- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
9
தோழியின் தாயிடம் பேசி முடித்துத் தன்னைத் தாண்டிச் செல்லும் தங்கையை வழிமறித்து, “என்ன பிரச்சனை? யார் அந்தப்பொண்ணு?” என கேட்டான்.
“அம்மா! நான் யாருக்கும் பதில் சொல்ற மூடுல இல்லை. அவங்கவங்க வாழ்க்கையை அவங்களே முடிவெடுத்த பிறகு, யார் எக்கேடு கெட்டா அவங்களுக்கென்ன? காலையில யசோம்மா வீட்டுக்குப் போகணும். நான் படுக்குறேன்மா” என்று தன் அறைக்குச் சென்றாள்.
சொல்ல முடியாத ஒரு எரிச்சல் அவனிடம். ‘காதல் தவறா? பெண்ணை.. பெண்ணின் குணத்தைப் பார்க்காமல் ஏன் ஜாதி மதம்னு ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்காங்க.’ அதைவிட தங்கையின் இந்த முகம் அவனது அதிர்ச்சிக்கு அளவில்லாமல் போனது. எப்பொழுதும் ஜாலியாக சுற்றி அரட்டையடித்து முடிந்தால் மற்றவர்களைக் கலங்கடித்து கேஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேர்ந்த ஜர்னலிஸ்ட் லெவல்கு வேலை செய்பவள் என் தங்கை.
‘இவள் அவள் கிடையாது. இவள் யாரோ ஒருத்தியின் தோழி. தோழிக்காக உடன்பிறந்தவனையே தூக்கிப் போடுகிறாளா? அப்படியென்ன தெய்வீக நட்பு அவர்களது?’
வீட்டுப் பெரியவர்களும், அவனை ஒரு ஜந்து போல் பார்த்துச் செல்வதை உணர்ந்து, அவனுக்குள் தான் விரும்பும் பெண்ணையே இந்த வீட்டு மருமகளாகக் கொண்டு வருகிறேன் என்ற வீம்பு.
ஆண் பெண் யாராயினும் காதல் என்றொன்று வந்துவிட்டால் அதை மறுப்பவர்கள்தான் முதல் எதிரி. இதில் தாய் தந்தையும் அடக்கம்.
மறுநாளைய விடியல் பலதுளிக் கண்ணீருடன் ஆரம்பித்து சிறுதுளி சந்தோஷமுமாய் அஸ்தமிக்கக் காத்திருந்தது.
காலையில் எழுந்ததுமே அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டாள் நட்சத்திரா. இரவு மின்னல் பேசியதை வைத்து ஓரளவு இதை எதிர்பார்த்தே இருந்தவர்கள் என்பதால் மகளிடம் மேற்கொண்டு எதையும் கேட்கவில்லை. இரவு அழுதிருந்தாலும் காலையில் தன் ஏமாற்றத்தை மறைத்து இயல்பாக அவள் இருக்கையில் அதுவே போதுமென்ற எண்ணமே அவர்களுக்கு.
காலை எட்டு மணிக்கெல்லாம் நட்சத்திராவைத் தேடி வந்துவிட்டாள் மின்னல் கொடி. அவளிடம் நடந்ததைப்பற்றி விசாரிக்கவோ முகத்தில் அதற்கான முகச்சுளிப்பைக்கூட யாரும் காட்டவில்லை. தனி ஒருத்தரின் முடிவிற்கு வீட்டினர் அனைவரையும் குற்றம் சொல்வது தவறென்பதை புரிந்தவர்கள். வாழ்க்கையின் அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அந்த புரிதல் குணம்தான் நட்சத்திரப் பெண்ணவளிற்குமே!
“யசோம்மா நதி எழுந்தாச்சா?”
“எழுந்து காஃபி குடிச்சிட்டு குளிச்சிட்டு வர்றேன்னு போயிருக்கா. நீ காஃபி குடிச்சியா?”
“ம்… தெரியலையே?”
அவளின் பதிலே அவளின் குழப்ப நிலையைச் சொல்ல அவளிற்காக மனம் இளகித்தான் போனது. ‘நட்பென்ற உறவில் இவ்வளவு அன்பிருக்குமா? தங்களுக்கும் நட்புகள் இருக்கிறார்கள்தான். இவர்கள் போல்... ம்கூம்..’ அவளின் தலைவருடி “நீ உட்காரு காஃபி எடுத்துட்டு வர்றேன். குடிச்சிட்டிரு அதுக்குள்ள வந்திருவா.”
“ம்... எ...எதாவது சொன்னாளா யசோம்மா?”
“இரு வர்றேன்” என்று காஃபி எடுத்து வந்து அவள் கையில் கொடுத்து அருகில் அமர்ந்தவர், அவள் கலங்கிய கண்களைக் கண்டு, “குடி” என்றதும் அவள் குடித்து முடிக்கவும், “ஏன் எதோ தப்பு செய்த மாதிரி கண் கலங்குற?” என்றார் வாஞ்சையாய்.
“அ...அது யசோம்மா...”
