- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
5
“நேர்ல பார்த்து போட்டோ எடுத்த நான் லூஸா? நல்லா பாரு அது உன் அண்ணன்தான். சிகரெட்டும் கையுமா? உவ்வே! இதோ பாரு மயிலு எதுவாயிருந்தாலும் இப்பவே நிறுத்திக்கச் சொல்லு. நான் நிறுத்தறதா இருந்தா உன் அண்ணன் அவ்வளவுதான்” என்றாள் கறாராக.
“ஏய்! நிஜமாவே அண்ணனுக்கு அந்த பழக்கம் இல்லை” என்றாள்.
“யார் போன்ல?” என இடையிட்டான் அரிச்சந்திரன்.
“ஃப்ரண்ட் அண்ணா.”
“என்னைப்பற்றி ஏதோ...” என இழுக்க...
“ஐயோ! இல்லண்ணா. அவளோட அண்ணன் சிகரெட் பிடிக்கிறாங்க சொன்னா. நான் இல்ல சொன்னேன்.”
“தங்கச்சியே அப்படி சொல்லும்போது நீ மட்டும் ஏன் மறுக்கிற?”
“எனக்கு அண்ணனைத் தெரியும். சும்மா கிண்டலுக்காகச் சொல்றா.”
“ஏய்! இங்க எந்த அண்ணன்டி இருக்கிறார். பேசாம உன் அண்...”
“ஐயையோ!” என உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.
“மின்னல்” என்று அதட்டிய சகுந்தலா, “உள்ள போய் பேசு” என்றார்.
“சரிம்மா. சாரிம்மா” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
“ஏன்டி அலறி என் மானத்தை வாங்குற?”
“ஓய்! உன் மானத்தையா? போனது என்னோட மானம் ஆத்தா.”
“உன்னை யார்டி உணர்ச்சிவசப்படச் சொன்னது? சொல்றதையாவது முழுசா கேட்டிருக்கணும். பேசாம உன் அண்ணனை சீக்கிரமா என்னோட சேர்த்து வச்சிருன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள...”
“ஷப்பா! லூசே அதை ஒழுங்கா சொல்றதில்லையா? பக்குன்னு ஆகிருச்சி” என்றாள் நெஞ்சைப் பிடித்தபடி.
“ஏய்! வருங்கால அண்ணியை லூசு சொல்ற. மரியாதை தரல, எதாவது ஒரு ரௌடிப்பயலா பார்த்து உனக்குக் கட்டிவச்சிருவேன்” என்றாள் மிரட்டலாக.
“ஏன்டி சொல்லமாட்ட. எனக்கு முடிச்சிட்டுதான் அண்ணனுக்கு முடிக்கணும்னு முடிவு செய்திருந்தவங்களை, கரையா கரைச்சு முதல்ல அண்ணனுக்கு முடிக்கச் சொல்லி, அதிலும் உன்னையே பொண்ணா செலக்ட் பண்ணவச்சி, என்னோட கல்யாணத்தைத் தியாகம் செய்திருக்கேன். ஆனா நீ...” என்று மூச்சுவிடாமல் பேச,
“நான்,..” என்றாள் சிரிப்புடன்.
“நீ.., அச்சோ பேசிட்டிருந்தது மறந்திருச்சிடி. என்ன சொல்லிட்டிருந்தேன்?”
“மிகச்சிறப்பு நாத்தனாரே! ஹேய் நேத்து போகிக்கு வீடு க்ளீன் பண்ணினப்ப உள்ள போட்டோவை அனுப்பியிருந்தியே, செம கலக்கல்தான் போ.”
“எது அந்த பெர்முடாஸ் போட்டுக்கிட்டு, கையில்லாத பனியனோட, தலையில் டவல் கட்டிட்டு சித்தாள்போல் இருந்தானே அதுவா?”
“யா...யா... அதே அதே” என்றாள் தலையசைத்து.
அவளின் தலையாட்டலை உணர்ந்தாளோ மின்னல், “என்ன ரசனைடி உனக்கு? என்னாலயே அந்த மூஞ்சியை சில நிமிஷத்துக்கு மேல சகிச்சிக்க முடியலை. நீ என்னடான்னா...”
“உன்னை யார்டி சகிச்சிக்கச் சொன்னா. நான் இருக்கேன் என்னோட சந்துரு குட்டிக்கு” என்றாள் விஷமத்தனமாய்.
“என்னது குட்டியா? ஆண்டவா ஏர்வாடி கேஸெல்லாம் என் தலையிலையா ஃப்ரண்டா விழணும்” என்று தலையில் கைவைத்தாள்.
“வேற அப்ஷன் இல்லைடி செல்லம் உனக்கு.”
