- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
6
ஆர்த்தி ரெஸ்ட் ரூம் போகக் கேட்க சஞ்சய் நட்சத்திராவையும் கூப்பிட அவர்கள் வரும்வரை தான் இங்கேயே இருப்பதாக அவர்களைப் போகச்சொல்லி அமைதியாக கடல் அலைகளைப் பார்த்திருந்தாள்.
அப்பொழுது யாரோ தன்னைப் பார்ப்பதுபோல் உணர்வு எழ திரும்பி சுற்றிலும் பார்க்க எவரும் இல்லை அங்கே. மீண்டும் அதே உணர்வு எழ கண்டுகொண்டாள் அவனை! ‘அவன்தானா?’ மனதினுள் சந்தேகத்தோடு அச்சமும் எழுந்தது. அவன் பார்வையின் தீவிரத்தில் அதோடு அந்தத் தளும்பும் சேர, ‘அவனேதான்’ என்று அடித்துச் சொல்லியது மனம். அந்தத் தளும்பு இல்லையென்றால் சத்தியமாக அவனை அடையாளம் கண்டிருக்கமாட்டாள். ஏனெனில் அவன் முகத்தில் உள்ள தளும்பு அவளால் வந்ததல்லவா!
சட்டென்று சஞ்சய் வருகிறானா என்று பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்கள் தெரியவில்லை என்பதை உணர்ந்தவளுக்கு, என்ன செய்வதென்றே சில நொடிகள் புரியவில்லை. ‘இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை அடையாளம் தெரிகிறதா அவனுக்கு? எப்படி சாத்தியம்? இவ்வளவிற்கும் நான் முழு முகத்தையும் காட்டவில்லையே. எனக்குமே அவனது தளும்பைக் கண்டுதானே தெரிந்தது. என்னில் மட்டும் மாற்றங்கள் இல்லையா? அடையாளம் தெரிந்து பார்க்கிறானா? இல்லை தெரிவதற்காகப் பார்க்கிறானா? எதுவாக இருப்பினும் இவ்விடத்தில் இருப்பது சரியில்லை’ என எச்சரித்தது மூளை.
அவன் மெல்ல தன்னை நெருங்கி வருவது புரிய உடல் உதறலெடுத்தது என்றால் அது பொய்யில்லை. ‘எழுந்து ஓடிவிடலாமா?’‘அதைச் செய்’ என மனம் துரிதப்படுத்த எழுந்து போனை எடுத்துகாதில் வைத்துப் பேசியபடி நடக்க உண்மையிலேயே அவன் தன்னைப் பின்தொடர்வதை உணர்ந்தாள்.
கால்கள் கடற்கரை மணலில் புதைய மனதின் வேகம் காலின் வேகத்தைக கூட்ட செல்லை பர்ஸில் வைத்து கையில் பிடித்தபடி ஓட அவனின் விரட்டலும் அதிகரித்தது. வேகம் வேகம் வேகம் மட்டுமே உள்ளும் புறமும். ஆளில்லா இடத்தில் வேகத்தை மீறிய பயம் அதிகரிக்க தூரத்தில் தெரிந்த தங்கும் விடுதியைப் பார்த்தாள். ஆள்கள் அதிகமுள்ள இடத்தில் அவன் தன்னை எதுவும் செய்யமுடியாதென்று அதை நோக்கி ஓடினாள்.
அவளைத் துரத்தியவன் அவளை ஏதோ சொல்லி அழைக்க, அவ்வார்த்தை காதில் விழுந்ததில் கால்கள் தள்ளாடி முன்னே சென்றவன் மேல் இடித்து கீழே விழப்போக, “ஏய்!!” என்ற குரலில் அவனின் கால்களும் தடுமாறி கீழே விழ, அவன்மேல் விழுந்தாள் நட்சத்திரா!
திட்ட வாய் திறந்த அரிச்சந்திரன் அவளைக் கண்டு வாய்மூட, இருவர் பார்வையும் ஒருவரையொருவர் ஆச்சர்யத்தில் நேசமாய் பார்த்தது. ஏனோ எழத் தோன்றாமல் ஒருவருக்கொருவர் மூழ்க, அதற்குள் தன்னை விரட்டியவனின் குரல் கேட்க அதில் கலைந்தவள், திரும்பிப் பார்த்ததில் அவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“சாரி” என்று நட்சத்திரா எழுந்து அவனையும் கைபிடித்து எழுப்பி, பிடித்திருந்த கையை விடாமல் வேகமாக நடந்தாள்.
