• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
32
நல்லதொரு நாளில்...மூன்று வருடத்திற்கு முன்னதாகவே ஜீவானந்தம் அவர் விருப்பத்தை முல்லையிடம் தெரியப்படுத்தி இருக்க,
'நான் யோசிச்சு சொல்லுறேன் மாமா...' என்று முல்லை கால அவகாசம் கேட்டவளின் மனதில், அடிக்கடி கைபேசி மூலம் அன்பாக பேசி, அவள் மனதை மாற்றியது ஜீவானந்தம் தான்.
முதலில் தன் மாமன் மகன் என்ற உரிமையில் முல்லை ஜீவாவிடம் பேச ஆரம்பிக்க,
நாளிடைவில் ஜீவானந்ததின் உண்மையான அன்பை முல்லையும் புரிந்துக்கொண்டாள்.
என்னதான் முல்லை ஜீவானந்ததை புரிந்துகொண்டாலும். அவள் மனதில் ஓரத்தில் ஒரு ஏமாற்றம் மறைந்து தான் இருக்கிறது.
அந்த ஏமாற்றம் என்று மாற்றமாக மாறுகிறதோ, அன்று ரோஜாவின் அருள் வாக்கு பலிக்கும் என்பதே கடவுளின் சித்தம்.
********************
இன்றைய தினம் நடக்க இருந்த நல்ல காரியம் நடக்காமல் தடைப்பட்டு போனதை எண்ணி பாண்டியன் சோகமாக கோவிலில் அமர்ந்து இருந்தார்.
'அப்பா... கிளம்பலமா' என தன் தந்தையின் மன நிலையை அறிந்து தனக்கு எந்த வித கவலையும் இல்லை என்பதை போல இயல்பாக பேசினார் ஜீவானந்தம்.
சிறு கலகத்துடன் தன் மூத்த மகனை பார்த்து,'உனக்கு வருத்தமா இல்லையா' என பாண்டியன் கேட்க,
'இதுல வருத்தப்பட என்ன இருக்கு அப்பா, இன்னைக்கு நிச்சயம் நடக்கலைனா இன்னொரு நாள் இதை விட சிறப்பா நடக்கப்போகுது' என ஜீவானந்தம் சிரித்த முகத்துடனே பேசினார்.
தன் மகனின் பொறுமையை எண்ணி மனதார மகிழ்ந்த பாண்டியன்,'ரோஜா எங்கே' என கேட்க,
'எல்லோரும் வேன்ல இருக்காங்க. வாங்க நம்ம போகலாம்' என ஜீவானந்தம் தன் தந்தையை கோவிலில் இருந்து அழைத்து சென்றார்.
'டேய் நாகா வண்டியை எடு' என்று கதிர்வேலன் சொல்ல, நாகராஜன் தன் வாகனத்தை பாண்டியனின் வீட்டை நோக்கி பயணித்தார்.
வேனில் ஏறிய தன் தந்தையை பார்த்து,'அப்பா...' என்று அழைத்த ரோஜாவின் குரலில் கலக்கம் தெரிய,
'எதை பற்றியும் யோசிக்காத ரோஜா, எல்லாம் அந்த முனிஸ்வரன் சித்தம்' என்ற பாண்டியன் மேற்கொண்டு பேசாமல் இருக்கையில் அமர்ந்து இருக்க,
'என் மக ராசி என்னைக்குமே நல்ல ராசி தான். எதுக்கும் முல்லை ஜாதகத்தை வாங்கி நீங்க அவளுக்கு கல்யாண யோகம் இருக்கான்னு பாருங்க, இவ பிறந்ததில் இருந்தே இப்படி தான் எதுவும் இவளுக்கு நிலைக்காது' என்ற கஸ்தூரியின் நாராசமான பேச்சில் முல்லையின் இதழ்கள் மலர, அவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சிந்தியது.
