• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
26

நட்சத்திராவின் கேள்விக்கு, “நதிமா ப்ராக்டிகல்னு ஒண்ணு இருக்கேடா” என்றாள் மின்னல் பெண்.

“அப்படி ஒண்ணு இருந்தா, என்னால ஏன் சஞ்சித் அத்தானை கடைசி வரை ஏத்துக்க முடியாமல் போச்சிது? உன் அண்ணன் மேல உள்ள காதல் இப்பவரை குறையமாட்டேன்னுது. சந்துரு இல்லாத ஒருத்தரை கல்யாணம் பண்ணப்போறேன்னு தெரிஞ்சப்ப, ப்ராக்டிகலா அந்த வாழ்க்கையை ஏன் என்னால ஏத்துக்க முடியலை? உன் அண்ணனை நதீரா கூட மனப்பூர்வமா சேர்த்து வச்சி வாழ்த்த முடிஞ்ச என்னால, எனக்கே ஏன் செய்ய முடியாமல் போச்சிது. ஆக்சுவலி காதல்னா என்ன கொடி??!!” தன் மனதிலுள்ள அனைத்தையும் கொட்டி முக்கியமான கேள்வியுடன் நிறுத்தினாள்.

“காதல்னா என்ன? நல்ல கேள்விதான். அதிலும் காதலுக்காகக் காலமெல்லாம் கன்னியாவே இருப்பேன்னு சொன்ன நீ கேட்கிற. எனக்குத் தெரிஞ்சவரை உன்னை வைத்தே சொல்லட்டுமா?”

“ம்... சொல்லு. நானுமே என்னைத் தெரிஞ்சிக்கறேன்.”

“கோவில்ல அண்ணனைப் பார்த்ததும் அவன் கேரக்டர் பிடிச்சி காதலிக்க ஆரம்பிச்சேன் சொன்னியே. அது காதல் கிடையாது.”

“கொடி” என்று தோளில் இருந்தபடியே அவள் முகம் பார்க்க,

“பார்த்ததும் பிடிக்கிறதை சலனம்னு கூடச் சொல்லலாம். ஒரு மாசம் அவன் பின்னாடியே போயி மனசுல பதிய வச்சிக்கிட்டதை, ஓகேன்னு சொல்லலாம்.”

“ஓகேதானா? லவ் இல்லையா” என முகம் சுருக்க,

“குறுக்கப் பேசாதே” என தோழியை அடக்கி, “நீ காதலிச்சவன் வேற ஒருத்தியைப் பிடிச்சிருக்குன்னு சொல்லி உன்னை வேண்டாம் சொன்னப்ப, அவனுக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்ன பாரு. அதுல உணர்ந்தேன்! வியந்தேன்! உன் காதலை! பார்க்ல என் அண்ணனின் கோலம் பார்த்து, உன் உயிர் துடிச்சதுன்னு சொல்லி அதைவிட நீ துடிச்சியே அப்ப உணர்ந்தேன், உன் காதலை! உன் அம்மா அவசரமா மாப்பிள்ளை பார்த்தாலும், தாலி ஏறுற கடைசி நிமிஷம்வரை எனக்கான நேரம். அதுவரை யாரையும் காதலிக்கத் தடையில்லன்னு சொன்ன அந்த உறுதியில் உணர்ந்தேன், உன் காதலை!”

“அண்ணனுக்கு கல்யாணம் பிக்ஸானது தெரிஞ்சும் ஏன் சொல்லலைன்னு கோவப்பட்டாலும் மனசார வாழ்த்துனியே அப்ப உணர்ந்தேன், உன் காதலை! நீ காதலிச்சதே தெரியாத ஒருத்தனுக்காக, கடைசிவரை அவன் நினைப்புல வாழ்வேன்னு சொன்னியே அந்த உன் காதலை முழுசா உணர்ந்திருக்கேன். அதே காதலன் கையால தாலி வாங்கிய பின்னும், அவனுடைய காதல் தோத்திருச்சின்னு வருத்தப்படுற பாரு, இப்பவும் உணர்ந்தேன், உணர்த்திட்டு இருக்க உன் காதலை! இதுதான் காதல்னு நான் சொல்வேன் நதி” என்றாள் நீண்ட விளக்கமாக.

