க க்ளாஸ்ல நாலஞ்சி பிரிவு இருக்கும் பாட்டி. அதுல ரெண்டு க்ரூப் எப்பப்பாரு அசிங்கமா பேசுவாங்க. இன்னும் ரெண்டு க்ரூப் வேடிக்கை பார்ப்பாங்க. இல்ல சினிமா பத்தி பேசுவாங்க. இன்னொரு க்ரூப் பாய்ஸ் பத்தியே பேசுவாங்க. ஆனா ராசாத்தி மட்டும்தான் படிச்சிட்டிருப்பா. ராசாத்தி யாரு பார்க்கறீங்களா? அது நான் தான்” என்றாள் வெட்கத்துடன்.

அவர்களுக்கு புரிந்தது அவள் அனைத்தையும் கவனிக்கிறாள் என்று. அவளுக்கு பதில் சொல்ல எண்ணி, “ராசாத்தின்றது நீயா? ஏன் இதுவரை எங்ககிட்ட சொல்லலை” என பொய்யான கோபத்துடன் கிரி கேட்க..

“நீங்க என்கிட்ட கேட்கலையே மாமா. அப்புறம் எப்படி சொல்றது. இப்பக்கூட நீங்க கேட்கலை தான். ஆனா, சொல்லணும்னு தோணிச்சி சொல்லிட்டேன்.”

“சரிமா. ஏன் உன்னை இப்பவே இங்க (கல்யாணம் என்பதை சொல்லாமல்) அனுப்பி வச்சாங்க?”

“அது ஒரு பெரிய்யயய கதை மாமா.”

“பரவாயில்ல பாப்பா சொல்லு. நாங்களும் முழுசா கேட்டுக்கறோம்.”

“அப்ப சரி” என்று மீனாவின் அருகில் அமர்ந்தவள், “எங்க ஸ்கூல் மாப்பாளையம்ல (மஹபூப்பாளையம். மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து முதல் ஸ்டாப்! கம்பம் தேனி போகும் வழி) இருக்கு பாட்டி. நாங்க வர்ற பஸ்லதான் பாத்திமா காலேஜ் ஸ்டாப்பிலிருந்து லெவன்த் படிக்கிற அக்கா ஏறுவாங்க. அவங்க எங்க ஸ்கூல்தான். அவங்களுக்கு எங்க ஊர் அண்ணா ஒருத்தர் லெட்டர் குடுத்து விடுவாங்க. இது டெய்லி நடக்கும். ஒரு நாள் அந்தண்ணா வீட்லயிருந்து சித்தியைப் பார்க்க அவங்கம்மா வந்திருக்காங்க.”

அன்று ஹரிப்ரியாவின் சித்தி சரிதாவிடம் வந்த பெண், “உன் பெண்ணை கண்டிச்சி வளர்க்கத் தெரியாதா? பிள்ளையா இது! வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே காதல் கல்யாணம்னு அலையுது. விவரம் தெரிஞ்சிட்டா ஒரு பயலை விடமாட்டா போல. அவங்கப்பன் மாதிரி எவனையாவது இழுத்துட்டுப் போகப்போறா. ஜாக்கிரதையா இரு. இனிமேல் என் பையன் இருக்கிற பக்கம் அவளைப் பார்த்தேன், கொன்னு புதைச்சிருவேன்” என கத்திவிட்டுச் சென்றாள்.

சிறு குழந்தை முதல் பார்த்துப் பார்த்து வளர்த்த ஹரிப்ரியாவின் சித்தி சரிதாவிற்கு இது பெரிய அவமானமாகப்பட்டது. மாலை வீடு வந்த அக்கா மகளை அடி பின்னியெடுத்து விட்டாள்.

“வயசுக்கு வர்றதுக்கு முன்னாடி உனக்கு ஆண் துணை கேட்குதாடி. உன்னை யாரும் எதுவும் சொல்லிரக்கூடாதுன்னு பார்த்துப் பார்த்து வளர்த்தேனே. எல்லாத்தையும் கெடுத்துட்டு வந்து நிற்குறியே. இந்தப் பெயரெடுத்துக் குடுக்கவா, உன் பொறுப்பை நான் எடுத்து வளர்த்து படிக்க வச்சிட்டிருக்கேன். உங்கம்மா போயி உங்கப்பனால நீ சீரழிஞ்சிறக் கூடாதுன்னு நினைச்ச எனக்கு நல்ல பெயர்தான் வாங்கி குடுத்திருக்க. உன்னை இப்படியே விட்டா சரிவராது. இந்த பரீட்சை முடியுறதுக்குள்ள எதாவது பண்றேன்” என்றவளுக்கு அக்கா மகளிடம் என்ன நடந்ததென்று கேட்கும் நிதானம் தவறிப் போனதுதான் கொடுமை. வரக்கூடாத பழி வந்ததும் கோபம் தன் வளர்ப்பு தவறாகிவிட்டதென்று.

