- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
11
“ஏன் திடீர்னு டல்லாகிட்டீங்க?”
“நத்திங்மா.”
“என்னைக் கேட்டீங்களே, உங்களுக்கு கல்யாணமாகிருச்சா? இல்ல பார்க்கிறாங்களா?”
“கல்யாணம் இன்னும் இல்லை” என்றவன் அவள் முகம் பார்த்து, “இனியும் சந்தேகம்தான்” என்றான்.
“ஏ...ஏன் அப்படி?” திக்கியது அவள் குரல்! பலமாய் அதிர்ந்தது அவள் இதயம்!
“ம்... தெரியலை அன்ட் புரியலைமா. நிறைய குழப்பம். எப்படி சரி செய்றதுன்னு தெரியலை. நிறைய கேஸ் நான் சால்வ் பண்ணியிருக்கேன். ஆனா, என்னோட சொந்தப் பிரச்சனையில் சின்னதா கூட எதுவும் செய்ய முடியலை” என்றான் வருந்திய குரலில்.
ஏனோ அனைத்து துன்பத்தையும் அடக்கி அமைதியாயிருக்கும் நிலை. தன் நிலையை தானே நொந்து கொள்ளதான் முடிந்தது.
அதை உணர்ந்தாளோ, அவனையே உயிரென்று வாழ்பவள்! “உ..உங்க லவர் கூட எதாவது பிரச்சனையா?” கேட்டுவிட்டாள் அவன் பதில் என்னவென்றாலும் அதை ஜீரணிக்க முடிவெடுத்து.
சட்டென்று அவள் கண்பார்த்து, “எனக்கு லவர் இருக்கிறதா சொல்லலையே?” என்றான் அவளை ஆராய்ந்தபடி.
சட்டென்று உதடுகடித்து, “இல்ல இந்த ஏஜ்ல இவ்வளவு குழப்பம்னா, அது காதலா இருக்கலாமோன்னு ஒரு கெஸ்தான்” என்றாள்.
“ம்... அதுவும் ஒரு வகையில் சரிதான். ஒன் சைட் லவ். இதுவரை அந்த பொண்ணுகிட்ட சொல்லலை. அவள்கிட்ட சொல்லலையே தவிர அவளைத் தவிர எல்லாருக்கும் சொல்லிட்டேன். தேவைக்கு அதிகமாகவே வாங்கியும் கட்டிக்கிட்டேன்.”
“ஏன் சொல்றதுக்கென்ன?” என்று அவன் முகம் பார்க்க,
‘ப்ச்...’ என சலிப்பாக உச்சுக்கொட்டி பழையபடி கால் நீட்டி அமர்ந்து தன் வேதனையை முழுங்கி, “அவளுக்குக் கல்யாணம் பேசிட்டாங்க” என்றதும் அவளுள் அதிர்வு.
‘கடவுளே! என்னோடதுதான் தோற்றதென்றால் இவங்களுக்குமா?’ வலிதான் அவளுள்ளும். “அடுத்து என்ன செய்யுறதா இருக்கீங்க?”
“ம்... வேறென்ன நம்ம வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.”
“அப்பக் கல்யாணம்?”
அவளின் முகம் பார்த்து தன் ஏக்கத்தை அடக்கி, “பார்க்கலாம். இப்போதைக்கு சான்ஸ் கிடையாது. காலம் என்ன வச்சிருக்கோ அதன்படி நடக்கப்போறேன்.”
அவனின் பார்வைக்கு அர்த்தம் புரியவில்லை நட்சத்திராவிற்கு. இருவருக்குள்ளும் அமைதி. ‘ஒரே மாதிரி பெயர் இருக்கிறதாலதான் செட்டாகலையோ? ஆப்போசிட் போல் அட்ராக்ட் ஈச் அதர் சொல்ற மாதிரி, நட்சத்திரமும் சந்திரனும் குளுமையான கிரகங்கள். சந்திரனுக்குப் பதில் சூர்யான்னு இருந்திருந்தால் செட்டாகியிருக்குமோ!’
ஏதேதோ யோசனையுடன் இருந்தவள், “பேசாம உங்களுக்கு சூர்யா இல்ல கதிரவன்னு பெயர் வச்சிருக்கலாம்” என்று தன்னை மீறி சொல்லிவிட்டாள்.