தோழியின் விளக்கத்தில் கண்கள் தானாய் கண்ணீரைச் சிதறடிக்க, “ஏய்! நதிமா அழாதே” என்று கண்ணீர் துடைத்து, “உன் சந்தேகம் சரிதான்டா. ஒரே நைட்ல ஒருத்தன் தன்னை மாத்திக்கிறான்னா, அதுக்கு வலுவா ஒரு காரணம் இருக்கும். ஒண்ணு அவன் காதல் பொய்யா இருக்கணும். இல்ல அவன் காதலிச்ச பொண்ணு பொய்யா இருக்கணும். இரண்டும் இல்லன்னா அவங்க காதலே பொய்யா இருந்திருக்கணும்.”

“புரியலைடி? நான் அவங்க கண்ல பார்த்தேன் அவள் மீதான காதலை. அதெப்படிப் பொய்யாகும்?”

‘அவன் கண்ணு உன்னைப் பார்த்ததுல காதலைக் காட்டியிருக்கும். இதை எப்ப நீ புரிஞ்சி...’ மனதினுள் தோழியைத் திட்டி, “நதி அவங்க பொய்யா இல்லாமல் இருக்கலாம். அவங்களுக்கு இடையில் ஏதோ ஒண்ணு சரியில்லாமல் இருந்திருக்கும். ஏன் அவள்கிட்டப் போயி உன் புருஷனைக் கொடுக்கப் போறியா?” என்றாள் நக்கலாக.

“சீச்சீ... லூசாடி நீ. பழைய பட டயலாக்தான். இருந்தாலும் அவள் காதலன் என் கணவனாகலாம். என் கணவன் என்றும் அவள் காதலனாக முடியாது, என் கணவன் எனக்கு மட்டுமே! புருஷனைத் தூக்கிக் கொடுக்கிற பழைய காலத்து ஆள் கிடையாது. சின்னதா மனசுல ஒரு உறுத்தல். அவளோட வாழ்க்கையும் நல்லா இருந்துட்டா டபுள் சந்தோஷம்.”

“இந்தத் தெளிவு போதும் நதி. உன் வாழ்க்கையை நீ வாழ ஆரம்பிச்சிட்டா, நதீரா சதீரான்னு எதுவும் உங்களுக்கு இடையில வராது. சொல்ல வர்றது புரியுதா? பழசை மறந்து புதுசா உன் சந்துருவோட வாழ்.”

“ம்... உன் அண்ணன் சொன்னதை நீயும் சொல்ற?”

“அப்புறம் என்ன நட்டுமா. என்ஜாய் யுவர் மேரீட் லைஃப்” என்று ஆதரவாய் தோள் சாய்த்தாள்.

மின்னல் பெண்ணையே தான் பார்த்திருந்தான் அவன்! மணமகளை மடிதாங்கும் தாயாய் தெரிந்த பெண்ணைத் தனக்குத் தாரமாய் மாற்ற முனைந்தானோ!

நட்சத்திரா வந்தது மின்னல் தோள்சாய்ந்தது. மின்னலின் மென்மையான வருடலுடன் கலந்த தாயன்பு. என்ன பேசினார்கள் என்று கேட்டால் தெரியாது அவனுக்கு. அவர்களின் செய்கையில் உள்ள அன்பைத் தன் கண்களால் உணர்ந்தான். தங்கையின் வெட்கம், புன்னகை, வருத்தம் அனைத்திற்கும் ஆறுதல் அவளே ஆகிப்போனதைக் கண்ணாரக் கண்டு மனதினுள் வைத்த அடுத்த நொடி, ஒரு முடிவுடன் தாயிடம் சென்றான் முகில் குமார்.

