- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
29
காலை எழுந்தது முதல் நாத்தனாரின் கண்ணில் படாமல் சுற்றிய நட்சத்திரா, சாப்பிடும் வேளையில் மாட்டிக்கொண்டாள். தோழியின் கண் பாராது அங்குமிங்கும் அலைபாய்ந்த கண்கள் சொன்ன செய்தியை மின்னல் உணர்ந்தாளோ!
காலை உணவு முடித்ததும் கன்னத்தில் முத்தமிட்டு, “வெட்கம்! நாணம்! எனக்குப் புரியுதுடா. ஃப்ரீயா இரு” என்று நகர்ந்தவள் திரும்பி, “நட்டுமா அண்ணன் சொன்னானா தெரியாது. நான் சொல்றேன் ஐ லவ் யூ” என்றாள்.
“சீ... போ” என்று வெட்கம்கொள்ள,
“என்ன ரெண்டு பேரும் கொஞ்சிட்டிருக்கீங்க? ஏய் வாயாடி நீ ஆஃபீஸ் போகலையா?” வழக்கம்போல் தங்கையின் தலையில் தட்டினான்.
“அம்மா பாருங்கம்மா தலையில் அடிக்கிறான்” என்று புகார் ஆரம்பிக்க,
“அடடடடா... கொஞ்ச நாளா உங்க சண்டை ஓய்ஞ்சிருந்தது. திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? எதுக்குடா அடிச்ச?”
“வேலைக்குப் போகலையா கேட்டேன்மா. லைட்டா தொட்டதைப் பெருசு பண்றா.”
“அம்மா சும்மா சொல்றான்மா. பாருங்க தலையில கட்டி வந்திருச்சி” என்று இல்லாததை இருப்பதாகக் காட்டினாள் மின்னல் பெண்.
“ஏய் போடி சும்மா சின்னதை பெருசாக்கிட்டு. உங்களுக்கு நேரம் போகலைன்னா நாங்கதான் கிடைச்சோமா” என்று சகுந்தலா நகர,
சத்தம் கேட்டு வந்த ரவிச்சந்திரனைக் கண்டதும் “அப்பா” என்று அழுதபடி சென்றாள்.
“என்னடா பாப்பு?” என்றார் உருகலாக.
“ஆமா. பெரிய பாப்பு. அவ சீன் போடுறான்னு தெரிஞ்சே அப்பா உருகுறாங்க. உலகமகா பாசம்டா சாமிகளா.” அரிச்சந்திரன் மௌனமாக முணுமுணுத்தான்.
அதைப் பார்த்திருந்த நட்சத்திராவிற்கோ சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அதை அடக்கியபடி வேடிக்கை பார்த்தாள்.
அவளருகில் வந்தமர்ந்த பாக்கியவதி “இதுங்க ரெண்டுக்கும் வேற வேலையே இல்லமா. உன் புருஷன் செய்றதெல்லாம் செஞ்சிட்டு கமுக்கமா அம்மா பின்னால ஒழிஞ்சிப்பான். இந்தச் சின்னவளுக்கு எப்பப்பாரு அப்பா அப்பாதான்.”
“வீடு எப்பவும் ஜாலியா இருக்கும் பாட்டி. தனியா பிறந்து வளர்ற எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, இந்த உரிமைச் சண்டை அதில் இருக்கிற பாசம்லாம் பார்க்கிறது உலக அதிசயம் மாதிரி. கொடி விட்ல நடக்கிறதைச் சொல்லும்போது இப்படி கூடவே இருந்து பார்க்கணும் தோணும். இடையில் நிறைய மனசுக்குப் பிடிக்காதது நடந்தப்ப, இதெல்லாம் இனிமேல் எனக்குக் கிடையாது நினைச்சேன். காட்ஸ் க்ரேட்ல பாட்டி.”
அவளின் தலையை வருடியபடி “நிஜம்தான்மா. உனக்குக் கடவுள்னா அது உன் மாமாதான். அவன்தான் உன்னை எப்படியாவது நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டது” என்றார்.