அவன், “வாட்?” என்றதும்தான் வெளியே உளறியிருப்பது தெரிய, “சாரி உங்க பெயர் என்னவாயிருக்கும்னு கேட்க யோசிச்சேன்” என்றாள் உளறலாகவே.
“ஓ... அரிச்சந்திரன். வீட்டுல அரி. வெளிய அர்ஸ். தன்யா மேம் மட்டும் சந்துரு.”
‘எனக்கும் சந்துரு’ என நினைத்து, “சந்துரு நல்லாயிருக்கு” என்றாள்.
“தேங்க்ஸ். வந்து ரொம்ப நேரமாகிருச்சி. உன்கிட்ட பேசினதுல மைண்ட் கொஞ்சம் ஃப்ரீ. அதுக்கும் ஒரு தேங்க்ஸ். நான் கிளம்புறேன். நீ எங்க போகணும்? வண்டி ஏதும் இல்லன்னா ட்ராப் பண்ணவா?”
‘அதான் ஏற்கனவே ட்ராப் பண்ணிட்டீங்களே சந்துரு!’ மனம் கசக்க, “இல்ல சந்... சார். நீங்க போங்க. என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு. வீடு இங்க பக்கத்துலதான்” என்றாள்.
“ஓகேமா கேர்புல் அன்ட் டேக் கேர்” என்று சென்றவன் வெளியே செல்லுமுன் அவளைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து விடைபெற, செல்பவனையே கண்ணுக்குள் நிறைத்து மூச்சை இழுத்து, ‘கல்யாணத்துக்கு முன்னாடிவரை உன்னை நினைக்க எந்த கட்டுப்பாடுகளும் எனக்கில்லை. ஐ லவ் யூ சந்துரு!’ மனதோடு அவனிடம் சொன்னாள்.
அவ்வார்த்தை அவனுக்குக் கேட்டுவிட்டதோ! அவள் பார்வையிலிருந்து மறைந்தவன் திரும்ப வந்து, அவளின் கண்மூடிய நிலை பார்த்து, ‘ஐ லவ் யூ சொல்ல ஆசைதான் நதீரா. இனி சொன்னா அதுதான் இருக்கிறதுலயே பெரிய தப்பு. பாரேன் நீ கல்யாணம்னு சொல்ற. என்னால விஷ் பண்ணக்கூட முடியல. ரொம்ப செல்பிஷாகிட்டேன். வெல் குட் பை நதீரா.’
சட்டென்று அவள் கண்திறக்க அவனின் வெள்ளைச் சட்டை மட்டுமே தெரிந்தது. இதை என்னவென்று எடுத்துக் கொள்வதோ! ‘யார் அந்தப் பெண்? என்று கேட்டிருக்கலாமோ! கேட்டு சேர்த்து வைக்கப் போறியா என்ன?’ மனம் அவளை திட்டியது.
சொல்லாத காதல் செல்லாமல் போயின இருவருக்கும்.
ஏனோ தோழியிடம் பேசியாக வேண்டுமென்று அவளுக்கு அழைக்க, “நான் என்ன சொன்னா நீ என்ன செய்திருக்க?” என்றாள் கோவமாய்.
“நீ சொல்லி எதைக் கேட்கலன்னு கோவப்படுற நதி?”
“உன் அண்ணனைப் பார்த்தேன். எப்படி இருந்த மனுஷன் இன்னைக்கு கலங்கிப்போய், என்னால பார்க்கவே முடியலடி. உயிரே ஆடிப்போச்சிடி எனக்கு. அப்படி என்னடி வீம்பு உங்களுக்கு? பிடிச்ச பொண்ணை முடிச்சி வைக்கலன்னாலும், ஆதரவா இருக்கலாம்ல. இப்படி... ஹ்ம்... பெரியவங்களை விடு. நீ என்ன செஞ்சிட்டிருக்க கொடி? எனக்காகத்தான்னா நீ செய்யுறது சுத்தமா பிடிக்கலை” என்று கோவமாகக் கத்தினாள் நட்சத்திரா.
