• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை... டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான்.
மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை
“முல்லை இங்க பாரு. என்னை பாரு முல்லை.”
“கதிர் அப்பா, அப்பா, ஏன் அப்பா இங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? சொல்லு கதிர் அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கதறினாள்.
“டேய் மணி முல்லையை பிடிடா. நான் என்னனு பாக்குறேன்.”
கதிர் சடலத்தின் அருகில் செல்வதற்குள், ஊர் ஜனம் மொத்தமும் அந்த மரத்தை சுற்றி வளைத்து ஆளாளுக்கு ஒரு விதமாக பேசிக்கொண்டு இருந்த சமயம், ஜீப்பில் கதிரின் தந்தை சேரன் மற்றும் கதிரின் தாய்மாமன்கள் ராஜசேகர், தனசேகர் மற்றும் தனசேகரனின் மனைவி கலைவாணி, ராஜசேகரின் மனைவி கலையரசி ஆகியோர் வந்து இறங்கினார்கள்.
“கதிர் என்ன ஆச்சு? ஐயோ கணேசன். டேய் என்ன ஆச்சுனு சொல்லுடா?
“எனக்கு ஒன்னும் புரியலப்பா. நீங்க அழைச்சிட்டு வரச் சொன்னதா தான் ரெண்டு பேரு வந்து கணேசனை அழைச்சிட்டு போனாங்கன்னு முல்லை சொன்னாள். ஆனா கடைசியில ஒரு சின்ன பையன் ஓடிவந்து கணேசன் தூக்கில் தொங்கிட்டாருன்னு சொன்னதும் தான் நாங்க இங்க வந்தோம். இங்கே வந்து பாத்தா...”
“அடிடா சக்க. இதோ வெட்ட வெளிச்சமாகிட்டது. இதோ நிரூபித்து விட்டான் இல்ல.” என்றார் தனசேகரன்.
“என்ன மாமா உளர்றீங்க?”
“உளறல மருமகனே. குற்றம் செய்தவன் மாட்டிகிட்டோம் என்ற பயத்துல, இதோ ஊர் மத்தியிலே இருக்கிற மரத்தில் தூக்கு போட்டுக்கிட்டு தொங்கிட்டான் இல்ல.”
“சரியா சொன்னடா தம்பி. மாமா இப்ப புரியுதா, கணேசன் நல்லவன் வல்லவன்னு சொன்னிங்களே. பாத்தீங்களா இவன் ஒரு திருடன். கோவில் சாமியின் நகையை திருடியவன் இவன் தான்.” என்றார் ராஜசேகர்.
“மாமா என்ன உளர்றீங்க? இவரு இறந்துட்டதால இவர திருடன்னு சொல்லிடுவிங்களா? இறந்தோர் மேல் பழி சொல்வது அசிங்கம். முதல்ல இந்த வழக்கு போற திசையே சரி இல்ல” என்றான் கதிர்.
“போதும் மாப்பிள்ள நிறுத்து. நீ என்ன உன் வக்கீல் புத்தியை காட்டுறியா? இதோ திருடன் அவனே தன்னை நிரூபிக்க வக்கில்லாமல் தூக்குல தொங்கி விட்டானே. இதுக்கு மேல என்ன சாட்சி தேவை?” கடுமையாக பேசினார் ராஜசேகரன்.
“இல்ல இல்ல இவங்க பொய் சொல்லுறாங்க. என் அப்பா திருடன் இல்ல. அவரு திருடல்லாம் மாட்டார். என் அப்பா திருடன் இல்ல. கதிர் சொல்லு கதிரு என் அப்பா திருடன் இல்ல” என்று அழ,
“ஏய்! நீ என்னடி எங்க வீட்டுப் பையனுக்கு நீ பெயர் வச்ச மாதிரி, கதிர் கதிர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்க. முதல்ல நீ எல்லாம் எங்க எதிர்க்க வந்து நின்னு பேசறதுக்கு கூட அருகதை இல்லாதவள். எங்க மாப்பிள்ள பக்கத்துல இருந்து தள்ளி போய்டு சொல்லிட்டேன்” என்றார் கலைவாணி.
