- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
7
காலை உணவு முடிந்ததும் வந்திருந்த உறவினர்களுக்கு மருமகளை அறிமுகப்படுத்த, “உனக்குப் பெரிய மனசுதான் ஆனந்தி. கஷ்டப்படுற குடும்பத்திலிருந்து பெண் எடுக்கவே மனசு வேணும். அதுவும் நகைபோட்டு கூட்டிட்டு வரணும்னா, ரொம்பவே பெரிய மனசு உனக்கு” என்றார் ஒரு பெண்மணி.
“நமக்கு மனசுக்குப் பிடித்தப் பொண்ணுதான அண்ணி தேவை. நகை நம்மகிட்ட இல்லாததா. தற்செயலா வந்த வரன்தான். இவங்க இரண்டுபேர் ஜாதகம் மட்டும்தான் பொருந்திச்சி. அதான் எதையும் யோசிக்காம முடிச்சிட்டேன்” என்றார்.
“பொண்ணு எப்படி?”
“தங்கமான பொண்ணு அண்ணி. நம்ம வீட்டுக்கு வந்த பிறகு இனி அவள் நம்ம பொண்ணு” என்றார் மற்றவர்களை வாய் திறக்கவிடாது.
அன்றும், மறுநாளும் மிக சாதாரணமாகப் போக, மறுவீடு அழைக்காதிருக்கும் அப்பா மேல் சொல்லமுடியா கோவம் வந்தது. 'திருமணம் முடித்துக் கொடுத்ததும் கடமை முடிந்துவிட்டதென தலைமுழுகி விட்டனரோ' என்ற பயம் வேறு. அவர்களின் அன்பின் அளவை அறிந்தவளாயிற்றே!
மாமியார் இவளின் சோகம் உணர்ந்து கேட்டதும் தன் வருத்தத்தைச் சொல்ல, மகனைப் பற்றிய உண்மை உணர்ந்தவரோ, “கொஞ்சம் நாளாகட்டும் பூரணிமா. வசீக்கு உங்க வீடு செட்டாகும்னு தோணலை. இடம் மாறினா அவனுக்கு உடம்புக்கு முடியாமல் போயிரும். பார்க்கதான் வாட்டசாட்டமா இருக்கான். தண்ணி மாறினாலே உடம்புக்கு ஒத்துக்காது” என்றார்.
“அப்படின்னா வேண்டாம் அத்தை. இன்னொரு நாள் பகல்ல போயிட்டு இருட்டுறதுக்குள்ள வந்திருறோம்.”
“அப்படியே செய்யலாம் பூரணி. ஆமா வேலைக்குப் போயிட்டுருந்தியாமே? என்ன வேலை பார்த்த?”
“டி.பார்ம் முடிச்சிருக்கேன் அத்தை. இங்க இருக்கிற ஜெயம் மெடிக்கல்ல நானும், என் ஃப்ரண்டும் வேலை பார்த்தோம். கல்யாணத்துக்காக வேலையை விட்டாச்சி.”
“விட்டது நமக்கெதுக்கு. நாம புதுசா ஒரு மெடிக்கல் வச்சிக்கலாம். மெடிக்கல் வைக்க என்னென்ன வேணும்?” மருமகள் வேலை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விசாரணையில் இறங்கினார்.
