- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
28
இதோ நீதிமன்றத்திலும் வாயாடும் வெண்மதியைப் பார்த்திருக்க. சித்தார்த்தும் அவளையே கவனித்திருந்தான். அவளின் அலட்டல் இல்லாத வாயாடித்தனம் பிடித்திருந்தது. முகம் கடுத்துப் பேசாத கோவம் பிடித்திருந்தது. பிடிவாதமென்றால் கிலோ என்ன விலையென்று கேட்பவளின், வெட்டிப் பிடிவாதம் இன்னுமே பிடித்திருந்தது.
“மின்னல் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று பீடிகையுடன் சித்தார்த் ஆரம்பிக்க,
“சொல்லுங்கண்ணா. கேஸோட சம்பந்தப்பட்டதா?” என கேட்டாள் மின்னல்.
“இல்ல எங்க சம்பந்தப்பட்டது” என்றதும் வெண்மதி அவனை முறைக்க, அதில் புன்னகை வந்து, “மண்டபத்தில் இருந்து ரெஜிஸ்டர் ஆபீஸ் போற வழியில் அமைதியா வரலைன்னா, உன்னைச் சேர்ந்த எல்லாரையும் ஆள்வச்சி தூக்கிருவேன்னு மிரட்டினேன். அதுக்கு இந்த மேடம், போ... போய்த்தூக்கி எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்கோ. என்னை மட்டும் விட்டுருன்னு ஒரே கத்தல். எனக்குன்னா பயங்கரச் சிரிப்பு மனசுக்குள்ளதான். அப்புறம் ஒண்ணு சொன்னாளே! ம்... ஹான்! காலையில் இருந்து தண்ணி கூடக் குடிக்காம வெறும் வயித்துல இருக்கேன்டா. நான் சாபம் விட்டா பலிக்கும்னு...” அதை நினைத்து இப்பொழுதும் சிரித்தான்.
“ஹா...ஹா செம பஞ்ச். எல்லாரையும் எப்படிப் பண்ண முடியும் வெண்மதி?” என்று மின்னல் அவளிடம் கேட்க,
“இவன் செய்வான். ஏற்கனவே இரண்டு. இன்னும் எத்தனையோ?” என்றதும் சித்தார்த் சிரிப்பு அடங்கி, ‘என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ என்று அடிபட்டப் பார்வை பார்க்க, ‘ஆம்’ என்பதாய் பார்த்திருந்தாள் வெண்மதி.
“மருமகளே!” செல்லம்மா ஏதோ சொல்ல வர அதற்குள் அவர்களை உள்ளே அழைத்தார்கள்.
உள்ளே செல்ல நடந்து கொண்டிருக்கையில், “வெண்மதி உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு டூ மினிட்ஸ் பேசலாமா?” என்றான் சித்தார்த்.
“தேவையில்லை எதுவாயிருந்தாலும் உள்ள பேசிக்கோங்க.”
“டூ மினிட்ஸ் வேண்டாம். அட்லீஸ்ட் ஒன் மினிட்?”
“ஒன் மினிட்ல என்ன பேசிட முடியும்? போயி வேலையைப் பாருங்க” என்று நகர, அவள் கைபிடித்து நிறுத்தி “ஒன் மினிட்ல ஓராயிரம் இல்லன்னாலும் ஓரளவு பேசலாம். ஓராயிரம் வார்த்தைகள் பேசாததை ஒருசில வார்த்தை பேசும்.”
அவளின் மௌனத்தை சம்மதமாக எடுத்து, “என் கண்ணை நேருக்கு நேர் பார் வெண்மதி” என்றதும் நிமிர்ந்து அவன் கண்பார்க்க, பிடித்திருந்த அவளின் கையைத் தூக்க, சட்டென்று உதறியவளை உணர்ந்து திடமாகப் பிடித்து, “ஜஸ்ட் ஒன் மினிட் வெண்மதி” எனவும் அவள் அமைதி காக்க, அவள் கண்பார்த்து, “ஐ லவ் யூ” என்றுரைத்து கையில் முத்தமொன்றை மென்மையாக வைத்தான் சித்தார்த்.
வியப்பா! அதிர்வா! ஆச்சர்யமா! ஏதோ ஒன்று நேருக்கு நேர் இருந்த கண்களிரண்டும் இன்னும் விரிய எதுவும் பேச இயலாது வாயடைத்துச் சென்றாள். மூளைக்குள் ‘என்ன சொன்னான்? ஐ லவ் யூவா? எப்படி என்னைப் பார்த்து?’
‘நீதானே அவன் மனைவி.’ மனம் உரைத்தாலும் ‘எப்படி அப்படிச் சொன்னான்? எப்படிச் சொல்லலாம்?’ குழப்பங்கள் அவளுள்.