நட்சத்திராவை நோக்கி சித்தார்த் வர, அதே நேரம் அக்காவைத் தேடி வந்த வெண்மதி சித்தார்த்தைக் கண்டதும் அவன் செல்வதற்காகக் காத்திருக்க, தோழிகள் பேசிய அனைத்தும் கேட்டது.

சித்தார்த்தைக் கண்டதும் உடலில் நடுக்கம் எழ பயந்து எழப்போனவளை, தன் ஸ்பரிசத்தால் ஆறுதல் சொல்லி நகரவிடாமல் செய்து, “வாங்கண்ணா” என்று தங்கள் முன் இருந்த இருக்கையை எடுத்துப் போட்டாள்.

“தேங்க்ஸ் மின்னல்” என்றவாறு எதிரில் அமர்ந்து, “சாரி நட்சத்திரா. இந்த ஒற்றை வார்த்தையில், உன் குடும்பம் இத்தனை வருஷம் பட்ட கஷ்டம் அடங்கிராது. எங்களால சொந்த ஊர், உறவு, சொத்து, சுகம்னு எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கீங்க. என்ன செய்தாலும் நாங்க செய்த காரியத்துக்கு மன்னிப்பே கிடையாது. நீயோ, உன் அப்பா, அம்மாவோ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கத் தயார்” என்று சரண்டரானான்.

நட்சத்திராவின் அதிர்ச்சி ஆச்சர்யம் கலந்த குழப்ப முகம் பார்த்து, “என்னை நம்புறது ரொம்ப சிரமம்தான்மா. நண்பர்களோட தவறான தூண்டுதல். அதோட வயசுக்கோளாறுல செய்யுறது சரின்னு பண்ணிய தப்பு. ஊர் முன்னாடி உன் அப்பா அடிச்சதுல வந்த அவமானம். இதெல்லாம் சேர்ந்துதான் அப்படிப் பேச வச்சது. நீங்க ஊரை விட்டுப்போனதும் ஊர் மக்கள் பேசின பேச்சு கொஞ்ச நஞ்சமில்லை நட்சத்திரா. நேர்ல நல்லவிதமா பேசிட்டு பின்னாடி கைகொட்டிச் சிரிச்சவங்கதான் அதிகம். அதுவும் அம்மாவை... அதுக்காகவாவது உன்னை அழைச்சிட்டு வரணும்ன்ற பிடிவாதம். அதோட உன்மீது நான் வச்சிருந்த காதல். சாரிமா அப்படி நான் நினைச்சதை சொன்னேன்.”

“வெண்மதி, ஒரு டைம் காதலுக்காக அக்காவைத் தேடல. கௌரவத்துக்காகத்தான் தேடுறான்னு சொன்னா. அப்பதான் முதல்முறையா தப்பு செய்றோமோன்னு தோணிச்சி.”

‘நான் பேசினது இவனுக்கெப்படி தெரியும்? அரிச்சந்திரன் சொல்லியிருப்பாங்களா? எல்லாத்தையும் செஞ்சிட்டு நல்லவனா நடிக்கிறானோ!’ வெண்மதியின் மனம் அவனைக் கவனிக்கச் சொல்லியது.

“உன்னை விட்டுட்டுப் போயிரலாம்னு நினைச்சேன். ஆனா, ஊருக்குள்ள நீ இல்லாமல் போக முடியாதுன்னுதான் இதெல்லாம் செய்தேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் பயந்து ஓடின பாரு அந்த டைம் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி. ஒருவேளை நீ மனசு மாறினா உன்னைக் கூட்டிட்டுப் போயிரணும்னு தான் பொண்டாட்டின்னு கூப்பிட்டது. இப்ப எல்லாம் மாறிருச்சி. கடவுள் எழுதின எழுத்தை யாரால மாத்த முடியும்? பார்க்ல அர்ஸயும், உன்னையும் பார்த்ததும்தான் உன் கல்யாணம் அவரோடன்னு புரிஞ்சது. அத...”

