• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
8

“நீ உருகி உருகிக் காதலிச்சது என் அண்ணன்னு தெரிஞ்சப்ப எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா நதி? ஆனா இப்ப எல்லாம் மாறிருச்சி. நான் உன் லவ்வை என்கரேஜ் பண்ணிருக்கக்கூடாது. அதுவும் ஏற்கனவே ஒருத்தனால் உன் வாழ்க்கை கேள்விக்குறியா நிற்கிறது தெரிந்தும் தப்புப் பண்ணிட்டேன். ஐம் சாரி நதி. ஐம் சாரி.”

அழுகை மின்னலுக்குப் பிடிக்காத ஒன்று. அதுவும் தொட்டதற்கெல்லாம் அழும் சிலரைக் கண்டாள் அவளுக்கு எரிச்சல்தான் வரும். அண்ணனிடம் சண்டையிடும்போது வரும் அழுகை வேறு வகையானது. அவள் அழுத நேரங்களை கைவிட்டு எண்ணிவிடலாம். அதனால்தானோ என்னவோ அவளின் கண்ணீர் தாயைப் பாதித்து மகளுக்கு ஆதரவாக பேசவைத்தது.

தொடர்ந்து போன் ரிங் அடிப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள் மின்னல் பெண். தோழியிடமிருந்து பதினைந்து மிஸ்ட் கால்கள். எடுக்கவா, வேண்டாமா என்று மனம் தவிக்க, தன்னை விட எதிரில் இருப்பவள் இன்னும் தவிப்பாள் என்று முகத்தை சரி செய்து தண்ணீர் குடித்து, தொண்டையையும் சரி செய்து அவளை அழைக்க கைபேசி எடுத்த நொடி, அடுத்த அழைப்பு தோழியிடமிருந்து.

“ஏய் எவ்வளவு நேரம்டி ட்ரை பண்றது? என்னாச்சி உனக்கு? எங்க போயிருந்த?” என படபடத்தாள்.

“ஹேய் நதிமா ரிலாக்ஸ். போனை ரூம்ல வச்சிட்டு அம்மாகிட்ட பேசிட்டிருந்தேன். வந்து பார்த்தா ஏகப்பட்ட மிஸ்ட் கால். நான் உனக்கு ட்ரை பண்றதுக்குள்ள நீயே பண்ணிட்ட. சரி அப்படி என்ன அவசரம்?” என்றாள் காரணம் தெரிந்துகொண்டே.

“ஒரு அவசரமும் கிடையாது. நீ போன் அட்டெண்ட் பண்ணலன்னதும் ஒரு பயம். அதைவிடு ஏன் உன் குரல் ஒரு மாதிரியிருக்கு? அழுதியா என்ன?”

“ஏய் லூசு. நான் அழுது நீ பார்த்திருக்கியா? அப்பாவுக்கு பெப்பர் எக் செய்யலாம்னு ட்ரை பண்ணினேனா பெப்பர் மூக்குல ஏறிடுச்சி. அப்படியே இருமல் வர நீ ஒண்ணும் செய்ய வேண்டாம் போன்னு அம்மா விரட்டிட்டாங்க. அப்பதான் நீயும் கால் பண்ற.”

“சரி இன்னைக்கு ஒண்ணும் ப்ரோக்ராம் இல்லையா?” அரிச்சந்திரனின் முடிவை எப்படி விசாரிப்பதென்று தெரியாமல் தடுமாறினாள் நட்சத்திரா.

“காலையில பேசிடணும்னுதான் அப்பா அம்மா நினைச்சிருந்தாங்க. அதுக்குள்ள அண்ணனுக்கு அர்ஜென்ட் வேலைன்னு நாங்க எழுந்திரிக்கிறதுக்கு முன்னாடியே போயிட்டான். எப்ப வர்றானோ அப்ப கண்டிப்பா பேசிடணும்னு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டிருந்தாங்க. சார் இன்னும் உன் போட்டோ பார்க்கல. போதுமா இன்றைய தகவல்?”