அவளின் கைபிடித்து கண் துடைத்து, “இன்னாருக்கு இன்னார்னு கடவுள் எழுதி வச்சதை அழிக்க முடியாதுடா. என் பொண்ணுக்கு உன் அண்ணன்தான்னு எழுதி வைக்கலை போல. அதுக்கு ஏன் வருந்தணும்? உன் எதிர்பார்ப்புக்கு உன் அண்ணன் அடிபணியனும்ன்ற அவசியமில்லையே. எதையும் மறைக்காம உங்ககிட்ட உண்மையை சொல்லி இருக்கிறப்ப ஏன் கோவம் வரணும்? வீட்டுல உள்ளவங்களுக்காக சம்மதம்னு தலையாட்டி, தாலி கட்டுற டைம்ல காதலிச்ச பொண்ணுதான் முக்கியம்னு விட்டுட்டுப் போன பசங்களைப் பார்த்திருக்கேன். அதுக்கு இது எவ்வளவோ பெட்டர். உன் அண்ணன் மனசுக்கு சரின்னு பட்டதைச் சொன்னதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. என்ன ஒரே வருத்தம்னா, உன்கூட, உன் அரவணைப்புல பாதுகாப்பா இருப்பாள்னு நினைச்சோம். விடு அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்கப்போறான்.”
“இதோ வந்துட்டேன்” என்ற குரல் தெய்வகானமாய் கேட்டதோ! வெளியில் காலணியைக் கழட்டி உள்ளே வந்த சஞ்சித்தை, யோசனையுடன் பார்த்தார் யசோதா. மனதில் தோன்றியது சரியா? தவறா? என்று அலசிப் பார்க்கக் கூட இல்லாமல் முடிவெடுத்துவிட்டார்.
“வா சஞ்சித். என்ன வேலைக்குப் போகலையா?”
“எங்க அத்தை. வேலைக்குப் போறதுக்கு முன்ன நல்ல நியூஸைக் கேட்க ஓடோடி வந்துட்டேன். ஹேய்! மின்னல் நீ இங்கயா இருக்க? சத்தம் கொடுத்திருக்கலாம்ல. நீ உட்கார்ந்திருக்கிறதே தெரியலை” என்று அவளைக் கலாய்க்க, மத்த நேரமெனில் அவனை ஒருவழி பண்ணியிருப்பாள். இன்றோ!
“நீ ஆபீஸ் போகலையா மின்னல்? காலையிலயே தோழியை சந்திக்க வந்திருக்கன்னா, ஏய்! சென்னைத் தமிழுக்குப் பதிலா, நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ்னு எதாவது முயற்சிக்கப் போறீங்களா?” என்றான் கிண்டலாக.
“அந்த கேஸ் அன்னைக்கே முடிஞ்சிருச்சி அண்ணா. இனிமேல் அப்படி ஒண்ணு வந்தா பார்க்கலாம்.”
“என்ன கேஸ் சஞ்சித்?”
“அன்னைக்கு நடந்ததைச் சொல்றேன் மாமா. இவங்க க்ரூப் ஒரு கேஸ் எடுத்தா முடிக்காம கீழ வைக்குறதே இல்லை. அவங்க எடுக்கிற கேஸ்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கறாங்க. உங்க மேம் சூப்பர்னா, அவங்க நினைக்கிறதை நடத்தி முடிக்கிற உங்க அண்ணன் சூப்பரோ சூப்பர். உங்க வக்கீல் ஏரியாவுல பிரபலமான ஃபிகர் அவர். ஐ இன்ஸ்பைர்ட் ஆப் ஹிம்” என்றான் சஞ்சித்.
‘ஆமா நீங்கதான் அவனை மெச்சிக்கணும்.’ மனதினுள் நினைத்து, “அது ஜீன் ப்ராப்ளம்ணா. தாத்தாவும் வக்கீலா இருந்தவர். அப்பாவும் வக்கீல். பிள்ளைங்க நாங்க ரெண்டு பேருமே வக்கீலா. அதான் எல்லாத்தையும் நேரடியா பேசிடுறான்.”
“இப்பதான் ஞாபகம் வருது. உன் வீட்டுல என்ன சொன்னாங்க? நட்சத்திராவை வேண்டாம்னு சொல்ல யாருக்கும் மனசு வராது. சோ, பதில் பாசிட்டிவ்தான?” என்றான் ஆர்வமாய்.
“இல்லண்ணா. பாசிட்டிவான பதில் என்கிட்ட கிடையாது” என்றதும் புன்னகைத்த அவன் முகம் மாற, “அண்ணனுக்கு வேற ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்காம். நதி போட்டோ கூட பார்க்கல. பேசிப் பார்த்தும் பிரயோஜனமில்லை. வீட்டுல யாரும் அவனோட பேசிக்கவும் இல்ல. நைட் நாங்க பேசினதை நதி கேட்டுட்டா. லேட் நைட்ல வர முடியலை. அதான் காலையிலயே வந்துட்டேன்” என்றாள் வருத்தமாக.