“சொந்தமா கொஞ்சம் வசதியா பெரிய இடம் வேணும். சொந்தமா இல்லைனாலும் வாடகை இடமாயிருந்தாலும் சரிதான். மருந்து மாத்திரைகள் வாங்கி வைக்க ஒரு தொகை வேணும். நம்ம அக்கௌண்ட்ல பேங்க்ல அமௌண்ட் இருக்கணும். ஃப்ரிட்ஜ் எப்பவும் அவைலபிளா இருக்கணும். அங்க வேலை செய்யுறவங்க எல்லாரும் டி.பார்ம் கண்டிப்பா முடிச்சி, அந்த சர்டிபிகேட் வச்சிருக்கணும். ட்ரக்கிங் இன்ஸ்பெக்ஷன் அப்பப்ப வருவாங்க. நாம வாங்கின மருந்து, விற்ற மருந்துன்னு செக் பண்ணுவாங்க. அவங்க வரும்போது பில்லுல சைன் பண்றவங்களோட சர்டிபிகேட் காண்பித்தே ஆகணும். எக்ஸ்பைரியான மருந்துகளை அப்பப்ப அழிச்சிரணும். இன்ஸ்பெக்ஷன் வந்தவங்க கண்ணுல அது மாட்டிச்சிதுன்னா, அவ்வளவுதான் கடையை மூடி சீல் வச்சிட்டுப் போயிருவாங்க.”
மெச்சுதலாகப் பார்த்தாலும், “அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?” என்றார் ஆனந்தி.
“இருக்கே அத்தை. நாங்கள்லாம் டாக்டருக்கு ஈக்வல் தெரியுமா?”
“ஏய்! இதான வேணாம்ன்றது. எனக்கு அதைப்பற்றித் தெரியாதுன்னு ரொம்ப சீன் காட்டாத” என்று மருமகளைக் கிண்டலடித்தார்.
“அட நிஜம் அத்தை. நாங்களும் முக்கால்வாசி டாக்டர் அளவு படிக்கணும். வேல்யூ கம்மிதான். படிக்க ரொம்பவே கஷ்டமாயிருக்கும். டாக்டர்னா அனாடமிக் மட்டும் படிக்கணும். எந்த லைன் எடுக்கிறாங்களோ அதைப்பற்றி மட்டும் படிக்கிறதால, அது சம்பந்தப்பட்ட மருந்தை மட்டும் படிப்பாங்க. டி.பார்ம் படிக்கிறவங்க அனாடமிக் படிக்கணும். என்ன மருந்து? அதை எப்படித் தயாரிக்கணும்? அதில் என்னலாம் சேர்க்கணும்? எந்தச் செடியிலிருந்து வருது, அதிலும் எந்தப் பகுதியிலிருந்து வருதுன்னு பார்த்து எடுத்துப் பதப்படுத்தின்னு நிறையவே படிக்கணும்.”
“அது மட்டுமா? டி.பார்ம் இரண்டு வருஷம் படிச்சிட்டு மூணு மாசம் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல ப்ராக்டீஸ் பண்ணி, அதுக்கான சர்டிபிகேட் வாங்கி, நாங்க டி.பார்ம் படித்த இடத்துல கொடுத்தால்தான் நாங்க படித்து முடித்ததற்கான உடனடி சர்டிபிகேட் கிடைக்கும். இல்லைனா ரொம்ப லேட்டாகும்.”
“ஓ... இவ்வளவு இருக்கா? எந்தப் படிப்பும் ஒன்றைவிட ஒன்று குறைஞ்சது இல்லைன்னு புரியுதுமா. நேரம் கிடைக்குறப்ப மெடிக்கல் வைக்குறதுக்கு மாமாகிட்டப் பேசிட்டு சொல்றேன்.”
“உங்க பையன்கிட்ட...” முழுதாக முடிக்க முடியாமல் நிறுத்த, அதை உணர்ந்தாரோ ஆனந்தி, “அவனை நான் சமாளிச்சிக்குறேன்” என்றிருந்தார் வேகமாக.
எதுவும் புரியவில்லை என்றாலும் சம்மதமாகத் தலையை அசைத்திருந்தாள்.
சமீபமாக பூரணிக்குள் ஏதோ ஒரு நெருடல் அவ்வப்போது. எப்பொழுதும் சாதாரணமாக இருப்பவளுக்கு சில சமயம் முள்ளின்மேல் நிற்கும் அவஸ்தை. ஏனிந்த உணர்வு என்று புரியவில்லை அவளுக்கு.