“ப்ச்... ஒரு போட்டோ பார்க்கிறதுக்கு ஒரு நிமிஷம் ஆகுமா? இருந்தாலும் உங்கண்ணா ஓவராத்தான் பண்றாங்க. எல்லாத்தையும் கணக்குல வச்சிக்கோ பின்னால உங்கண்ணனுக்கு மொத்தமா கொடுக்கிறேன்” என்றாள் புன்னகையுடனான கேலியுடன்.

சட்டென்று கண்கள் உடைப்பெடுக்க தன்னை சுதாரித்து “காதலுக்குக் கண்ணில்லைன்னு சொல்வாங்களே அது இதுதானா? பார்த்ததும் எப்படித்தான் பைத்தியமாகுறீங்களோ?” என்று சலிக்க,

“ஒண்ணு சொல்லட்டுமா கொடி. உன் அண்ணனை முதல்முறை பார்த்தப்ப நெருங்கின ஃபீல் வந்ததுக்கு காரணம், உன்னை நான் அவங்ககிட்ட உணர்ந்திருக்கேன்னு நினைக்கிறேன். உன்னோட பாகுபாடில்லாத அன்பை அவங்ககிட்ட பார்த்திருக்கேன். ஒருவேளை நீ ஆணா இருந்திருந்தா உன்னை காதலிச்சிருப்பேனோ என்னவோ!” கேலி செய்து சத்தமாக சிரித்து “ஓய்! வேற எதுவும் விபரீதமா கற்பனை பண்ணிடாதடி. எனக்கு உன் அண்ணன் மட்டும் போதும்” என்றாள் மென்மையான குரலில்.

தோழியின் ஒவ்வொரு வார்த்தையும் மூச்சுமுட்ட வைக்க ‘இந்தப்பெண் ஏன் அவனிடம் இவ்வளவு நேசத்தை வைத்தாள்’ என்றெண்ணியதும் அண்ணன் மேல் இன்னுமே கோவம் வர, “அவன்தான் எல்லாத்தையும்...” வார்த்தைகள் வெளியே வந்ததுமே அதை உணர்ந்து சட்டென்று நிறுத்தினாள்..

தோழியின் திணறல் புரிந்திருக்க வேண்டும் நட்சத்திராவிற்கு. “கொடி! ஆர் யூ ஆல்ரைட்?”

“யா... ஐம் ஆல்ரைட்” என்றாள் மூச்சை இழுத்துவிட்டு.

“வேற எதாவது பிரச்சனையா? என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?” என்றாள் பட்டென்று.

“ப்ச்... ஓவரா கற்பனை பண்ணாத நதி. அப்படியே எதாவது நடந்தாலும் உனக்கு நான் இருக்கேன். வேலைக்குப் போக அம்மா சம்மதிச்சாங்களா?”

“எங்கடி? கேம்பஸ்ல செலக்டாகியும் எதுக்கும் பிரயோஜனமில்லை. அவனுக்குப் பயந்தே எல்லா சான்ஸையும் மிஸ் பண்ண வேண்டியிருக்கு. எம்.சி.ஏ படிக்க அனுப்பினதே பெரிய விஷயம்னு சொல்றாங்க. நார்மலான பொண்ணா ட்ரஸ்ஸிங் கூட பண்ண முடியாம,.. என்ன லைப் இதுன்னு இருக்கு. அவனைப் பார்த்ததிலிருந்து ஒரு பயம் இருந்துட்டேயிருக்கு.”

‘உன்னோட இந்த பயத்தைப் போக்கதான் சீக்கிரம் கல்யாணம் முடிச்சி எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு பார்த்தேன். கடவுள் வேறல்ல நினைக்கிறார்.’ மனதோடு நினைத்து வருந்தினாள் மின்னல்கொடி.