“விதி யாரை விட்டது. நீதான் என் அண்ணின்றதை மாத்தவா முடியும்.”
“கொடி உன் அண்ணன் என்ன சொன்னாங்க? என் போட்டோ பார்த்தாங்களா?”
தோழியின் ஆர்வமும் தவிப்பும் சற்று கவலையைக் கொடுத்தது. அண்ணன் அவளை மறுத்ததோடு புகைப்படம் கூட பார்க்காததை எந்தக் கணக்கில் எடுப்பதென்று தெரியவில்லை. அவன் சொன்ன முஸ்லிம் பொண்ணு உண்மையாக இருந்தால், நினைக்கையிலேயே மனம் சற்று கலங்கித்தான் போனது பெண்ணிற்கு.
“கொடி என்ன பதிலையே காணோம்? எ...என்னை வே...ண்டாம்னு...” குரல் கரகரத்து வர அடுத்து பேசு முன், “ஏய் நீயா எதாவது கற்பனை பண்ணிக்காத. உன் போட்டோ பார்த்தா கண்டிப்பா அண்ணனுக்குப் பிடிக்கும்” என்றாள்.
“அப்பப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்களா? ஏன்டி என்னைப் பிடிக்கலை?” என்றாள் அழுகுரலில்.
“ஏய் நட்டுமா! உன்னைப் பிடிக்கலை சொன்னா அவன் குருடன். அண்ணன் கல்யாணத்தைப் பற்றி இதுவரை யோசிக்கலை. அதான் எனக்கு பார்க்கச் சொன்னான். அதுக்கான பேச்சு வார்த்தைகள்தான் நடக்குது” என்றாள் தோழியின் வருத்தத்தைப் போக்க.
“சட்டுன்னு பயந்துட்டேன் மயிலு. வேற எதுவும் இல்லையே?”
“எதுவும் கிடையாது. நாளைக்கு குடும்பத்தோட மகாபலிபுரம் போறோம். நீ வர்றியா?”
“உங்களோடவா?”
“இல்லடி தனியாவே வா. அதுக்குள்ள அண்ணன் உன் போட்டோ பார்த்துட்டா நேர்லயே மீட் பண்ண வைக்கிறேன்.”
“அம்மா விடமாட்டாங்களே கொடி.” அவள் குரலில் வருத்தமும் அதே அளவு ஆசையும் இருந்ததோ!
“நான் யசோம்மாகிட்ட பேசுறேன். நீ சஞ்சய் அண்ணாவையும், ஆர்த்தி அண்ணியையும் கூட்டிட்டு வா.”
“ம்... அம்மா சம்மதிச்சா என் சந்துருவைப் பார்க்க கண்டிப்பா வர்றேன்” என்றாள் உற்சாகமாய்.
தோழியின் உற்சாகம் அவளுள் ஏதோ செய்ய “அப்புறம் நதிமா?” என இழுக்க,
“சொல்லுடா?” அன்பாய் வந்தன அவளின் வார்த்தைகள்.
“இல்ல. சப்போஸ் நெகடிவா பதில் வந்தாலும் ஹர்ட் ஆகிடாதடா” என்றாள் தவிப்புடன்.
“கொ...கொடி நிஜமா வீட்ல என்ன நடந்ததுன்னு சொல்லு? உன் அண்ணன் என்னை வேண்டாம் சொல்லிட்டாங்களா?”
“ஏய்! இல்லடா. இப்பவே கல்யாணம் செய்யணுமான்னு யோசிக்கிறான்.”
“எனக்காக பொய் சொல்லலையே?” தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“இல்லடா. எனக்கு அண்ணின்னு வந்தா அது நீ... நீ மட்டும்தான்.” தோழியிடம் அழுத்தமாகச் சொல்லி தனக்குத்தானே முடிவெடுத்தும் கொண்டாள்.
“கொடி மகாபலிபுரம் வந்தாச்சு. நீங்க எங்கயிருக்கீங்க?”
“யாரெல்லாம் வந்திருக்கீங்க நதி?”
“சஞ்சய் அத்தான் ஆர்த்தி கூடதான் வந்திருக்கேன்.”
“சஞ்சித் அண்ணா வரலையா?”
“ஹெல்த் ப்ராப்ளம்னால அதிக ட்ராவல் வேண்டாம்னு விட்டுட்டேன்.”
“அதெப்படிடி லவ் பேர்ட்ஸ்கு நடுவுல கரடியா வந்த?” என்று போனிலேயே தன் சீண்டலை ஆரம்பித்தாள்.
“எனக்குதான் அவங்க கரடி. நான்தான் அவங்களைக் கூட்டிட்டு வந்தேன்” என்று முறுக்கிக்கொள்ள...