அதிர்ந்து அவளைப் பார்த்தபடி அவளின் இழுப்பிற்குச் சென்றாலும் ஏதோ அவளிடம் சரியில்லையென்று மட்டும் புரிந்தது.
சட்டென்று நின்றவன், “உங்களுக்கு எதாவது பிரச்சனையா? எதுவாயிருந்தாலும் சொல்லுங்க. நான் பார்த்துக்குறேன்” என்றான்.
“ஸ்ஸ்... எதுவும் பேசாம என்னோட வாங்க. இங்க நின்னா ஆபத்து எனக்கு மட்டுமில்லை உங்களுக்கும்தான்.” எச்சரிக்கை அவள் குரலில்.
“ஏன்?”
“ப்ச்... பேசுறதுக்கு நேரமில்லை. என்னோட வாங்க” என்று இழுத்துச் செல்ல, உரிமையுடன் தன் கைபிடித்துச் செல்பவளை ஒருவித சுவாரசியத்துடன் பார்த்தான். தங்கள் இருவரின் கை சேர்ந்ததே தாங்கள் சேர்ந்ததாக அவனுக்குத் தோன்றியதோ!
ஹ்ம்.. யாரறிவார் அடுத்தவரின் மனதை!
அவளிடம் இருந்து விலக நினைத்தவன்தான், இப்பொழுதோ அவள் அண்மையில் தன் மனம் தன்னிடமிருந்து முழுவதுமாக நழுவுவதை உணர, ‘முருகா! சோதிக்கிறியே’ என்றவன், “ஏங்க நான் வக்கீல்தான். என்னன்னு சொன்னா ஒரு கை பார்த்திரலாம்” என்றான் அவளுக்குத் தைரியம் கொடுக்கவென்று.
“அதான் எனக்குத் தெரியுமே” என்று முனகினாள்.
ஓடியபடியே, “புரியலை?” என்றவனிடம் மூச்சு வாங்கியபடி, “எ...எல்லா இடத்திலும் வீரம் வேலைக்காகாது. வக்கீலா இருந்தாலும் உங்களுக்கும் அது பொருந்தும். என்னை யார் தொட்டாலும் வெட்டிருவான். உங்கமேல நான் விழுந்ததை வேற பார்த்திருக்கான். அதனால அமைதியா என்னோட வாங்க” என்றாள்.
“நான்தான் உங்கமேல விழலையே?”
“யார்மேல யார் விழுந்தா என்ன? பாடி டச் ஆச்சிதுல்ல. அது போதாதா அவனுக்கு. சைலன்டா வாங்க. இப்போதைக்கு உங்க முகம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கலைன்னாலும், என்னோட உங்களைப் பார்த்துட்டா எப்ப இருந்தாலும் பிரச்சனை.”
“இன்ட்ரெஸ்டிங். அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவன்? அப்ப நான் அவனைக் கண்டிப்பா பார்க்கணுமே” என்று திரும்பப்போக,
“ப்ளீஸ்! நிற்காம வாங்க” என்று மறைவான ஓரிடத்தில் நின்று விரட்டி வந்தவனைப் பார்க்க, அவன் சுற்றிலும் தேடி ஏமாந்து ஆத்திரத்தில் செல்வது அவன் செய்கையில் தெரிந்தது.
அதன் பின்னே அவன் கையைவிட்டு கண்மூடி மூச்சை இழுத்துவிட்டு நிதானம் வரவும், கண்திறந்து பார்த்தவள் கண்கள் தெரித்து விடுவதுபோல் நம்ப இயலாமல் தங்களைக் கண்டது. மிகவும் நெருக்கமாக கிட்டத்தட்ட அவனை அணைத்தபடி நின்றிருப்பதை உணர்ந்தாள். “சா...சாரி” என சட்டென்று வேகமாக விலகப்போகையில் கால்கள் தடுமாறியது.
“ஹேய்! பார்த்துமா” என்று கைபிடித்து நிறுத்தி, “ஆர் யூ ஓகே” என்றான்.
‘ம்...’ என குனிந்தபடியே தலையசைக்க ஜில்லென்று லேசான தூறல் விழுந்து அவர்களை நனைக்க ஆரம்பிததது.
அவளைப் பின் தொடர்ந்தவனின், “ஏய் பொண்டாட்டி! எங்க போயிட்ட?” என்ற வார்த்தையும் காற்றோடு கலந்தது.
ஜில்லென தூறிய மழையில் நனைந்தபடி, “மழை வருதுமா. உன்கூட யார் வந்திருக்காங்க?” என்று அரிச்சந்திரன் கேட்டான்.
