• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
WhatsApp Image 2025-08-20 at 13.41.28_d803ea3c.jpg




ஓம் சரவண பவ

தேவை எந்தன் தேவதையே


1



ஸ்ரீபத்மநாப புருஷோத்தம வாஸுதேவ

வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ரபாணே,

ஸ்ரீவத்ஸசிஹ்ன சரணாகத பாரிஜாத

ஸ்ரீவேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!”

திருப்பதி ஏழுமலையானின் சந்நிதியை சுற்றியுள்ள பகுதிகளில் காலை வேளையில், வேங்கடவனின் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும், ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு மேலுள்ள திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிய, தன்னை நாடி வரும் அனைவரையும் சிரிப்புடனும், சிரத்தையுடனும் ஆசீர்வதித்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார் அந்த ஏழுமலையான் வெங்கடாசலபதி.

காலை ஆறு மணியளவில் மேல்திருப்பதியில் வாடகைக் கார் நின்றதும் முதலில் இறங்கியவன், அடுத்ததாக இறங்குபவளை நோக்கி கைநீட்டி, “பார்த்து இறங்கு பாகீரதி” என்றான்.

“இல்ல நானே இறங்கிருவேன்” என அவனுக்குப் பதிலளித்து கீழே இறங்கியவளுக்கு குளிர் முகத்திலடிக்க, “என்ன நிதிஷ் டைம் சிக்ஸ் ஆகுது. இன்னும் இருட்டு குறையல? ரொம்ப குளிருது” என்று கைளிரண்டையும் சேர்த்து இறுக்கிக்கட்டியபடி கேட்டாள்.

“மலை மேல இருக்கிறோம்ல அப்படித்தான் இருக்கும் பாகீரதி. கோடையில் கூட மழை பெய்யும்னா பாரேன்” என்று மதன் சொல்ல, அதற்கு ஒத்து ஊதினார்கள் தாரிணியும் உஸ்மானும், ராஜேஷும்.

தாரிணி! பாகீரதியின் நெருங்கிய தோழி. இன்னும் தோழிகள் இருந்தாலும் அனைத்திற்கும் முதலாமவள் இவளே. தவறென்றால் கண்டிக்கவும் தயங்காதவள்.

“உஸ்மான் உனக்கெப்படித் தெரியும்? நீதான் முஸ்லிமாச்சே?” என பாகீரதி ஆச்சர்யமாய் கேட்டாள்.

“எல்லாம் கேள்வியறிவுதான். நெட்ல பார்த்தா எல்லாமே தெரியப்போகுது. இங்க வரணும்ன உடனே பார்த்துட்டேன். சரி இன்னும் ஏன்பா டல்லாயிருக்க? வர வேண்டிய இடத்துக்கு வந்தாச்சி. கொஞ்சமாவது சிரிச்சிட்டே வாயேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நீயும், நிதிஷும் புருஷன், பொண்டாட்டி” என்றதும் நிதிஷ் முகத்தில் வெட்கம் பரவ, பாகீரதிக்கோ மனதினுள் பகீர் என்றது.

“இதுக்காக, வீட்ல என்னல்லாம் பொய் சொல்ல வேண்டியிருந்தது தெரியுமா? சீக்கிரம் முடிச்சிட்டுக் கிளம்பணும். மதன் உன்கிட்டத்தான நாம வாங்கின தாலிக்கயிறு இருக்கு? பத்திரமா வச்சிருக்கியா? இல்ல...” என முடிக்காமல் உஸ்மான் நிறுத்த,

“டேய்! என்னை என்ன பொறுப்பில்லாதவன்னு நினைச்சியா. இதோ வச்சிருக்கேன் நல்லா பார்த்துக்கோ” என்று பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து காண்பித்தான்.

“சரிப்பா குளிச்சிட்டு கிளம்ப லாட்ஜ் பிடிங்க” என நிதிஷ் சொல்லவும், “ஹேய்! என்னடா விளையாடுறீங்களா? கையில பணம் கம்மியாதான் இருக்கு. லாட்ஜ்லாம் போனா சரிவராது” என்று அவர்களின் நிதியமைச்சர் ராஜேஷ் சத்தம் போட்டான்.