சட்டென்று ஒரு நிமிர்வு நட்சத்திராவிடம் என்றால் பதற்றம் மின்னலிடம். ‘ஐயோ நதிக்குக் கல்யாணம்னு அவளுக்கேத் தெரியாதே.’ நட்சத்திரா தோழியைக் காண, “அவர் உங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்ததால் பொண்ணு நீன்னு நினைச்சிருப்பார்” என்று மெல்லிய குரலில் சொல்லி தோழி அறியாமல் “ஷப்பா” என மூச்சை இழுத்துவிட்டாள்.

‘ஓ...’ என்று நட்சத்திராவும் அமைதியானாள்.

“அப்பவும் கௌரவம்னு ஒண்ணு மூளையை வண்டா குடைஞ்சது. அம்மா போன் செய்து என்னடா பார்த்துட்டேன் சொன்ன? கூட்டிட்டு வரச்சொல்லி தினமும் கேட்டுட்டிருக்கேன். அவள் வந்தால்தான்டா ஊர்ல நமக்குள்ள மரியாதை முழுசா கிடைக்கும். என்னதான் பணத்துக்காக நம்மகிட்ட பல்லைக் காட்டினாலும், முதுகுக்குப் பின்னால, பெத்த புள்ளைய பொண்டாட்டியோ சேர்த்து வைக்க வக்கில்லன்னு பேசுறாங்கடான்னு புலம்பினாங்க. அம்மாவுக்காகனாலும் கல்யாணத்தை நிறுத்தி பொண்ணைத் தூக்கிரணும்னு நினைச்சேன்.”

“முதல்ல மாதிரி இல்லாம எதையும் முறையா செய்யணும்னுதான் சட்டப்படி மேரேஜ் செய்தேன். லாயர் சாருக்கு துரோகம் பண்றேன்னு ஒருபக்கம் குற்றவுணர்ச்சி இருந்தது. பொண்ணு மாறினது தெரிஞ்சதும், அதுவும் தப்புதான்னாலும் மனசுக்கு விடுதலை கிடைச்ச மாதிரி இருந்தது. காலையில அப்படி நடந்துக்கிட்டது, வெண்மதிதான் என் ஒய்ஃப்னு தெரியாதத்தால. தெரிஞ்சி அந்தத் தப்பு செய்யலை. அகெய்ன் சாரி நட்சத்திரா” என்றான்.

சித்தார்த்தின் இந்த முகம் கண்ட நட்சத்திராவிற்கு இப்பொழுது ஆச்சர்யம் மட்டுமே! “ப...பரவாயில்லை. பா...சிட்டிவா யோசிக்கிறதே போதும். இனிமேல் இந்த மாதிரி பண்ணாதீங்க.”

தாலியைச் சொல்கிறாள் என்பது புரிய, “உன் விஷயத்துலதான் தப்பு பண்ணினேன்மா. மத்தபடி நான் தப்பான ஆள் கிடையாது. ஒரு டைம் பண்ணினது தப்பை உடனடியா சரிபண்ணாததால, வருஷக்கணக்கா அதுவே மரமாகி நான், அதாவது சித்தார்த்னா தப்பானவன்னு ஊருக்குள்ள பெயராகிப்போச்சிது. சரி விடு நாலு நல்லது செய்தா, கெட்டது நாலே நாள்ல தானா சரியாகிரும். இனி என் வரைக்கும் எப்பவும் உன் தங்கை மட்டும்தான். ஒருவேளை டைவர்ஸ் ஆனாலும், இந்த முடிவு மாறாது. என்னை முழுசா நம்பலாம்” என்றான் உறுதியாக.

‘வயசுக்கேத்த பக்குவம் வந்திருக்கலாம்.’ சித்தார்த்தைப் பற்றி கணவன் சொன்னது எவ்வளவு உண்மை. அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையில் நட்சத்திரா அவனை நட்போடு பார்த்தாள்.

“ஹாய்! எல்லாரும் என்ன பேசிட்டிருக்கீங்க?” இயல்பாய் மனைவியின் அருகில் அமர்ந்து தோளில் கைபோட்டான் அரிச்சந்திரன்.