“என்ன கொடி சைலண்டாகிட்ட?”

“ஒண்ணுமில்லடா. டிபன் சாப்பிட்டியா?”

“சாப்பிடத்தான் அம்மா கூப்பிட்டுட்டிருக்காங்க. எனக்குதான் ரிசல்ட் தெரியாம சாப்பிடப் பிடிக்கலை” என தன் இப்போதைய மனநிலையைச் சொன்னாள்.

‘தெரிஞ்சா சாப்பாட்டையே மறந்திருவ.’ மனதில் நினைத்ததை மறைத்து “நீ போய் சாப்பிடு நதி. நீ சாப்பிட்டு முடிக்கிறவரை நான் போன கட் பண்ணமாட்டேன்.”

“நீ சொல்லு நான் சாப்பிடுறேன்” என்று சிணுங்க,

“அதெல்லாம் முடியாது. சோறு தான் முக்கியம். என்னடி கிச்சன் கிளம்பிட்டியா?” என்றாள் அதட்டலாக.

“இதோ போயிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் அண்ணியை ‘டி’ போட்டு பேசுறதெல்லாம் வேற லெவல் மயிலு.”

“அந்த லெவலை எதுவரை கொண்டு போகணும், எங்க நிறுத்தணும்னு எங்களுக்குத் தெரியும். நீ போய் சாப்பிடு.”

“எனக்குதான் மாமியார் இருக்காங்களே. நீ ஏன்டி என்னை மிரட்டுற?”

“நாத்தனாரும் இன்னொரு மாமியார்தான்னு கேள்விப்பட்டிருக்கேனே!”

“படுவ படுவ. அப்புறம் என் புருஷனை கைக்குள்ள போட்டுக்கிட்டு உன்னைக் கொடுமைப்படுத்துவேன் சொல்லிட்டேன்” என்றாள் பதிலுக்கு கேலியாகவே.

“நதி ப்ளீஸ்” சத்தமாகவே கத்திவிட்டாள். தோழியின் எல்லையில்லாத ஆசைகள் இவளை இன்னுமின்னும் குற்றவுணர்வுக்குள் தள்ள, எப்படியாவது நடத்தி முடித்துவிட வேண்டுமென்று அவளறியாமல் ஒரு இறுக்கம். தோழியைப் பார்த்தவள் அண்ணனின் தன் மீதான அன்பையும், அண்ணனுக்காகவே தகப்பனுடன் செல்லாமலிருந்த தன் பாசத்தையும் மறந்துவிட்டாள்.

அதன் பின்னே மதியம் இரவு என மூன்று வேளையும் போன் மூலமாகவே அதட்டி சாப்பிட வைக்க... “நிஜமாவே நீதான்டி எனக்கு மாமியார்” என முனகினாலும் மின்னல் சொன்னதை அப்படியே செய்தாள் நட்சத்திரா.

இரவு பத்து மணிபோல் வந்த அரிச்சந்திரன் அனைவரும் ஹாலில் இருப்பதைப் பார்த்து “என்ன எல்லாரும் இருந்தும் வீட்ல இவ்வளவு அமைதி? எதாவது சீரியஸ் டிஸ்கஸனா? ஹேய் மின்னல் நீ இருந்துமா இந்த இடம் இப்படி அமைதியாயிருக்கு. வெரி பேட். வெரி பேட்” என கிண்டலடித்தவனுக்கு வேலைப்பளுவில் காலையில் பேசிச்சென்ற எதுவும் நினைவில் இல்லை.

“முதல்ல ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு சாப்பிட வா. மத்ததை அப்பறமா பேசிக்கலாம்” என்றார் சகுந்தலா.

“என்னவோ சரியில்லை” என்றவன் தோளைக் குலுக்கி ‘என்ன பஞ்சாயத்தா இருக்கும்?’ யோசனையுடனே தன்னறைக்குச் சென்றான்.