“என்னடா நினைச்சிட்டிருக்கீங்க மனசுல? பாக்கி எவ்வளவு வசதியானவள்னு தெரியும்ல. அவளை பத்தோட பதினொண்ணா, அதுவும் இந்த குளிர்ல குளிக்கச் சொல்றீங்களா? ஒன் ஹவர் மட்டுமாவது பிடிங்க” என்று தாரிணி கத்த, எதற்கும் வாயைத் திறக்கவில்லை பாகீரதி.

“தாரிணி சொல்றதும் சரிதான். ஒன் ஹவர் ஓகே. இல்ல முடியாது ஒன் டே பே பண்ணியாகனும்னு சொன்னா என்ன பண்றது?” என நிதிஷ் யோசிக்க,

“சின்னப்பசங்கன்ற நினைப்புல தான் வீட்ல அதிகம் பாக்கெட் மணி தரமாட்டேன்றாங்க. எப்படியும் இன்னும் ஐந்தாயிரம் இருக்குல்ல. பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் வாங்கடா” என உஸ்மான் சொன்னதும், அனைவரும் சம்மதித்து லாட்ஜ் பிடித்து முதலில் பெண்கள் குளித்து ஆடை மாற்றி வர, பின் ஆண்கள் குளித்து வந்தார்கள்.

அனைவரும் குளித்து முடிய, திருமணத்திற்கென்று பாகீரதி புடவை அணிந்திருக்க, அவளின் நீண்ட கூந்தலுக்கு சடைபின்னி தலை நிறைய பூ வைக்கப்போன தோழியைத் தடுத்து கொஞ்சமாக வைக்கச் சொல்ல, சின்னதாக அழகுபடுத்தி முடித்ததும், காலை நேரத்து தாமரையாய் வீற்றிருந்த தோழியை கையால் திருஷ்டி கழித்து, “அழகு பாக்கி நீ. அதான் இந்த நிதிஷ் உன்னழகுல மயங்கி பின்னாடியே சுத்துறான் போல” எனும்போது, சுருக்கென்று எதுவோ மனதில் தைத்தது பாகீரதிக்கு.

வீட்டிலிருந்து கிளம்பியது முதல் இப்பொழுது வரை மனதிற்குள் பலவித போராட்டம், தவிப்பு, எரிச்சல் என எதிலும் நிலைகொள்ளாமல் மனம் தவித்துக் கொண்டிருந்தது. ‘இந்தக் காதல், கல்யாணம் அனைத்தும் சரியா? நான் தப்பு பண்றேனா? யாரையோ பழிவாங்க நினைச்சி என்னையே பழி குடுக்கிறேனா?’ கண்களில் கலக்கத்துடன் தோழியைக் கண்டாள்.

“என்ன பாக்கி அப்படிப் பார்க்கிற?” என்றாள் தோழியின் கலக்கமறிந்து.

“பயமாயிருக்கு தர்ணி. இது சரிவருமா? தப்பு பண்றேனோன்னு தோணுது. இப்பத்தான் நாம செகண்ட் இயர் படிக்கிறோம். பத்தொன்பது வயசுதான். படிப்பே இன்னும் முடியல. அதுக்குள்ள...”

“இதைத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் அவசரப்படாதேன்னு. நீதான் அப்பா, காதல், கத்திரிக்கா, பீட்ரூட்டுன்னு பினாத்தி இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க. நிதிஷ்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நல்ல பையன்தான். கொஞ்சம் தைரியம் கம்மி. நான் சொன்னப்பல்லாம் யோசிக்காம முடிவெடுத்துட்டு. இப்ப பேக்கடிச்சி என்னாகப்போகுது. இந்த ஏழுமலையான் என்ன ஆசைப்படுறாரோ, அது கண்டிப்பா நடந்தே தீரும். உன் வாழ்க்கை இவனோடதான்னு முடிச்சிப் போட்டிருந்தா யாரால மாத்த முடியும்” என்று தோழியை ஆறுதல்படுத்தினாள்.

பார்ப்பவரின் கவனத்தை சுண்டி இழுக்கும் அழகுடன் நின்றிருந்தவளை தோளணைத்து ஆறுதல் சொல்லி வெளியே வர, ஆண்கள்...’ இல்லையில்லை ‘பையன்கள்’ நால்வரும் உள்ளே சென்றார்கள்.