அப்படியே உள்ளே வர நீதிபதி கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தாலும், அந்த ‘ஐ லவ் யூ’ எழுத்துக்களாக மாறி அவளைச் சுற்றி வந்தது.
“வெண்மதி, வெண்மதி. ஆர் யூ ஆல்ரைட்” என்ற குரலில் குழப்பத்திலிருந்து வெளியில் வந்தவள், “எ...எஸ் மேம். ஐம் ஆல்ரைட்” என தடுமாற, சித்தார்த் முகத்தில் புன்னகை மட்டுமே!
“சொல்லுங்க வெண்மதி? டைவர்ஸ் நீங்கதான் கேட்டிருக்கீங்க? உங்களை பாலியல் ரீதியா எதாவது டார்ச்சர் பண்றாரா?” என்று நீதிபதி கேட்டதற்கு, புரியாமல் அவள் விழித்ததும், “இல்ல கண்ட நேரத்துல கட்டிலுக்குக் கூப்பிடுறது. ஓபனா சொல்லணும்னா செக்ஸ் டார்ச்சர் பண்றாரா?” என்றார்.
“என்னங்க சின்னப் பொண்ணுகிட்ட இப்படிப் பேசுறீங்க?” என்று செல்லம்மா கோவப்பட்டார்.
“நீங்க எதுவும் பேசக்கூடாது. நீ சொல்லுமா? அப்படி எதுவும் டார்ச்சர் பண்றாரா?”
“அ..அப்படிலாம் எதுவும் இல்ல மேம். எ...எங்களுக்கு மேரேஜ் மட்டும்தான் ஆகியிருக்கு” என்றாள் சற்று அவமான உணர்வுடன்.
“ஓ... திருட்டு சாரி கட்டாயக் கல்யாணம்ல. சோ, இவர்கிட்டயிருந்து விலகணும். அப்படித்தான?”
“எஸ் மேம்.”
“நீங்க சொல்லுங்க சித்தார்த்? நீங்களும் சம்மதிச்சா மியூச்சுவல் போட்டுரலாம்.”
“எனக்கு என் ஒய்ஃப் வேணும் மேம். கல்யாணம் வேணும்னா தப்பா நடந்திருக்கலாம். வாழ்க்கை தப்பாக விடமாட்டேன். வாழ்நாளுக்கும் வெண்மதிதான் என் ஒய்ஃப்” என்று முதல் நாள் சொன்னதையே திடமாக சொன்னான்.
“பொண்ணுக்கும் விருப்பம் இருக்கணுமே?”
“அது அவங்க இஷ்டம் மேம். பட், எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா என்னை நிரூபிக்கத் தயார். அதுக்கு முன்னாடி வெண்மதிகிட்ட ஒன் மினிட் பேசிக்கலாமா?” என்றான் மென்மையான குரலில்.
‘ஒன் மினிட்டா? அச்சோ வேண்டாம்’ என்ற வார்த்தை அவளுள் அடங்க, அவளின் வேண்டாமென்ற தலையாட்டலை மற்றவர்கள், ‘என்னாச்சி இந்தப் பொண்ணுக்கு?’ என்பதாய் பார்த்தார்கள்.
“தேங்க்ஸ் மேம்” என்று எழுந்து அவளருகில் செல்ல, அனைவரின் பார்வையும் தீர்க்கமாய் அவர்கள் மேல் படிந்தது.
“ஐ லவ் யூ வெண்மதி. இதுவரை எந்தப் பொண்ணுகிட்டேயும் சொன்னதில்லை. ஃப்ரண்ட்ஸ் தூண்டுதல்ல நடந்த தப்புதான் நட்சத்திரா விஷயம். இப்ப அவளுக்குமே மேரேஜாகிருச்சி. அவளை நிஜத்துல லவ் பண்ணாததால எந்த பாதிப்பும் இல்லை. பட், ரெஜிஸ்டர்ல எப்ப சைன் பண்ணினேனோ அப்போதிருந்து என் மனைவியை மட்டும் நேசிக்கணும் அவளை நல்லா வச்சிக்கணும்னு ஆசை. அதற்கொரு சந்தர்ப்பம் கிடைக்குமா?” என்றான் மென்மையான குரலில்.
அத்தனை பேர் முன் அவன் சொன்ன ஐ லவ் யூவும், தொடர்ந்த பேச்சும் ஏற்கனவே இருந்த குழப்பத்தை அங்கு இருந்தவர்களிடம் அதிகமாக்கி இருந்தது.
“சித்தார்த் சொல்றதும் சரியாதான் இருக்கு. நீங்க ஏன் ஒரு சான்ஸ் கொடுக்கக்கூடாது வெண்மதி?” என்று நீதிபதி கேட்டார்.
“அ...அது...”
அவளின் தடுமாற்றம் வழக்கை விசாரிப்பவருக்குப் போதுமானதாக இருந்ததோ!
