- Joined
- Aug 31, 2024
- Messages
- 973
- Thread Author
- #1
5
பத்து ஆண்டுகளுக்கு முன்:
“என் வீட்டுல சாவு விழுந்தா வரமாட்டியா?” என்று சாந்தி சொன்னதும், “அக்கா” என அதிர்ந்தான் ஹரி.
“ஆமா அக்காதான். அப்படி ஒரு நினைப்பிருந்தா சீக்கிரம் வந்து சேர் அவ்வளவுதான்.” என்ன ஏதென்று கேள்வி எழுமுன் போனை வைத்த தாயையே வெறித்துக் கொண்டிருந்தாள் மகள்.
மகளின் பார்வைக்கு அர்த்தம் புரியாவிடிலும் அவளின் மனம் புரிந்ததால் ஒருசில முடிவுகள் உடனே எடுக்க முடிவு செய்தாள் தாய்.
“அம்மா மாமாவை எதுக்கு கூப்பிடுறீங்கன்னு தெரியும். ஒரு அளவுக்கு மேல அவங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.”
“அதை நான் பார்த்துக்கறேன்” என அமைதியாக சொல்லி கணவனைத் தேடி தோட்டத்திற்குச் சென்றாள்.
இரண்டு மணி நேரத்தில் வந்து நின்ற தம்பியைப் பார்த்த சாந்திக்கு அழுகை தன்னை மீறிவர அவனைக் கட்டிக் கொண்டு, “நாம மோசம் போயிட்டோம்டா” என்றதும் சில கணங்கள் பேச்சற்றுப் போனான் ஹரி.
“அக்கா என்ன சொல்றீங்க?” என்றவனுக்குள், ‘கிளம்புவதற்கு முன்தானே அவளிடம் பேசினோம்’ என்ற எண்ணம் வந்தது. ‘இல்லை அதுக்குள்ள ஒண்ணும் ஆகியிருக்காது. அப்படி ஆகியிருந்தா என்னாலன்ற குற்றவுணர்வே என்னைக் கொன்னுரும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அவனின் குழப்ப முகம் பார்த்து, “ப்..ப்ரியா இன்னும் மூணு மாசத்துல நம்மளையெல்லாம் விட்டுப் போயிருவாளாம்டா” என்றதும்... ‘எங்க?’ என்பதுபோல் புரியாமல் விழித்தவனிடம், “ஜாதகம் பார்க்கப் போனா, அவளோட ஆயுள் இன்னும் மூணு மாசம் தான்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டார்” என்றாள்.
“அக்கா என்ன சொல்றீங்க? அ...அவர் சொன்னா பழிக்கும்னு சொல்வாங்களே?” என்றவன் குரல் நடுங்கியது.
“ஆமாடா தம்பி. ரெண்டு நாளா இதை வெளியில சொல்ல முடியாம உள்ளுர செத்திட்டிருக்கோம்” என்றதும், தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தான். அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை, என்னவென்று, எதற்காக, யாருக்காக யோசிப்பான். உடம்பில் எதாவது நோய் என்றால் மருத்துவமனை அழைத்துச் சென்று பணம் முழுவதும் போனாலும் பரவாயில்லையென்று காட்டிக் காப்பாற்ற முயற்சிக்கலாம். ஆனால், இது யூகிக்க முடியாத ஒன்று. என்ன செய்வதென்று தெரியாத சுழல். பின் தன்னைத் தேற்றி, “என்ன செய்யலாம்கா? எதாவது பிராயசித்தம் இருக்கான்னு கேட்டீங்களா?”
அவளோ அழுதபடி, “கேட்காம இருப்பேனா... கேட்டேன். அவள் மனசுக்குப் பிடிச்சதைக் கேட்டு நிறைவேற்றுவது தவிர வேறு வழியில்லையாம்.”
“இந்த விஷயம் அவளுக்குத் தெரியுமா?”
“இல்ல எனக்கும் அத்தானுக்கும் தவிர யாருக்கும் தெரியாது.”
அடப்பைத்தியமே! தெரியக் கூடாதவளுக்குத் தான் தெரிந்தாயிற்றே! என காலம் கேட்டது.
“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் தம்பி.” என்ன என்பது போல் பார்த்தவனிடம், “ப்ரியாவுக்கு கல்யாணம் செய்யப்போறேன்.”
சட்டென்று எழுந்து, “அக்கா” என்றான் அதிர்ச்சியாக.
“ஆமா. இந்த மூணு மாசத்துல கன்னிப் பெண்ணா சாகுறதுக்கு, சுமங்கலியா போய் சேரட்டும்.”
“இதுக்கு அவள் சம்மதிக்கணுமேக்கா” என்றான் அவளின் மனம் புரிந்தவனாய். அவர்கள் மாப்பிள்ளையாக அவனை பார்த்திருப்பது தெரியாமல்.
“ஏன் சம்மதிக்க மாட்டா? சம்மதிப்பா. நீ சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னா?” என்று அவன் தலையில் இடியை இறக்க,
“அக்காஆஆஆ..” என தீயைத் தொட்டாற்போல் அதிர்ந்தவன், “தப்பு பண்றீங்க? நான் எப்படி அவளை.. உங்க பொண்ணு என் பொண்ணில்லையாக்கா?” என்றான் ஹரி கண்களில் வலியுடன்.