“அத்த என்ன பேசுறீங்க? இவ அவளுடைய அப்பாவை இழந்து நிற்கிறாள். அவருடைய மரணத்துக்கு ஒரு நியாயம் தேவை. அத விட்டுட்டு நீங்க என்ன என்னமோ பேசுறீங்க.”
“என்ன நியாயம் தேவை. அதான் இவன் திருடன்னு ஊர்ஜிதமாகிடுதே அப்புறம் என்ன?” தனசேகரன் கேட்க,
“நீங்க சத்தமாக பேசினால் பொய் உண்மையாகாது மாமா.”
ராஜசேகரோ, “டேய்! நீ பேசுறத பாத்தா செத்தவனை நல்லவன் மாதிரி சொல்ற” எனவும் தனசேகரன் “அண்ணா அங்க பாருங்க. அந்த கணேசனுடைய கையில எதோ ஒரு காகிதம் இருக்கு” என்று காண்பித்தார்.
“டேய் மணி! அந்த பேப்பர் என்னன்னு பாருடா. உன் கையில கர்சீப் வச்சு எடுக்கப்பாரு.”
“எதுக்கு மச்சான்?”
“இல்ல நீ இரு. நான் பாக்குறேன். உங்க எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். இங்க இருக்கிற ஒரு துரும்பு கூட யாரும் தொடக்கூடாது. விடிஞ்சதும் நானே இந்தக் கோயில் நகைகள் பற்றி போலீசுக்கு சொல்லணும்னு தான் இருந்தேன். ஆனா இங்கே வேற ஏதோ பெரிய பிரச்சனை நடந்து இருக்கு. நல்லா இருந்த ஒரு உசுரை இப்படி அடிச்சு தொங்க விட்டிருக்கிங்க” என்றான் கதிர்.
“என்னது அடிச்சு தொங்க விட்டாங்களா? ஐயோ கதிர் என்ன பேசுற நீ? இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல” என்று சேரன் பதற்றப்பட,
“அப்பா அப்பா என்ன ஆச்சு?”
“ஐயோ மாமா. மாமா என்ன ஆச்சு?” என்று தனசேகரன் சொல்ல, அதைக்கண்டு அனைவரும் அலற, சேரன் நெஞ்சில் கையை வைத்தபடி சரிந்து கீழே விழுந்தார்.
“ஐயோ வண்டியை எடுங்க. மாமாவ மருத்துவமனைக்கு தூக்கி போகணும்.” தனசேகரன் சொல்ல,
ராஜசேகர் தம்பியிடம், “டேய் அப்போ செத்த இந்த திருடனுக்கும் அவன் பொண்ணுக்கும் என்ன தண்டனை கொடுக்கணும்?” எனக் கேட்டார்.
“ம்... இவன் பொண்ணா அடிச்சி இந்த ஊரைவிட்டு துரத்துங்க.”
“மாமா அவ மேல கைய வச்சீங்க நான் மனுசனா இருக்கமாட்டேன். நான் அப்பாவை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இன்னும் சில மணி நேரத்தில இங்க வருவேன். அது வரைக்கும் நீங்க யாரும் என் முல்லப்பூவை எதுவும் சொல்லக்கூடாது. டேய் மணி நீ இங்கேயே இருந்து இங்க என்ன நடக்குதுன்னு பாரு. நான் பக்கத்து ஊருல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு அப்பாவை அழைச்சிட்டு போறன். அப்படியே போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் தந்துட்டு வறேன்”
என்று சொன்ன கதிர் தன் தந்தை சேரன் அவர்கள் வந்த காரிலேயே அவரை ஏற்றினான்.
“கதிர்... கதிர் அப்பா அப்பா” என்று அழ,
“முல்லை உன் அப்பா. உன் அப்பா இறந்துட்டாரு. இல்ல யாரோ அவரை சாகடிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் நியாயம் கிடைக்கும். நீ தைரியமா இரு நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.”
“கதிர் என்ன விட்டு போகாத. எனக்கு பயமாயிருக்கு” என்று அவனை பிடித்து விடவில்லை.
“ஏய் விடுடி” அவளை இழுத்தார் கலைவாணி.