“நீ வார்த்தையை எப்படித் திருப்பினாலும் ஒரே அர்த்தம்தான் செல்லம்.”
“ம்க்கும். முதல்ல எங்கயிருக்க சொல்லு?”
“இது டிபன் டைம் நதி. அப்படியே இந்த ரெஸ்டாரண்ட் வா” என்று பெயர் சொல்ல... சில நிமிடங்களுக்கெல்லாம் அங்கு வந்து மின்னல் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு டேபிள் தள்ளி.. தான் மட்டுமாக அரிச்சந்திரனைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சஞ்சய் ஆர்த்தியை தனக்கெதிரே உட்காரவைத்து தோழிக்கு மெசேஜைத் தட்டிவிட்டாள்.
மெசேஜ் படித்ததும் திரும்பி இரண்டு டேபிள் தாண்டிப் பார்த்தவள் மூன்றாவது டேபிளில் அவளைக் கண்டு புன்னகைத்து தலையசைத்தாள் மின்னல் கொடி.
“அப்புறம்.. மாமன் மகளே இங்க ஏன் கூட்டிட்டு வந்தன்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கலாமா?”
“கல்யாணத்துக்குப் பிறகு ஹனிமூன் ஸ்பாட்டா இதைத் தேர்ந்தெடுக்க ட்ரையல் பார்க்க வந்திருப்பாளா இருக்கும்ங்க” என்று ஆர்த்தி அவளை கலாய்க்க.
“சேச்சே.. அதுக்கு சம்பந்தப்பட்ட பையனும் இருக்கணுமே. இது வேற எதோ” என்றான் சஞ்சய்.
‘ஹய்யோ! ஒருவேளை அவங்க இங்க இருக்கிறதைப் பார்த்துட்டுதான் கலாய்க்கிறாங்களோ!’ மனம் அடித்துக்கொள்ள முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு “என்ன அத்தான் நான்தான் லீவ் செலப்ரேட் பண்றதுக்குன்னு சொன்னேன்ல. திரும்பவும் என்ன சந்தேகம்?”
“அதுதான் சந்தேகமே? அத்தை வேற திடீர்னு போன் பண்ணி நதி மகாபலிபுரம் போகணும்னு ஆசைப்படுறா. நாளைக்கு மூணுபேரும் போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க. கார்ல ஏறுனதிலிருந்து மேடம்கு முகம் பளிச்சின்னு இருக்கு. லீவ் செலப்ரேட்லாம் சும்மா. உண்மையைச் சொல்லு நதிமா?” என்றான்.
“நிஜம்தான் அத்தான். அதோட ஆறே மாதமான கல்யாண தம்பதிகள் நீங்க. ஆர்த்தி கூட நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணின மாதிரியும் இருக்குமே. அந்த நல்லெண்ணம்தான்.”
“இல்லையே எங்கேயோ இடிக்குதே. பக்கத்து இலைக்குப் பாயசம் தேடுற மாதிரில்ல தெரியுது” என்றாள் ஆர்த்தி.
“ஒண்ணும் இடிக்கலை. முதல்ல சாப்பிடுங்க” என்று ஆர்டர் செய்த டிபன் வந்ததும் சாப்பிட ஆரம்பிக்க சஞ்சய் ஆர்த்தி இருவரும் தங்களுக்குள் எதையோ பேசி சிரித்தபடி உண்ண... அரிச்சந்திரனின் மேல் வைத்த பார்வையை மாற்றாது உணவருந்தினாள் நட்சத்திரா.
தன்னை ஊடுருவும் பார்வையின் வீரியத்தில் சுற்றிலும் பார்த்த அரிச்சந்திரனின் பார்வை வியப்பில் விரிந்து அழகாய் அவளிடம் தஞ்சமடைந்ததோ!
அவனின் பார்வை சுழற்சியில் சட்டென்று தலைகுனிந்து உணவினை ஆராய.. அவன் பார்வைதனில் பாவையவளின் இதயத்துடிப்பும் அதிகரித்தது.
‘ஹ்ம் என்ன பார்த்து என்ன புண்ணியம்? அதான் பக்கம் பக்கமா வசனம் பேசி எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டாங்களே!’ அருகிலிருந்த பாட்டியை கொலைவெறியாய் பார்க்கத் தவறவில்லை அர்ஸ். ‘நல்ல வேளை உன்கிட்ட பழகி உன் மனசைக் கெடுக்கலை. இல்ல அந்த பாவம் வேற என்னைச் சேர்ந்திருக்கும்.|
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கள குங்குமம் வாழ்க
வாழ்க வாழ்க
மனம் வருத்தத்தில் பாட்டுப்பாடி அவளை வாழ்த்தியது.