அதே சமயம் தூரத்து உறவினர் ஒருவர் கிரிதரனுக்கு பெண்ணே அமையவில்லை நல்ல குடும்பம். தங்கமான பையன் என்று சரிதாவிடம் புலம்ப... “தெரிந்த பெண் இருக்கிறாள். ரெண்டு நாள் டைம் குடுங்க” என்று முகவரி வாங்கி, தன் அக்கா மகளை ஸ்டூடியோ அழைத்துச் சென்று சேலைகட்டி கொஞ்சம் முதிர்ந்த பெண்ணாக காண்பிக்கச் சொல்லி ஃபோட்டோகிராபரிடம் சொன்னாள்.

மறுநாளே அந்த பையன் பற்றிய உண்மை தெரிய, தன் அக்கா மகளை அசிங்கப்படுத்திய பெண்ணிடம் நேரே சென்று, “என் அக்கா பெண்ணை நீங்கள்லாம் பேசுற அளவுக்கு தரக்குறைவா வளர்க்கல. உங்க பையன் எங்க வீட்டுப் பொண்ணோட வெகுளித்தனத்தை உபயோகிச்சிகிட்டான். உங்க பையன் காலேஜ் போகும் போது பின்னாடியே போயி ஃபாத்திமா காலேஜ் ஸ்டாப்ல, பதினொன்னாவது படிக்கிற பாண்டியம்மான்ற பொண்ணு ஏறுவா அவளைப் பிடிங்க. எல்லாம் தெரியும். முழுசா எதுவும் தெரியாம அடுத்த வீட்டுப் பொண்ணுங்க மேல சேற்றை அள்ளிக் கொட்டாதீங்க” என விருவிருவென்று வீடு வந்தவளுக்கு மனது கேட்கவில்லை.

‘சே... அவசரப்பட்டு போட்டோ வேற எடுத்து சின்னப் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணிட்டேனே” என வருந்தினாலும், ஒரு மனம் ‘இப்ப சின்னப் பொண்ணு. இனிமேல்தான் அவளின் வளர்ச்சியே இருக்கு. எதாவது தப்பாச்சின்னா எல்லாரும் என்னைக் காரித் துப்புவாங்களே’ என்ற எண்ணம் தோன்றியது.

பையன் வீட்டைப் பற்றி விசாரிக்கையில் அம்மா மகன் இருவருக்கும் யாரையும் அதிர்ந்து பேசியோ, இல்லை வம்பு வழக்கென்றோ இதுவரை இருந்ததில்லை. நல்ல குணம். நல்ல குடும்பம் என்றறிந்ததும், இரண்டாம் நாளே அந்த உறவினரிடம் போட்டோவைக் கொடுத்து பெண் பார்க்க வரச்சொல்ல... அவரோ கையிலிருந்த பையனின் ஜாதகத்தை கொடுத்துச் சென்றார்.

அப்பொழுதே ஜாதகத்தைப் பார்த்திருந்தால் உண்மை தெரிந்திருக்குமோ என்னவோ! வாங்கிய ஜாதகம் அப்படியே பெட்டியில் உறங்கியது. “ஆம். முடிவே பண்ணிவிட்டாள் தன் அக்கா மகளை பொறுப்பான இடத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று. திருமணத்திற்குப் பின் வரும் பிரச்சனைகளை தங்களின் குடும்ப கௌரவத்திற்காகவாவது மறைத்து எதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை அவர்களை நேரில் பார்த்த போது வந்தது.”

கணவன் அவள் சின்னப் பெண்ணென்று தடுத்தபோதும், “இல்லங்க அவ நல்லாயிருக்கணும். இதைவிட்டா எனக்கு வேற வழி தெரியல. இது பாவம்தான் இல்லன்னு சொல்லல. நல்லதுக்காக செய்ற எதுவும் பாவத்துல சேராது. அப்படியே சேர்ந்தாலும் அதை எனக்கு மட்டும் குடுக்க அந்த மீனாட்சி தாயை வேண்டிக்கிறேன்” எனும்போது தூங்கிக் கொண்டிருந்த ஹரிப்ரியாவின் காதில் அந்த வார்த்தைகள் அரைகுறையாக விழுந்தது.