கால்மணி நேரத்திற்கெல்லாம் கைலி பனியனுடன் வந்தமர்ந்த மகனுக்கு, எதுவுமே பேசாது சகுந்தலா உணவு பரிமாற சாப்பிட்டு முடித்து தங்கையின் அருகில் வந்தமர்ந்தவனை விட்டு விலகி தந்தையின் அருகில் சென்றமர்ந்து தோள்சாய்ந்து கொண்டாள்.

புருவ முடிச்சுடன் தங்கையின் செயலைப் பார்த்ததும் பிரச்சனை எதோ பெரிதென்பதை உணர ஆரம்பித்து, “என்னாச்சி?” என்றான் பொதுவாகவே.

“என்ன ஆகணும்? ஏன்டா இப்படி செய்த? படிச்சிப் படிச்சி புத்தி சொல்லியும் அந்த முஸ்லீம் பொண்ணைதான் பிடிச்சிருக்கு சொன்னியாம்? மதமாற்று திருமணத்துக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்” என்றார் பாக்கியவதி.

‘ஓ... இதுக்குதான் பஞ்சாயத்தா? ஹ்ம்... சமாளிச்சிதான ஆகணும்’ என நினைத்தவன் கண்முன் நதீரா தோன்ற, ஏனோ அவளை விட்டுவிட மனமில்லை அவனுக்கு. மனதிற்குள் செய்த தீர்மானத்தால் நிறைய பேர்.. ஏன் அவனின் நதீராவுமே பாதிக்கப்படப் போகிறாள் என்பதை அறியாமல் பேச ஆரம்பித்தான்.

“க்ரேன்மா நீங்க சொன்ன எல்லாமே எனக்குப் புரிஞ்சது. இல்லைன்னு சொல்லி வாக்குவாதம் பண்ணலை. ஆனா, நேத்து அவளைப் பார்த்த பிறகு வேறொரு பெண்ணை முடிக்கிறது சாத்தியமில்லைன்னு தோணிருச்சி. என்னால சட்டுன்னு மனசை மாத்திக்க முடியலை” என்றான் நேராகப் பார்த்து.

“முடியணும் அரி. அதுதான் நம்ம குடும்பத்திற்கு நல்லது. அப்பா உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்” எனும்போது மின்னலின் கைபேசி அடிக்க, நட்சத்திராவின் எண்ணைப் பார்த்துப் பதறி அணைத்து வைப்பதற்குப் பதிலாக பதற்றத்தில் அழைப்பை ஏற்று முன்னால் இருந்த மேஜையில் வைத்த பொழுது ஸ்பீக்கரும் ஆன் ஆகியிருந்தது.

தோழிக்கு எது தெரியக்கூடாது என்று போராடுகிறாளோ, அதை தன் மூலமே விதி அவளுக்குத் தெரிவித்ததை அறியவில்லை அந்த மின்னல் பெண்!

“நீங்க என்னோட நல்லதுக்குத்தான் சொல்றீங்க செய்வீங்கன்னு எனக்கும் புரியுதுப்பா. இருந்தாலும் என்னால நீங்க பார்த்திருக்கிற பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான் தீர்மானமாக.

“பொண்ணோட போட்டோ பார்த்துட்டு சொல்லு அரி. நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுடா” என்றார் ரவிச்சந்திரன்.

“ஆனா, எனக்கேத்த பெண் நீங்க பார்த்தவள் கிடையாது. கௌரவத்துக்காக இன்னொரு பெண்ணை மணம் முடிச்சி, அவள் வாழ்க்கையைக் கெடுக்க நான் விரும்பலைப்பா” என்றான் தெளிவாக.