“அத்த கையை எடுங்க. இங்க பாருங்க கடைசியா சொல்றேன் முல்லையை யாரும் ஒரு வார்த்தை பேசக்கூடாது. டேய் மணி என் முல்லைப்பூவை பார்த்துக்கோ” என்று சொன்னபடி சூழ்நிலைக் கைதியாக கதிர் தன் தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
சில மணி நேரம் கடந்த நிலையில் மீண்டும் கதிர் தன் தந்தையுடன் ஊருக்குள் நுழைய, ஊரே வெறிச்சோடி இருக்க, ஊர் மத்தியில் அனாதையாக எரிக்கப்பட்ட நிலையில் கணேசனின் உடல் கருகி இருந்தது. கதிர் கண்கள் கலங்கி கணேஷனின் சடலத்தின் அருகே செல்ல, கதிரும் கதிரின் தந்தையும் வந்ததால் மீண்டும் பஞ்சாயத்து கூடியது.
“இங்க என்ன நடந்துச்சு? முல்லை. என் முல்லைப்பூ எங்க? டேய் மணி என்னடா என்ன ஆச்சு?” என்று கோபமாகக் கேட்க,
“மச்சான் முல்லையை அடிச்சுட்டாங்கடா.” என்றான்.
“என்னடா சொல்ற? அவளை ஏன்? யாரடா?”
“உன் முல்லைபூவை உன்னுடைய அத்த வந்து முடி எல்லாம் இழுத்துப் போட்டு, இதோ இந்த இடத்தில அடிச்சு ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடுச்சுடா.”
“டேய் என்ன சொல்ற? என் முல்லைப்பூ எங்க? மாமா என் முல்லைப்பூ எங்க?” என்று கத்தினான்.
தனசேகரனோ, “என்னடா மணி நீ. மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்த மாதிரி கதை சொல்ற. இங்க பாரு கதிர், இதோ பார் கதிர் இந்த கடிதத்தில் கணேஷன் தெள்ள தெளிவா கோவில் நகையை அவன் தான் திருடினான்னு எழுதி விச்சிட்டு தூக்கில் தொங்கி இருக்கிறான். அவங்க பொண்ணுகிட்ட நாங்க நகை எங்கன்னு கேட்டோம். அவ நகையை என் வீட்டில்தான் வச்சிருக்கிறேன், நான் போய் எடுத்திட்டு வரேன்னு சொல்லிட்டு போனா. ஆனால் திரும்பி வரவேயில்லை. நாங்களும் அவள ஊர் முழுக்க தேடிட்டோம் அவள காணோம்” என்றார்.
“என்ன என் காதில் பூ சுத்துறீங்களா? என் முல்லைப்பூ எங்க? எங்கிட்ட சொல்லாம அவ இங்க இருந்து போய் இருக்கமாட்டாள். அவங்க அப்பா இங்கே சடலமாய் எரிந்து இருக்கும்போது அவ எப்படி போவா?”
“என்ன நீ பைத்தியக்காரன் மாதிரி பேசுற. அதான் அவங்க அப்பா திருடன்னு வெட்ட வெளிச்சமாகிடுது இல்ல. அவனால தன்னை நல்லவன்னு நிரூபிக்க முடியாமல் தானே அவனும் தூக்குல தொங்கிட்டான். அவன் பொண்ணு இதோ அந்த நகையோடு இந்த ஊரை விட்டு ஓடிப் போயிட்டா. அவ்வளவுதான் இந்த வழக்கு முடிந்துடுது. இப்போ நமக்கு வைர ஒட்டியாணம் நஷ்டம். ஒரு திருடனுக்கு போய் நீயும் உன் அப்பாவும் நல்லவன்னு வக்காலத்து வேற வாங்கிட்டு வந்தீங்க பாருங்க.”
“மாமா நான் மறுபடியும் சொல்றேன்.
 
Joined
Feb 6, 2025
Messages
128
கணேசன் அந்த நகையைத் திருடி இருக்கமாட்டாரு. முல்லைப்பூ என்கிட்ட சொல்லாம இந்த ஊரை விட்டுப் போயிருக்க மாட்டாள். இங்க என்ன நடக்குது? டேய் மணி சொல்லுடா இங்க என்ன நடக்குது? உன்கிட்ட சொல்லிட்டுதான போனேன்” என்று கத்தினான்.