“அத்தானும் அவங்க ஒய்ஃபும் வந்தாங்க. எங்க இருக்காங்கன்னு கேட்கிறேன்” என்று கைப்பையில் இருந்து போனை எடுக்கப்போக,
அவளைத் தடுத்து, “அதோ குடை இருக்கே அங்க போய் போன் பண்ணிக்கலாம்” என்று அவ்விடம் சென்றதும், அவள் சஞ்சய்கு பேசித் திரும்புகையில், அரிச்சந்திரன் உதட்டில் வெள்ளையாய் ஒன்று இடம் பிடித்திருக்க, சட்டென்று முகம் சுளித்தாள் நட்சத்திரா.
“சிகரெட் பிடிக்கிறது ஹெல்த்துக்கு நல்லதில்லை. அதுவும் ஒரு பொண்ணு கூட நிற்கும்போது சுத்தமா நல்லதுக்கில்லை.” மனம் கேளாமல் சொல்லிவிட்டாள்.
“அஹான்!” சிறு கேலிபோல் அவன் சொல்லவும் அவனை நட்சத்திரா முறைத்தாள்.
“முறைச்சாலும் அழகாதான் தெரியுற. நீ பிடிக்கிறியா?” என்று அந்த வெள்ளை வஸ்துவை அவளிடம் நீட்டினான்.
“ச்சீய்... கருமம். ஆம்பளைங்களையே சிகரெட் பிடிக்கக்கூடாது சொல்வேன். பெண்கள்! அதிலும் நான்...”
அவளின் சுளித்த முகத்தைக் கண்டு ரசித்தவன் இதழ்களில் மென்னகை எழ “பரவாயில்லமா ஒன்ஸ் ட்ரை பண்ணு” என்றான்.
“அறிவில்லை உங்களுக்கு?” என்று கோபமாகக் கேட்க...
அதையும் ரசித்து “ஆமா கொஞ்சம் கம்மிதான். எனக்கொரு நூறு கிராம் தாயேன். நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்” என வம்பு வளர்த்தான்.
“எனக்கு வர்ற கோவத்துக்கு உங்களை...” என பல்லைக்கடித்து முறைக்க,
அவளின் உரிமையான கோவம் அவனுக்கும் பிடித்ததோ! “கோவ.த்தை அப்புறம் பார்க்கலாம். முதல்ல இதை ட்ரை பண்ணு. செம ஸ்வீட்டா இருக்கும்.”
‘ஹையோ... மயிலு! உன் அண்ணன் என்னடி இப்படி ஒரு கிறுக்கனா இருக்காங்க. பெருசா பொறுப்பு பருப்புன்னியேடி சரியான தயிர் சாதமா இருக்காங்க’ என்று மனசுக்குள் தோழியை வறுத்தெடுத்தாள்..
“என்ன யோசனையெல்லாம பலமா இருக்கு?”
“ஹான்! ஒ...ஒண்ணுமில்லையே” என்று புன்னகைக்க முயல,
“சரி மழையை என் சிகரெட்டோட ரசி” என்றான் புன்னகையை அடக்கியபடி.
‘ஙே’ என்றொரு பார்வை பார்த்து “உங்களை...” என அடிக்கக் கைநீட்ட...
நீட்டிய கையைப் பிடித்து இரு விரலிடையில் ஒன்றை வைத்து இறுக்கிப் பிடித்து, அவள் வாயருகில் கொண்டு செல்ல, அவளோ மறு கையால் தன் வாய்மூடி அதை மறுக்க... அந்தக் கையையும் தன் இன்னொரு கையால் பிடித்து, அந்த வெள்ளை நிற வஸ்துவை அவள் வாயில் வைத்துவிட்டான்.
‘ம்கூம்’ என பல்லைக்கடித்து மறுத்தும் அவள் உதடு தாண்டி பற்களில் முட்டி நின்றது அது.
கோவத்தில் அவன் கைகளைத் தட்டிவிட்டு, “பிடிக்கலன்றேன்ல. முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா? ஆர் யூ...”
அவள் முடிக்கும் முன், “உனக்கு வேண்டாம்னா போ நான் சாப்பிடுறேன்” என்று சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட, கேவலமாக முகம் சுளித்த பொழுதுதான் ஒன்றை உணர்ந்தாள். அது அவள் உதடுகளில் ஏற்பட்ட தித்திப்பு. கேள்வியாய் அவனைக் காண, புருவம் தூக்கி புன்னகையைப் பெரிதாக்கிச் சிரித்தவன், “யூ வான்ட்?” என்று இன்னொன்றை நீட்டினான்.
“இ...இதென்ன?” என்றாள் தயங்கியபடி.