“தம்பி!” என்று அதிர்வது இப்பொழுது சாந்தி முறையாயிற்று. இருந்தாலும் மகளின் ஆசைக்காக தன் அதிர்வை மறைத்து, “இல்லடா மருமகள் தான். அக்கா மகளை தம்பி முடிக்கிறது காலம் காலமா இருக்கிற ஒண்ணுதான்” என்றாள் ஸ்திரமாக.
“நோ. என்னால முடியாதுக்கா. என்னால அவளை மனைவி ஸ்தானத்துல வச்சிப் பார்க்க முடியாதுக்கா. என்னை விட்டுரு. எனக்கு இது அசிங்கமாயிருக்கு.”
“தம்பி! நிலைமை புரியாம பேசாதடா. நான் ஜாதகம் பார்க்க போனப்ப கூட உன்னை அவளோட சேர்த்துப் பார்க்கத் தோணலை. ஆனா, இன்னைக்கு போன்ல நீ பேசினப்பதான் என் பொண்ணோட மனசே புரிஞ்சிது. இந்த நேரத்துல உன்னை விட்டா வேற யார்டா கல்யாணம் பண்ணிப்பாங்க. இதை ஒரு உதவியா நினைச்சி செய்டா.”
“அக்கா ஏன்கா என்னைக் கொல்ற? அவளைப் போய் எப்படிக்கா? மனசாட்சின்னு ஒண்ணு எனக்கு இருக்குக்கா.”
“மனசாட்சியை விட மனிதாபிமானம் ரொம்ப முக்கியம்டா தம்பி. அவளுக்கப்புறம் உன்னோட வாழ்க்கையை நீ தீர்மானிக்கிறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.”
“அச்சோ! இது தப்புக்கா” என்றவன் கொஞ்சம் இளகினாற்போல் தெரிய...
“தப்பு, சரி அவங்கவங்க மனசைப் பொருத்துத்தான்பா. நீயே கொஞ்சம் யோசி. வேற பையனுக்கு இப்படி டைம் சொல்லி கட்டிவைக்க முடியுமா? முடியாதில்லை இல்லையா. உன்னோட மனசைக் கொஞ்சம் மாத்தி தாய்மாமாவா இல்லாம ஒரு ஆணா யோசி” என்றார்.
“அப்படியே பார்த்தாலும் எனக்கு இன்னும் கல்யாண வயசே ஆகலைக்கா?”
‘ஹ்ம்.. இதுவே ஒரு ஒப்பந்த கல்யாணம் மாதிரி. இதுல வயசெங்க வந்தது?’ மனதினில் எண்ணினாலும், “புரியுதுடா. ஆனா, வேற வழியில்லையே” என கண்ணீரில் அவன் மனதைக் கரைத்தாள்.
மனதைக் கல்லாக்கி, “ப்ச்... என்னவோ பண்ணுங்க. இந்தக் கல்யாணம் அவளை சந்தோஷமா வச்சிருக்கும்னா நான் செஞ்சுக்கறேன். இப்ப ஊருக்கு கிளம்புறேன் நீங்க எப்ப பலி குடுக்கணுமோ அப்ப கூப்பிடுங்க” என்று வார்த்தைகளை எறிந்து சென்றான்.
“டேய் ஏன்டா இப்படிப் பேசுற? நில்லுடா” என தடுக்க முயற்சித்தும் முடியவில்லை அதற்குள் சென்றிருந்தான். சாந்தி உடனே கணவனை அழைத்து அந்த ஜோசியரிடம் செல்ல...
“நீங்க வருவீங்கன்னு தெரியும். அதுவும் அவளோட கல்யாண விஷயமா வருவீங்கன்னு தெரியும்” என்றவரை இருவரும் வியப்புடன் நோக்க... “இதிலென்ன ஆச்சர்யம் ஜாதகம் கணிச்சவன் நானாச்சே.” அவரின் உள் மனதிற்கு தானே தெரியும் இன்னும் ஒருமாதம் கூட அவளின் ஆயுள் கிடையாதென்பது. இருப்பினும் முழுதாக அவர்களிடம் சொல்லி உயிரோடு கொல்ல மனமில்லை அவருக்கு.
“எண்ணி பதினைந்தாவது நாளில் நம்மூரு அம்மன் கோவில்ல தாலிகட்டு வச்சிக்கோங்க” என்று நேரம் குறித்து அனுப்பி, “சஞ்சலத்தோடு போகாம அந்த பெண்ணிற்கு ஆன்ம திருப்தியை கொடு முருகா” என வேண்டினார்.
‘இன்னும் பதினைந்து நாளிலா?” என யோசித்தாலும் விஷயத்தை போன் செய்து தம்பிக்குச் சொல்லி வீட்டில் மகளுக்குச் சொன்னாள்.“
‘மாமா சம்மதிச்சிட்டாங்க’ என்ற நினைப்பே பெருமகிழ்ச்சியை அவளுள் ஏற்படுத்தியது. அதை கன்பார்ம் செய்ய “அம்மா நிஜமாவா?” என்றாள்.
