• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
4

அதிகாலையிலேயே எழுந்து வந்த மகனை ஆச்சர்யமாய் பார்த்த சகுந்தலா, “அரி அதுக்குள்ள குளிச்சிட்டியா? எதாவது கேஸ் விஷயமா வெளியூர் எதுவும் போறியா?” என கேட்டார்.

“இல்லம்மா. எங்கம்மா விஷயமா போறேன்.”

“புரியலைடா?”

“உங்களை கோவிலுக்குக் கூட்டிப்போகதான் சீக்கிரமே கிளம்பி வந்தேன்மா.”

“நேத்தே தூங்கவிடாமல் செய்திட்டேன்னு வருத்தமாகிருச்சிடா. இன்னைக்கு நானும் அத்தையும் போறோம். நீ கொஞ்ச நேரம் படு” என்றார்.

“பரவாயில்லமா. வாங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” தாயின் கேள்விப் பார்வையில் “காலையில கோவிலுக்குப் போனா அன்றைய தினம் முழுவதும் ரொம்ப சுறுசுறுப்பாயிருக்கும்மா. பத்து நாளா தலையைப் பிச்சிக்க வச்ச கேஸ் ஒண்ணு நேத்து மதியத்துக்கெல்லாம் சால்வாகிருச்சி. அதான் உங்க முருகரை நானும் தினமும் தரிசிக்க முடிவு பண்ணிட்டேன்.”

‘என்னையா பார்க்க வர்ற? வா என்னை மட்டும்தான பார்க்க வர்ற அது மட்டும்தான் நடக்கும்.’ முகம் புன்னகைத்ததோ அந்த ஆறுமுகனுக்கு.

தன்னையறியாமல் சந்தோஷம் எழ காரில் சாமி பாடல்களை ஒலிக்கவிட்டு கோவில் வந்ததும் பாட்டியையும் தாயையும் இறக்கி காரை லாக் செய்து உள்ளே நுழைய கண்கள் நாலாபுறமும் ஓடியும் தான் தேடியது கிடைக்காமல் போக ஆறுமுகனைப் பார்த்தவனுக்கு அவரின் சிரிப்பிற்கு அர்த்தம் தெரியவில்லை.

ஆனாலும் ஆறுமுகனின் புன்னகை முகம் அவனுக்கு தைரியமளித்ததோ! சாமி கும்பிட்டு வெளியே வருகையில் தன்னைத் தாண்டிச் சென்றவளை கவனிக்கவில்லை அவன்.

தினமும் அதே தொடர ‘முஸ்லீம் பொண்ணுன்றதால எதாவது ஆராய்ச்சி பண்ண.. இல்லன்னா கட்டுரை எழுதுறதுக்கு வந்திருப்பாளோ? ஆனா பஜனை எப்படி பாட முடியும்? பஜனை பாடினவங்களோட இருந்ததைப் பார்த்தியே தவிர... பாடினதைப் பார்த்தியா? பாட்டுன்னு வந்துட்டா ரசனைதான்டா முக்கியம்.. பஜனையில்லை’ என்றது அவன் மனம்.

மார்கழிப் பெண்ணை மாதம் முழுவதும் காணவில்லை அவன். மார்கழி மாதத்து டிசம்பர் பூவாய் வாசமில்லாமல் வாடி வதங்கியது அவனின் நாட்கள் யாவும்.

தை ஒன்று பொங்கல் வைத்துப் படையலிட்டு மதிய உணவும் முடித்து ரிலாக்ஸாக அமர்ந்திருக்க முந்தைய தினம் வந்திருந்த தந்தை ரவிச்சந்திரனின் ஒருபுறம் கொடியாகிய மின்னல்கொடி. இன்னொரு புறம் அரிச்சந்திரன்.

‘மின்னல் கொடி!’ அரிச்சந்திரனின் தங்கை. வேலையில் சுறுசுறுப்பின் மறுவுரு. வெளியே யாரிடமும் தன் தங்கை என்று சொல்லமாட்டான். காரணம் அவர்களின் தொழில். மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவர்களைத் தெரியும். ஏன் உயிர்த்தோழி நதிக்குக்கூட மின்னலின் குடும்பத்திலுள்ள யாரையும் தெரியாது. வெளியில் ஏடாகூடமாக நடந்தாலும் அவளின் பாதுகாப்புக் கவசம் மின்னலின் அண்ணன். அதற்காகவே தந்தையுடன் டெல்லிக்கு செல்லாமல் அண்ணனுடனே இருந்துவிட்டாள்.