அவர்களுக்காக வெளியே காத்திருக்கையில், ஒரு நடுத்தர வயது தம்பதியர் பேசியது காதில் விழுந்தது. பல மொழிகளிலும் தெலுங்கே அதிகம் இருந்த இடத்தில் அவர்களின் தமிழ் பேச்சு தோழியரின் கவனத்தைத் திருப்பியது.

“என்னங்க இப்படிச் சொல்லிட்டாங்க? கல்யாணத்துக்கு மூணு மாசம் முன்னாடியே ஆதாரத்தோட புக் பண்ணனுமாம். நான் வேற பையன் கல்யாணத்தை இங்க வச்சு நடத்தணும்னு வேண்டிக்கிட்டேன். ஏதோ ஒரு மாசம் டைம்னா பரவாயில்ல. வேற வழியில்ல பொண்ணு வீட்லயும் பேசிப்பார்த்து நாள் தள்ளி வச்சிருந்திருக்கலாம்” என்றபடி அவர்கள் வெளியே செல்ல, பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கேள்வியாய் பார்த்தார்கள்.

வெளியே வந்த நிதிஷிடம், “என்னடா மேரேஜ்னா த்ரீ மன்த் முன்னாடியே பதியணுமாம்? அதுக்கு ப்ரூஃப்லாம் வேற காண்பிக்கணுமாம்? நீ நேத்து பேசி இன்னைக்கு கூட்டிட்டு வந்திட்ட? எதுவும் எங்ககிட்ட கேட்கல?” தாரிணி கேள்விமேல் கேள்வி கேட்டாள்.

திருதிருவென விழித்தவன், “அ..அது அப்படில்லாம் இல்ல தாரிணி. பாகீரதி சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கணும் சொன்னாளா, அதான்” என இழுக்க,

திரும்பி தோழியை முறைத்த தாரிணி நிதிஷிடம், “அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணிக்கப்போற?” என்றாள் காட்டமாக.

“அது மதனும், ராஜேஷும் தான் நாங்க பார்த்துக்கறோம் சொன்னாங்க.” வார்த்தைகளை மென்று விழுங்கினான் நிதிஷ்.

“ஆக, நீயா எதையும் செய்யமாட்ட? இதுக்கு நீ அந்த மதனையோ, ராஜேஷையோ கல்யாணம் பண்ண கேட்டிருக்கலாம் பாக்கி.” எரிச்சலில் தோழியிடம் கோபமாய் சொல்ல, அந்த வார்த்தையின் கணம் தாளாமல் சட்டென்று உதடுகடித்து தலைகவிழ்ந்தாள் பாகீரதி.

“தாரிணி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத. இந்த லவ்வெல்லாம் எனக்கு செட்டாகாது. கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறாங்க. எனக்கும் பொறுப்பு இருக்கு. தங்கை, தம்பி இருக்காங்க. அவங்களுக்கு...” என மேலே பேச வந்தவன் சூழ்நிலை கருதி வாய் மூடி, “நீதான் கொஞ்சம் தைரியமா பேசேன்டா நிதிஷ். லவ் பண்ண மட்டும் தெரியுதுல்ல. அதே மாதிரி எல்லாத்துலயும் தைரியமா இருக்கணும்” என்று அறிவுரை கூறினான்.

அவனோ, “சரிடா நீ சொல்றபடியே செய்றேன்” என்றான் நல்லவனாய்.

தலையிலடித்தபடி, “உன்னையும் ஒருத்தி நம்பி லவ் பண்றேன்னு சொல்லி, அதுக்கு நாங்க ஜால்ரா போட்டு, கல்யாணம் வரை வந்திருக்கோம் பாரு எங்களைச் சொல்லணும்.”

“ஏன்டா இப்படிச் சொல்ற?” என அப்பாவியாய் கேட்டவனிடம், நிதிஷின் தோள்மேல் கைபோட்டு, “அதெப்படிடா முகம் பச்சைப்புள்ள மாதிரியிருக்கு? என்றபடி நகர்ந்தான்.