“சொல்லுப்பா மணி சொல்லு. இங்கே என்ன நடக்குது?” என்று மணியை மறைமுகமாக மிரட்டினார் ராஜசேகரன்.
“இல்ல மச்சான். அவங்க சொன்னது உண்மைதான். முல்லைப்பூ நகை எடுக்க போறேன்னு போன பொண்ணு வரல மச்சான்.”
“கதிர் என்ன நீ உன் அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல. அவர அழைச்சுகிட்டு வீட்டுக்குப் போ. சும்மா முடிஞ்ச கதையை பத்தி பேசாத. டேய் யாரங்க இந்த திருடனின் பிணம் எரிஞ்சு முடிஞ்சதும் இதையெல்லாம் அப்புறப்படுத்துங்கள். மாமா நீங்க வாங்க” என்று சேரனை அழைத்தார் தனசேகரன்.
“அப்பா அப்பா நில்லுங்க. இது என்ன நியாயம்? என் முல்லைப்பூ எங்கன்னு எனக்குத் தெரியணும்? ஒரு நல்ல மனுஷன் மேல திருட்டு பழி போட்டு அவரை கொன்னுட்டு, இவங்க எல்லாம் எதுவும் நடக்காத மாதிரி போறாங்க. நீங்களும் அவங்க பின்னாடி போறீங்க” என்று தந்தையைத் தடுத்தான்.
“என்னை என்னப்பா பண்ண சொல்ற? கணேஷன் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு இத பண்ணிட்டான் போல. நம்ம தான்ப்பா அவங்கள சரிக்கு சமம்மா பாத்து இருக்குறோம். ஆனா இவன் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டான். சரி நீ வா. எனக்கு வேற நெஞ்செல்லாம் வலிக்குது. நான் கண்ணை மூடுறதுக்குள்ள உனக்கும், தனசேகர் மகளுக்கும் நான் கல்யாணத்தை முடிச்சு வைக்கனும்.”
“அப்பா என்ன பேசுறீங்க? இங்க என்ன நடந்து இருக்கு. நீங்க கல்யாணம் அது இதுன்னு சொல்றிங்க?” என்று கேட்டான்.
“டேய் மச்சான்.”
“மணி என் முல்லை எங்கடா? ஐயோ என் முல்லை எங்கன்னு சொல்லுங்க” என்று கதிர் கத்தியவன் தன் தலையை பிடித்தப்படி மயங்கி கீழே விழுந்தான்.
“மச்சான்... மச்சான் என்னாச்சுடா?”
“ஏய் நீ முதல்ல உன் ஊருக்கு போ” என்று மணியை விரட்டினார் தனசேகரன்.
“ஏங்க கதிருக்கு என்னாச்சின்னு பார்க்கணும். கதிர் எழுந்திரிடா” என்று எழுப்பினான்.
“டேய் எங்க மாப்பிள்ளையை பாத்துக்க எங்களுக்கு தெரியும். நீ இந்த ஊரை விட்டு ஓடிடு சொல்லிட்டேன். தம்பி தனா கதிரை காருல தூக்கி போடு. டேய் மணி உன்னால என் மாப்பிள்ளைக்கு மட்டும் உண்மை தெரிய வந்துச்சு, முல்லைக்கு நேர்ந்த கதி தான் உனக்கும்.” என்று சொன்ன தனசேகரனும் ராஜசேகரும் மயங்கிய நிலையில் இருந்த கதிரை காரில் ஏற்றினர்.
கதிரின் அப்பாவும் இவர்களை தொடர்ந்து காரில் ஏற, மணி கண்கள் கலங்கியப்படி அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.
அன்றைய தினம் சிறிது நேரம் கடந்த நிலையில் கதிரின் பங்களாவில் கதிர் மயக்கத்தில் இருந்து எழுந்தவன் சுற்றி முற்றி பார்த்தவன் அருகில் யாரும் இல்லையென்பத்தை அறிந்து கொண்டு, வேகமாக அந்த பங்களாவை விட்டு வெளியேறியவன் முல்லையின் வீட்டை நோக்கி ஓடினான்.