என்றுமே தனக்காக பரிந்து பேசும் ரோஜா, பாண்டியன் ஏன் ஜீவானந்தம் முதல் யாருமே இந்த இடத்தில் முல்லைக்காக பேசாமல் இருந்தது மேலும் அவளுக்கு வலியை உண்டாக்கியது.
முல்லைக்காக இவர்கள் பரிந்து பேச வில்லை என்பதற்க்காக கஸ்தூரி பேசிய வார்த்தைகளை இவர்களும் நம்புகிறார்களா என்ற எண்ணம் முல்லைக்கு எழும் தருணம்.
'ஏய் எரும...உனக்கு அறிவே இல்லையா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த வாய் மேல வண்டியை ஏத்த போறேன் பாரு' என்ற கதிர்வேலனின் குரலில் முல்லை கதிரை பார்க்க,
'நான் என்ன பண்ணேன் நண்பா??ஏன் என்னை வசைபாடுற' என கேட்டான் நாகராஜன்.
'இன்னா கதிரு... என்னை தானே எருமன்னு சொல்லுற' என கஸ்தூரி கேட்க,'நீ அவ்ளோ அழகாவா இருக்க!?' என்று கேட்டார் ஜெகதீஸ்.
'யோவ் என்ன லந்தா... கட்டின பொஞ்சாதியை வயசு வித்தியாசம் இல்லாம அவன் மரியாதை இல்லாம பேசுறான், அவனை என்னன்னு கேக்க உனக்கு துப்பில்ல, என்னை அழகா பழகான்னு கோவப்படுத்தி பாக்குறியா' என்ற கஸ்தூரியின் வார்த்தையை காதில் வாங்காமல் ஜெகதீஷ் வேறு இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டார்.
என்னதான் தன் மீது கோவம் இருந்தாலும் கதிர்வேலன் தனக்காக கஸ்தூரியை கண்டிதத்தை எண்ணி முல்லை சின்னதாக மகிழ்ச்சி அடைய,
இவர்கள் அனைவருமே பொழுது சாயும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
*********************
'அண்ணா...அதான் இங்க ஒரு நல்லதும் நடக்கலயே,நாங்க கிளம்புறோம். ஏய் மீனா வா போகலாம். நாளைக்கு உனக்கு வேலை இருக்கு தானே' என்று கஸ்தூரி தன் மகளை தன்னோடு அழைக்க,
'அம்மா... நான் இங்கேயே இருக்கேனே' என்று கெஞ்சலுடன் கேட்டாள் மீனா.
'என்ன! இங்க இருக்க போறியா!? ஏய்... என்னதான் இது உன் தாய் மாமன் வீடா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ இங்கெல்லாம் தனியா தங்கக்கூடாது புரியுதா' என்று கஸ்தூரி கண்டிப்பாக சொன்னவளின் பார்வை முல்லை மீது படிந்தது.
கஸ்தூரியின் பார்வையில் ஒரு ஏளனம் தெரிய,'நீ உன் அம்மா கூட கிளம்பு மீனா. உன் அம்மாவுக்கு உன் மேல நம்பிக்கை இல்லை போல' என்ற ரோஜா முல்லையின் கை பிடித்து அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.
'அண்ணா... இருந்தாலும் உன் பொண்ணுக்கு இவ்வளவு வாய் ஆகாது, போற இடத்துல இப்படி எல்லாம் பேசுனா, போன அன்னைக்கே இவ வீடு திரும்ப வேண்டியது தான்' என்ற கஸ்தூரி திரும்பி பார்க்காமல் வேகமாக தன் மகளை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு சென்று இருந்தார்.
 
Member
Joined
Dec 5, 2025
Messages
32
இதே நேரம் சிவகங்கையில்... முருகனின் இல்லம் நடக்கும் காட்சி.
முல்லைக்கும் ஜீவானந்ததுக்கும் நடக்க இருந்த நிச்சியம் தடைப்பட்ட செய்தியை கேட்டு பார்வதியும் கேசவனும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
'நான் கூட அந்த பாண்டியன் எப்படியாவது இன்னைக்கு நிச்சியத்தை முடிச்சிடுவானு நினைத்தேன்,ஆனா பரவா இல்லை, இன்னமும் முல்லையை நீ கல்யாணம் பண்ண உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு' என்றார் பார்வதி.