பாகீரதிக்குக் குழப்பங்கள் கூடி கும்மியடித்தது. மனமோ, ‘ஹேய் பாக்ஸ் மாட்டினியா’ என கேலி செய்தது. ‘திருப்பதி வந்தா திருப்பம் வரும்னு சொல்வாங்க. இந்த திருப்பம் நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியலை நாராயணா. உன்னை நம்பி வந்திருக்கேன். எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக்குடு ஸ்ரீனிவாசா’ என்று மனதினுள் வேகமாக வேண்டுதல் வைத்தாள்.

அந்த ஸ்ரீனிவாசனின் புன்னகையோ பலநூறு அர்த்தங்களை தன்னுள் அடக்கியது.

அனைவரும் கிளம்பி ஏழுமணிக்கெல்லாம் சன்னிதானம் இருக்குமிடம் நோக்கி வரும்பொழுது, “டேய் மதன்! எல்லாரும் வரிசையில நின்னு மணிநேரக்கணக்குல வெய்ட் பண்ணி சாமி பார்க்கப்போவாங்க கண்டிருக்கேன். ஆனா, நீ எங்களை எங்க கூட்டிட்டுப் போறன்னு சொல்லவே இல்லையே?” என்றான் நிதிஷ்.

“அப்பப்ப கொஞ்சம் புத்திசாலியாவும் யோசிக்கிறடா நீ. உள்ள போய் வரிசையில நின்னு வரணும்னா சாயங்காலமாகிடும். இது வேற இடம். என் கூடவே வாங்க தெரியும்.”

“ஏதோ பண்றன்னு தெரியுது. ஆனா, என்னன்னு புரியலை. எதுலயாவது ஏழரையை இழுத்து விட்டுறாதடா” ராஜேஷ் புலம்பினான்.

“கண்டிப்பாடா. இந்த மதனை நம்பினோர் கைவிடப்படார்” எனும்போது படாரென்று அவன்மேல் எதுவோ விழுந்தது.

“என்னடா நண்பா! உங்க சாமி பொய் சொன்னதுக்கு உடனே தண்டனை குடுத்திருச்சி போல” என்றான் உஸ்மான் சிரித்தபடி.

“போடா லூசு” என அவனைத் திட்டி, “ச்சீ வா” என்று முன்னே செல்ல மற்றவர்களும் அவனைத் தொடர, பெண்கள் இருவரும் பின் தங்கினர்.

“என்ன பாக்கி யோசனை? இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. பிடிக்கலன்னா சொல்லு. இப்படியே கிளம்பிரலாம்” என்றாள் தோழியின் யோசனை முகம் பார்த்து.

“அப்படில்லாம் எதுவுமில்ல தர்ணி. வா போகலாம்” என முன்னே நடக்க, அப்பொழுது ஒரு இளைஞன் பேசியதைக் கேட்டவள் ஆணியடித்தாற்போல் நின்று அனைத்தையும் கேட்டாள். ‘தனக்காகவே அவனை கடவுள் அனுப்பியிருப்பாரோ!’ என்ற எண்ணம் எழாமலில்லை பாகீரதிக்கு.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அதன் மூலமே தன் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அறிந்து அதன்படி நடந்தாள் எனலாம். ஆம். அவளுக்கு இதுவரை என்னவென்று புரியாமலிருந்த நிறைய புதிருக்கு விடையளித்திருந்தான் அந்த இளைஞன்.

“என்னடா பாகீரதி, தாரிணியைக் காணோம்” என்று வந்தவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று, வெங்கடாஜலபதிக்கு நேர் எதிரிருந்த கருடசேவை முன் நின்றார்கள்.

“இங்கேயா?” என்றாள் தாரிணி.

“இங்கதான் தாரிணி. சாமிக்கு நேரே இருக்கிறதால பதிவு பண்ணாம வர்றவங்க இங்கேயே தாலி கட்டிப்பாங்க” என்றான் மதன்.

“சரி சரி டைமாகுது. மாலையை மாத்துங்க” என்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சின்ன மாலையை இருவர் கையிலும் உஸ்மான் கொடுக்க, அதை வாங்கியவள் கைகள் நடுங்கியது.’