ரவிச்சந்திரன் வருவதற்கு இடைப்பட்ட நாட்களில் நடந்த அனைத்தையும் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் மகனின் அதிகாலைப் பள்ளி எழுச்சியைப் பாராட்ட, அரிச்சந்திரனை கேலிச் சிரிப்புடன் தங்கையும் வெட்கச் சிரிப்புடன் அவனும் கேட்டுக் கொண்டிருக்கையில் ஹாலிங்பெல் அடித்தது.

வாசலில் நின்றவரைப் பார்த்து “வாங்க தரகரே” என்ற பாட்டியை அண்ணன் தங்கை இருவரும் பார்த்தனர்.

“நல்லதுங்கம்மா” என வணங்கியபடி உள்ளே வந்தவரை அமர வைத்து மருமகளை காஃபி எடுத்து வரச்சொல்ல, சகுந்தலா கொண்டு வந்ததும் தரகருக்குக் கொடுத்த அவர் குடித்து முடித்ததும் “சொல்லுங்க தரகரே?” என்றார் பாக்கியவதி.

“பொண்ணு பெயர் நட்சத்திரா. எம்.சி.ஏ கடைசி வருஷம். பொண்ணுக்குக் கல்யாண நேரம் கூடியிருச்சி. நம்ம பையனையும் தெரியுமே. அதான் அவங்ககிட்ட சொல்லி போட்டோ வாங்கிட்டு வந்துட்டேன். பார்த்து பிடிச்சிருந்தா விசாரிச்சிக்கோங்க” என்று கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்த பாட்டியின் கையிலுள்ள போட்டோவில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் அரிச்சந்திரன் ‘நதீரா’ என்று நினைத்த.. மின்னலின் தோழி நதியான... “நட்சத்திரா!”

விதியின் விளையாட்டு ஆரம்பம்.

“பொண்ணு மூக்கு முழியுமா லட்சணமா இருக்கா. நம்ம அரிக்கு ஏத்தவள்தான். இந்தப் பொண்ணையே பார்த்திடலாம்” என்று மருமகளிடம் நீட்டினார்.

சகுந்தலா அதை வாங்கி “ஆமாங்க அத்தை. இந்தப் பொண்ணையே பார்த்திடலாம்” என்று கணவரிடம் கொடுக்க அவரின் முகத்திலும் திருப்தி தெரிந்தது.

“நீ பார்க்கலையா?” தங்கையிடம் கடுப்புடன் கேட்டான் அரிச்சந்திரன்.

“பொண்ணு யார்னு தெரியும்ணா. எங்க காலேஜ்ல எங்க செட்தான் படிச்சா. வேற வேற டிபார்ட்மெண்ட்னாலும் எப்படியோ ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு ஆழ்ந்த நட்பு உண்டு. நீ கூட பா...”

“போதும் போதும் உன் தோழி புராணம்” என்றதில் ‘நீ கூட பார்த்திருக்க. அன்னைக்கு நமக்கு ஹெல்ப் செய்தவள்தான்’ என்று சொல்ல வந்தவள் அண்ணனின் எரிச்சலில் அமைதியாகி “ஏன்ணா கோவப்படுற? அவள் ரொம்ப நல்ல பொண்ணு? அவளுக்கு உன்...”

“நானும் கெட்ட பொண்ணுன்னு சொல்லலையே” என்று அவள் சொல்ல வருவதைக் காதில் வாங்காது அழைப்பை துண்டித்தான்.

‘கடவுள் நமக்கு சில சந்தர்ப்பங்கள் கொடுப்பார். அதைப் பகுத்தறிந்து பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே! சந்தர்ப்பத்தைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளினால், அது நமக்கு எந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் விட்டு விலகிச் சென்றுவிடும். நிறைய பேர் இதை உணர்வதில்லை.’

அரிச்சந்திரன் நல்லவன்தான். ஆனால் காதல் அவன் கண்ணை மறைக்க, அவனின் தேடலைக் கண்டு, கடவுள் கொடுத்த சந்தர்ப்பத்தை எட்டி உதைத்துவிட்டான். இனி விதி வழியே அவனும்!