'அக்கா... வாய்ப்பு அதுவா வரும் வரை நம்ம காத்திருக்கக் கூடாது.ஏதாவது செய்து முல்லையை மறுபடியும் இங்கே அழைச்சிட்டு வர நான் ஏற்பாடு பண்றேன்' என்ற கேசவன், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல அலைபேசி வாயிலாக இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை அழைத்தான்.
முன்னதாகவே கதிர்வேலனுக்கும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனுக்கும் பிரச்சனை இருந்ததை அறிந்திருந்த கேசவன், சுந்தரேசனுடன் கைகோர்த்து கதிர்வேலனின் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்டு இருந்த நிலையில்...இவர்கள் இருவரும் சேர்ந்து பாண்டியனின் குடும்பத்தில் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்த நினைத்தார்கள்.
எப்படியாவது முல்லையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய கேசவன், சுந்தரேசனிடம் உதவி கேட்க,
சுந்தரேசனுக்கும் கதிர்வேலனின் தங்கை ரோஜாவை தன் தம்பிக்கு மனம் முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
சுந்தரேசனும் கேசவனும் அலைபேசி வாயிலாகவே பல திட்டங்களை தீட்டி வைக்க...'சார்... நீங்க சொன்ன மாதிரி மட்டும் நடந்துட்டா! நாங்க பஞ்சாயத்தை கூட்டி எப்படியாவது முல்லையை மறுபடியும் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருவோம்' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் கேசவன்.
ஒரே முறையா நம்ம நினைத்த எல்லா காரியமும் நடக்காது... முதல்ல உன் மாமன் மகள் முல்லை உன் வீட்டுக்கு வர நான் ஏற்பாடு பண்றேன். அதன் பிறகு அவங்க குடும்பமே ஆட்டம் காணும். அந்த சமயத்துல அந்த கதிர்வேலனோட தங்கச்சியை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சி பழிக்கு பழி வாங்கிக்கிறேன்' என்று சுந்தரேசன் சபதம் எடுத்தான் .
படிக்க வந்த இடத்தில்,சின்னப் பெண் மீது கை வைத்த காரணத்தால் சுந்தரேசனின் தம்பி சீனிவாசனின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும்படி அடித்து துவைத்து எடுத்த கதிர்வேலனை பழிவாங்குவதற்காக சுந்தரசேனே களத்தில் இறங்க, அவனுடனேயே பார்வதியின் தம்பி கேசவனும் கைகோர்த்து இருந்தான்.
***************
இன்றைய தினம் நிச்சயம் நடக்கவில்லை என்ற கவலையில் மீனா அவள் வீட்டில் அமர்ந்திருக்க,கஸ்தூரியோ எந்தக் கவலையும் இன்றி காய்கறிகளை வெட்டிக்கொண்டு இருந்தாள்.
'கஸ்தூரி...இன்னைக்கு நம்ம பொண்ணு நிச்சயம் முடிஞ்சிடுமுன்னு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.ஆனா இப்படி ஆகிடுதே' என்று ஜெகதீஷ் கவலைப்பட
'ஆமாமா...அந்த குடிகார பையன் கூட என் பொண்ணுக்கு நிச்சயம் நடக்கலன்னு வேற உனக்கு கவலையா இருக்கா?' என்று எப்போதும் பாடும் அதே பாட்டையே பாடினார் கஸ்தூரி.
"சும்மா குடிகாரன் குடிகாரன்னு சொல்லாதடி...நாங்க இல்லன்னா இந்த அரசாங்கம் நஷ்டத்துல ஓடும்,தெரியுமில்ல!' என்று ஜெகதீஷ் சொல்ல,அருகில் இருந்த கத்திரிக்காயை தூக்கி ஜெகதீஷ் மண்டையில அடித்தார் கஸ்தூரி.