சற்று நேரமாக பாகீரதியையே ரசித்திருந்த ஒரு ஜோடி விழிகள், இருவரையும் அருகருகே நிறுத்தி மாலையைக் கொடுத்ததும், அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தது. இதை அந்த விழிகள் எதிர்பார்த்திருக்கவில்லையோ! அதிர்ச்சியில் அந்த மனம் தவித்து உடல் தள்ளாடியதோ!

நிதிஷிற்கு பயம் இருந்தாலும், அதையும் மீறி ஒருவித பரவசம் முகத்திலிருந்தது. அந்த சந்தோஷத்துடனே மாலையை அணிவிக்க அவளருகில் சென்று, அவளின் தலைக்குமேல் மாலையை உயர்த்த, அதைத் தடுத்து, “இந்தக் கல்யாணம், காதல் எதுவும் வேண்டாம் நிதிஷ்” என்றாள் பாகீரதி நிதானமாக.

தாரிணிக்கு அவளின் முடிவு இதுவாகத்தான் இருக்குமென்று தெரிந்திருந்ததால் அமைதிகாத்தாள்.

நிதிஷோ புரியாமல் விழிக்க, நண்பர்கள் மூவரும் சண்டைக்கு வந்தனர். “ஏய்! என்ன பேசுற நீ? கல்யாணத்தை நிறுத்தணுமா? இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கோம்னு உனக்குத் தெரியும்தான? அப்பல்லாம் விட்டுட்டு லாஸ்ட் மினிட்ல வந்து நிறுத்தச் சொல்ற” என்றான் மதன்.

“ஒருத்தன் வந்து காதலிக்கிறேன்னு சொன்னா முதல்ல மாட்டேன்னுட்டு போயிருவ. கொஞ்ச நாள் கழிச்சி திரும்ப நீயே வந்து லவ் பண்றேன்னு சொல்வ. உனக்கு ப்ராப்ளம்னதும் உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்ப. எல்லா ஏற்பாடும் செஞ்சி முடிச்சா, அதையும் நீயே தான் வேண்டாம் சொல்வ. அப்படித்தான?” என்றான் உஸ்மான் உஸ்ணமாக.

“எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? பிடிக்கலன்னா கிளம்புறதுக்கு முன்னாடியாவது சொல்லியிருக்கலாம்ல” என நிதிஷ் அவன் பங்கிற்கு கடிந்தான்.

அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் தன் கண்ணீரையும், அமைதியையுமே பதிலாகக் கொடுத்தாள்.

“என்ன பாகீரதி இதெல்லாம்?” என்றான் ராஜேஷ் அமைதியாக.

“எனக்கு வேண்டாம் ராஜேஷ். எல்லாம் என் தப்புதான். என்னோட அவசரம்தான்னு ஒத்துக்கறேன். ரியலி நான் நிதிஷை லவ் பண்ணல ராஜேஷ். இதான் நிஜம்” எனும்போது நண்பர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. “அதுவும் இப்படி கல்யாணம் வரை..” குரல் கலங்க நிதிஷிடம் திரும்பி, “சாரி நிதிஷ். ரியலி சாரி. நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு பண்ணல” என மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதிர்ச்சியால் தள்ளாடிய அந்த விழிகளில் ,அதிர்ச்சி சென்று ஆச்சர்யம் வந்து, ஒருவித நிம்மதி குடிகொண்டது.

“சாரி நிதிஷ். எனக்கு இதைத்தவிர என்ன சொல்றது தெரியல” என்றாள் கண்களில் கண்ணீரோடு.

“இட்ஸ் ஓகே பாகீரதி. என்ன காரணம்னு தெரியல எனக்குமே மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு. இப்ப வேண்டாம்னா கொஞ்ச நாள் கழிச்சி பண்ணிக்கலாம்” என்றான்.