‘இவங்களுக்கு இதே பொழப்பா போச்சிது. ஆளுங்க இருக்கிறது கூடத் தெரியாதே’ என்று சங்கடமாய் பார்வையைத் தாழ்த்த,

“அப்புறம் தங்கையே! என் எதிர்க்கட்சி வக்கீலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கை கொடுக்க,

“என் அண்ணனிடம் இருந்து முதல் வாழ்த்து. அப்ப எடுக்கிற காரியம் சக்சஸ்தான்” என்று கைகுலுக்கினாள்.

நட்சத்திராவிற்கு ‘நாம கூட விஷ் பண்ணலை. சே... நம்ம சுக துக்கத்தை அவள் தோள்ல ஏத்துறோம். அவளோட சந்தோஷத்தைக் கொண்டாடாம...’ தன்னையே திட்டி வேகமாய் தோழியின் கைபிடித்து “சாரிடி. கங்க்ராட்ஸ் மயிலு. நீ சாதிப்படி” என்றாள் மனதார.

“நானும் முதல் கேஸ் எடுத்தேன். விஷ் பண்ணக்கூட ஆள் இல்லை” என்று மனைவியைப் பார்த்து ஜாடையாகச் சொல்ல,

“நீங்க பிரிக்கிறதுக்கு கேஸ் எடுத்தீங்க. என் ஃப்ரண்ட் சேர்க்க எடுக்குறா. பிரிக்கிறது ஈஸி. சேர்க்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பிரிக்கிற உங்களை எப்படி விஷ் பண்றது?” என்றாள் நட்சத்திரா.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அனைத்தையும் பார்த்தும் பாராதிருந்தாள் வெண்மதி. நிறைய குழப்பம்! சித்தார்த் பேசியதில் தொடங்கி, நட்சத்திரா பேசியதும். ‘அவனை எப்படி மன்னிக்க முடிந்தது? தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடையாதா?’ என்றொரு மனமும், ‘டைவர்ஸ் ஆனாலும், என்னைத் தவிர யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டியா? அதையும்தான் பார்க்கலாமே!’ என்றொரு மனமும் வாதாட, கழுத்தில் கிடந்த தாலியையும் அவனையும் ஒருமுறை பார்த்தவளுக்கு மனம் ஏனோ நிம்மதியடைய மறுத்தது.

மன்னிப்பே சிறந்த தண்டனை என்பது தெரியவில்லையோ அப்பெண்ணிற்கு!

“அம்மா நான் ஒண்ணு சொல்வேன். நீங்க அதுக்கு சம்மதிச்சி சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசணும் சரியா?” என்று தாயிடம் நின்றான் முகில்.

“என்னடா சம்பந்தம் பேசச் சொல்றமாதிரி பேசுற?” திலகவதி கிண்டலாய் கேட்டார்.

“என்ன திலகா அம்மாவும் பையனும் ரகசியம் பேசிட்டிருக்கீங்க?” என்று யசோதா வர,

“என்னன்னு தெரியலக்கா. நான் ஒண்ணு சொல்வேன் சம்மதிக்கணும்னு சொல்லி பிபியை ஏத்துறான். சொல்லுடா முகில்?” என்றார்.

“அம்மா அ...அது வந்து மின்னலை எனக்குக் கேளுங்கம்மா” என்று திணறி கேட்டேவிட்டான்.

“மின்னலா! யார்டா? நம்ம நதி நாத்தனாரா? டேய்! அவங்க வசதியென்ன, நம்ம வசதியென்ன. எதையும் யோசிக்க மாட்டியா? அதைக் கூட விடு. காலையில் அந்தப் பொண்ணை எல்லார் முன்னாடியும் எப்படிப் பேசின? திடீர்னு என்னடா ஆச்சி உனக்கு?”