'என் அண்ணன் கொடுத்த பணத்துல வட்டிக்கு விட்டு நான் சம்பாதிக்கிறேன்... இதோ என் பொண்ணு இந்த வயசுலயே நாலு பேருக்கு மேக் அப் போட்டு சம்பாதிக்கிறாள், இப்படி பொம்பளைங்க ரெண்டு பேரு சம்பாதியத்துல குடிக்கிற நீ எல்லாம் பேசவே கூடாது'என்று தன் கணவனை கஸ்தூரி கடிந்து கொள்ள...
'அம்மா... ஏன் எப்ப பாரு அப்பாவை திட்ற' என்று மீனா தன் தந்தைக்கு பரிந்து பேசினாள்.
'எப்படிடி... உனக்கு இந்த குடிகார பயலுங்கள மட்டும் பிடிச்சிருக்கு.உன் அப்பனுக்கு பரிந்து பேசி பேசி இப்போ ஒரு குடிகாரனையும் கல்யாணம் பண்ணி, என்னை மாதிரியே உன் வாழ்க்கையும் அழிய போகுது' என்று கஸ்தூரி தன் மகளை கடிந்து கொள்ள,
'போதும் நிறுத்துமா... நீ என்ன சொன்னாலும் சரி.
எனக்கு கதிர் மாமாவை தான் பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னை தான் பிடிச்சிருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடக்கும்' என்று தீர்மானமாக சொன்னபடி மீனா தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.
'ஹ்ம்...உன் தலையெழுத்து அது தான் என்றால் அத யாரால மாற்ற முடியும்' என்று கஸ்தூரி முனங்க
'என் கல்யாண சமயம் கூட நானும் அதை தான் நினைத்தேன்' என்ற ஜெகதீஷ் இந்த முறை வெங்காயத்தில் அடிவாங்கினார்.
*******************
கோவிலுக்கு சென்று வந்த அசதியில் பாண்டியன் வீட்டில் அனைவரும் நேரத்தோடு உறங்கச் செல்ல...
இன்றும் எப்பொழுதும் போலவே குடியும் கும்மாளமுமாக கதிர்வேலன் தன் நண்பன் நாகராஜன் வீட்டில் அமர்ந்து வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டிருந்தவனின் பார்வை புஜத்தில் இருந்த மஞ்சள் கயிறு மீது படிந்தது.
'ஏன்டா நாகா... இன்னிக்கி அம்மாக்கு அருள் வந்து என்னென்னமோ பேசுனாங்களே... அதுக்கு என்னடா அர்த்தம்' என்று கதிர்வேலன் கேட்க...
'இங்க பாரு நண்பா...உன் தங்கச்சி சாதாரணமா பேசினாலே எனக்கு புரியாது. இதுல அவங்களுக்கு அருள் வரும் போது அவங்க முறைத்த முறைப்பிலேயே எனக்கு எல்லாம் ஆட்டம் கண்டுடுச்சு, அதனால என்கிட்ட நீ இதெல்லாம் கேட்காதே. வேணும்னா உன் தங்கச்சி கிட்டயே கேளு' என்று நாகராஜன் சொன்னவாரு அப்படியே உறங்கிப் போனான் .
'அருள் வந்து சாமி என்ன சொல்லுச்சுன்னு எனக்கு புரியல...ஆனா இன்னைக்கு நிச்சயம் நடக்காம இருந்தது பாரு! அது மட்டும் என் மனசுக்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுக்குது' என்ற கதிர்வேலன், தன் இதயப்பகுதியில் இருந்து KM🌹என்ற எழுத்தை வருடியபடி அப்படியே கண்கள் மூடி உறங்கவும் செய்தார்.
*********************
ரோஜாவும் முல்லையும் ஒரே கட்டிலில் படுத்திருக்க. தன் கழுத்தில் இருந்த MK என்ற சங்கிலியை கழட்டி முல்லை ரோஜாவின் கையில் கொடுத்தாள்.