முல்லையின் குடிசை தீயில் பொசுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றவன், இடிந்து போய் அதே இடத்தில் மண்டியிட்டு கதற, அவன் செவிகளுக்கு முல்லைப்பூ தன்னை அழைக்கும் குரல் கேட்டு நான்கு பக்கமும் நிலைதடுமாறிப்படி தன்னவளை தேடினான்.
“முல்லை முல்லை எங்கடி போன? ஐயோ நான் உன்ன தனியா விட்டுட்டு போயிருக்கூடாது. நான் பாவி. நான் தெரிஞ்சே உன்னை இழந்த பாவி. முல்லை எங்கடி இருக்க”
“மச்சான்” என்ற மணியின் குரலில் திரும்பியவன், “மச்சான் என் முல்லை எங்கடா? அவளுக்கு என்ன ஆச்சு?” என்றான்.
“மச்சான் நீ உங்க அப்பாவை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போன உடனே, உன் மாமாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை...” என்று மணி காலையில் நடந்த சம்பவத்தை சொன்னான்.
“ஏய் இந்தாடி எங்க அந்த ஒட்டியாணம்?” தனசேகரன் கேட்க,
“எனக்கு எதுவும் தெரியாதுங்க. என் அப்பாகிட்ட என்னை போக விடுங்க.” தந்தையிடம் செல்லத் தன்னைத் தடுத்தவர்களிடம் கெஞ்சினாள்.
“ஏய் என்ன உன் அப்பா உன்கிட்ட திருடி கொடுத்த நகையை வேற ஊர்ல கொண்டு போய் பத்திரமா வச்சுட்டு, இங்க வந்து நடிக்கிறியா?” என்றார் கதிரின் பெரிய மாமா.
“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. எங்க அப்பாக்கு என்ன ஆச்சு? எங்க அப்பா இறந்துட்டாரா?”
“என்னமா நடிக்கிறா பாரு. பெரிய கைகாரியா இருப்பாள் போல.” என்றார் கலைவாணி.
“ஆமா இவ பெரிய கைகாரி தான். நம்ம கண்ணுல மண்ணைத் தூவிட்டு இவ அப்பங்காரன் எப்படி நம்ம வீட்ல இருந்து நகை எடுத்துட்டு வந்தான் பாத்தியா.”
“சும்மா சொல்லக்கூடாது அந்த திருடன் பெத்த பொண்ணு நல்லா தான் இருக்கிறாள்” என்று ராஜசேகரன் அவளை தொட,
“என்னைத் தொடாதீங்க. என் கையை விடுங்க” என்று விசும்பினாள்.
“அண்ணா என்ன பண்றீங்க? இதுக்கு எல்லாம் இப்ப நேரமில்ல. ஏய் கலைவாணி இங்கே வா. இந்த கூட்டத்துல பெண்கள் மேல நாங்க கை வச்சா, அது எங்களுக்கு தான் பிரச்சனை. இவளை ரெண்டு போடு போட்டு இந்த ஊரை விட்டு அடித்து துரத்துங்க” என்றார்.
“இல்ல நான் போக மாட்டேன். என் அப்பா... என் அப்பா எனக்கு வேணும். கதிரு என்னை இங்க தான் இருக்க சொன்னான். நான் போகமாட்டேன்.”
“என்னது கதிரா? ஏய் நாங்க உசந்த ஜாதிக்காரங்க. எங்களுடைய பேரைச் சொல்லக் கூட உங்களுக்கெல்லாம் அருகதை இல்ல. ஆனா உனக்கு எங்க வீட்டு பையன் கேட்குதா?”
“என்ன சொல்றீங்க நீங்க. எனக்கு ஒன்னும் புரியல” என்றாள் அந்த அப்பாவிப் பெண்.
“என்னடி புரியல? அன்னைக்கு நைட்டு உன் வீட்ல எங்க வீட்டு பையன் இருந்ததை நாங்க பார்த்தோம். என்ன உன் பிறப்புக்கு எங்க வீட்டு பையன் கேக்குதா?” ராஜசேகரன் சொல்ல,
“இந்த அழகு இருக்கிறதால தானே எங்க மாப்பிள்ளையை நீ மயக்கி உன் இடுப்புல சொருக நினைச்ச. இப்ப பாரு, டேய் அந்த கத்தியை தாங்கடா.”