அதிர்ந்து நின்றுவிட்டாள் நட்சத்திரா! அவன் பேசிய, பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இதயத்தைக் கிழிக்க, ‘தான் கேட்பது உண்மைதானா? இல்லை இருக்காது. நேற்றைய அவன் பார்வை நிஜம். தான் அவனிடம் உணர்ந்த காதல் நிஜம்.’ மனம் அடித்துச் சொல்ல எண்ணக் குழப்பத்துடன் பிரமை பிடித்தாற்போல் நின்றிருந்தாள். அவளறியாமலே அவனின் வார்த்தைகள் அவளை தேனீயாய் கொட்டியது.

“டேய்! பெரியவங்க சொல்றதைக் கேளேன்டா. உனக்குக் கெடுதலா செய்யப்போறோம். உனக்கு அடுத்து தங்கச்சி இருக்கிறதை மறந்துட்டியா?”

“அதனாலதான்மா அவளுக்கு முதல்ல முடிக்கச் சொன்னேன்.”

“அப்ப முடிவு பண்ணிட்ட?” என்றார் ரவிச்சந்திரன் ஒருமாதிரிக் குரலில்.

“ஆமாம்ப்பா. வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்றான் உறுதியாக.

“அப்ப சரி. நீ உன் விருப்பப்படி நடந்துக்கோ. ஆனா, இந்த வீட்ல இருந்து இல்ல” என்றார் முடிவாக.

“அப்பாஆஆ...” என்ற அலறல் அவனிடம்.

“கொ... கொடி” என்ற குரலில் சுற்றிலும் பார்த்த மின்னல்கொடி, திரும்பவும் கேட்ட, ‘கொடி’ என்ற தோழியின் முனகலான குரலில் வேகமாய் கைபேசியைப் பார்த்தவளுக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.

“ந...நதி!” எனறாள் திணறலாக.

“வேண்டாம் விட்ரு” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.

அவளின் குரலை வைத்தே அவளின் நிலை புரிந்தவள், “நதி நதிமா ஒண்ணுமில்லடா. அவன் ஏதோ விளையாட்டுக்கு...”

“கொடி! ப்ளீஸ் விட்ரு” என அழுத்தமாக சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
தன்னை மீறிய அழுகையுடன் அண்ணன் மேல் ஆத்திரமும் வர, தலையில் கைவைத்து குனிந்து கொண்டாள். தாய் ஆறுதலாய் அவளின் தோள் தொட, “நான் எது அவளுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைச்சிருந்தேனோ, அது தெரிய நானே காரணமாகிட்டேன்மா.” என்றாள் அழுகையுடன்.

அவளின் கண்ணீர் துடைத்து, “எப்படினாலும் தெரிய வேண்டியதுதானம்மா. இப்ப தெரிஞ்சிருச்சின்னு நினைச்சிக்கோ” என்றார்.

“இப்ப இந்த சூழ்நிலையில தெரிஞ்சிருக்க வேண்டாம்மா. அவள் எதாவது... இல்ல... அ..அப்பா அப்பா வாங்கப்பா அவளைப் பார்த்துட்டு வரலாம்” என்றாள் தோழி எதுவும் செய்துகொள்வாளோ என்ற பயத்தில்.

“நேரம் பதினொண்ணு ஆகுதுமா. எப்படி அவங்க வீட்டுக்குப் போறது?”

“நடு ஜாமமா இருந்தாலும் பரவாயில்லைப்பா. வாங்க போகலாம்” என்றாள் விடாமல். மகளின் இந்த பயம் ரவிச்சந்திரனுக்குள் எதையோ உணர்த்தியது.

“மின்னல் யார் அந்தப்பொண்ணு? எதுக்காக இவ்வளவு எமோஷனலாகுற?” அவளின் பதற்றம் எதனால் என புரியாமல் கேட்டான் அவன்.

“நீ பேசாத. இனி எப்பவும் என்கிட்ட பேசாத. உனக்கு அவள் வேண்டாம்ல. நானும் உனக்கு வேண்டாம்” என்றாள் ஆத்திரம் குறையாமல்.