தான் பார்த்ததைச் சொல்லி, “அந்த மாதிரிப் பொண்ணு நம்ம வீட்டு மருமகளா வந்தா நல்லாயிருக்கும் தோணுதும்மா. ரொம்ப... நான் ஃபீல் பண்ணினதை எப்படி சொல்றது தெரியலம்மா. அவள் எனக்கு வேணும்மா. அவள் மட்டும்தான் வேணும். என்ன செய்வீங்களோ தெரியாது அவளை எனக்குப் பேசி முடிங்க” என்றான்.

“அவள் சித்தார்த் சார்பா வாதாடப் போறா. அதாவது உனக்கும் உன் தங்கைக்கும் எதிரா. அந்தக் கோவத்துலதான் காலையில் கத்தினன்றது நினைவிருக்கா? இப்பவும் அது மாறலையேடா. அப்புறம் எப்படி?” என்றார் மகனின் இந்த மாற்றம் புரியாது.

“அவள் எது செய்தாலும் நம்ம நல்லதுக்குத்தான்மா இருக்கும்” என்று புன்னகைத்தான்.

“அடேய் மகனே! அந்தர் பல்டி, ஆகாசப் பல்டி கேள்விப்பட்டிருக்கேன். இது எந்தவகை பல்டிடா? அப்ப சித்தார்த்தை ஏத்துக்கப் போறியா?”

“விடுங்கம்மா. மச்சான்னு ஆன பிறகு மாத்தவா முடியும். இல்ல நீங்கதான் விட்டுருவீங்களா?”

“அது சரி. திலகா உன் பையனுக்கு முத்திப்போச்சி. சீக்கிரம் முடிக்கலன்னா வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்னு பாடிடப்போறான்” என்று கிண்டலடித்தார் யசோதா.

“ஆமா பெரியம்மா” என்று முகில் சோககீதம் வாசிக்க,

“ஆனா அக்கா...”

“உன் சொத்துதான் திலகா போயிருக்கு. மச்சினர் ஒண்ணுமே இல்லாதவர்னு நினைச்சியா? எப்ப நீங்க உன் அண்ணனுக்கு சொத்து கொடுக்க சம்மதிச்சீங்களோ அப்பவே உங்களோடதை இப்போதைக்கு தரவேண்டாம்னு பாதுகாத்துட்டு வர்றோம். நீங்க கஷ்டப்படும்போது கூட பார்த்துட்டு இருந்தோம்னா, மத்தவங்களால அதைவிட கஷ்டம் வந்துவிடக் கூடாதேன்னுதான். சொத்துக்கு மதிப்பு கூடுமே தவிர குறையவே செய்யாது திலகா. அதுவுமில்லாமல் நம்ம பையனுக்கு என்ன குறை? நல்ல வேலை. கை நிறைய சம்பாத்தியம். பேசிப் பார்க்கலாம்” என்று தைரியமளித்தார் யசோதா.

“பார்க்கலாம்னு சொல்லாதீங்க பெரியம்மா. ப்ளீஸ் எப்படியாவது பேசி முடிச்சிருங்க” என்றான் கெஞ்சலாய்.

“டேய்! பொண்ணு ஆழாக்கு சைசுடா” என்று அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்க,

“பரவாயில்ல பெரியம்மா. காப்படி சைசா இருந்தாலும் எனக்கு சம்மதம்தான்” என்றான் விடாமல்.

“காலையில கொஞ்ச நஞ்ச அலப்பறையாடா பண்ணியிருக்க? விஷயம் கொடிக்கு போச்சிதுன்னா அவளே உன்னை ஓட ஓட விரட்டிருவா. அவள் இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுலயே இல்லைடா.”

“ஓட ஓட விரட்டினாலும் ஒரு இடத்தில் நிற்பாள்ல. அந்த நேரத்துல தண்ணீர் கொடுத்து கரெக்ட் பண்றேன் பெரியம்மா” என்று விடாது நின்றான்.