திருமணத்தன்று யார் என்ன சொன்னாலும் குனிந்;த தலை நிமிரக்கூடாது. நிமிர்ந்தா அன்னைக்கு மாதிரி அடி நிமிர்த்தி எடுத்திடுவேன் என ஹரிப்ரியா மௌனியானாள். மகளின் திருமணம் பற்றி தன் சொந்தங்கள் யாருக்கும் சரிதா தெரிவிக்கவில்லை. தன்னிடம் நெருக்கமாகப் பழகும் நெருக்கமான நம்பகமான ஒரு சிலரை மட்டுமே அழைத்துக் கொள்ள... கேள்வியாய் பார்த்த மீனாவிடம் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்க... நமக்குத் தேவை பொண்ணுதானே என்று அவரும் அதை கைவிட திருமணமும் நடந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அப்பக்கூட நான் கேட்டேன் பாட்டி, வயசுக்கு வந்த பெரிய அக்காங்களுக்குத் தானே கல்யாணம் பண்ணுவாங்கன்னு. “சித்தி தான் தெரியும்மா.. நீ மேல படிக்கணும்னு சொன்னல்ல உன் மார்க் சீட்லயிருந்து எல்லாமே இதுல வச்சிருக்கேன். உன்னை அவங்க படிக்க வைக்கணும்னுதான் அங்க கல்யாணம் பண்ணி அனுப்புறேன் சொன்னாங்க.” அதான் சரின்னு சொல்லிட்டேன் என்று சிரித்தபடி சொல்ல...

சின்னவளின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப தங்களது அதிர்ச்சியை அதிகப்படுத்தினாலும், அதைச் சமாளித்து நிகழ்வுக்கு வர, முழுதாக இல்லையென்றாலும் சரிதாவின் மேல் கோவம் வரத்தான் செய்தது. தன் மகளைப் பாதுகாப்பார்கள் என்பது நல்லதுதான். ஆனால், தங்களுக்குச் செய்தது துரோகம் அல்லவா!

மகனுக்கு திருமணம் என்ற சந்தோஷத்தில் தாய் இருக்க.. மனைவியாகப் போகிறவளை எண்ணி கல்யாணக் கனவுகளில் அவன் மிதக்க.. எல்லாவற்றையும் ஒன்றுமே இல்லையென்றாக்கிய கோவம் தான் சரிதா மேல்.

அனைத்தையும் சொல்லி முடித்தாயிற்று என்பதுபோல் “அப்பாடா!” என்ற பெண்ணை தன்னோடு சேர்த்தணைத்தாலும், மனம் ஏனோ ஆற மறுத்தது. தன் மகன் திருமணம் செய்வேன் என்று சொன்னாலும், செய்வானா? என்ற கேள்வி எழுந்தது அந்த தாய்க்குள்.

“ராசாத்தி நீ போயி ப்ரிட்ஜ்ல ஐஸ்க்ரீம் இருக்கு. எடுத்து உன் ரூம்ல உட்கார்ந்து சாப்பிடு. உன் படிப்பு பத்தி மாமாவோட நான் பேசிட்டு வர்றேன். சரியா” என்றதும்... சரியென்று தோளைக் குலுக்கிச் சென்றவள் திரும்பி வந்து, “நல்ல பாட்டி எனக்கு ஐஸ்க்ரீம்லாம் தர்றீங்க” என்று முத்தமிட்டு ஓடிவிட்டாள்.

தாயும் மகனும் வெகுநேரம் தலையைப் பிடித்தபடி அமர, தன்னை திடப்படுத்தி முதலில் வாயைத் திறந்தான் கிரி, “நாம இந்த ஊரைவிட்டு வேற இடத்துக்குப் போயிரலாம்மா” என்றான்.

மகன் வாய்விட்டு சொன்னதைத்தான் இவ்வளவு நேரமும் மீனாவும் நினைத்தது. சின்னதாக மூச்சை இழுத்துவிட்டு “நானும் அதையே தான் முடிவு பண்ணியிருக்கேன். ராசாத்தி பற்றிய விஷயம் உள்ளுர்ல பரவுறதுக்கு முன்னாடியே கிளம்பிரணும். அவளுக்கும் நடந்த எதுவும் புரியக்கூடாது. அதே சமயம் பெரியவளானதும் அவளுக்கா புரிந்து கேட்டா விளக்கம் சொல்லிக்கலாம்.”