“ம்ம்... எப்படிச் சொல்றது? ஜில்லென ஒரு மழைத்துளி! கடற்கரைக் காற்றின் இதம்! மாலை நேரத்து மயக்கம்! அழகும் இனிமையுமான பெண்ணொருத்தி! அவளுடன் நான்! ம்ம்... ஒரு ஸ்வீட்டோட கொண்டாட வேண்டிய தருணம். அதான் ஸ்வீட் தந்தேன்” என்றான்.
அசந்து கண்ணிமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் நட்சத்திரப் பெண்ணவள். ‘ஏய் மயிலு! உன் அண்ணனை விளையாட்டுப் பையன் பொறுப்பானவன்னு சொன்ன. என்கிட்ட நடந்துக்கிட்டதைப் பார்த்து, பொறுப்பில்லாதவன்னு நினைச்சி முடிக்கிறதுக்குள்ள அசத்துறாங்கடி! வாவ்! வாட் எ ரொமாண்டிக் சீன்னு சொல்லத்தோணுது. போட்டோ பார்க்காமலே இப்படின்னா போட்டோ பார்த்தா, கட்டினா என்னைத்தான் கட்டுவேன்னு சொல்வாங்க பாரேன்’ என்றெண்ணி அவனைக் கண்களுள் நுழைத்து மனதிற்குள் அனுப்பி அசையாமல் நின்றிருந்தாள்.
“ஹலோ! ஹலோ நதீரா! ஹலோ எக்ஸ்க்யூஸ்மி.” பலவகையில் அழைத்தும் அவளின் பார்வை மாறாதிருக்க அவளின் கைபிடித்து, “ஹேய் ட்ரீம்ஸ் போதும். எனக்கு வெட்கமாயிருக்கு” என்று கேலி பேசியபடி கையை எடுத்தான்.
அவனின் ட்ரீம்ஸில் கலைந்தவள் அவன் வெட்கமாயிருக்கு எனறதும் வித்தியாசமாய் பார்க்க, அவள் பார்வை உணர்ந்து, “நீ இப்படிப் பார்த்தா வயசுப் பையனுக்கு வெட்கமாயிருக்காதா?” என்றான் தரையில் கால்களால் கோலமிட்டபடி.
சட்டென்று சிரித்து, ‘ஹையோ! என் அழகே!’ என மனதினுள் கொஞ்சி “ஐயோ போதும். உங்க நடிப்பு பார்க்க சகிக்கலை. இதெல்லாம் நாங்க எம்.ஜி.ஆர் காலத்து படத்துலயே நிறைய பார்த்துட்டோம். இப்ப ட்ரெண்ட் எவ்வளவோ மாறிருச்சி” என்றாள்.
“மாறிருச்சின்னா? இப்ப உள்ள ட்ரெண்ட் வசனம் என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”
“மாறிருச்சின்னா மாறிருச்சி அவ்வளவுதான்” என்றவள் பேச்சை மாற்ற எண்ணி “ஹை... மழை நின்னுருச்சி. அதோ அத்தான் வர்றாங்க. நான் கிளம்புறேன்” என்றதும் மழைபோல் அவன் உள்ளமும் வரண்டு போக. சற்று தொலைவில் வருபவர்களைப் பார்த்தான்.
“பை சந்...” சந்துரு என்று சொல்ல வந்ததை நிறுத்தி “சார்” சொல்லிக் கிளம்ப, அவளின் கைபிடித்து. “சிகரெட்டோட சீக்ரெட் என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?”
“கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். பட் இப்ப டைம் இல்லையே. இன்னொரு நாள் தெரிஞ்சிக்கிறேன்.”
“அப்ப திரும்பவும் சந்திக்கலாம்ன்ற?”
“கடவுள் ப்ராப்தம் இருந்தா கண்டிப்பா சந்திக்கலாம்.”
“ஐம் வெய்ட்டிங்” செல்பவளைப் பார்த்தபடி திரும்பவும் சிறு தூறல்களாய் விழுந்த மழையை ரசித்தபடி
ஜில்லென ஒரு மழைத்துளி
எனைத் தாக்குதே பெண்ணே!
பாடலை சற்று சத்தமாகவே முணுமுணுக்க, நடந்து கொண்டிருந்தவள் நின்று அவன்புறம் திரும்பி காதலாய்ப் பார்க்க, அப்பார்வைதனில் கட்டுண்டானோ! அவனின் விளையாட்டுத்தனம் தலைதூக்கி, “யாகூ” என சப்தமிட, அதில் வெட்கம் வரப்பெற்றவள் தலையசைத்து விடைபெற, இன்னுமின்னும் உல்லாசம் அவனிடத்தில்.