“மாமாவா? எனக்குப் புரியல பாட்டி?” ‘தங்களுக்கு நடந்தது திடீர் கல்யாணம்தானே’ என்ற எண்ணத்தில் கேட்டாள்.
“என்ன புரியல? உனக்கும் அ...”
“க்ரேன்மா ஊர்ல இருந்து போன் வந்திருக்கு. எதோ கோவில் வரி விஷயமா பேசணுமாம்” என்று இடையிட்டான் அரிச்சந்திரன்.
“இதோ பேசிட்டு வர்றேன்மா” என்று பாட்டி எழுந்து சென்றதும் தன்னருகில் வந்தமர்ந்த கணவனிடம், “ஏன் பாட்டியை அனுப்பிட்டீங்க? பேசிட்டிருந்தேன் தெரியுமா?”
“எதுமா? ஏழாவது தலைமுறையைப் பற்றியா? அதுக்கான வேலையில இறங்கியாச்சின்னு சொல்லிட்டியா?” என்று சிரிக்க,
“அச்சோ இப்படிலாம் பேசாதீங்க” என்று சிணுங்கினாள்.
“அப்ப என்ன பேசலாம்? ஏழ்...” அடுத்த எழுத்தை உச்சரிக்கவிடாமல் அவன் வாய்மூட, தொலைபேசியை எடுத்து ஹலோ சொல்லி ஏமாந்து வந்து, பேரனை முறைத்த பாட்டியை நட்சத்திரா அறியவில்லை.
பேரனை முறைத்தாலும் நட்சத்திராவின் வெட்கமும், உரிமையான தொடுகையும், பேரனின் குறும்புப் புன்னகையுடன் கூடிய முகமலர்தலும் அழகாகவே இருந்தது அப்பெரியவர் கண்களுக்கு.
“அப்பா கேளுங்கப்பா.”
மகளின் குரலில் அறையில் இருந்து வெளியே வந்த சகுந்தலா, “இன்னுமா உங்க பஞ்சாயத்து போகுது. போங்க போய் வேலைக்குக் கிளம்புங்க” என்று விரட்டினார்.
“உன் ஃப்ரண்ட் கல்யாணமானதும் அப்பா கூட டெல்லி வர்றேன்னு சொன்னியேடா. எப்பக் கிளம்புற?”
“கொஞ்ச நாள் போகட்டும்பா. சித்தார்த், வெண்மதி டைவர்ஸ் கேஸ் முடிஞ்சதும் உங்களோட வர்றேன்.”
“நிக்காத கேஸ்கு நீ ஏன் இப்ப முட்டு கொடுக்கிற? அதான் அண்ணன் தங்கச்சி ப்ளான் பண்ணிட்டீங்கள்ல? நீங்கள்லாம் தனி கேஸ் ஏன் எடுக்கிறீங்க? இப்படியே ஒவ்வொரு கேஸா வீட்லயே முடிச்சிருங்க. சிறப்பாயிருக்கும்” என்றார் நக்கலாக.
“அப்பா” என்று சிணுங்க,
“மாப்பிள்ளை பார்க்கவாடா?” என்றார்.
“கொஞ்சம் நாள் போகட்டும்பா.”
“கொஞ்சம் நாள்னா, நீ கிழவியான பிறகா?” என்று பாக்கியவதி கேலியாகக் கேட்டார்.
“இந்த வயசிலும் நீங்க அழகுதான் க்ரேன்மா. உங்க பேத்தி நானும் உங்க வயதில் அழகாய்த்தான் இருப்பேன். அப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
“வாய்ல போடு. என்னைக் கிழவின்னு சொல்றியா?”
“கிழவியைக் கிழவின்னு சொல்லாம குமரின்னா சொல்வாங்க. போங்க க்ரான்மா. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை” என்று கொஞ்சலாகப் பேச,
“ஏய் மின்னல் பெரியவங்களை எப்படிப் பேசணும்னு ஒரு வரைமுறை இல்லையா? பாட்டிகிட்ட மன்னிப்புக் கேளு” என்றார் சகுந்தலா.