“ஏங்க என்ன பண்றீங்க? விடுங்க அவுங்கள.” என்று தடுக்கப் பார்த்தான்.
“டேய் எதாவது பேசுன, உன் உயிர் உன் உடம்புக்கு சொந்தமா இருக்காது சொல்லிட்டேன். போடா அப்படி. டேய் யாருடா அங்க. அந்த மண்ணெண்ணெயை ஊற்றி இந்த திருடனின் பிணத்தை எரிங்கடா” என்றார் தனசேகரன்.
“அப்பா. என் அப்பாவை ஒன்னும் பண்ணாதீங்க. அப்பா...” என்று அழுது கரைந்து தகப்பனிடம் செல்ல,
“அடியே எங்கடி போற? குடுடா அந்த அருவாவை.” கலைவாணி அவள் கையில் இருந்த அருவாவை கொண்டு முல்லைபூவின் கூந்தலை நறுக்க, முல்லை தன் தந்தையின் சடலம் கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியில் சிலையென நின்றாள்.
“அண்ணா இவள என்ன பண்றது?
“இவள...” என்று ராஜசேகரன் யோசிக்க,
“அப்பா. ஏங்க என் அப்பா முகத்தை என்னை பாக்க விடுங்க.”
“ஏய் வாடி இங்க.” தனசேகர் அவள் தாவணியை இழுக்க,
“என் தாவணியை விடுங்க. அப்பா.”
“ஏங்க அந்த பொண்ணை விடுங்க. பாவங்க அவங்க” என்றான் மணி.
“என்னை விட்டுடுங்க. நான் என் அப்பா கூடவே போயிடுறேன்.”
“ஏய் எப்போ என் மாப்பிள்ளை உன்ன காதலிக்கிறான்னு எங்களுக்கு தெரிஞ்சதோ, அப்பவே உன்னையும், உன் அப்பனையும் சேர்த்து வைத்து அதே குடிசையில் எரித்து விடணும்ன்னு தான் நினைச்சோம். ஆனா அப்படி பண்ணா, என் மாப்பிள்ளை எதிரில் நாங்க வில்லனா ஆகியிருப்போம். அதனால தான் உன்னுடைய அப்பன் மேல திருட்டு பழி போட்டு அவனையும், உன்னையும் ஊரை விட்டே துரத்த நினைச்சோம். அதுக்கும் இந்த கதிர் உள்ள புகுந்து ஆட்டத்தை கலைத்தான். அதனால நாங்க இப்போ அவனை அவங்க அப்பா கூட இந்த ஊரைவிட்டு வெளியே அனுப்பி வச்சிட்டு, உன் அப்பனை எமலோகம் அனுப்பி வச்சிட்டு உன்னை இந்த ஊரை விட்டு அடித்து துரத்த போறோம்” என்று வில்லத்தனமாக பேசினார் ராஜசேகரன்.
“நீங்க என்ன பேசுறிங்க? நான் என்ன பண்ணேன்? ஏன் எங்க அப்பாவை எரிச்சிங்க? எங்க அப்பாவை வரச்சொல்லுங்க. நான் வேணும்னா எங்க பாட்டி வீட்டுக்கு போயிடுறேன். கதிரை நான் பாக்கல. கதிர் கூட இனிமே பேசல. என் அப்பாவை மட்டும் என்கிட்ட குடுங்க” என்று கதறினாள் முல்லை.
“உன்ன உயிரோட விடவா இவ்வளவு வேலையும் செஞ்சோம்.”
“ஏங்க என்ன மனுஷன்ங்க நீங்க. அப்போ இதெல்லாம் உங்க வேலை தானா? மணி முல்லைக்காக நியாயம் கேட்க,
தனசேகரனோ, “ஏய் என்ன? தலையே இந்த ஊரைவிட்டு போயிடுது. வாலு நீ என்ன ஆடுற. இங்க பாரு இங்க நடந்த விஷயம் எதுவும் கதிருக்கு தெரியக் கூடாது. மீறி தெரிஞ்சது உன் உடம்பில் உயிர் இருக்காது” என்றார் மிரட்டலாக.