“அடேய் உன்னை!” என்று பெரியவர்கள் விரட்ட, வேகமாக வெளியே ஓடி வந்தவன் யார் மீதோ முட்டி மோத, “சாரி” என்றபடி நிமிர்ந்தவன் தன்னை முறைத்துக் கொண்டு நிற்கும் மின்னலைக் கண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“ஐயே சகிக்கல” என்று முகம் திருப்பி நடக்க அரம்பித்தவளின் கையைப் பிடிக்க, “வாட் தெ ஹெல்...” என்று திட்ட ஆரம்பிக்கையிலேயே, அவளின் நெற்றியில் இதமாய் முட்டி, “இப்ப கொம்பு முளைக்காது. போ” என்றான்.

“லூசா நீ” என ஒரு வெட்டும் பார்வை பார்க்க,

“மின்னல் கொடி! தெ லைட்னிங் ப்ளாக்! உன் பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. மின்னல் கொடி... எம்.கே! முகில் குமார்... எம்.கே! சோ, சம்திங் சம்திங்” என்று தன் ஓட்டத்தைத் தொடர, சற்று தள்ளி நின்று மின்னல் பெண்ணைக் கண்டவனிடம், “கொன்னுருவேன். ஓடிப்போ” என்று விரல் நீட்டி மிரட்டிச் சென்றாள்.

அவள் இதழில் சிறு மென்னகை வந்து போனதோ! காரணம் அவன் தாய்மார்களிடம் பேசியதைக் கேட்டதாலா! யாமறியேன் பராபரமே!

தாயும், தகப்பனும் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களைத் தேடி வந்தாள் நட்சத்திரா. அவர்களுக்கு நடுவில் அமர்ந்து அப்பாவின் தோள்சாய்ந்து அமைதியாகக் கண்மூட, “என்னடா நதிமா? இப்ப சந்தோஷமா இருக்கியா?” என்றார் நந்தகுமார்.

“ம்ப்பா. ஆனா, எப்படி திடீர்னு கேட்டதும் ஒத்துக்கிட்டீங்க?” என்றாள் முன்தினம் தங்கள் மூவருக்குள் நடந்ததை வைத்து.

அவரோ மகள் தங்களின் சர்ப்ரைஸை தெரிந்து கொண்டாள் என நினைத்து, “உனக்குப் பிடிச்சிருக்குல்லடா. அதுதான் எங்களுக்கு வேணும். சஞ்சித்தோட கடைசி அசையும் இதுதான்” என்றார்.

“என்னப்பா சொல்றீங்க?” நிமிர்ந்து அவரின் முகம் பார்க்க, அவனின் ஆசைகளைச் சொன்னவர், அவன் தன் மகளைக் காதலித்ததைச் சொல்லவில்லை.

“சஞ்சித் அத்தான் க்ரேட் இல்லப்பா. அப்பவே கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டாரா? இதை ஏன்பா முன்னாடியே சொல்லலை?”

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு சொன்னான்மா. கடைசியில் நமக்குக் கஷ்டத்தைக் கொடுத்துட்டான். வாய்க்கு வாய் நதியும், அர்ஸும் தான் மாமா பொருத்தமா இருக்காங்க சொன்னான். அவன் இருந்திருந்தா...”

“ஆர்த்தி கூட என்கிட்ட எதுவும் சொல்லலைப்பா.”

“என்ன என் பெயர் அடிபடுது? என்ன உன்கிட்ட சொல்லலன்னு சொல்ற?” என்றாள் ஆர்த்தி.

“ம்... நீங்க குடும்பமே சேர்ந்து மறைத்ததை” எனும்போது திக்கென்றானது ஆர்த்திக்கு. ‘நாமதான் நிறைய மறைச்சிருக்கோமே. அதில் இவள் எதைச் சொல்றாள்னு தெரியலையே!’ என திருதிருவென விழித்தாள்.

அவளைப் புரிந்தாரோ நந்தகுமார். “சஞ்சித் கல்யாணத்தை நிறுத்தினான்ல, அதைச் சொல்றா” என்றார்.

“ஓ... ஆமா நதி. உன்னை ஒய்ஃப் ஸ்தானத்துல வச்சிப் பார்க்க முடியலையாம். நான் அவளுக்கு மேட்சே இல்லன்னு இன்னும் என்னென்னவோ சொன்னார். அத்தை திட்டிப்பார்த்தாங்க. ம்கூம் மனுஷன் அசரலையே. தான் நினைச்சதை சாதிச்சிட்டார்.”