“விதண்டாவாதம் பேசாதண்ணா. நான் சொல்றதைக் கேட்டு இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க. உன்னை நல்லா பார்த்துப்பா” என்றாள் அண்ணனுக்குப் புரியவைக்கும் விதமாக.

“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். இன்னொருத்தர் தேவையில்லை” என்றான் பட்டென்று.

“ஐயய்யய்யய்ய... ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? பதிலுக்குப் பதில் பேசிட்டு.. இப்பதான் பேச ஆரம்பிக்கிறோம். இன்னும் ஜாதகம் இருக்கு. ஃபேமிலி பிடிக்கணும். நீங்க என்னடான்னா கத்தி களேபரம் பண்றீங்க.” பேரன் பேத்தியை அடக்கி தரகரிடம் திரும்பியவர் “தரகரே இது பையனோடது. பொண்ணு வீட்லயும் பார்க்கச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்று அவரை அனுப்பினார்.

“ஏன்ணா யாரையாவது...?” கேள்வியாக நிறுத்தினாள்.

“ஆமா. நதீரான்னு ஒரு முஸ்லீம் பொண்ணை விழுந்து விழுந்து லவ் பண்றேன் போதுமா” என கிண்டலாகச் சொல்வது போல் உண்மையை உடைத்தான்.

“வாயை மூடு அரி. நீ கிண்டலுக்குச் சொல்றன்னு புரியுது. அது உண்மையாவே இருந்தாலும் நமக்கு சரிவராது. உன் உளறலை விட்டுட்டு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற வழியைப்பாரு” என்று தந்தை அதட்டல் போட,

‘என்னடா இதெல்லாம்?’ என்பதாய் தாயின் பார்வை இருந்தது.

அண்ணன் அருகில் அமர்ந்து, “அண்ணா எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வருது. அன்னைக்குக் கூட இந்தப் பெயரைச் சொன்னல்ல? நிஜமாவே அந்த நதீராவை லவ் பண்றியா? பயப்படாம தயங்காம சொல்லு? நான் அப்பாகிட்ட சொல்லமாட்டேன்.”

இருக்கும் கடுப்பையெல்லாம் கையில் கொண்டு வந்து தங்கையின் தலையில் ஓங்கி கொட்டு வைக்க, “அம்மாஆஆ..” என்ற அலறலுடன் தலையைத் தடவி, “நிஜமான்னு கேட்டதுக்கு என்னை அடிக்கிறான்மா” என்று அழுதாள்.

“இப்ப ஏன்டா அவளை அடிச்ச? தப்பு செய்யாத சொன்னது நாங்க. கோவம் வந்தா அதை எங்ககிட்ட காட்டு. அதை விட்டுட்டு குழந்தையை அடிக்குற. நீ வாடா பாப்பா” என்றதும் அப்பாவின் அருகில் அமர்ந்து தோளில் தலைசாய்த்து அழ, அவளின் தலையை மெல்ல தேய்த்துவிட்டு “வலிக்குதாடா மின்னல்? ஆளுதான் வளர்ந்திருக்கான். பொம்பளைப் பிள்ளைகிட்ட எப்படி நடத்துக்கணும்ன்றதே தெரியல. அறிவு கெட்டவன்” என்று மகளுக்காக மகனை திட்டினார்.

“ஆமாமா. புட்டிப்பால் குடிக்கிற பாப்பா. அவள் செய்றதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சாலும் செல்லப் பொண்ணுன்னு கண்டுக்காதீங்க. நான் வாயைத் திறந்தா மட்டும் எல்லாரும் ரௌண்டு கட்டிட்டு வந்திருங்க. இப்ப திருப்தியா உனக்கு” என்று தன் அறைக்குச் சென்றான்.

“டேய் அரி! பொங்கல் அதுவுமா... ப்ச்... நீ ஏன்டி அவனை வம்பிழுத்திட்டிருக்க?” என்று மகளைத் திட்டி, “நீங்களாவது அமைதியா இருக்கக்கூடாதாங்க. பொண்ணு செஞ்சா மட்டும் எல்லாம் சரி” என்று கணவனையும் குற்றம் சாட்டினார்.

“சகு நீ உட்கார். அவன் பத்து நிமிஷத்துக்குள்ள சரியாகிருவான்” என்ற மாமியாரின் வார்த்தைக்கு கட்டப்பட்டார் சகுந்தலா.