“இன்னும் ஒன் மன்த் இவங்க இரண்டு பேர் மட்டும் தனியா இருக்கணும். ஐ மீன் தனிக்குடித்தனம் போகணும்னு சொல்றேன். உங்க வக்கீல்களான அரிச்சந்திரன், மின்னல் கொடி தவிர மத்தவங்க யாரும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அவங்களுமே டெய்லி போகக்கூடாது. உங்க தூக்கமும் ஒரே அறையில்தான் இருக்கணும். எங்களை ஏமாத்தணும்னு நினைச்சா அது உங்களை நீங்களே ஏமாத்திக்கிறதுக்குச் சமம். நெக்ஸ்ட் மன்த் இதே தேதியில் நீங்க என்னை வந்து பார்க்கணும். அப்பவும் வெண்மதி உறுதியா இருந்தா, வருஷமெல்லாம் தேவையில்லை. அன்னைக்கே கேஸை முடிச்சிரலாம்” என்றார்.
“மேம்” என ஆரம்பித்தவளைத் தடுத்து, “இது கோர்ட் ஆர்டர். நீங்க ஏத்துக்கிட்டுதான் ஆகணும். மிஸ்டர் அரிச்சந்திரன் கோர்ட் ஆர்டரை வாங்கிட்டுப் போங்க” என்றதும் மற்றவர்கள் வெளியே வந்தார்கள்.
அனைவரும் காரில் ஏற, வெண்மதியிடம் வந்த மின்னல், “ஒன் மினிட் தனியா பேசலாமா?” எனக் கேட்க,
“நீ... நீங்களுமா அண்ணி?” என்று அலறினாள்.
“அண்ணியா?”
“அக்காவோட நாத்தனார். என்னோட பெரியவங்க. அப்ப அண்ணிதான?”
“அது இப்ப முக்கியம் இல்லை. உன்கிட்ட பேசணும் சொன்னதும் நீங்களுமான்னு ஏன் அலறின?”
“அ...அது அந்த சித்தார்த்தும் ஒன் மினிட்னு சொல்லி ஐ லவ் யூ சொன்னான். அதுவும் இரண்டு முறை” என்றாள் சோகமாய்.
“ஹா...ஹா சரி விடுமா. எனக்கு டூ மினிட்ஸ் எடுத்துக்கறேன். இப்படி உட்கார்” என்று இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர, “உனக்கு சித்தார்த் அண்ணாவைப் பிடிக்காமல் போனதுக்கு நதியோட சேர்த்து, சொத்தும் ஒரு காரணம்ல?” என்று நேரடியாகவே கேட்டாள்.
“அதான் உங்களுக்கேத் தெரியுதே.”
“சொத்து பிரச்சனை உங்க அம்மாவுக்கும், அவங்க அப்பாவுக்குமானது. அதில் அண்ணா எங்கயிருந்து வந்தாங்க?”
“கேஸ் நடத்தறது சித்தார்த் தான் அண்ணி.”
“இப்ப அவர் கேஸை நடத்தக் காரணம் அப்பா, அம்மாவை விட்டுக் கொடுக்க முடியாத மனநிலைனால. அப்பா, அம்மான்னு வரும்போது சரி தப்புன்னு பார்க்காத பிள்ளைங்க ரொம்ப ரேர் தெரியுமா? நீ செஞ்சதை நீயே அனுபவின்னு விலக எவ்வளவு நேரமாகும்? நதியைக் காரணம் சொல்லாத. அவள் இப்ப என் அண்ணி. நீயே சொல்லியிருக்க என் அக்காவை கௌரவத்துக்காகத் தேடுறான்னு. ஏன் அவருமே ஆமாம்னு ஒத்துக்கிட்டிருக்கார். இதோ இப்ப அந்த கௌரவம் உன் கையில இருக்கு.”
“சரியோ தப்போ நீ அந்த வீட்டு மருமகளாகிட்ட. கௌரவம் காப்பதும் அழிப்பதும் உன்னோட முடிவு. அரி அண்ணா பார்த்து விசாரிச்ச வரை சித்தார்த் அண்ணாவுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. அதுக்குக் காரணம் நதின்னும், கௌரவம்னும் சொல்றார். அது அப்படிக் கிடையாது வெண்மதி. திருந்த மனமில்லாத ஒருத்தனை எப்பேர்ப்பட்டவங்களாலயும் மாத்த முடியாது. தான் மனசு வைத்தால் மட்டுமே திருந்துவது சாத்தியம். சித்தார்த் அண்ணா செல்ஃப் கண்ட்ரோல் மேன். சில தவறுகளால் நல்லது நடந்தா, அந்தத் தவறுகூட நல்லதுதான்.” அண்ணன் அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு என்பதை நிரூபித்தாள் மின்னல் கொடி.