முகம் செத்துப்போனது சஞ்சித்திற்கு. ஏனெனில் நட்சத்திராவின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்ற உணர்வு. அது அந்த மார்கழி ஒன்று!
கோவிலில் அவள் கண்கள் அரிச்சந்திரனை பார்க்காததுபோல் பார்த்ததைக் கண்டிருந்தான். பூஜை முடித்துத் திரும்பும்போது தங்களைக் கடந்த வாகனத்தில் அவளின் கண்கள் அடிக்கடி சென்று திரும்ப, ஏதோ ஒரு படபடப்பு அவளுள் எழுந்ததை யோசனையுடன் பார்த்திருந்தவன், காரின் எண்ணைக் குறித்துக்கொண்டான். அடுத்தடுத்த தினங்கள் அந்தக்காரின் வருகையிருக்க, காரைப் பின்தொடர்ந்து இருப்பிடம் அறிந்தவனுக்கு, அதை மேலே கொண்டு செல்ல ஆவல்.
மாமன் மகளின் கண்களில் தெரிந்த ஆர்வம் மட்டுமே அவனுள். அவளின் பழைய வாழ்க்கை அவளை சந்திக்கும் முன், ஒரு நல்லவனிடம் அவளை ஒப்படைக்க எண்ணியது மனம். அதன் பின்னே அரிச்சந்திரனைப் பற்றி விசாரிக்க, வீட்டின் வசதியை விட, வீட்டிலுள்ளவர்களின் வேலை அவனை பிரமிக்க வைத்தது.
உச்ச நீதிமன்ற அரசாங்க மூத்த வக்கீல் ரவிச்சந்திரன். அவரிடம் உதவியாளராக நிறைய பேர் இருக்கிறார்கள். அதை மிஞ்சிய வழக்குகள் அவருக்கு. அவர் எடுக்கும் வழக்குகள் யாவும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சம்பந்தப்பட்டதுடனான, நாட்டையே உலுக்கும் சர்ச்சைக்குரிய வழக்குகளே! தொலைக்காட்சியில் அவரின் பெயர் அடிபடாத செய்தி ஊடகங்களே கிடையாது. வீட்டைப் பொருத்தவரை மிகவும் எளிமையானவர்.
மகனும் அப்பாவைத் தொடர்ந்து வந்தாலும், சில வருடங்களில் அவனின் புகழும் உச்சியை எட்டும் என்பதில், சஞ்சித்திற்கு ஐயமில்லை.
அரிச்சந்திரன் நினைத்தால் வழக்குகள் வரிசை கட்டி நிற்கும். அவனுக்கு தற்பொழுது அதில் விருப்பமில்லை. புகழ் இல்லாத சாதாரண வக்கீலாக சிறிது காலம் வலம் வரவே விரும்பினான். தன்யா பற்றி சில வருடங்களாகக் கேள்விப்பட்டவனுக்கு, அவளுக்கு ஜுனியராக சேரும் ஆவல் எழுந்தது. பெயர் பெற்ற வக்கீலின் மகன் பெண்ணிடம் வேலை செய்வதா, என்ற ஈகோ இல்லாமல் தன்யாவிடம் இருந்தால் தனக்கு நிறைய அனுபவம் கிடைக்குமென்றே உதவியாளனாக சேர்ந்தான் அரிச்சந்திரன்.
நீ பெரிய வக்கீலின் மகன் என்ற சலுகைகள் அவளிடம் கிடையாது. பிடித்த மனிதர்களிடம் மரியாதை என்ன விலையென்று கேட்கும் ஆள் அவள். இருவருக்கும் ஒரே வயதுதான். அவன் அனைவரையும் அர்ஸ் என்று அழைக்கச் சொன்னாலும் அவளைப் பொருத்தவரை சந்துரு மட்டும்தான். சில சமயம் ‘டா’ கூட வரும். அதை.. அந்த பாரபட்சமில்லாத செயல்களைத்தான் அவனும் விரும்பினான்.
அரிச்சந்திரனைப் பொருத்தவரை தன்யா மரியாதைக்குரியவள்! ஆதலால் ‘மேம்’ மட்டுமே அவனின் அழைப்பு. இதுவரை யாரிடமும் பயிற்சிக்குப் போகவில்லை. தனியாக போகச் சொல்லியும் தேவைப்படும் பொழுது தானே சென்று விடுவதாகச் சொல்லிவிட்டான். அவனைத் தொடர்ந்து பாசக்கொடி மின்னலும்.
அனைத்தையும் விசாரித்து அறிந்திருந்தான் சஞ்சித். அவர்கள் வீடு மட்டுமே நட்சத்திராவிற்கு பாதுகாப்பு என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்குள். மின்னல், நதியின் தோழி என்பது இன்னும் மிகுதியாக அவளிடமும் நேரடியாகப் பேசி பெண் பார்க்கத் தரகரை புகைப்படத்துடன் அனுப்பிவிட்டான்.
இதோ தன் முயற்சியெல்லாம் நீர்த்துப்போக, அடுத்து என்னவென்று புரியா நிலையில் அமர்ந்திருந்தான் சஞ்சித்.