'ஏய் இப்போ ஏன் இதை கழட்டுற... போட்டுக்கோ' என்று ரோஜா சொல்ல,
'ஐயோ இருக்கட்டும் ரோஜா... நீ இதை மாமா சார்கிட்ட கொடுத்துடு' என்றவளின் முகம் வாடி இருந்தது.
'என்ன முல்லை... ஜீவா அண்ணன் கூட நிச்சயம் நடக்கலைன்னு நீ கவலைப்படுறியா?' என்று ரோஜா கேட்க
'ரோஜா...எனக்கு இந்த வீட்டுக்கு மருமகளா வரல என்ற கவலை இருக்கத்தான் செய்து. ஆனால் இப்போ அந்த கவலையை விட, கஸ்தூரி சித்தி சொன்ன மாதிரியே நான் கல்யாணத்துக்கு முன்னாடி இங்க இருக்கிறது சரியா இருக்குமா என்ற கவலை தான் அதிகமாக இருக்கு' என்ற முல்லையின் கண்களில் இருந்த கண்ணீரும் வற்றி போனது.
'இங்க பாரு முல்ல... கஸ்தூரி அத்தைக்கு உன் மேல நிறைய பொறாம இருக்கு. ஏன்னு தெரியல அவங்களுக்கு உன்ன கண்டாலே ஆகாது. அதனால அவங்க பேச்செல்லாம் பெருசா எடுத்துக்காத. எனக்கு இந்த வீட்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவுக்கு உனக்கு இந்த வீட்ல உரிமை இருக்கு. நீ எதையும் நினைச்சு கவலைப்படாதே. அப்பா ஜாதகம் பார்த்து உங்களுக்கு கூடிய சீக்கிரம் நிச்சயத்தை ஏற்பாடு பண்ணுவாரு' என்று ரோஜா முல்லையை சமாதானப்படுத்த,
கவலையை மறக்க முடியவில்லை என்றாலும் மறைக்க நினைத்து முல்லை தன்னை தானே சரி செய்துக் கொண்ட நிலையில், இருவரும் அப்படியே பேசிக்கொண்டே உறங்கியும் போனார்கள்.
******************
மறுநாள் காலையில் வெள்ளை சட்டையும் வெள்ளை கால் சட்டையும் அணிந்துக் கொண்டு ஜீவானந்தம் கையில் பைக் சாவியுடன் நான் அறையில் இருந்து வெளியே வர, 'என்ன ஜீவா கிளம்பியாச்சா?' என்றபடி தன் பாண்டியன் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார்.
'ஆமாப்பா கிளம்பிட்டோம்... நானும் முல்லையும் திருச்சிக்கு போயிட்டு, முல்லைக்கு தேவையான சர்டிபிகேட்டை வாங்கிட்டுட்டு சீக்கிரம் வந்துடுறோம், பஞ்சாயத்துல ஏதாவது வேலைன்னா கதிர வெச்சி முடிச்சுக்கோங்க. கார் இங்கதான் இருக்கு. நாங்க பைக்ல போறோம்' என்று ஜீவா சொல்ல,'பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. எங்க முல்லையை காணோம்' என்றார் பாண்டியன்.
'முல்ல...' என்ற ஜீவானந்தத்தின் குரலைக் கேட்டு,'இதோ வரேன் மாமா' என்றபடி கருப்பு நிற தாவணியில் முல்லை ஜீவானந்தத்தின் முன் வந்து நிற்க,
அதே சமயம் கதிர்வேலனும் நாகராஜனும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
'கதிர்...நீ இன்னைக்கு வெளிய எங்கேயும் போகாம,அப்பா கூடவே இரு. பஞ்சாயத்து வேலையா அப்பா எங்காவது போனா அவர் கூட போயிட்டு வா. நானும் முல்லையும் திருச்சி வரை போயிட்டு வரோம்' என்று ஜீவானந்தம் சொல்ல,
'ம்...' என்ற ஒரு எழுத்தை மட்டும் உச்சரித்தபடி கதிர்வேலன் அவர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
'முல்ல...கிளம்பலாமா. அப்பா போய்ட்டு வரோம்' என்ற ஜீவானந்தம் முல்லையை அழைத்துக் கொண்டு கதிர்வேலனின் இருசக்கர வாகனத்தில் திருச்சியை நோக்கி பயணிப்பதற்காக தெரு முனையை தாண்டுவதற்குள் ஜீவானந்தத்தின் கைபேசிக்கு பாண்டியனிடமிருந்து அழைப்பு வந்தது.