அரைமணி நேரமாகியும் அரிச்சந்திரன் கீழே வராமல் போக, மாடியேறி பேரன் அறைக்குச் சென்ற பாக்கியவதி அவனருகில் அமர்ந்து, “என்னடாப்பா பாப்பா சொல்ற மாதிரி நீ யாரையும்...?” என கேள்வியாய் நிறுத்தினார்.

“அ...அப்படிலாம் இ..இல்ல க்ரேன்மா” என்றான் தடுமாற்றத்துடன்.

“அப்படி இருந்தாலும் மறந்திரு அரி. இப்ப பார்த்திருக்கிற பொண்ணு நம்ம மதம்! நம்ம ஜாதி” என்றார் அழுத்தமாக.

“மனுஷனுக்குள்ள என்ன க்ரேன்மா ஜாதி மதம்னு? ஆண்-பெண்! ஏழை-பணக்காரன்! இது மட்டும்தான் பிரிவினை. ஜாதி மதம்னு இன்னும் எத்தனை காலத்துக்குதான் கட்டிட்டு அழுவீங்க” என்றான் கோவமாக.

“கோவம் எதுக்கு அரி. கோவம் நம் அறிவுக்குச் சத்ரு. மேலாட்டமா பார்க்காம இங்க வந்து உட்கார்ந்து நான் சொல்றதை அமைதியா கேளு.. ஏன்னு புரியும்” என்றார் அமைதியாகவே.

“எதுவும் கேட்க வேண்டாம் க்ரேன்மா. நீங்க கீழே போங்க. அப்புறமா பேசலாம்.”

“ஏன்பா இப்படிப் பேசுற? நான் என்ன நீ கெட்டுப்போகவா வழி சொல்றேன். வக்கீலா இருந்துட்டு இப்படிப் பேசாத.”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும் க்ரேன்மா. அதை யாராலும் மாத்த முடியாது.” அவனுக்கு நதீராவை மறக்க வேண்டியிருக்கிறதே என்ற வேதனைதான். கவருக்குள் இருக்கும் அவளின் புகைப்படமோ, அவனைக்கண்டு கைகொட்டிச் சிரித்ததை அவன் அறிவானா!

“வரட்டுப் பிடிவாதம் பண்ணாம எங்க நியாயத்தை கேளுப்பா?”

மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன் பாட்டியின் அருகில் அமர்ந்து, “சொல்லுங்க க்ரேன்மா?” என்றான்.

(இது சில பெரியவங்க சொன்ன கருத்து.)

“ஜாதின்றது உன்னோட முடியுறது கிடையாது. அடுத்தடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேரும். ஒரே மதமா இருந்தாலும் ஒரே ஜாதியில கூட ஜாதிப்பிரிவு இருக்கிற இடத்துல சம்பந்தம் வைக்கமாட்டோம். ஜாதி கட்டமைப்புன்னு எதுக்கு வச்சிருக்காங்க தெரியுமா?” என்றார் பேரனிடம்.

“எனக்கென்ன தெரியும்? நீங்கதான் அந்த காலத்து ஆளு. சொல்லுங்க க்ரேன்மா நானும் தெரிஞ்சிக்கிறேன்.”

“தெரிஞ்சிக்கணும்பா. இப்ப உள்ள இளசுங்களுக்கு ஒண்ணு எதையுமே தெரிஞ்சிக்கிறதில்லை. இல்லன்னா ஜாதிப்பெயர் சொல்லி அராஜகத்துல இறங்குறாங்க. ரெண்டுமே தப்புன்னு சொல்வேன்.” பேரனின் அமைதி தொடர... “ஜாதி கட்டமைப்பு உருவாக்கி காலம் காலமா அதோடவே வாழ்றாங்க. வெளியில பார்த்தா மனுஷனுக்குள்ள என்ன வேற்றுமை? மனிதனை மனிதனா மட்டும் பாருங்கன்னு திட்டலாம். கோஷம் போடலாம். ஆனா அந்த கட்டமைப்பு இல்லைனா மனுஷனே ஒழுங்கில்லாமல் இருந்திருப்பான்.”