“என்ன வேணா பண்ணுங்க. கதிர் என்னை நம்பி தான் முல்லையை விட்டுட்டு போய் இருக்கான். முதல்ல அந்த பொண்ணு மேல இருந்து உங்க பொஞ்சாதிய கையை எடுக்க சொல்லுங்க. இந்தாங்கம்மா கையை எடுங்க” என்றான்.
“டேய் யாருடா நீ? என் மக சின்ன வயசுல இருந்து கதிரை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு, சொல்லி சொல்லி வளத்து இருக்கிறேன். ஆனா, என் பெண்ணுக்கு போட்டி இவளா? இவ எல்லாம் எங்க வீட்டு பாய கூட தொடறத்துக்கு அருகதை இல்லாதவள். ஆனா இவ எங்க வீட்டு பையன் கூட எங்க மெத்தையில படுக்கணும்னு ஆசைப்படுறாளா? இவளை...” முல்லை தலை முடியை இழுக்க,
“ஆ....ஐயோ தலை வலிக்குது என் முடியை விடுங்க.”
“ஏங்க என்ன அநியாயம் பண்றிங்க. விடுங்க அவங்கள. உங்களுக்கும் வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கு மறந்துடாதீங்க.”
“டேய் முதலில் இவன அடிச்சு துறதுங்கடா.” ராஜசேகரன் கட்டளையிட,
“இங்க பாருடா. ஒழுங்கா இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடு. இல்லன்னு வை...” தனசேகரன் மிரட்ட,
“சரிங்க. நான் இந்த ஊரைவிட்டு போயிடுறேன். அந்த பொண்ணை என் தங்கச்சியா நினச்சு கேக்கிறேன். என் கூட அவளை அனுப்பி வைங்க நாங்க போயிடறோம். கதிர் உடைய கண்ணுலயே நாங்க படமாட்டோம்.”
“டேய் இவங்க எல்லாம் எங்க வீட்டு வாசப்படியை கூட மிதிக்க அருகதை இல்லாதவர்கள். இன்னும் கேட்டால் நாங்க கழட்டிப் போட்ட துணியை கூட தொட வக்கில்லாதவங்க. அன்னைக்கே இவ குடிசையில நான் கதிர பார்த்ததுமே இவளை எரித்து சாம்பலாக்கி இருக்கணும். ஆனா கதிருக்கு நாங்க கெட்டவங்களா தெரிவோம் என்ற ஒரே காரணத்தால் தான் இவ்வளவு பெரிய நாடகத்தை நாங்க போட வேண்டியதா போச்சு.”
“நீ சொல்றது சரி அண்ணா. கதிர் வரதுக்குள்ள இவளை இந்த ஊரை விட்டே அடித்து துரத்துங்கள்.”
“ஏங்க இவள அடித்துத் துரத்துனா கூட, இவளை எங்க இருந்தாலும் இந்த கதிர் பையன் தேடிகிட்டு போய்டுவான்” என்று கலைவாணி சொல்ல,
“அப்போ வேற என்ன பண்ணலாம்?” ராஜசேகரன் கேட்க,
“அதுக்கு ஒரு வழி இருக்கு. நாங்க பாத்துக்குறோம். ஏய் இவளை இழுத்துட்டு வாங்கடா” என்று கலைவாணி முல்லையை இழுத்து வரச்சொன்னார்.
“என்ன விடுங்க. என் அப்பா இல்லாம நான் வரமாட்டேன்” என்று அடமாய் நிற்க,
“ஏய் வாடி” என்று சொன்னபடி முல்லையை இவர்கள் இழுத்து சென்ற கதையை மணி கதிரிடம் சொல்லி, “பாவம்டா உன் முல்லைப்பூ” என்றான்.
“அப்போ நான் என் முல்லையை காதலிக்கிறது தெரிந்து தான் இவனுங்க எல்லாம் சதி செய்து எங்களை பிரிச்சிட்டாங்களா?” என்று சொன்ன கதிர் கோபத்துடன் அவன் பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“கதிர் நில்லு. கதிர்...” என்று தூரத்தில் இருந்து இவன் பெயரை சொல்லி ஒரு பெண் அழைத்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top