'என்ன இது...நம்ம சொல்லிட்டுதானே வந்தோம். ஏன் அப்பா உடனே போன் பண்றாரு...என்ன முல்ல...நீ வீட்ல ஏதாவது மறந்துட்டியா' என்று ஜீவானந்தம் கேட்க,
'மாமா... என்கிட்ட போன் கூட இல்லையே! நான் என்ன மறக்க போறேன்?' என்று முல்லை சொல்ல,
ஜீவானந்தம் தன் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி, தன் கைபேசியை உயிர்ப்பித்து,'ஹலோ...சொல்லுங்க அப்பா' என்றவனின் முகம் பதற்றமாக மாறியது.
'சரி சரி அப்பா.. நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம். நான் தெரு முனையில் தான் இருக்கேன், நீங்க வாங்க நம்ம நேர்ல போய் பார்த்துப்போம்' என்று ஜீவானந்தம் சொல்ல...
'என்ன மாமா...ஏதாவது பிரச்சனையா?' என்று முல்லை கேட்கும் தருணம்...
வெள்ளை நிற காரில்,கதிரும் பாண்டியனும் இவர்கள் அருகே வந்து நிற்க, யாருக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்று முல்லை குழப்பத்தில் நின்று இருந்தாள்.
காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து கதிர்வேலன் கீழ இறங்க, அவரை தொடர்ந்து இறங்கிய பாண்டியன்,
'கதிர்... முல்லையை பத்திரமா நீ அழைச்சிட்டு போயிட்டு வந்துரு. ஜீவா பைக் சாவியை கதிர்க்கிட்ட கொடுத்துட்டு நீ வந்து காரை எடு' என்று பாண்டியன் சொல்ல...
'கதிர்...பார்த்து பொறுமையா வண்டியை ஓட்டு... முல்ல... சரியா கையெழுத்து போட்டு எல்லா சர்டிபிகேட்ஸையும் சரி பார்த்து வாங்கிடு' என்ற ஜீவா, காரில் தன் தந்தையை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைய... பைக் சாவியுடன் நின்றிருந்த கதிர்வேலனை முல்லை கேள்வியாக பார்த்தவளின் மனதில் இங்கு என்ன நடக்கிறது என்ற குழப்பம் தோன்றியது.p
இப்படியாக தயக்கத்துடன் முல்லை நின்று இருக்க,
'என்ன மேடம் ...இன்னைக்காவது என் கூட பைக்ல வருவீங்களா!? இல்ல! உங்க விஷயத்துல நான் தலையிட கூடாது, உங்கள பற்றி நான் கவலைப்படக்கூடாதுன்னு எண்ணி நீங்க தனியா பஸ்ல போக போறிங்களா? என்ற கதிர்வேலனின் கேள்வி முடியும் முன்னே முல்லை தன் இதழ்களை சுழித்தபடி வேகமாக பஸ் அறையை நோக்கி நடக்க...
'ஏய் ரவா லட்டு... அங்கேயே நில்லு டி' என்ற கதிர்வேலனின் கர்ஜனையான குரலில்... முல்லையின் கொலுசு அணிந்த பாதங்கள் ஒரு அடிக்கூட முன் நோக்கி நகராமல் அதே இடத்தில் ஆணி அடித்ததை போல நின்று இருந்தது.

🫶என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.

Thank you to the readers who read my story and shared their thoughts.🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top