“புரியுற மாதிரி சொல்லுங்க க்ரேன்மா.”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
“சரியோ தவறோ ஜாதின்ற கட்டமைப்புக்கு கட்டுப்படுற ஆள்கள்தான் இங்க அதிகம். யார் வேணா யார் கூட வேணும்னா இருக்கலாம்ன்ற முறைமையை மாத்தி, இதுதான் உன் எல்லை, இந்த எல்லைக் கோட்டுக்குள்ள நீ இருக்கப் பழகிக்கோ. எல்லை தாண்டிப்போகாதன்னு ஜாதிக் கோட்பாடுகளை மனுஷங்க மனசுல பதிய வச்சிருந்தாங்கன்னும் சொல்லலாம்.”

“ஒழுங்கில்லா வாழ்க்கையில் இருந்து சரியா வாழ வச்சது இந்த ஜாதி கட்டமைப்பு. அதனால்தான் குடும்பங்கள் சீர்குலையாம இருந்திச்சி. வீட்ல பார்க்கிற பொண்ணையோ பையனையோ விரும்பி ஏத்துக்கிட்டு வாழப் பழகிக்கிட்டாங்க. அதனால என்ன கெட்டுப்போச்சி. இந்தியா பல நாடுகளால பெருமையா பார்க்கப்பட்டதுன்னா இதுவும், இந்த ஒற்றுமையும் ஒரு காரணம்தான். தன் குடும்பம்னு ஆனதும் கல்யாணம் முடிஞ்சவன் இன்னொருத்தியை பார்க்க அஞ்சுவான்.”

“ஜாதியை மதிக்கலாம் அதுக்குக் கட்டுப்படலாம். ஆனா வெறி இருக்கக்கூடாது. ஜாதி, கௌரவம்ன்ற பெயர்ல நடக்கிற ஆணவக்கொலைகள் அனுமதிக்கக்கூடாது. தப்பு செய்யாம ஒரு எல்லைக்குள்ள இருக்கணும்னுதான் ஜாதி கட்டமைப்பு வந்தது. தப்பு செய்றதுக்காக ஜாதியை காரணம் காட்டுறது ரொம்பவேத் தப்பு.”

(ஜாதிப் பற்று இருக்கலாம். வெறி இருக்கக்கூடாது. இது என் கருத்து.)

“இதுல இன்னொண்ணும் இருக்கு அரி. உன் தப்பு உன் தங்கை வாழ்க்கையைப் பாதிக்கும். முன்னேரு சரியாயிருந்தா பின்னேரு தன்னால போகும்னு பழமொழியிருக்கு. உன்னோட நடத்தையை வச்சிதான் உன் தங்கை நடத்தை விமர்ச்சிக்கப்படும். நாம செய்யுற ஒண்ணு நம்மை மட்டும் பாதிச்சா ச்சீ... போன்னு தூக்கிப் போட்டுட்டுப் போயிரலாம். அதே குடும்பம் முழுமையும் பாதிச்சா..?”

“அதோட முஸ்லிம் வீடுகள்ல ரொம்பவே பார்ப்பாங்கபா. ஜாதிப் பிரச்சனையைக் கூட தகுந்த ஆட்களை வச்சிப் பேசி கட்டுக்குள்ள கொண்டு வந்திரலாம். மதம்! மதப்பிரச்சனை எல்லாத்தையும் விடக்கொடியது.”

“நீ எங்களுக்கு வேணும். எக்காரணத்தைக் கொண்டும் உன்னை இழக்க நாங்க தயாராயில்ல. இதுக்கு மேல என்ன சொல்லி புரியவைக்கிறது தெரியல. உன்னிஷ்டம் போல செய்னு சொல்ல நீ தனியாள் கிடையாது. நம்ம குடும்பத்தை யோசிச்சி பார்த்து பக்குவமா நடந்துக்க. இப்ப பார்த்திருக்கிற பொண்ணு ரொம்ப அழகாயிருக்கா. கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழ்ற வழியைப்பாரு. மீறி அந்தப் பொண்ணுதான் வேணும்னா எங்களை மறந்திரு” என்றார் அழுத்தமாக.

“க்ரேன்மா! நான் அப்படி எதுவும்...”

“எதுவும் இல்லன்னா சரி. நீ கெட்டு அந்தப் பொண்ணையும் பலி கொடுத்திராத. காதல்னு நீங்க அடிக்கிற கூத்துக்கு உயிர்ப் பலி எதுக்கு? நீ புத்திசாலி புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்” என்று சத்தமில்லாமல் சொல்லிச் சென்றார் பாக்கியவதி.