“ம்... அத்தையும் மாமாவும் எங்க? ரொம்ப நேரமா பார்க்கலை.”

“வீட்டுக்குப் போயிட்டாங்க நதி. மறுவீடு வர்றப்ப வீட்டுக்கு வர்றதா சொல்லிட்டாங்க. சஞ்சய் அவங்களை விட்டுட்டு வர போயிருக்காங்க” என்றாள்.

மண்டபத்திலேயே முதலிரவு ஏற்பாடு செய்திருக்க, “இன்னைக்கு வேண்டாம். அதுவும் இத்தனை பேர் இருக்கையில்” என்ற நட்சத்திராவின் மறுப்பு அங்கு உள்ளவர்களிடம் மறுக்கப்பட்டுவிட, “ஏய் மயிலு நீயாவது சொல்லக்கூடாதா?’ என்றாள் தோழியைப் பார்த்து.

“நான்லாம் குழந்தை. நீயும், உன் தங்கையும் கல்யாணமானவங்க. இதையெல்லாம் உன் மாமியார்கிட்ட பேசிக்கோ” என்று அவள் நழுவ,

“ஏய்! நில்லுடி. ஏய்! ஹ்ம்... ஓடிட்டாளா. அடுத்து யாரிடம் முறையிடலாம்” என்று தேடுகையில் ஆர்த்தி வர, நட்சத்திரா ஆரம்பிக்கையிலேயே அரண்டடித்து ஓடிவிட்டாள். அடுத்து பாக்கியவதி வர, வாய் கப்சிப்பானது. பின்ன ஏழாவது தலைமுறையை சீக்கிரம் தான்னு கேட்பாரே!

வெண்மதியிடம் வந்த மின்னல். “அப்புறம் மிஸஸ்.சித்தார்த்” என வம்படியாக ஆரம்பித்தாள்.

“அப்படிச் சொல்லாதீங்க.” வேகமாக பதில் வந்தது.

“ஓகே மிஸஸ்.வெண்மதி. இன்னைக்குதான் உங்களுக்கும் கல்யாணமாகியிருக்கு. சோ...”

“சோஓஓ...” வெண்மதி வார்த்தையை அழுத்திக் கேட்க,

“இல்ல உங்களுக்கும் அரேஞ்ச்மெண்ட் பண்ணச் சொல்லலாம்னு...” என்று அங்கிருந்து ஓடினாள்.

“ஏய்!” என்ற வெண்மதியின் கோவக்குரலுடன், அவளும் மின்னலைத் துரத்த, வெண்மதியைப் பார்த்தபடி ஓடி வந்தவள், அங்கு வந்த முகில் மேல் மோதி நிற்க, ‘இவனா! இவனா!’ மனதில் எக்கோ சரமாறியாகக் கேட்டது.

“என்னாச்சி லைட்னிங்? எதுக்கு இந்த வேகம்?”

‘லைட்னிங்கா?’ அவனை முறைத்து, “சும்மா நானும், வெண்மதியும் ஓடிப்பிடிச்சி விளையாடுறோம்” என்றாள் கடுகடுத்தபடி.

“நானும் உங்க விளையாட்டுல கலந்துக்கவா?”

“ஜென்ட்ஸ் நாட் அலவ்ட்” என்று நகர்ந்தவள் கைபிடித்து லேசாக நெற்றி முட்டி, “போ” என்றான் புன்னகையுடன்.

‘என்ன இவன் ஓவரா உரிமை எடுத்து ஒரு மார்க்கமா பார்க்கிறான்? வருஷக்கணக்கா பழகின மாதிரி டச் பண்றான். என்னைத் தொட இவனுக்கு என்ன தைரியம்? நீயும் கடிந்து பேசாம இருக்கிற? இது சரியில்ல மின்னல்’ என்று மனம் எச்சரிக்கை அனுப்பியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top