குலசேகரனின் பார்வை வித்தியாசத்தை, அவளின் அகக்கண் அறிகிறதோ!
மூன்றாம் நாள் குலதெய்வம் கோவிலுக்கு குலசேகரன், தனசேகரன் இருவரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். பரிபூரணி பொங்கல் வைக்க அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா.
தனசேகரனின் மூத்த மருமகள் ஸ்வாதியோ, “அந்த பூரணிக்கு சமமா நானா? முடியவே முடியாது” என்று கோவிலைச் சுற்ற, துணைக்கு கணவன் மனோகரனை இழுத்துக்கொண்டாள்.
“ஹாய் அண்ணிகளே! எதாவது உதவி வேணுமா?” தங்கள் அருகில் கேட்ட ஆண் குரலில் திரும்பிய பூரணி, மொட்டையடித்து மீசை தாடி ஏதுமில்லாமல் நின்றிருந்தவனை கேள்வியாய் பார்த்தாள்.
“வாடா கொழுந்தா. உனக்காகக் கூடுற கூட்டத்தை விலக்கி விட்டுட்டு வர இப்பதான் நேரம் கிடைச்சதா?” கிண்டலாகக் கேட்டாள் ஐஸ்வர்யா.
“எங்க அண்ணி? எல்லாருக்கும் நான்தான் வேணுமாம். அடமா அடம்பிடிக்கிறாங்க. குடும்பத்துக்கும் நேரம் கொடுக்க விடுங்கடான்னு அவகாசம் கேட்டு வந்திருக்கேன்.”
“மொட்டையில கொழுக்கட்டை மாதிரி இருக்கடா” என்று அவன் கால்வாரினாள் ஐஸ்வர்யா.
“சத்தமா சொல்லிராதீங்க அண்ணி. பிச்சித் தின்னுரப் போறாங்க” என்றவன் பூரணியிடம் திரும்பி, “ஹாய் சின்னண்ணி! நான் தினகரன். தாத்தா பொன்சேகரன்! அப்பா தனசேகரன்! சித்தப்பா குலசேகரன்! உடன்பிறப்பு மனோகரன்! சுவீகரன்! அப்புறம் உங்காளு வசீகரன்! கடைக்குட்டி சுவீ அண்ணா பையன் கிருஷ்கரன்! எப்படி எங்க கரன் ஃபேமிலி?” என்றான் சத்தமாகச் சிரித்தபடி.
“கேட்கவே மூச்சடைக்குது. இவ்வளவுதானா? இல்லை இன்னும் யாராவது கரன் இருக்காங்களா?” என்று புன்னகைத்தாள்.
“இப்போதைக்கு இவ்வளவுதான். அடுத்து உங்கள்ல யாராவது வெளியிட்டால்தான் உண்டு” எனவும் பூரணிக்குள் சிறிது வெட்கம் இழையோட, அதைக்கண்ட ஐஸ்வர்யா, “டேய்! கலாட்டா பண்ணினது போதும். போய் ஓரமா உட்காரு.” அவனை அனுப்பி, “அந்தப்பக்கம் தீ அணையுற மாதிரியிருக்கு பார் பூரணி” என்று அவளின் கவனத்தைத் திசை திருப்பினாள்.
பொங்கல் வைத்து முடித்து சாமிக்கு பூஜையிட்டு முடிய, அனைவருக்கும் பொங்கல் வைத்து, மதிய உணவுக்குக் கொண்டு வந்த உணவுகளைப் பந்தி வைக்க, பூரணியின் கையால் உண்ண மறுத்தனர் தனசேகரன் குடும்பத்தினர். மனோகரனையும் தடுத்துவிட்டாள் ஸ்வாதி. அக்குடும்பத்தில் விதிவிலக்காய் தினகரன்.
முதலில் சற்று வருத்தம் ஏற்பட்டாலும், அவர்களது குணத்தை எண்ணி விலகி நின்றாள் பூரணி.