பாட்டி சென்றதும் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன் “கிழவி எவ்வளவு நேக்கா என்னை ப்ளாக்மெய்ல் பண்ணி வக்கீல்கிட்டயே வாதாடிட்டுப் போகுது. ஹ்ம்... க்ரேன்மா சொல்றதும் சரிதான? மனிதர்கள் ஒழுக்கமா வாழ இதுவும் ஒரு காரணம்தான். மறுக்க முடியாத உண்மை! பேசாம இந்தக் கிழவியை, ஜாதிக்கட்சிக்கு கொள்கைப் பரப்பு செயலாளரா மாத்திடலாம். கேடி க்ரேன்மா.”

“ஹ்ம்... நதீரா! என் ஆசைக்கு அல்பாயுசு. காதல் கூட இடம் பார்த்துதான் வரணும்போல. ஆனாலும் முருகா! அவள்தான் எனக்குன்னு நம்பிக்கை கொடுத்துட்டு இப்படி... ப்ச்... சரி விடு நீயென்ன செய்வ? நீயும் ஜாதி மாத்தி கல்யாணம் முடிச்ச ஆள்தான. உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா? போ முருகா” என்றான்.

‘இன்னும் புகைப்பட வடிவத்தில் சந்தர்ப்பம் இருக்குடா பக்தா! திறந்து பார்த்தால் உன் வாழ்க்கை நிம்மதியாக போகும். இல்லை என்றால் உன் விதியை நீதான் அனுபவிக்கணும்’ என்றாரோ அந்த ஆறுமுகன்!

“அண்ணா! இந்த போட்டோ பார்த்துட்டு சொல்லு” என கெஞ்சலாகக் கேட்டாள்.

“அதெல்லாம் பார்க்க முடியாது.”

“ஒரே ஒருமுறை பாருண்ணா. இவங்க அண்ணியா வந்தா, நான் ரொம்ப ஹேப்பி” என்றாள் தனக்காகவாவது இறங்கி வருவானா என்ற எதிர்பார்ப்புடன்.

“உன்னோட காப்பிக்கெல்லாம் நான் டிக்காஷன் ஆக முடியாது. நீ போ” என்று விரட்டினான்.

“இப்ப நீ நல்ல மூடுல இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சிப் பார்த்துக்கோ” என்று போட்டோவை அவனின் எழுதும் மேஜையில் வைத்தாள்.

“ஏய்!” என பல்லைக்கடிக்க,

“முடிஞ்சா இந்தப் பொண்ணை எனக்கு அண்ணியா கொண்டு வா. வேற யாரையாவது அந்த போஸ்டிங்ல போட்டன்னு வையி. அப்புறம் அந்நியனா மாறி, என் நாத்தனார் புத்தியைக் காட்டிருவேன்” என்றாள் மிரட்டலாகவே.

“இதுக்காகவே, வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரல நான் அர்ஸ் இல்ல” என்று மார் தட்டினான்.

“ஆமா நீ அர்ஸ் இல்ல. அரிச்சந்திரன்தான நீ! ஹா... பார்க்கலாம் பார்க்கலாம். அப்புறம் இந்த காதலுக்கு தூது அனுப்ப தங்கச்சியைத் தேடுறது. கெஞ்சியாவது அவளைப் பார்த்து எனக்கு தகவல் சொல்லுன்னு சொல்றது. இப்படிலாம் ஐடியா இருந்தா விட்ரு. அதெல்லாம் நான் செய்யமாட்டேன்.”

“அட பார்றா! யாராவது சொந்த காசுலயே சூனியம் வச்சிப்பாங்களா? நான்லாம் அந்த ரிஸ்க் எடுக்கமாட்டேன்” என்று தங்கையவளுக்கு நக்கலாகப் பதிலளித்தான்.

“ஓ... பார்க்கலாம். காற்று எப்பவும் ஒரே திசையிலேயே அடிக்காது பிரதரு” என பதிலுக்கு அவனை கலாய்த்தாள்.

“இந்தா அடிக்குது பாரு” என் அவளின் முதுகில் அடிவைக்க,

“அம்மாஆஆ...” என்றலறி அழுதபடி தாயிடம் சென்று அண்ணனவன் அடித்ததைச் சொல்லி கண்ணைக் கசக்கினாள்.

“ம்மா... இல்லம்மா பொய் சொல்றா” என்று அவள் பின்னாடியே வந்திருந்தான் அரிச்சந்திரன்.