“மன்னிப்பா? க்ரேன்மா கேட்டே ஆகணுமா?”
“அஹான் ஜி” என்ற பாட்டியின் கேலிக்குரலில் பல்லைக்கடித்து, “அஹான்கு வந்த சோதனையா இது? ஹ்ம்...” என அலுத்து சலித்து, “சார்ரி” என்றாள்.
“மின்னல் வா போகலாம்” என்று தங்கையை அழைக்கையில், நட்சத்திராவிற்கு சஞ்சயிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பேச அவளின் அத்தை அவர்களை விருந்துக்கு அழைத்தார்.
“அத்தை லைன்ல இருங்க. நான் பாட்டிகிட்டக் கொடுக்கிறேன். நீங்க அவங்ககிட்ட பேசுங்க” என்று பாட்டியிடம் நீட்டினாள்.
“பாருங்கப்பா மெய்ன் பாய்ண்டை ஃப்ரண்ட் பிடிக்கிறா.”
மகளின் கேலியை தலைதட்டி அடக்கிய ரவிச்சந்திரன், “என்னன்னு கேளுங்கம்மா” என்று தாயை பேசச்சொல்ல, பேசி முடித்து கைபேசியை வைத்ததும் “விருந்துக்கு அனுப்பச் சொல்றாங்க ரவி. நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றார்.
“சரிதான்மா. அவங்க போயிட்டு வரட்டும்” என்றார் ரவிச்சந்திரன்.
கைபேசியை வைத்ததில் இருந்து கணவனின் யோசனை முகம் பார்த்தவள் ஏனென்று கேட்பதற்கு முன், “என்னண்ணா யோசனைலாம் பலமாயிருக்கு?” என்றாள் மின்னல்.
“இல்லமா. கேஸ் விஷயமா சென்னை அவுட்டோர் ஏரியா வரை போக வேண்டியிருக்கு. போயிட்டு வர டைமாச்சினா, விருந்துக்கு எப்படின்னு யோசிக்கிறேன்.”
“நாளைக்கு வர்றோம்னு சொல்லிரலாம்ங்க.”
“சேச்சே... வர்றேன்னு சொல்லிட்டு போகலன்னா, அதெல்லாம் தப்பு நதி. நீ கிளம்பு உன்னை அங்க விட்டுட்டுப் போறேன். மதியம் ஒன்றிலிருந்து இரண்டுக்குள்ள வர்றமாதிரி பார்க்கிறேன்.” என்றான்.
“அவன் சொல்றதும் சரிதான்மா. வேலைக்கு வேலையுமாச்சி. விருந்துக்கு விருந்துமாச்சிது” என்றார் ரவிச்சந்திரன்.
“அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்களாப்பா?”
“இல்ல தப்பா எடுத்துக்கமாட்டாங்க. அத்தையும், மாமாவும் ரொம்ப நல்லவங்க. என்னோட ஆசைக்காக கடைசி நேரத்துல கல்யாணத்தை நிறத்தணும்னா, அதுக்கு பெரிய மனசு வேணும். அதுலயே தெரியுதே அவங்க குணம்.”
“நதி! எப்படி?” என்றான் அதிர்வாய். ‘எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாளா?’ மனம் படபடத்தது.
“சஞ்சித் அத்தான், என்னோட மனசு தெரிஞ்சி, கல்யாணத்தை நிறுத்தினதா அப்பா சொன்னாங்க. சஞ்சித் சொன்னதால அத்தையும், மாமாவும் சரின்னு சொல்லிருக்காங்க. அப்படிப்பட்டவங்க சூழ்நிலை புரிஞ்சிக்கமாட்டாங்களா? சொந்த ஊருக்குப் போக முடியாம அப்பா திண்டாடினப்ப, முழு ஆதரவும் கொடுத்து எல்லா பொறுப்பையும் தன்னோடதா எடுத்துக்கிட்டது அத்தையும் மாமாவும்தான். ஊர்ல எதாவது ஸ்கூல் இல்ல சொத்துப் பிரச்சனைன்னா, அப்பா சார்புல அடிக்கடி ஊருக்குப் போயி சரி பண்ணிட்டும் வருவாங்க. எனக்குதான் தப்புப் பண்ணிட்டேனோ ஃபீல் இருக்கு” என்றாள் வருத்தமாய்.