“சரிம்மா. நான் ரெண்டு நாள் கழிச்சி சென்னை போறேன். அதுக்குள்ள நல்ல வீடா இப்ப கட்டினதா பார்த்து பேசி முடிச்சி ரிஜிஸ்டர்கு ரெடி பண்ணச் சொல்லி பாபுகிட்ட பேசிருறேன். மத்ததை அங்கேயே பார்த்துக்கலாம்” என பேசி முடித்து இருவரும் முடிவெடுக்க மறுநாளே அடுத்த அதிர்ச்சி ஆனந்தமாய் காத்திருந்தது.

ஆம். சின்னஞ் சிறுமியாக வந்தவள் பெரிய பெண்ணாகி விட்டாள். இதை எண்ணி சந்தோஷப்படுவதா இல்லை துக்கப்படுவதா தெரியவில்லை. இருப்பினும் மஞ்சுவை மட்டும் அழைத்து விஷயம் சொல்லி தேவையான சடங்குகளை தாங்களே செய்து, மாமன் முறைக்கும் கிரியே சேலை கொடுத்து இருவரும் ஆசீர்வதிக்க.. வயிற்றுவலியில் துடித்த பெண்ணை தன் வயிற்றோடு சேர்த்தணைத்து கண்ணீர் விட்டார் அவளின் பாட்டியாகிய தாய். எப்படி இந்தப் பெண்ணை என்ன சொல்லி கரையேற்றுவதென்று புரியவில்லை. வாழ்க்கையை அதன் போக்கிற்கு விட்டு விடலாமென்று மனதை தெளிவுபடுத்தி அந்த நேரத்து அறிவுரைகளும், அதன் பிறகான வாழ்க்கைக்கும் தேவையான அறிவுரைகளும் சொல்ல அனைத்தையும் தன் மனமென்னும் புத்தகத்தில் பதிவேற்றினாள் அச்சிறு பெண்.

தன் நண்பனிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால், “இரண்டு நாட்களுள் வீடு ரெடி நீ வந்ததும் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். அப்புறம் வீட்டிற்கு தேவையான அமௌண்ட்” என்று ஒரு தொகையைச் சொன்னான்.

“கையில கொஞ்சமா பணம் எடுத்துட்டு வர்றேன்டா. சென்னைக்கு வந்து செக் தர்றேன். அது சரிவராதுன்னா பேங்க்ல எடுத்துத் தர்றேன். சரியா?” என்றதும் நண்பன் சம்மதம் சொல்ல.. “இன்னைக்கு நைட் கிளம்பி நாளைக்கு காலையில அங்க இருப்பேன். ரிஜிஸ்டர் பண்றதுக்கு முன்னாடி ஈசி பார்த்துட்டியா? அப்புறம் பத்திரம், பட்டா எல்லாம் பக்காவா இருக்கான்னு பாரு.”

“டேய்! போதும் நிறுத்து. நீ ரியல் எஸ்டேட் பிசினஸ்காரன்னு என்கிட்டயே நிரூபிக்கிறியா. நீ வாடா எல்லாம் பக்காவா இருக்கு.”

அன்றிரவே தாயிடம் சொல்லி, “பாப்பா மாமா ஊருக்குப் போறேன். அம்மாவை நல்லா பார்த்துக்கோ. வயசானவங்க எப்பவும் உன் கண்காணிப்புல இருக்கணும். நீயும் அவங்க சொல்றதைக் கேட்டு நடக்கணும் சரியா.”

“ம்... சரிங்க மாமா. நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க” என்றாள் பொறுப்பான பெண்ணாய்.

“அம்மா அங்க இவள் படிக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருறேன். முடிஞ்சா நானே ஃபார்ம் ஃபில் பண்ணி பணமும் கட்டிட்டு வந்திருவேன். அதுக்குள்ள இவளை யாரும் கேள்வி கேட்கிற மாதிரி விட்றாதீங்க.”

“அதை நான் பார்த்துக்கறேன். அதென்ன என்னை அவ பார்த்துக்கப் போறாளா? உனக்கே அதிகமா தெரியல” என்ற தாயின் அங்கலாய்ப்பில் சிரித்தபடி, “சின்ன பொண்ணுங்ககிட்ட ஒரு பொறுப்பைக் கொடுத்தா அதை கரெக்டா செஞ்சி நல்ல பேர் எடுக்கணும்னு முயற்சிப்பாங்க. அப்படியே அதை என்கரேஜ் பண்ணினா குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியவரும்மா!”