“இவன்தான்மா பொய் சொல்றான். பாருங்க விரல் பதிஞ்சிருக்கு” என்று இன்னுமே அழுதாள்.

“என்ன பழக்கம்டா பொம்பளைப் பிள்ளைகிட்ட கை நீட்டுறது? தப்பு அரி” என்று மகனைக் கண்டித்தவர், “நீயும்தான் ஏன்டி அவன்கிட்ட வம்பிழுக்கிற? அப்புறம் அடிச்சிட்டான் கிள்ளிட்டான்னு அழ வேண்டியது. உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு...” தலையிலடிக்காத குறையாக சென்றார்.

“ச்சீ... பே...” என தங்கையும் முகம் வெட்ட,

“நல்ல நாள் அதுவுமா திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களாடா?”

“சும்மாப்பா” என்றான் பவ்யமாய்.

“அதுக்கு இன்னைக்குமாடா? சரி நாளைக்கு எங்கயாவது போயிட்டு வரலாமா?” என்றார் ரவிச்சந்திரன்.

“சமயபுரம் போகலாமாங்க. வரும்போது மேல்மருவத்தூரும் போயிட்டு வரலாம்.”

“அப்படியே காளாஸ்திரி போயி ஒரு முழுக்கு போட்டு தோஷ நிவர்த்தி செய்துட்டு வரலாம் யசோ.”

கணவனின் கிண்டல் உணராது “சரிங்க அப்படியே செய்யலாம்” என்றதில் பிள்ளைகள் இவரும் சிரிக்க,

“அவன் உன்னைக் கேலி செய்றான். அதுகூட தெரியல உனக்கு” என்று மாமியார் அவரைக் கேலி செய்ய, சகுந்தலா கணவரை முறைத்தார்.

“அப்பா மகாபலிபுரம் போகலாமா? போயி நாலைந்து வருஷம் ஆகிருச்சிப்பா” என்றாள் மின்னல் கொடி.

“பீச் பார்க்க அங்கவரை ஏன்ப்பா போகணும்? இங்க இருக்கிற மெரீனா, சாந்தோம் போதாதா? இதுக்கு மெனக்கெட்டு செலவழிச்சி அங்க போகணுமா?” என்று தங்கையின் ஆசையில் மண்ணை அள்ளிக் கொட்டினான்.

“அப்பா பாருங்கப்பா இவனை. நான் எது சொன்னாலும் ஆப்போசிட்டாவே பேசிட்டிருக்கான். நான் சிம்லா குலு-மணாலின்னு கேட்டேனா? இல்ல ஊட்டி, கொடைக்கானல்னு கேட்டேனா? காலையில் போயிட்டு மதியம் வந்திடுற தொலைவில் இருக்கிற இடம்தான” என்று கோவமாய் கத்தினாள்.

“நீ கோவத்துலதான் மின்னல்மா அழகாயிருக்க” என்று தங்கையின் கன்னம் வழித்து, “காலையில் சீக்கிரம் கிளம்பலாம்பா. அப்பதான் டிராபிக் தாண்டி ஈவ்னிங் சீக்கிரம் வரமுடியும்” என்றான்.

‘அண்ணன்டா!’ மனதினுள் சிலாகித்து, ‘ம்க்கும்... இதுக்கு ஆரம்பத்துலயே ஒத்துக்கொண்டிருக்கலாம்’ என உதடு சுளித்து நகர, அவள் கைபேசிக்கு வந்த வாட்சப் மெசேஜைத் தொடர்ந்து அழைப்பும் வர, “ஹேய் நட்டுமா! ஹேப்பி பொங்கல். என்ன காலையிலேயே அழைப்பு?”

“இது காலையிலயா? முதல்ல டைம் பாரு. மதியம் மூணாகுது. இப்ப அது முக்கியமில்ல என்கிட்ட பேசிட்டே, நான் வாட்சப் பண்ணின பிக்சரைப் பாரு. அப்ப தெரியும் உன் அண்ணன் லட்சணம்” என்றதும் வேகமாக வாட்சப் ஓபன் செய்து பார்க்க, ஆச்சர்ய பாவனை மின்னல் பெண்ணிடம்.

“இல்லடி. இப்படி இருக்க சான்ஸ் கிடையாது” என்றாள் தன் அண்ணனை அந்தக் கோலத்தில் நம்பாது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top