மதிய உணவு முடிந்ததும் சற்று ஓய்வெடுக்கையில், “அவங்களுக்கு ஏழை பணக்காரன்னு வேறுபாடு பார்க்கத் தெரியும். ஆனா, சபை நாகரீகம் தெரியாது பூரணி. இனி அவங்க எதாவது கேட்டால் நான் பார்த்துக்குறேன்” என்ற ஐஸ்வர்யா பூரணிக்கு ஆறுதலாகப் பேசினாள்.
“அவங்க உடம்புல ஓடுற இரத்தம், இரத்தமா இல்லாமல் பணமா ஓடுதோ அக்கா?” பூரணி யோசிப்பதுபோல் முகத்தை வைக்க,
“யாருக்குத் தெரியும். அதிலும் அது பேப்பரா ஓடுதா, இல்லை சில்லரையா சிலிர்த்துக்குட்டு ஓடுதான்னு, உடல் முழுவதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் தெரியும்.” ஐஸ்வர்யா சிரிக்காமல் சொல்ல, பரிபூரணி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.
“ஏய்! உஸ்ஸ்...” என்று அதட்டவும் பரிபூரணி வாயை மூடிச்சிரிக்க, “கூட்டிட்டுப் போயி செக் பண்ணிப் பார்த்துரலாமா?” என்று கண்ணடித்துக் கேட்டாள்.
“பார்க்கலாம் அக்கா. எனக்கும் வேற கலர்ல இரத்தம் பார்க்க ஆசையாயிருக்கு” என்று இவளும் கண்சிமிட்ட, தனசேகரன் மனைவி சுகந்திக்கும், மருமகளுக்கும் உள்ளுக்குள் எரிந்தது.
“அந்த வசீகரனைக் கல்யாணம் பண்ணிட்டு எப்படி இவ்வளவு சந்தோஷமா சிரிக்க முடியுது? பணம்னதும் குறை கண்ணுக்குத் தெரியலையோ?” என்றார் சுகந்தி.
“நானும் அதுதான் அத்தை யோசிக்கிறேன். முகத்துல பெயருக்குக்கூட ஏமாற்றப்பட்ட வருத்தம், வேதனை, கோவம்னு எதுவுமேயில்லை. அவனுக்கு சரியாகிருச்சா என்ன?” மாமியாருக்குக் குறையாத மருமகளாய் ஸ்வாதி கேட்டாள்.
“இருக்காது. அப்படின்னா என் தங்கச்சி கஷ்டப்பட்ட குடும்பத்துல பொண்ணு எடுத்திருக்கமாட்டா. என்னைவிட அதிகம் கௌரவம் பார்க்கிற ஆள் அவள். இன்னும் இந்தப்பொண்ணுக்கு நிஜம் தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா இவ்வளவு சிரிப்பு எப்படியிருக்கும்?”
“தெரிய வச்சிரலாமா அத்தை?” என்றாள் மருமகள் வில்லங்கமாக.
“நாமதான் செய்தோம்னு தெரிஞ்சது, என் தங்கச்சி உடன்பிறப்புன்னு பார்க்காம கண்டந்துண்டமா வெட்டிருவா. எதையும் கண்டுக்காத. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கவங்க வீட்டைப்பார்த்துப் போயிருவோம். நமக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை” என்று அமைதியாகிவிட்டார்.
மாமியார் விடச்சொன்னதை மருமகளுக்கு விட மனதில்லையோ!
“ஏங்க உங்க சித்தப்பா பையன் வசீகரனுக்கு, பைத்தியம் தெளிஞ்சிருச்சா என்ன?” என்று முதல் திரியைக் கொளுத்திப் போட்டாள் ஸ்வாதி.
“ஏய் ஸ்வா! இங்க வச்சி ஏன் கேட்கிற? யாராவது கேட்டுரப்போறாங்க” என்றான் பதற்றத்துடன்.