முகத்தில் அடிவாங்கியது போல் உணர்ந்தான் அரிச்சந்திரன். ‘தன் தங்கைதானா இது? தனக்காகவென்று தன்னுடனே இருக்க வேண்டுமென்று அடம்பிடித்த பெண்ணா இவள்? சொந்த அண்ணனையே தூக்கியெறியும் அளவிற்கு அப்படியென்ன உறவு அவர்களுக்குள்.’ அதிர்வு மாறாமல் “என்ன உளர்ற? யார் அந்தப் பெண்?” என்றான்.

“உனக்காக நான் பார்த்தப் பொண்ணு. உன்மேல் உயிரையே வச்சிருக்கிற பைத்தியக்காரி” என்றாள் அண்ணனவனின் முகம் பார்த்து.

ஆடித்தான் போய்விட்டான் அரிச்சந்திரன். இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘தனக்குத் தெரியாமல் தன்னை ஒரு பெண்... எப்படி?’ புரியவில்லை அவனுக்கு.

“என்ன கொடிமா சொல்ற? என்ற பாட்டிக்கும், அப்பாவிற்கும், “இனி சொல்ல எதுவுமேயில்ல க்ரேன்மா. எல்லாம் முடிஞ்சது” என்றாள் விரக்தியாக.

பேச வாயெழாது அமர்ந்திருந்தான் அரிச்சந்திரன்!

“இந்நேரத்துக்குப் போக வேண்டாம்மா. நீ போன் பண்ணிப் பேசு.” தன்மையாகவே மகளிடம் சொன்னார் ரவிச்சந்திரன்.

“ஸ்விட்ஜ் ஆஃப் பண்ணிட்டாள்பா. எனக்கு பயமாயிருக்குப்பா. அவளுக்கு எதுவுமில்லைன்னு தெரியுறது வரை, என்னால நிம்மதியாயிருக்க முடியாது. ப்ளீஸ்ப்பா! போலாம்ப்பா” என கெஞ்ச தொடங்கினாள்.

“அவங்க அம்மா நம்பர் இருந்தா போன் பண்ணுமா” என்று சகுந்தலா சொன்னதும் வேகமாக ‘யசோம்மா’ என்ற பெயரைத் தேடி எடுத்து வேகமாக அழுத்திக் காத்திருந்த நொடிகள் யாவும், யுகம் யுகமாகக் கழிந்ததோ! பாவம்தான் மின்னல் பெண்ணும்!

தங்கையையே பார்த்திருந்தான் அவன்! இன்னும் முழுதாகப் புரியவில்லை. ‘அந்தப் பெண் இவளின் தோழியா? அப்படியானால் அவள்? நதீராவாக இருக்குமோ?’ மனம் அன்று தங்கையுடன் உதவ வந்தவளை எண்ணிப் பார்த்தது. ‘இல்லை இருக்காது. அப்பெண் நதீராவாச்சே! இவள் மின்னலின் இன்னொரு தோழியாக இருக்கும்’ என்று மனதை சமன்படுத்தினான்.

மனதில் நினைத்ததைக் கேட்டு தெளிவுபடுத்தியிருக்கலாம் அவன். விதி யாரை விட்டது.

யசோம்மா நான் கொடி. நதி போன் ஸ்விட்ஜ் ஆஃப்னு வருது. என்ன செய்றாள்னு பார்த்துச் சொல்றீங்களா?” முடிந்த மட்டும் குரலை நிதானத்திற்குக் கொண்டு வந்து கேட்டாள்.

“சாப்பிடும்போது உன்னோடதான பேசிட்டிருந்தா. அப்ப போன் கையிலதான் இருந்தது. ரூம்கு போகும்போதும் கையில பார்த்தேனே? என்னடா? எதாவது சண்டை போட்டீங்களா?” என்றார் புன்னகையுடனே.