“இல்ல நிதிஷ். கொஞ்ச நாள் கழிச்சும் வேண்டாம். நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா? நான் உன்னை பிடிச்சிருக்கு சொன்னது தப்பு. ஆனா, அந்த பிடிச்சிருக்குக்கு அர்த்தம் வேற. ஒரு ப்ரண்டா உன்னை பிடிக்கும். அதைத் தவிர வேற எந்த எண்ணமும் எனக்கில்லை. அதை என்னோட சுயநலத்துக்காக சொல்லிட்டேன். படிப்பு முடிஞ்சதும் வேலைக்கு போன பிறகு, உனக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. இத்தோட நாம லவ்னு சொல்லிட்டிருக்கிற இந்த விஷயத்துக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வச்சிரலாம்.”

“ஏய் என்ன விளையாடுறியா?” என மதன் எகிற,

“நான் விளையாடல மதன். நம்ம வாழ்க்கை விளையாட்டாகிரக் கூடாது சொல்றேன். நமக்கு இப்ப எத்தனை வயசு தெரியுமா? பதினெட்டிலிருந்து பத்தொன்பதுக்குள்ள.”

“இதுக்கு முன்னால உனக்கு வயசு தெரியாமலா இருந்தது?” என உஸ்மான் நக்கலாக கேட்டான்.

“தெரியாம இல்ல உஸ்மான். ஆனா, புரியல. நிறைய நம்ம கண்ணுக்கும், கருத்துக்கும் அப்பாற்பட்ட ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது புரியாமல்தான் போயிருச்சி.”

“இப்ப புரிஞ்சிருச்சோ?” என்றான் அதே நக்கலுடன்.

“கண்டிப்பா. லைஃப்னா இப்படித்தான்னு ஒரு வரைமுறையோட வாழணும்னு கொஞ்சநேரம் முன்னாடிதான் வாழ்க்கைப் பாடம் கத்துக்கிட்டேன். இனி எப்பவும் தடுமாறவோ, தடம் மாறவோ மாட்டேன்” என்றாள் ஒருவித நிமிர்வோடு. “நம்ம படிப்பைக்கூட யோசிக்காம இங்க வந்து நிற்கிறோம். ஒரு நிமிஷம் நல்லா யோசிச்சிப் பாருங்க படிப்பைக் கூட முடிக்காம இருக்கிற நம்மை, இந்தக் கோலத்துல வீட்டுலயும் சேர்த்துக்க மாட்டாங்க. படிப்பும் முடியாம, வேலையும் இல்லாம நடுத்தெருவுல போயிதான் நாம நிற்கணும். சாப்பாட்டிலிருந்து எவ்வளவு இருக்கு. இந்த சூழ்நிலையில தன்னையே பார்த்துக்க முடியாதுன்னும் போது, என்னை எப்படி காப்பாத்த முடியும் நிதிஷால?”

“இது ஒண்ணும் ஃபில்ம் இல்ல. அதுலதான் சின்னப்பசங்க காதலை ப்ரண்ட்ஸ் சேர்த்து வைக்கிறதோட முடிச்சிருவாங்க. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகுதான் மொத்த வாழ்க்கையுமே இருக்கு. அதையேன் அவசர அவசரமா முடிவெடுத்து, நாமளே அழிச்சிக்கணும். தப்பு என்மேல தான். இதுல உங்க யாரையும் குறை சொல்ற அருகதை எனக்கில்ல. தெரியாம நடந்த தப்புன்னு சொல்ல வரல. தெரிஞ்சிதான் பண்ணினேன். ஆனா, சரியா யோசிக்காம பண்ணிட்டேன். நிதிஷ்கிட்ட இதுவரை ஐ லவ் யூன்னு சொன்னதில்ல. அவன்கிட்ட என்ன வார்த்தைகள் பேசியிருக்கேன்னு கூட தெரியாது. பட், அதே மீனிங்ல பேசியிருக்கேன்னு தோணுது. ஒன்ஸ் அகெய்ன் சாரி நிதிஷ்” என்றாள் தன் தவறை உணர்ந்து.