எதையும் அறியவில்லை என்ற மன நிம்மதி கொண்டாலும் “எதைத் தப்புன்னு சொல்ற நதி? நம்ம கல்யாணத்தையா?” என்றான் அவள் முகத்தைப் பார்த்தபடி.
“ப்ச்... இல்லங்க. நம்ம கல்யாணத்தை எப்படிச் சொல்வேன். நீங்க வேண்டாம் சொன்னதும் அம்மா சஞ்சித் அத்தானை பேசினாங்கள்ல? அப்ப நான் சம்மதிச்சிருக்கக்கூடாது. அத்தான் என்னைப் புரிஞ்சி வேண்டாம் சொல்லியிருக்காங்கன்னா, நானே என்னை ஏன் உணரலைன்னு ஒரு கில்டி ஃபீல்” என்றாள்.
“நம்மை மீறி நடக்கிறதுக்கு நாம பொறுப்பாக முடியாது. அம்மாவுக்காக சம்மதிச்சதை எப்படி தப்பு சொல்ல முடியும். அன்று எழுதின கடவுள் அழிச்சா எழுதப்போறான். அரிக்கு நீதான்றது கடவுள் போட்ட முடிச்சு. பழசு எதையும் நினைச்சிக் கலங்காதே” என்று மருமகளின் தோள்தட்டினார் சகுந்தலா.
ஏதோ ஒரு வகையில் சஞ்சித் அவர்கள் நினைவில் அழியாது இடம் பிடித்திருந்தான்.
நட்சத்திராவை சஞ்சித்தின் வீட்டில் விட்டுவிட்டு வெளியே செல்ல வேண்டிய காரணம் சொல்லிக் கிளம்பியவன், மதியம் இரண்டு மணிக்கெல்லாம் திரும்பி வந்தான். மதியம் விருந்து முடிந்து சஞ்சய், ஆர்த்தியுடன் நேரம் செலவழித்து, இரவு உணவையும் அங்கேயே முடித்து வீட்டிற்குக் கிளம்ப வண்டியை நோக்கிப் போகையில், ஆர்த்தியின் அழைப்பு நட்சத்திராவைத் தேக்கி, யோசிக்க வைத்தது.
“நதி... நதி... ஏய் நதீ... ரா அத்தை கூப்பிடுறாங்க” என்று ஆர்த்தி அழைக்க,
“ப்ச்... இவங்களுக்கு வேற வேலையில்லை. பெயரை ஒழுங்கா கூப்பிடத் தெரியலை. இதனால பட்டது நான்தான” என்று அரிச்சந்திரன் முனக,
கணவனின் முனகலைக் கேள்வியாய் ஏறிட்டவளுக்குத் திரும்பவும் ஆர்த்தி, “நதி... நதீ... ராவே” என்று இன்னும் சத்தமாகவே அழைத்ததை உணர்ந்த நிமிடம், மின்னலாய் எழுந்தது அவ்வெண்ணம். ‘அப்படியும் இருக்குமோ! சந்துருவின் முனகலுக்கான அர்த்தம் என்ன? அடிக்கடி என்னைப் பார்க்கும் பார்வையின் அர்த்தம் என்ன?’ கேள்விகள் பிறந்தது அவளுள்.
வீட்டிற்கு வந்து ஆடை மாற்றியதும் சந்தேகத்தைக் கேட்க வாய்திறந்த மனைவியைப் பேசவிடாமல் வாயடைத்து, இரவு நேரத்தை தனதாக்கிக் கொண்டான் அரிச்சந்திரன்.