“யாரும் கேட்க வாய்ப்பில்லை. எல்லாரும் கோவில் மண்டபத்துல இருக்காங்க. நாம கோவில் உள்ள இருக்கோம்.”
“அதுக்கு இப்படிக் கேட்பியா?” என்று கடிந்தான் மனோகரன்.
“என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க? கல்யாணமானா பைத்தியம் தெளிஞ்சிரும்னு ஜாதகத்துல இருந்ததாலதான், ஏழைப் பொண்ணைக் கல்யாணம் செய்து வச்சாங்க. இப்ப அந்தப்பொண்ணு சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்தா, வசீகரனுக்குப் பைத்தியம் தெளிஞ்சிருச்சா? நாலு நாளைக்கு முன்ன இந்தப் பைத்தியம் தெளிஞ்சிருந்தா, அத்தை இந்தக் கல்யாணத்தை நடத்தியிருக்க மாட்டாங்கள்ல? அந்த பூரணி பொண்ணுக்கு ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டம்தான்ங்க” என்றாள்.
“சரியாகியிருந்தா நமக்குத் தெரிவிச்சிருப்பாங்க ஸ்வா. அப்பா சித்தப்பா அதைப் பெருசா கொண்டாடியிருப்பாங்க. வசீ நல்லாகிட்டாலே போதும். சீக்கிரம் குணமாகணும்னு சாமியைக் கும்பிடு” என்று மனைவியை அடக்கினான்.
“ம்.. சரிங்க” என்றவள் கோணல் புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி, பத்தடி தள்ளி தூணிற்குப் பின்னிருந்த பூரணியைப் பார்த்து வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து சென்றாள்.
அமர்ந்திருந்த பரிபூரணியோ அதிர்ச்சியில் ஊமையாகிப் போனாள். ‘வசீகரனுக்குப் பைத்தியமா? எப்படி? இல்ல இவங்க பொய் சொல்றாங்க. நான் இங்க இருக்கிறதைப் பார்த்துட்டு என்னைக் கஷ்டப்படுத்த இப்படிப் பேசுறாங்க. அவங்களுக்கு நான் மருமகளா வந்தது பிடிக்கலை. என்னை வீட்டைவிட்டு அனுப்ப இப்படிப் பண்றாங்களாயிருக்கும். சட்டுன்னு யார்கிட்டேயும் கேட்டுராம நிதானமா இருக்கணும் பரி’ என தனக்குள்ளே கேள்வியும் பதிலுமாகிப்போக, அப்பொழுது தன்னை நோக்கி வரும் கணவனைக் கண்சிமிட்டாது பார்த்தாள் பரிபூரணி.
மனைவியின் பார்வைக்குப் பதில் புன்னகை அளித்தபடி அருகில் வந்தவன், “பரி அம்மா வீட்டுக்குக் கிளம்பலாம் சொல்லி கூட்டிட்டு வரச்சொன்னாங்க. இங்க என்ன பண்ற? வா” என கைபிடித்து எழுப்பிவிட்டான். விழிகளால் அவனை முழுவதும் அளந்தும் ஸ்வாதி சொன்னதுபோல் எந்த அறிகுறியும் தெரியவில்லை. குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என்றாலும், சற்றே மென்மையான குரல் வசீகரனுடையது. அந்த மென்மையிலும் தன்னைத் தொலைத்திருந்தாளோ!
‘பைத்தியமென்றால் குரலிலும் நடத்தையிலும் வித்தியாசம் தெரிந்திருக்குமே? என் வசீகரனைப் பைத்தியமென்று எப்படி சொல்லலாம்? கேட்டாலும் ஒழுங்கான பதில் சொல்லப் போறாங்களா என்ன?’ என்று நேரடியாகக் கேட்கத் தூண்டிய நாவையடக்கி அமைதியானாள்.