அவனின் எண்ணத்தைப் பொய்க்காமல், “பாட்டி ஏன் நான் உங்களை பார்த்துக்க மாட்டேனா. எத்தனை காலமானாலும் நீங்க என்னோட தான் இருக்கப் போறீங்க. நான் எங்கே போனாலும் என்னோட தான் வர்றீங்க. வருவீங்க! இல்ல வரவைப்பேன்” என தெளிவாக ஆணித்தரமாக பேசிய பெண்ணை அணைத்து, “சரிமா ராசாத்தி. இவன் கூட நமக்கு வேண்டாம். நாம ரெண்டு பேருமே தனியாயிருக்கலாம்” என எந்த நேரம் சொன்னாரோ... தேவதைகளின் ததாத்சு சத்தம் கேட்டது அங்கே! அவர்களை முறைத்தாலும், இருவரின் கொஞ்சலையும் மனமகிழ்வோடு ரசித்து அன்றிரவே சென்னை கிளம்பினான்.

கிரி சென்னையில் ஒவ்வொரு வேலையாய் முடித்து தாயிடமும் அவ்வப்பொழுது போன் செய்து பேச... அதே நேரம் மதுரையில் தங்களது வீட்டை காலி செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை மீனா செய்தார். மகன் வந்த அன்றே சென்னை கிளம்புவதாக ஏற்பாடு.

இன்றோடு திருமணம் முடிந்து ஒன்பதாவது நாள். தன் நண்பனிடம் மட்டும் ஹரிப்ரியா பற்றிய உண்மையை பகிர்ந்தவன், “ஏனோ மனசு சரியில்லடா. என்னவோ ஒண்ணு நடக்கப் போகுதுன்னு தெரியுது. சப்போஸ் எனக்கே எதாவது ஆகிருச்சின்னா அம்மாவையும், பாப்பாவையும் இங்கே கூப்பிட்டு வந்து, நான் செய்யணும்னு நினைச்சதை நீ செஞ்சிரு பாபு. உன் ஒஃய்ப் தப்பா எடுத்துப்பாங்கன்னா வேண்டாம்டா.”

“என்னடா கிரி லூசு மாதிரி உளர்ற. அது சின்னப் பொண்ணுடா. அவளைப்போய் சௌந்தரி தப்பா எடுத்துப்பாளா. கண்டிப்பா நாமல்லாம் சேர்ந்தே நல்லா பார்த்துப்போம். அதுக்காக இப்படில்லாம் பேசாத” என்றான்.

இருப்பினும் அவளின் படிப்புச் செலவு முதல் திருமணச் செலவு வரை அனைத்திற்கும் ஒரு அட்டவணையிட்டு, வீட்டை பாட்டி பேத்தி பெயரில் ஜாய்ண்ட் செய்திருந்தான். அவர்கள் இங்கு வந்ததும் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று நண்பனிடம் கொடுத்திருந்தான். எது எப்படியென்றாலும் தன் கடமையை சரியாக செய்து முடித்து மதியமே பஸ் ஏறினான்.

சற்று நேரத்திற்கு முன், “இந்நேரம் போனா மிட்நைட் ஆகும்டா” என்ற நண்பனிடம் தெரியும் பாபு அம்மா அங்க எல்லாத்தையும் பேக் பண்ணிட்டாங்களாம். நான் லாரி ஒண்ணு ஏற்பாடு பண்ணிட்டேன். நான் போனதும் ஏத்திட்டு அப்படியே கிளம்பி வர வேண்டியதுதான். அதோட நாங்க வர்றதுக்குள்ள எது தேவையோ அதை போன் பண்றேன் சிரமம் பார்க்காம வாங்கி வச்சிருடா ப்ளீஸ் என்றான்.

“உதைபடுவடா உனக்கு செய்றதுக்கு சிரமமா. இதுல ப்ளீஸ் வேற கொன்னுருவேன். போயி ஒழுங்கா அம்மாவையும் அக்கா மகளையும் கொண்டு வந்து சேரு” என்றான் பாபு.

இங்கே மனதில் எடுத்த முடிவோடு அனைத்தையும் நல்லபடியாக செய்திருக்கிறோம் என்ற திருப்தியோடு சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் பஸ்ஸில் கிரி பயணித்தான்.

இரவு பனிரெண்டுக்கு வந்த போனை அட்டெண்ட் செய்த மீனாவிற்கு ‘ஐயோ!’ என்ற அலறல் வராமலிருக்க பெரும்பாடு பட்டு, “இ..தோ வர்றோம்” என்று அடக்கியும் வெளிப்பட்ட கண்ணீருடன் பேத்தியையும் எழுப்பி இரவில் கார் பிடித்து திருச்சி கிளம்பினார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top