“சண்டையா? ஹான் ஆமா யசோம்மா. நான்தான் கொஞ்சம் பேசிட்டேன். சட்டுன்னு ஸ்விட்ஜ் ஆப் பண்ணிட்டாளா? மனசு கேட்கல. சாரி சொல்லதான் போன் பண்ணினேன்.”

“நல்ல பொண்ணுங்க போ. இன்னும் குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுட்டு. இரு பார்த்துச் சொல்றேன்” என்று மகள் இருக்கும் அறைக்கதவைத் தட்ட, அது திறந்தே இருந்தது. “நதிமா, நதி...” தாயின் குரலில் ‘ம்’ என்று அரைத் தூக்கத்தில் இருப்பது போல் சத்தம் கொடுக்க... “கொடி போன் பண்ணியிருக்கா. உன்கிட்ட பேசணுமாம்” என்றார் அவளின் பதிலுக்காக.

“தூக்கம் வருது. காலையில பேசுறேன்மா” என்றதும் இவர்களின் செல்லச் சண்டையை மனதில் வைத்து அவ “காலையில பேசுறாளாம்டா” என்றார் மின்னலிடம்.

தன் துக்கத்திலும் கூட தோழி தன்னைத் தேடி வீட்டுக்கே வரலாம். அல்லது அம்மாவிடம் போன் செய்து பேசலாம் என்பதை உணர்ந்ததாலயே பூட்டிய கதவைத் திறந்து வைத்திருந்தாள். ஏனோ அவளின் தன் மீதான அக்கறையில் இன்னுமே அழுதாள்.

“யசோம்மா எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?

சொல்லுடா? மின்னல் பொண்ணு சொல்லி செய்யாம இருப்பேனா” என்றார் கிண்டலுடனே.

“அ...அது வந்து இன்னைக்கு நதியோட படுத்துக்கறீங்களா?”

அவளிடம் பேசியபடியே ஹாலுக்கு வந்தவருக்கு வேறு ஏதோ பிரச்சனையோ என்று தோன்ற “என்னமா எதாவது பிரச்சனையா? உன் அண்ணன் எதாவது...” குரல் தடுமாறத்தான் செய்தது அவருக்கும்.

அரிச்சந்திரன் வீட்டு சம்பந்தம் கொண்டு வந்தது தரகர்தான் என்றாலும் அதையும் தாண்டி அவன் கொடியின் அண்ணன் என்றதே தங்களின் சம்மதத்திற்கு காரணமானது. சிறியவர்களின் மறைமுகக் கேலிப் பேச்சில் தன் பெண்ணிற்கு அவன் மேல் விருப்பம் உள்ளதென்பதை உணர்ந்திருந்தார். மனதில் ஒருவித சந்தோஷம்தான் எழுந்தது.

எங்கே அவனுக்குப் பயந்து திருமணமே வேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என பயந்தவராயிற்றே. அதிலும் கொடியின் அப்பாவில் தொடங்கி அனைவரும் வக்கீல் என்பதால் சிறு பிரச்சனையென்றாலும் அல்லது முன்னர் தன் பெண்ணுக்கு நடந்தது தெரிந்தாலும் புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணமே அவரை தைரியப்படுத்தியது.

“யசோம்மா! அ..அது ஒரு சின்ன பிரச்சனை?” என்று அண்ணனை முறைத்து, “நான் காலையில வந்து பேசிக்கிறேன். அப்புறம் யசோம்மா, கேர்ஃபுல்” என்றாள்.

அவள் மறைமுகமாக சொன்னதில் எதோ ஒன்று புரிய மனதினுள் கலக்கம் எழுந்தது. கணவரிடம் சொல்லி மகள் அறையில் தஞ்சமடைய, தாய் தன்னருகில் படுப்பதை உணர்ந்தாலும் இதுதான் நடக்குமென்று தெரியுமாதலால் அழுகையை அடக்கிக்கொண்டு வராத தூக்கத்தைத் தொடர்ந்தாள் நட்சத்திரா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top