“நிஜம் தான்மா.”
“மாமாவை ரொம்ப கட்டாயப் படுத்துனீங்களாம்மா?”
“ரொம்பல்லாம் இல்லமா. ஒரேடியா மாட்டேன்னு சொன்னா நான் கால்ல கூட விழுந்திருப்பேன். அது தெரிஞ்சிதானோ என்னவோ சரின்னு சொல்லிட்டான்.”
உண்மைதான். அவன் மனம் நினைத்தது இதைத்தான் தாய்க்கு சமானமான அக்கா மகளுக்காக தன் காலில் விழுவாள் போல் தோன்றியதால் தான் என்னவோ பண்ணுங்க என்றிருந்தான்.
“இருந்தாலும் மாமா பாவம்மா” என்றாள் ஹரிக்காக.
“பாவம்லாம் ஒண்ணுமில்ல கல்யாணப் பொண்ணா லட்சணமா ரெடியாயிரு போதும்.”
பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த லட்சுமிக்கும் விஷயம் சொல்லப்பட, “ப்ரியா வாழ்த்துகள். மாமாவையே மேரேஜ் பண்ணிக்கப் போறியா? உங்க ஜோடிப் பொருத்தம் சூப்பராயிருக்கும்” என்றாள்.
சின்ன சிரிப்பையே பதிலாகக் கொடுத்து, “இப்பக்கூட அக்கா சொல்லிராத போ” என்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவள் கண்ணாடி முன் நின்று, “மாமா நீங்க நிஜமாவே சம்மதிச்சிட்டீங்களா? நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை. என்னதான் அம்மா கெஞ்சினாலும் என்மேல உங்களுக்குள்ள பாசம்தான் மாமா உங்களை சம்மதிக்க வச்சது. அது நேசமா மாறணும் மாமா. கண்டிப்பா நேசம் வேணும் மாமா. எத்தனை வருடமானாலும் உங்க நேசமான வார்த்தைக்காக காத்திருப்பேன் மாமான்னு சொல்ல ஆசைதான். ஆனா, முடியாதே. இந்த ப்ரியாவுக்காக இவளை மிஸ் பண்ணியதுக்காக மனைவியா ஒரு சொட்டு கண்ணீர் வடிச்சா போதும் மாமா. என்னுடைய ஆன்மா சாந்தியடைஞ்சிரும்” என்றாள் சந்தோசக் கண்ணீருடன்.
ஹரியோ ஹாஸ்டலில் பித்துப் பிடித்தது போலிருந்தான். நடக்கப்போகும் திருமணத்தை அவன் மனதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மகளாய் பார்த்தவளை மனைவியாய் பார்க்க உடம்பே கூசியது. தன்னுடைய பிடிவாதத்திற்காக சாகப்போறவளின் நிம்மதியைப் பறிக்கவும் மனமில்லை. தன்னுடனேயே வளர்ந்தவளுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்ததென்று நினைத்து நினைத்து மாய்ந்து போனான்.
திருமணம் என்று சொல்லாமல், உடம்பு சரியில்லையென்று லீவ் எடுத்து திருமணத்திற்கு முந்தின நாள் வந்தான். யார் முகத்திலும் விழிக்க மனமில்லை. வீட்டில் நுழைந்ததும் ஹரிப்ரியா மட்டுமே இருந்ததால் அவளுக்கு உண்மை தெரியாதென எண்ணி பொதுப்படையாக பேசி, “நான் தோட்டத்துக்குப் போயிட்டு வர்றேன்” என்று கிளம்பியவனை கைபிடித்து நிறுத்தி, “ஏன் மாமா என்னைக் கண்டு ஓடுறீங்க? அம்மாவுக்காக சம்மதிச்சீங்கன்னா வேண்டாம் மாமா. உங்க மனமாற்றத்துக்காகக் காத்திருக்கேன்” என்றாள் அவனின் அந்த நிலை பிடிக்காது.
‘அடப்போமா! அப்படி ஒண்ணு வரவே வரப்போறதில்லை. அதுவுமில்லாமல் உன்னோட ஆயுள் குறிக்கப்பட்டிருச்சின்னு தெரியுமா உனக்கு?’ என உள்ளுர மறுகியவன், ‘ஹ்ம்..’ என மூச்சை இழுத்துவிட்டு, “எதையும் யோசிக்காம கல்யாணத்திற்கு ரெடியாகுமா” என்றான்.
மறுநாள் திருமணம் அம்மன் சந்நிதியில் மிக எளிமையாக உள்ளுர்காரர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் இனிதே நடந்தேறியது. தாலியை கையிலெடுக்கும் போதே அவன் கைகள் நடுங்குவதை உணர்ந்தான். கழுத்திற்கு கொண்டு போவதற்குள் தன்னைத் தானே ஆயிரம் முறை சமாதானப்படுத்தி கண்மூடி கட்டியும் விட்டான். ஆகிற்று ஹரி-ஹரிப்ரியா திருமணம்.