‘உன்னோட இந்த அன்பை மறுத்ததாலதான்டி பிடிக்கலை’ என நினைத்தாலும் சொல்லாது, “நதி நான் அப்படியே விட்ரமாட்டேன்னு உனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். மனசு சமாதானமாக கொஞ்சம் டைம் வேணும். இப்ப என்னாச்சி? எங்க பார்த்த அவனை?”
நடந்த அனைத்தையும் சொன்னவள், மறந்தும் அவன் காதல் தோல்வியைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தனக்கு நல்லது செய்வதாக எண்ணி அவள் அண்ணனை மறுபடியும் திருமணத்திற்கு வற்புறுத்துவாள் என்பது தெரியும்.
‘பூக்கும் பூக்களெல்லாம் பூஜைக்குப் போதில்லையே! அது போல்தான் அவர்களின் காதலும். தோன்றிய குறுகிய நாட்களிலே கருகியும் விட்டது.’
“சொல்லுங்கப்பா? இப்ப வரலப்பா. இன்னும் கொஞ்சநாள்தான். உங்க செல்ல பொண்ணு எனக்காக. ப்ளீஸ்பா! வேலையா? குட்பா. என்ன அங்க ஒரு இம்சை கிடந்து உயிரை வாங்குது” என்பதை மனதினுள் நினைத்து “நீங்க எப்ப வர்றீங்க? அடுத்த வாரமா? உங்களைப் பார்க்கணும் போலிருக்கு. சீக்கிரம் வாங்கப்பா. அம்மாவா? இதோ அம்மா. ம்மா... மா... மீ...”
“இதுக்கு மேல சுருக்க எதுவுமில்ல. எதுக்கு கத்திட்டிருக்க?”
“அப்பா அவங்க ஒய்ஃப்கிட்ட பேசணும் சொன்னாங்க” என்று போனை தாயிடம் கொடுத்து நகர...
“அத்தனையும் கொழுப்பு” என்றார் பல்லைக்கடித்தபடி.
“ஆல் க்ரெடிட் உங்களுக்குதான்மா.”
“உன்னை... இரு பேசிட்டு வந்து கவனிச்சிக்கிறேன்” என்று கணவரிடம் பேச ஆரம்பித்தார்.
சற்றுத் தள்ளியிருந்து நடப்பவற்றைப் பார்த்திருந்தான் அரிச்சந்திரன். அப்பாவிடம் பேச ஆசையிருந்தும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவரிடம் பேசி நிறைய நாட்களாகிவிட்டது. போன் செய்தாலும் அவர் எடுப்பதில்லை. தாயுமே வயிற்றை நிரப்பும் வேலை மட்டும் செய்கிறாரே தவிர தேவைக்கு மட்டுமே பேச்சு. பாட்டி சொல்லவே வேண்டாம். தங்கையானவளோ எப்பொழுதும் ஒரு முறைப்பு கூடுதலாய் விரைப்பு. அவளின் செய்கைகள் யாவும் குழந்தையைப் போல் தோன்ற முதலில் இருந்த வலிகளெல்லாம் புன்னகையாக மாறிவிட்டது.
முதல் நாள் சண்டையிட்டதோடு சரி. அதன்பின் முறைப்பு மட்டுமே. ஏனோ அவளைக்கண்டு சிரிப்புதான் வந்தது. அவனுமே தங்கையிடம் தன் காதல் தோல்வியைச் சொல்லவில்லை. முன்னர் போலிருந்தால் சொல்லியிருப்பான். இன்றோ, அவன் மனம் திறந்து நட்சத்திராவிற்குப் பின் சொன்னது அப்பன் முருகனிடமே!
‘லஞ்சம் தரமாட்டேன்னு சொன்னதால பழிவாங்கிட்டியா முருகா. ப்ச்... விடு நீ என்ன பண்ணுவ? இந்துப் பொண்ணா இருந்தாலாவது எனக்கு கருணை காட்டியிருப்ப. அவள்தான் வேறயாச்சே. அதனால் உன்மேல் கோவப்படலை.’ தன் பாரத்தை முருகரிடம் கொட்டிவிட்ட பிறகே சற்று நிம்மதியாக இருக்கிறான்.
‘அடேய் மடையா. மனிதனுக்குத்தானடா மதம்! கடவுளுக்கு ஏது மதம்!’ என்றாரோ அழகன் முருகன்! கடவுளின் சங்கேத பாஷை யாருக்குத் தெரியும்.