ராஜேஷை நோக்கி, “நீ இவ்வளவு தெளிவா இருக்கியே. இதை ஏன் உன் ப்ரண்ட்க்கு சொல்லித் தரலை? சும்மா கதையடிக்கவும், பொண்ணுங்க பின்னாடி சுத்துறதும் நட்பு கிடையாது. தேவையான நேரத்துக்கு, தேவையான அட்வைஸ் பண்ணி நண்பனைத் திருத்தணும். அப்ப தாரிணி உனக்கு எதுவும் சொல்லலையா கேட்காதீங்க. இப்ப வரைக்கும் எனக்கு சொல்லி தடுத்திட்டுதான் இருந்தா. நான் தான் கேட்கல. என்னோட சூழ்நிலை என்னை அப்படி பேச வச்சிது. உஸ்மான் உனக்கும் தங்கை இருக்குதான? அவளை பாதுகாப்பியா? இல்ல கண்டுக்காம விடுவியா? என்னை யாரோவா நினைச்சதாலதான எதையும் கண்டுக்கல?” என்று கேட்டு அவர்களுக்கும் வாழ்க்கைப்பாடம் எடுத்தாள்.

“ஐம் சாரி பாகீரதி” என்றார்கள் ராஜேஷும், உஸ்மானும். “ஒரு கல்யாணம் நம்ம தலைமையில பண்ணி வைக்கப்போறோம்னதும் ஒருவித கர்வம் வந்திருச்சி. அதனால, மத்ததை யோசிக்கலை. ஒரு பெரிய மனுஷ தோரணை. இந்த வயசுக்கேயான திமிர்னு வச்சிக்கோயேன். எங்களுக்கும் இது ஒரு படிப்பினைதான். இனிமேல் நாங்களும் எதையும் யோசிக்காம செய்யமாட்டோம்” என்றனர்.

“தேங்க்ஸ்” என்றவள், “நீங்க கிளம்புங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா போய்க்கிறோம்” எனவும்,

“இல்ல வேண்டாம். நாங்களே கூட்டிட்டுப் போறோம். வாங்க சேர்ந்தே போகலாம்.”

“இல்ல ராஜேஷ். நீங்க கிளம்புங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்றாள் அழுத்தமாக.

“சரி. சென்னை வந்ததும் எங்களுக்கு கால் பண்ணு” என்று நண்பர்கள் அனைவரும் கிளம்ப,

பாகீரதியின் அருகில் வந்த நிதிஷ், “அவ்வளவுதானா பாகீரதி? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்னை நம்பி வா. நான் உன்னை காப்பாத்தறேன்” என்றான் முதல்முறையாக தைரியமாக.

“இல்ல நிதிஷ். உன்மேல எனக்கு எந்த விருப்பமும் இல்ல. இப்ப சொல்றது தப்புதான். அழகைப் பார்த்துதான் என் பின்னாடி நீ சுத்தினன்னு தெரியும். அழகு எப்பவும் நிரந்தரமில்லைன்னு இப்ப கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதோட, ஆழமான ஒரு காதல் இல்லைன்னா லைஃபே வேஸ்டாகிரும். எங்கம்மா சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணி, அவனைத்தான் காதலிப்பேன். அதுக்கு முன்னாடி இந்த மாதிரி வந்து போற சின்னச்சின்ன உணர்வுகளுக்கு, இனிமேல் என்னைப் பொருத்தவரை குட் பைதான். நீயும் உன் அப்பா, அம்மா, தம்பியை யோசிச்சிப்பாரு. இந்த நினைப்பு இனி எப்பவும் உனக்கு வராது. வராம இருந்தா, நான் உன்னோட நட்பு வட்டத்துல இருப்பேன். சின்னதா நெருடல் வந்தாலும், அத்தோட நம்ம நட்புக்கு ஒரு என்டிங் போட்டிருவேன்” என்றாள் தீவிரமாகவே.

“இல்ல பாகீரதி. நான் இனிமேல் இந்தப் பேச்சை எடுக்கவே மாட்டேன். எனக்கு உன்னோட ஃப்ரண்ட்ஷிப் போதும். ஃப்ரண்ட்ஸ்” என்றான் கைநீட்டி புன்னகையுடன்.

அதிலுள்ள அர்த்தத்தை உணர்ந்தவள் தன் கைகொடுத்து “ஃப்ரண்ட்ஸ்” என்றாள் சிரித்தபடியே.

“சரி நாங்க கிளம்பறோம். பார்த்து பத்திரமா வாங்க.”

அவர்கள் சென்றதும் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்தவள், மனக்கண்ணில் அந்தப், பெண்ணும் இளைஞனும் பேசியது ஓடியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top